நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 15 ஜூன், 2014

பேராசிரியர் மா.இராமலிங்கம் (எழில்முதல்வன்)


பேராசிரியர் மா. இராமலிங்கம்(எழில்முதல்வன்)

தமிழகத்தின் கல்வி வரலாறு பல்லாயிரம் பேராசிரியர்களைக் கண்டுள்ளது. ஒவ்வொருவரும் தங்கள் அறிவாலும் உழைப்பாலும் பல்துறைப் பங்களிப்பாலும் இந்த வரலாற்றின் பக்கங்களில் தங்கள் பெயர்களைப் பதிவுசெய்துள்ளனர். அவ்வகையில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் என்னும் உயர்கல்வி நிறுவனத்தின் தமிழ்த்துறையை மிகச் சிறப்பாக வழிநடத்திப் பல நூறு மாணவர்கள் தமிழாராய்ச்சித்துறையில் கால்பதிக்க வழிகண்ட பெருமை அறிஞர் மா. இராமலிங்கம்(எழில்முதல்வன்) அவர்களுக்கு உண்டு.

சங்க இலக்கியம், சமய இலக்கியம், சமகால இலக்கியம் எனப் பல்துறையிலும் சுடர்மிகு அறிவுபெற்ற பேராசிரியர் மா. இரா. அவர்கள் மொழிபெயர்ப்புத்துறையிலும் ஆக்கப்பணிகள் பலவற்றைச் செய்துள்ளவர். புதினத்துறையில் ஆய்வுகள் பல நடைபெற இவர் காரணமாக இருந்தவர். தமிழ் மரபுப்பாடல்கள், புதுப்பாக்கள் வரைந்தவர். தமிழக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இவரின் புதிய உரைநடை என்னும் அரிய நூலுக்கு இந்திய அரசின் சாகித்ய அகாதெமி பரிசு இவருக்குக் கிடைத்தது. தமிழ் இலக்கிய உலகில் இந்த நூலுக்கு என்றும் தனிமதிப்புண்டு.

மாணவர்களை விடுதலையாகச் சிந்திக்கச் செய்து, தானே நீச்சலடித்துக் கல்விக்கடலைக் கடக்கச் செய்யும் அதிசய ஆற்றல் மா. இரா. அவர்களுக்கு உண்டு. இவர் உரையாற்றும்பொழுது புதுமைப் பாதைகள் சிலவற்றை அடையாளம் காட்டுவார். செக்குச் சுழற்சிகள் கொண்ட சிந்தனைகளைத் தவிர்த்து, புதிய ஒளிக்கீற்றுகள் இவர் எழுத்தில் மின்னும். அலுவல்சார் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்ட மா.இரா. அவர்கள் இப்பொழுது விருப்பமான பணிகள் செய்வதை வேள்வியாக்கிக்கொண்டுள்ளார். தமிழ்த்தவம் செய்யும் இப்பெருமகனாரை அண்மையில் அவர் இல்லில் கண்டு உரையாடி அவர்தம் வாழ்க்கைக்குறிப்பைப் பெற்றுவந்தேன். தமிழுலகின் பார்வைக்கு அவரின் வரலாற்றையும் பெருமிதப் பணியையும் மாணாக்கனாகிய யான் பணிந்து வைக்கின்றேன்.
அறிஞர் மா. இரா.

பேராசிரியர் மா. இராமலிங்கம் அவர்கள் நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் உள்ள தகட்டூர் என்னும் ஊரில் 5 – 10 - 1939 ஆம் ஆண்டு பிறந்தவர். பெற்றோர் திருவாளர்கள் வ. மாணிக்கம் திருமதி மா. இராமாமிருத அம்மையார். உயர்நிலைக் கல்வியைத் திருத்துறைப்பூண்டியிலும், தமிழ் இளங்கலைப் பட்ட வகுப்பினைக் கும்பகோணம் அரசு கல்லூரியிலும் பயின்றவர். முதுலைப் பட்ட வகுப்பினைச் சென்னை மாநிலக்கல்லூரியில் பயின்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர். இதற்காகப் பல பரிசில்களைப் பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக 1975 இல் முனைவர் பட்டம் பெற்றவர்.

1964 முதல் 1974 வரை சென்னை மாநிலக் கல்லூரியில் துணைப்பேராசிரியராகப் பணியாற்றியவர். அதன் பிறகு மன்னார்குடி, இராமநாதபுரம், கோயமுத்தூர், இராசிபுரம், பொன்னேரி, கும்பகோணம் கல்லூரிகளில் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணிபுரிந்த பெருமைக்குரியவர். 1985 முதல் 2000 வரை திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கிப் பணிஓய்வு பெற்றவர்.

மா. இராமலிங்கம் அவர்களின் தமிழ்க்கொடை:


·         நாவல் இலக்கியம் (1972)
·         இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம்(1973)
·         புனைகதை வளம்(1973)
·         அகிலனின் கலையும் கருத்தும்(1974)
·         விடுதலைக்குப்பின் தமிழ்ச்சிறுகதைகள்(1977)
·         புதிய உரைநடை(1978)
·         இலக்கியத் தகவு(1979)
·   திறனாய்வுநெறி(1983)
·       நோக்குநிலை(1984)
·       உரைகல்லும் துலாக்கோலும்(1989)
·         பனிப்பாறையும் சில தீப்பொறிகளும்(1990)
·         கவண்கற்களும் சிறகுகளும்(2000)

கவிதைகள்
           ·          இனிக்கும் நினைவுகள்(1966)
           ·         எங்கெங்கு காணினும்(1982)
           ·         இரண்டாவது வருகை(1985)
           ·         யாதுமாகி நின்றாய்(1986)
           ·         தமிழ்க்கனல்(1987)
           ·         எழில்முதல்வன் கவிதைகள்(2000)

புனைகதை நூல்கள்
·         பொய்யான இரவுகள்(1973)
·         அதற்கு விலையில்லை(1974)
·         நாளைக்கும் இதே கியூவில்(1985)
·         வாழ்க்கை வரலாறு
·         பேராசிரியரியப் போராளி(2013)

மொழிபெயர்ப்புகள்
·         மகாகவி உள்ளூர்(1986)
·         ஜதீந்திரநாத் சென்குப்தா(1992)
·         பாபா பரீத்(1994)
·         நிச்சய தாம்பூலம்( 2008)
·         பொழுது புலர்ந்தது(2009)
·         பாகிஸ்தான் கதைகள்(2010)
·         கபீரின் நூறு பாடல்கள்(2011)
·         கிழக்கு- மேற்கு பாகம்1(அச்சில்)



பதிப்பித்த நூல்கள்

·         Selected Poems of Bharathidasan( in English)
·         Bharathidasan Centenary Souvenir(1991)
·         Velvi (வேள்வி) A Collection of seminar Papers in Tamil(1991)
·         Medieval Indian Literature in English Translation, Tamil Literature(1100-1800).
· உலகத் திருக்குறள் மாநாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகள்(2000)
·         உலகத் திருக்குறள் மாநாட்டு மலர்
·         பகவத் கீதை வெண்பா(2004)

மா.இராமலிங்கம் அவர்கள் பெற்ற விருதுகளும் சிறப்புகளும்:

மா.இரா அவர்களின் புதிய உரைநடை நூலுக்கு 1982 இல் இந்திய அரசின் சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. சாகித்ய அகாதெமியின் பொதுக்குழு உறுப்பினராகவும் (1988-92), செயற்குழு உறுப்பினராகவும் இருந்து பணியாற்றியவர், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இவர் எழுதிய விடுதலைக்குப் பின் தமிழ்ச்சிறுகதைகள் என்ற நூலுக்குப் பரிசு வழங்கிப் பாராட்டியுள்ளது. பாவேந்தர் பாரதிதாசன் விருதினை 1991 இல் பெற்றுள்ளார். மொழிபெயர்ப்புக்கான நல்லி குப்புசாமி செட்டி, திசை எட்டும் விருதினைப் பெற்றவர். பாண்டித்துரைத் தேவர் விருதினையும் பெற்றவர். திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கம் இவருக்கு மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை விருதினை வழங்கி 2006 இல் பாராட்டியுள்ளது. மேலும் பல்வேறு அமைப்புகள் திறனாய்வுக்குரிசில், சிலம்பாய்வுச்செல்வர், தமிழ்மாமணி விருது, ஆய்புல அண்ணல் விருது, குறள் ஞாயிறு விருது ஆகியவற்றை வழங்கிப் பாராட்டியுள்ளன.

மா.இரா. அவர்கள் கருத்தரங்குகளில் கலந்துகொள்ள மலேசியா, யுகோசுலேவியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்ற கருத்தரங்குகள், பணிமனைகளில் ஆயுவுரைஞராகக் கலந்துகொண்டு கருத்துரை வழங்கியுள்ளார்.

  முத்தமிழ்க் காவலர் கி..பெ. விசுவநாதம் அவர்கள் நடத்திய தமிழகப் புலவர் குழு என்னும் அமைப்பில் இருபதாண்டுகள் உறுப்பினராக இருந்து பணியாற்றியவர். ஓங்குதமிழ் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து பணிபுரிந்தவர். புவனேசுவர் நகரத்திலிருந்து வெளிவந்த உதயதாரகை என்னும் ஆங்கில இதழின் பதிப்பாசிரியர் குழுவில் இரண்டாண்டுகள் இருந்து பணிசெய்தவர். இவர்தம் கவிதைகளை ஆராய்ந்து மலைச்சாரலும் நெருப்பு அருவிகளும் என்னும் தலைப்பில்  திரு. செல்வசேகரன் அவர்கள் ஒரு நூல் எழுதி வெளியிட்டுள்ளார்.

  EAST – WEST என்னும் புதினத்தின் இரண்டாம் பகுதியை மொழிபெயர்த்து முடிக்கும் நிலையில் உள்ளார். மேலும் வட இந்திய ஞானியான சுவாமி இராமதீர்த்தர் என்பவரின் வாழ்வும் பணியும் குறித்த பெரிய நூலொன்றை எழுதி வெளியிடும் திட்டத்துடன் பேராசிரியர் மா. இராமலிங்கம் அவர்கள் செயல்பட்டு வருகின்றார். நிறைவாழ்வு ஐயா அவர்களுக்கு அமைய நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

மு.இளங்கோவன், பேராசிரியர் மா.இராமலிங்கம்

பேராசிரியர் மா.இரா. அவர்களின் முகவரி:
முனைவர் மா. இராமலிங்கம்(எழில்முதல்வன்)
தமிழ்க்குடில், எண் 4, பவானி நகர், தஞ்சாவூர்- 613 004

குறிப்பு:

கலைக்களஞ்சியம் உருவாக்குவோர், கட்டுரை வரைவோர், இலக்கிய வரலாறு எழுதுவோர் இக்குறிப்புகளையும், படங்களையும் எடுத்தாளும்பொழுது எடுத்த இடம் சுட்டினால் மகிழ்வேன்.

தொடர்புடைய பதிவுக்கு : இங்குச் செல்க

கருத்துகள் இல்லை: