நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 30 மே, 2013

இணையத்தில் கட்டற்ற சுதந்தரம் அவசியமா? ஆழம் இதழில் முனைவர் மு.இளங்கோவன் நேர்காணல்...


குறிப்பு: சென்னையிலிருந்து வெளிவரும் ஆழம் இதழ், மே-2013 இல் திரு.எஸ்.சம்பத் அவர்கள் என்னை நேர்காணல் செய்து இணையத்தில் கட்டற்ற சுதந்தரம் அவசியமா? என்ற தலைப்பில் எழுதினார்கள். பல செய்திகளை அசைபோட இந்த நேர்காணல் உதவியது.  இதழாசிரியர் அவர்களுக்கும் திரு.சம்பத் அவர்களுக்கும் என் நன்றி.

இணையத்தில் கட்டற்ற சுதந்தரம் அவசியமா?

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை துணைப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் முனைவர் மு. இளங்கோவன். ‘ இணையம் கற்போம்’ இவரது சமீபத்திய நூல். இவருடைய தமிழ்ப் பணியைப் பாராட்டி இந்திய அரசு, செம்மொழி இளம் அறிஞர் என்ற விருதையும் ரூபாய் ஒரு லட்சம் பண முடிப்பும் கொடுத்து கௌரவித்தது. இணையம் வழி தமிழ் வளர்ச்சிக்காகப் பல கல்லூரிகளில் பயிலரங்கங்கள் நடத்தி வருவதுடன், தமிழ் சார்ந்த பல வெளிநாட்டு கருத்தரங்கங்களிலும் கலந்து கொண்டுள்ளார்.  ஆழம் இதழுக்காக எஸ்.சம்பத் மேற்கொண்ட நேர்காணல்.
இணையத்தில் வலைப்பூக்கள், வலைத்தளங்கள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை  அதிகரித்திருக்கிறது. ஒருவர், தாம் நினைத்ததை சுலபமாக எழுதிவிடமுடிகிறது. அதைப் பல்லாயிரம் பேர் படிப்பதும் இப்போது சாத்தியம். இந்த சுதந்தரம்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 
இணையத்தில் வலைப்பூக்களை உருவாக்கிப் பயனுள்ள செய்திகளைப் பலர் எழுதி வருகின்றனர். இது வரவேற்கப்படவேண்டிய ஒன்றாகும். அவரவர்களுக்குத் தெரிந்த செய்திகளையும் நாட்டு நடப்புகளையும் எழுதி வைப்பதால் இணையத்தில் ஒரு துறை சார்ந்த செய்திகளைத் தேடும்பொழுது உபயோகமாக இருக்கும். இன்றைய உலகமயச் சூழலில் கருத்துகளும் உலகமயமாகி வருகின்றன. இந்த நிலையில் இதனை எழுத வேண்டும், இதனை எழுதக்கூடாது என்று யாரும் தடைபோடக்கூடாது. மிகப்பெரும் ஊடகங்கள் உண்மைச் செய்திகளை இருட்டடிப்புச் செய்யும் சூழலில் வலைப்பூக்களின் தேவை இன்று அவசியமானதாகின்றது.
புகழ்பெற்ற ஊடகங்கள் ஒவ்வொன்றும் அரசியல் சார்புடைய செய்திகளையே வெளியிடுகின்றன. ஈழப்போரின் போதும் கூடங்குளம் போராட்டத்தின் போதும் உண்மைச் செய்திகளை ஊடகங்கள் வெளியிடாமல் மறைத்த போது வலைப்பூக்கள், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள்தான் செய்திகளை மக்களுக்குக் கொண்டுசேர்த்தன.
புகழ்பெற்ற ஊடகங்களைச் சார்ந்திராமல் இணையதளங்களின் வழியாகச் செய்திகளை வெளியிடுவதால் செய்திகள் கட்டற்றுப் பரவுகின்றன. இணையத்தில் வெளிவரும் செய்தி கிராமம் நகரம் வேறுபாடு இல்லாமல், படித்தவன் படிக்காதவன் வேறுபாடு இல்லாமல், உள்நாடு வெளிநாடு என்று வேறுபாடு இல்லாமல் உலகம் முழுவதும் பரவிவிடுகின்றது. இணையத்தைப் பொறுத்தவரை தூரம் என்பது 0 கி.மீ. உலகம் முழுவதும் இருக்கும் மக்களிடம் ஒரு செய்தியை மிக எளிதாகச் சேர்க்க இணைய சுதந்தரம் பயன்படுகின்றது. அதே சமயம்,பலர் இணைய சுதந்தரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதும் அதிகரித்திருக்கிறது.
ஆனால், கேளிக்கைகள்தான் இணையத்தில் அதிகரித்திருப்பதுபோல் தோன்றுகிறதே?
பேஸ்புக், ட்விட்டர் போன்றவை தொழில்நுட்ப வடிவங்கள். அவற்றை ஆக்கத்துக்கும் பயன்படுத்தலாம். தீமைக்கும் பயன்படுத்தலாம். பேஸ்புக்கில் நல்ல செய்திகளை எழுதியும், நல்லவர்களுடன், அறிவாளிகளுடன் பழகியும் உலகத்தை உங்கள் உள்ளங்கைக்குள் கொண்டு வந்துவிட முடியும். ஒரு தகவலை உலகில் உள்ள நண்பர்களுக்கு ட்விட்டரில் இலவசமாகப் பரப்பிவிடமுடியும். இதனைத் தனி மனிதத் தாக்குதலுக்கும், அரட்டைகளுக்கும், வசைபாடலுக்கும் பயன்படுத்தினால் அதற்குத் தொழில்நுட்பத்தைக் குறை சொல்லமுடியாது. பேஸ்புக்கில் சிங்கப்பூரின் சிம் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் பாடம் படிக்கும் மாணவர்கள் குழுவாக இணைந்து கல்வி வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதைக் கண்டு பாராட்டித்தானே ஆகவேண்டியுள்ளது.
அரசுத் தலையீடு இணையத்தில் எந்த அளவுக்கு இருக்க வேண்டும்? தணிக்கை அவசியமா?
இணையத்தில் எழுதுபவர்களுக்கு சுயகட்டுப்பாடு அவசியமே தவிர அரசின் கட்டுப்பாடு தேவையில்லை. இணையத்துக்குக் கட்டுப்பாடு வேண்டும் என்று கூக்குரல் எழுப்புவர்கள் யார் என்று பார்த்தால் தவறு செய்பவர்களும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும்தான். தாங்கள் செய்யும் தவறுகள் உடனுக்குடன் மக்கள் மன்றத்துக்கு வந்துவிடுகின்றதே என்று தவறு செய்பவர்கள் அஞ்சுகின்றனர். அண்மையில் பேஸ்புக்கில் ஒரு செய்தி படித்தேன். காவல் நிலையத்திலிருந்து தோசை வாங்கிவரும்படி ஒருதுண்டுச்சீட்டில் அரசாங்க முத்திரை போட்டு அனுப்பப்பட்டது. அதனை பேஸ்புக் நண்பர் ஒருவர் பார்த்து, படி எடுத்து இணையத்தில் பதிந்துவிட்டார். உலகம் முழுவதும் அந்தச் செய்தி பரவிவிட்டது. இதுபோன்ற செய்திகளைப் பத்திரிகைகள் வெளியிடத் தயங்கும்.
சைபர் குற்றங்கள்  பெருகிவருவதை எப்படித் தடுப்பது?
இணைய வழியாகக் காதலித்து ஏமாறுதல், போலி விளம்பரங்களைக் கண்டு ஏமாறுதல் என்று அவ்வப்போது செய்திகள் வெளிவருகின்றன. இவற்றுக்கெல்லாம் சுயக்கட்டுப்பாடு வேண்டும்.பல குற்றச்செயல்கள் நடப்பதற்குரிய வழிகள் சமூகத்தில் திறந்தே உள்ளன. காவல்துறை, அரசியல், அதிகாரிகள், நீதித்துறை ஆகியவை தவறானவர்களுக்கு உடந்தையாக இருப்பதால் சமூகத்தில் பல தவறுகள் நடக்கின்றன. தண்டணைகளைக் கடுமையாக அமுல்படுத்தும்போது தவறுகள் நடக்க வாய்ப்புகள் குறைவாக இருக்கும். வளர்ந்த நாடுகளிலும் இதுபோன்ற தவறுகள் நடப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் அரிய நூல்கள் மின்மயப்படுத்தப்பட்டு சேமிக்கப்படுகின்றன.  அது போன்ற முயற்சிகள் தமிழில் மேற்கொள்ளப்படுகின்றனவா?
தமிழ் நூல்களை யாரும் காசுகொடுத்து வாங்கவேண்டிய தேவை இன்று இல்லை. தேவையான பல நூல்கள் இணையத்தில் இலவசமாக உள்ளன. மதுரைத்திட்டம், நூலகம்.ஆர்க், தமிழம்.நெட், தமிழ் மரபு அறக்கட்டளை, தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தளம் ஆகியவற்றிலும் இன்னும் சில தனியார் இணையத்தளங்களிலும் தமிழ் நூல்கள் மின்மயப்படுத்தப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றன. நாமும் நம் நூல்களை அச்சில் வெளியிட்டு அழகு பார்ப்பதுபோல் மின்னூல்களாக வெளியிட்டு விற்பனைக்கு வைக்கலாம். புகழ்பெற்ற பதிப்பகங்கள் இந்தப் பணியில் இப்போது ஈடுபட்டுள்ளன.
புத்தக வாசிப்பு குறைந்திருக்கிறதா?
பொதுவாக புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்துவருகின்றது. கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கள் பாடநூல்களைத் தவிரப் பிற நூல்களைப் படிப்பதில்லை. பலர் நூலகம் பக்கமே செல்வதில்லை. செய்தித்தாள்களைப் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. முன்பெல்லாம் பெண்கள் வீடுகளில் ஆனந்த விகடன், குமுதம், ராணி போன்ற பொழுதுபோக்கு இதழ்களைப் படிப்பார்கள். இன்று தொலைக்காட்சித் தொடர்களால் இந்த இதழ்களைப் படிப்பதும் குறைவாகவே உள்ளது. புத்தகக் கண்காட்சியில் விற்பனையை வைத்துப் படிக்கும் பழக்கத்தை முடிவு செய்தால் அது சரியான முடிவாக இருக்காது என்பது என் தனிப்பட்ட கருத்து.
நீங்கள் எழுதிய பிற புத்தகங்கள் பற்றிச் சொல்லுங்கள்.
மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும், அயலகத் தமிழறிஞர்கள், நாட்டுப்புறவியல், பொன்னி ஆசிரியவுரைகள், பொன்னி பாரதிதாசன் பரம்பரை, விடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள் உள்ளிட்ட 19 நூல்களை எழுதியும் பதிப்பித்தும் வெளியிட்டுள்ளேன். படைப்பு நூல்கள், ஆய்வு நூல்கள், கட்டுரை நூல்கள் என்று பல வகையில் என் நூல்கள் அடங்கும்.  அயலகத் தமிழறிஞர்கள் என்ற நூலில் 31 தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதி வெளியிட்டேன். அடுத்தடுத்த தொகுதிகளையும் எழுத நினைத்தேன். முதல் தொகுதியின் ஆயிரம் படிகளும் வாங்குவார் இல்லாமல் வீட்டில் தேங்கியது. அரசு நூலகத்துறையோ, தனியார் நூலகங்களோ ஆதரிக்காததால் என் நூல் எழுதும் முயற்சியை நிறுத்திக்கொண்டேன். இருந்தாலும் எழுத வேண்டியவற்றை இணையத்தில் எழுதி வெளியிட்டு வருகின்றேன்.
இணையப் பயன்பாட்டின்மீது எப்படி உங்களுக்கு இவ்வளவு  ஆர்வம்  ஏற்பட்டது?
என் பிறந்த ஊர் கங்கைகொண்டசோழபுரத்துக்கு அருகில் உள்ள இடைக்கட்டு என்னும் சிற்றூர். தொடக்கக்கல்வியை என் பிறந்த ஊரையடுத்துள்ள உள்கோட்டையிலும், மேல்நிலைக் கல்வியை மீன்சுருட்டி அரசு மேனிலைப் பள்ளியிலும் பயின்றேன். மூன்றாண்டுகள் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தேன். பிறகு அருகில் இருந்த திருப்பனந்தாள் செந்தமிழ்க்கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றேன். முதுகலையும் அங்குதான் பயின்றேன். பின்னர் புதுவைப் பல்கலைக்கழகத்தில் எம்ஃபில் படிப்பும், திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வும் முடித்துள்ளேன்.
நான் இதழியல் துறையிலும், நாட்டுப்புறவியல் துறையிலும் ஈடுபாடுகொண்டவன். எனக்குப் பலதுறை அறிவு இருந்தாலும் என் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்குத் தமிழகத்தின் கல்வி நிறுவனங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை. என் கருத்துகளை உலகம் முழுவதும் உள்ளவர்களுடன் பகிர்ந்துகொள்ள இணையம்தான் ஏற்ற கருவி என்று உணர்ந்ததால் இத்துறையில் நுழைந்தேன். இணையத்தில் நுழைந்து பார்த்தபோது (2007 அளவில்) தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிரான கருத்துடையவர்களே இணையத்தில் கோலோச்சிக்கொண்டிருந்தனர். தமிழ் சார்ந்த செய்திகள் எதுவும் இணையத்தில் இல்லை.
குறிப்பாக உ.வே.சா, பாவாணர், பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட அறிஞர் பெருமக்களின் பணிகள் இணையத்தில் பதியப்பெறாமல் திரைப்பட நடிகர்கள், நடிகைகள், அரசியல்வாதிகள் பற்றிய உரையாடல்களும் தகவல்களும் மட்டுமே இணையத்தை ஆட்கொண்டிருந்தன. இந்த நிலையில் தமிழ் அறிஞர்களின் வாழ்க்கையை இணையத்தில் பதிய வேண்டும் என்ற நோக்கில் பல அறிஞர்களின் வாழ்க்கைக் குறிப்புகளை இணையத்தில் எழுதினேன்.
நான் ஒருவனே தமிழ் அறிஞர்களின் வாழ்க்கையையும் தமிழகத்தின் அரிய செய்திகளையும் எழுதிச் சேர்த்துவிடமுடியாது. எனவே பலரை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழ் இணையப் பயிலரங்குகளைத் தமிழகம், அந்தமான், மலேஷியா, சிங்கப்பூர் என்று பல இடங்களில் நேரடியாக நடத்தியும், தொலைபேசி வழியாகச்சொல்லியும் பலரை இணையத்தில் எழுதப் பழக்கினேன்.
என் முயற்சியால் பலர் தமிழ் சார்ந்த செய்திகளை இணையத்தில் எழுதிவருகின்றனர். இதுவரை தமிழகத்தின் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பயிலரங்குகளை நடத்திப் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்குத் தமிழ் இணையத்தை அறிமுகம் செய்துள்ளேன்.
கணினி, இணையம் சார்ந்த பாடநூல்கள் தமிழகத்தின் கல்வி நிறுவனங்களில் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டுள்ள பாடநூல்கள் கணினிப்பொறியாளர்களுக்கே விளங்கிக்கொள்ளமுடியாதபடி கடுமையான நடையில் உள்ளன. வன்பொருள் தயாரிப்பு, கணினியின் இயக்கம், பழுது பார்ப்புக்கு உரிய அளவில்தான் பாடநூல்கள் உள்ளன. கணினி, இணையத்தைப் பயன்படுத்தி வாழ்க்கையை  கல்வியை எளிமைப்படுத்தும் வகையில் பாடநூல்கள் இல்லை என்பதை உணர்ந்தேன். இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள பாடநூல்களைக் கண்டு மாணவர்களும் அதனை நடத்தும் ஆசிரியர்களும் அஞ்சி நடுங்குகின்றனர்.
கணினி, இணையம் என்றால் வேண்டாம் என்று தமிழ் படிக்கும் மாணவர்கள் மருண்டு ஓடுவதால் எளிமையாக இணையத்தை அறிமுகம் செய்து கணினி முன்னால் அமர்வதற்குரிய எளிய நடையில் இணையம் கற்போம் என்ற நூலை எழுதினேன். ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்களே இந்த நூலின் உதவியுடன் இணையப் பயன்பாட்டை அறிந்துகொள்ள முடியும். பொதுமக்களும் இந்த நூலைப் பயன்படுத்தி இணையத்தை அறியலாம். இந்த நூல் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திலும், தமிழகத்தின் பிற கல்லூரிகளிலும் பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது.
உங்கள் எதிர்கால இலக்கு?
தமிழுக்கும் தமிழர்களுக்கும் ஆக்கமான இலக்கியம், இலக்கணம், இசை, பண்பாடு சார்ந்த செய்திகளை இணையத்தில் பதிந்து தமிழர்களுக்கான உண்மைத் தகவல்கள் உலகில் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்வது என் இலக்காகும். அதுபோல் தமிழர்கள் அனைவரும் இணையப் பயன்பாட்டை அறிந்து உலகத் தமிழர்கள் அனைவரும் ஒருகுடையின்கீழ் இணைவதற்குரிய முயற்சிகளை முன்னெடுப்பதும் என் இலக்காகும்.
தமிழகத்தில் தகவல்களுக்குப் பஞ்சமில்லை. அறிவு வளத்துக்குப் பஞ்சமில்லை. பண்பாடும், பழக்க வழக்கங்களும், கலைகளும், நாகரிமுகம் தமிழகத்தில் நிறைந்துள்ளன. அதுபோல் அரிய நூல்களும் தமிழகத்தில் எழுதப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் அடுத்த தலைமுறைக்கு வழங்கவேண்டும் என்றால் இணையத்தில் பதிந்துவைக்கவேண்டும்.
கிழக்குப் பதிப்பகம் இலவசமாக வழங்கும் என் எச் எம் ரைட்டர் என்ற மென்பொருளைப் பயிலரங்குக்கு வருபவர்களுக்கு இலவசமாக வழங்கி அனைவரையும் தமிழில் தட்டச்சுப் பயிற்சிக்குத் தயாராக்கிவிடுகின்றோம். அடிப்படையான தமிழ்மென்பொருள்கள் பல இலவசமாகவே கிடைக்கின்றன. ஆனால் மக்களின் அறியாமையைப் பயன்படுத்திப் பல மென்பொருள் நிறுவனங்கள் அடிப்படை மென்பொருள்களைக் கூடக் காசுக்கு விற்பனை செய்கின்றன. இணையப் பயன்பாட்டைப் பெற யாரும் செலவு செய்யத் தேவையில்லை என்பதுதான் என் கருத்தாகும்.
ஆழம் முழு இதழையும் படிக்க இங்கே சொடுக்குக

புதன், 29 மே, 2013

புதிய வரவுகள்…






முனைவர் மு.இளங்கோவன் அவ்வப்பொழுது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல், கட்டுரைக் களஞ்சியம் என்னும் பெயரில் நூலாக வெளிவர உள்ளது. இரு நூல்களையும் வயல்வெளிப் பதிப்பகம் வெளியிடுகின்றது.

2013, சூன் திங்கள் 7 ஆம் நாள் ( வெள்ளிக்கிழமை மாலை ) நூல்களின் வெளியீட்டு விழா மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் பெட்டாலிங் ஜெயா தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் சார்பில் நடைபெற உள்ளது. மலேசியாவின் இலக்கிய ஆர்வலர்கள், தமிழ்ப்பற்றாளர்கள், எழுத்தாளர்கள் இந்த வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள உள்ளனர்.

மலேயா பல்கலைக்கழகத்தின் மொழித்துறையில் பணியாற்றும் திரு. மன்னர்மன்னன் அவர்களும், திரு. செல்வசோதி அவர்களும் ஆசிரியர் திரு. ம.முனியாண்டி அவர்களும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். மலேசியா, சிங்கப்பூரில் இருக்கும் நண்பர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.


நிகழ்ச்சி நிரல் விரைவில் வெளியிடப்படும்.

வெள்ளி, 24 மே, 2013

பொதிகைத் தொலைக்காட்சியில் தமிழக நடவுப்பாடல்கள் குறித்த உரையிடையிட்ட பாட்டு சனிக்கிழமை ஒளிபரப்பு…



வரும் சனிக்கிழமை(25.05.2013) இந்திய நேரம் பிற்பகல் 2 மணிக்குப் பொதிகைத் தொலைக்காட்சியில் புதுவைக் களஞ்சியம் பகுதியில் தமிழக நடவுப்பாடல்கள் குறித்த என் பாட்டு உரை ஒளிபரப்பாகின்றது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.10 மணி முதல் 2.30 மணிவரை 20 நிமிடங்கள் இந்த பாட்டு உரை ஒளிபரப்பாகும். 134 நாடுகளில் பார்க்க வாய்ப்பு உண்டு. வெளிநாட்டு நண்பர்கள் இணையம் வழியாகவும் பார்க்கலாம். 

இணையதள முகவரி:


இந்தச் செய்தியை நண்பர்கள், நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள், கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள், தமிழிசை ஆர்வலர்கள், தமிழ்ப்பண்பாட்டு மீட்பர்களின் பார்வைக்குக் குறுஞ்செய்திகள், பேசுபுக், டுவிட்டர், வலைப்பூக்கள் வழியாகக் கொண்டுசெல்ல வேண்டுகின்றேன்.

நிகழ்ச்சி குறித்த கருத்துகளை நண்பர்கள் எனக்குத் தெரிவிக்க மேலும் இத்துறையில் ஈடுபட்டு உழைக்க அவை உதவியாக இருக்கும்.

புதன், 22 மே, 2013

மலேசியாவில் ஜூன் முதல்வாரத்தில் உலகத் தமிழாசிரியர் மாநாடு




மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் பத்தாவது உலகத் தமிழாசிரியர் மாநாடு வரும் ஜூன் மாதம் 3, 4, 5 ஆகிய மூன்றுநாள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீசியசு, தென்னாப்பிரிக்கா, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பேராளர்கள் கலந்துகொண்டு தமிழ்க்கல்வி குறித்த ஆய்வுக்கட்டுரைகளை வழங்க உள்ளனர்.

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் - ஜாலான் கிள்ளான் லாமாவில்  அமைந்துள்ள  பேர்ல் இண்டர்நேசனல் விடுதியில் மாநாடு மூன்றுநாளும் நடைபெறுகின்றது.

ஜூன் மாதம் மூன்றாம் நாள் (திங்கள் கிழமை) பிற்பகல் மூன்றுமணி முதல் பேராளர்களின் பதிவு நடைபெறும். பேராளர்களுக்கு உரிய விளக்கம், கட்டுரையாளர்களுக்கான குறிப்புகளும் வழங்கப்படும். மாலை 4.30 மணி முதல் பொது அரங்கில் அறிஞர்களின் உரை அமையும். அதன் பிறகு இணை அமர்வுகளில் கட்டுரைகள் படைக்கப்பெறும். இரவு 7.30 மணிக்கு மேல் இரவு விருந்தும் கலைநிகழ்ச்சியும் நடைபெறும். இதில் கூட்டுப்பேச்சு, முரசோவியம், நாட்டுப்புற இசை, தமிழிசை, நூல்வெளியீடு அமையும்.

இரண்டாம் நாள்(ஜூன் 4) மாநாட்டின் தொடக்க விழாவில் மாநாட்டுத் தலைவர் உரை, தொடக்க உரை அமையும். முற்பகல் 11 மணி முதல் பொது அமர்வு, இணை அமர்வுகள் தொடர்ந்து நடைபெறும்.

மூன்றாம் நாள் காலை அமர்வில் பொது அரங்கில் பன்னாட்டு நிகராளிகளின் நாட்டுப்படைப்பு வழங்கப்பெறும். அதன் பிறகு மாநாட்டின் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். முற்பகல் நடைபெறும் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினரின் நிறைவுரை இடம்பெறும். மாநாட்டில் கலந்துகொண்ட பேராளர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பெறும்.

பத்தாம் உலகத் தமிழாசிரியர் மாநாட்டின் தலைவராக ம.மன்னர்மன்னன் (மொழித்துறை, மலேயா பல்கலைக்கழகம்) அவர்களும், செயலாளராக எஸ். சுவீடன் அவர்களும் இருந்து மாநாட்டுப் பணிகளைக் கவனித்துவருகின்றனர். உலகத் தமிழாசிரியர் மாநாட்டுக் குழுவினர் மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்துவருகின்றனர்.

மாநாடு நடைபெறும் இடம்:

PEARL INTERNATIONAL HOTEL, KUALA LUMPUR
Batu 5, Jalan Klang Lama,
58000 Kuala Lumpur
General Line:   603-7983111
Fax:   603-79832211
E-mail:   pih@pearl.com.my

திங்கள், 20 மே, 2013

தனித்தமிழ் அறிஞர் பறம்பை அறிவன் மறைவு



பறம்பை அறிவன்
மொழிஞாயிறு பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரானர் கொள்கைகளில் ஆழ்ந்த பற்றுடையவரும் பாவாணரின் உலகத் தமிழ்க்கழக மாநாட்டைப் பரமக்குடியில் நடத்துவதற்கு முனைவர் மு. தமிழ்க்குடிமகன் அவர்களுக்குப் பெருந்துணைபுரிந்தவருமான தனித்தமிழ் அறிஞர் பறம்பை அறிவன் அவர்கள் 19.05.2013 மாலை 5.30 மணிக்கு உடல்நலக்குறைவு காரணமாகத் தம் எழுபத்தேழாம் அகவையில் மதுரையில் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.

பறம்பை அறிவன் அவர்களின் இயற்பெயர் மு.பெ.நளபதி. பெற்றோர் பெரியசாமி, கருப்பாயி ஆகியோர் ஆவர். இவர் பரமக்குடியை அடுத்த எமனேசுவரத்தில் பிறந்தவர். ஆசிரியர் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தமிழியம் என்ற இதழை நடத்தி வந்தவர். இப்பெருமகனார் இரா.லீலாவதி என்னும் அம்மையாரை மணந்து, மூன்று ஆண்மக்களையும், மூன்று பெண்மக்களையும் ஈன்றெடுத்த பெருமைக்குரியவர். தமிழிய வரலாற்றுப் பேரவை என்னும் அமைப்பை நிறுவித் தமிழ்த்தொண்டாற்றிவந்தார். தனித்தமிழ் இயக்கத்திற்கு அன்னாரின் மறைவு பேரிழப்பாகும்.

செவ்வாய், 7 மே, 2013

வாணியம்பாடி பாரதி தமிழ்ச்சங்கம் நடத்தும் பாரதி பன்னாட்டுப் பாவரங்கம்



வாணியம்பாடி பாரதி தமிழ்ச்சங்கம், இலக்கியா பதிப்பகத்துடன் இணைந்து பாரதி பன்னாட்டுப் பாவரங்கம் என்னும் நிகழ்ச்சியை 09.06.2013, ஏலகிரியில் நடத்துகின்றது. ஆர்வலர்கள் கலந்துகொண்டு தங்கள் படைப்புகளை வழங்கலாம்.

மரபுப்பா, புதுப்பா எதுவாக இருப்பினும் 25 வரிகளுக்கு மிகாமல் படைப்புகள் இருக்க வேண்டும். பேராளர் கட்டணம் 500 உருவா

அனைத்துத் தொடர்புகளுக்கும்:

பேராசிரியர் ப.சிவராஜி,
தமிழ்த்துறைத் தலைவர்,
இசுலாமியாக் கல்லூரி,
வாணியம்பாடி, வேலூர் மாவட்டம் - 635 752
செல்பேசி: 0091 9095831291
sivarajihodtamil@gmail.com

ஞாயிறு, 5 மே, 2013

தனித்தமிழ் அன்பர் மு.வ.பரணன் அவர்கள் மறைவு



மு.வ.பரணன் அவர்கள்

திருச்சிராப்பள்ளியின் பாரத மிகுமின் நிறுவனத்தில்(BHEL) பொறியாளராகப் பணிபுரிந்தவரும், பாவாணர், பெருஞ்சித்திரனார் கொள்கைகளில் ஆழ்ந்த பற்றுடையவரும், தமிழ்த்தேசிய எண்ணம் கொண்டவருமான அறிஞர் மு.வ. பரணன் அவர்கள் சற்றுமுன்னர் 04.05.2013 இரவு 11 மணியளவில் திருச்சிராப்பள்ளியில் தம் இல்லத்தில் உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிவிப்பதில் வருத்தமுறுகின்றேன்.

மு.வ. பரணன் அவர்கள் 29.05.1946 இல் திருச்சிராப்பள்ளி நடுப்பட்டியில் பிறந்தவர் இவர். பாவாணர் தமிழ்நூறு, ஆண்டகை, தமிழ் ஐந்திணை முதலான நூல்களின் ஆசிரியர். தெளிதமிழ் ஏட்டின் வளர்ச்சியில் ஆர்வம்கொண்டு உழைத்தவர். அறிஞர் மு.வ.பரணன் அவர்களை இழந்து வருந்தும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் எம் ஆழ்ந்த இரங்கல். 05.05.2013 ஞாயிறு மாலை திருச்சிராப்பள்ளியில் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

தொடர்புக்கு: 9894057167

வெள்ளி, 3 மே, 2013

தோழர் க. முகிலன்




 க.முகிலன் அவர்கள்

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்வுமாணவனாக நான் இருந்தபொழுது(1993 - 97) சிந்தனையாளன் ஏட்டைத் திரு. கருணாகரன் அவர்கள் எனக்கு மாதந்தோறும் வழங்குவார். அதில் இடம்பெறும் ஆழ்ந்த அறிவுடன் வரையப்படும் கட்டுரையை வரைந்தவர் யார் என்று பார்த்தால் க. முகிலன் என்று குறிக்கப்பட்டிருக்கும். நேரம் ஒதுக்கி அக்கட்டுரைகளை யான் படிப்பது உண்டு. காலங்கள் உருண்டோடின...

கலவை ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியில் யான் பணியாற்றியபொழுது(1999-2005) வகுப்பறையில் வருகைப் பதிவு எடுக்கும்பொழுது ஒவ்வொரு மாணவரின் பெயரையும் குறிப்பிட்டு, தமிழ்ப்பெயராக இருப்பின் பாராட்டுவேன். பிறமொழிப்பெயர் எனில் அதற்குத் தமிழ்ப் பொருள் கேட்பது என் வழக்கம்.

அவ்வகையில் என்னிடம் பயின்ற மாணவி ஒருவரின் பெயர் அனிச்சம் என்று இருந்தது. அவரின் பெயரைக் குறிப்பிட்டுப் பாராட்டினேன். தங்களுக்கு இந்தப் பெயர் சூட்டியவர் யார் என்றேன். உடனே அந்த மாணவி தம் தந்தையார்தான் இந்தப் பெயரைச் சூட்டினார்கள் எனவும், தம் தந்தையார் பெருஞ்சித்திரனார் தலைமையில் திருமணம் செய்துகொண்டவர் என்றும் குறிப்பிட்டார். ஒவ்வொரு வாரமும் தம் மகளை அழைத்துச் செல்ல அந்தத் தந்தையார் எம் கல்லூரிக்கு வருவதையும் அறிந்தேன். அடுத்த முறை வரும்பொழுது தங்கள் தந்தையாரை யான் பார்க்க விரும்புகின்றேன் என்று அந்த மாணவியிடம் சொன்னேன்.

அந்தக் கிழமை அனிச்சம் அவர்களின் தந்தையார் என்னைக் கண்டு உரையாடினார். அவர் பெயர் திருவாளர் கணேசன். பாலாபுரம் ஊரினர். இவ்வூர் சோழலிங்கபுரம் என்று முன்பு அழைக்கப்பெற்று இன்று சோளிங்கர் என்று திரிந்து வழங்கப்பெறும் ஊரை அடுத்து உள்ளது. அதன் பிறகு அனிச்சம் அவர்களின் தந்தையார் கல்லூரிக்கு வரும்பொழுதெல்லாம் என்னைக் கண்டு உரையாடுவார். ஒருமுறை அவரின் மூத்த மகளுக்குத் திருமணம் என்றும் நான் வந்து வாழ்த்துரை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நானும் சென்று அந்தத் திருமண விழாவில் கலந்துகொண்டதாக நினைவு. அதனை அடுத்தும் திரு.கணேசனார் அவர்களின் குடும்ப நிகழ்வுகளுக்குச் சென்று கலந்துகொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.

திரு. கணேசனார் அவர்கள் தனித்தமிழ் அன்பர். பாவாணர், பெருஞ்சித்திரனார் கொள்கைகளில் நிரம்பப் பற்றுக்கொண்டவர். தம் பிள்ளைகளுக்குத் தூய தமிழில் பெயர்சூட்டியப் பெருமகனார். அப்பிள்ளைகளின் பெயர்கள் வருமாறு:  அமுதுவல்லி, அனிச்சம், நெய்தலி, முத்துநகை, அதியமான். இப்பெயர்களே இவர் யார் என்பதை நமக்கு அடையாளம் காட்டும். நம் கணேசனார் அவர்கள் அந்தப் பகுதியில் தமிழ்ப்பணிகளில் முன்னிற்பவர். பள்ளியில் ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். அவர்தான் எனக்குத் திரு.க.முகிலன் ஐயாவை அறிமுகம் செய்தார். பிறகு தமிழேந்தி ஐயா அவர்கள் வழியாகவும் முகிலன் ஐயாவைப் பற்றி அறிந்தேன்.

ஆர்க்காட்டில் வாழ்ந்த திரு.மு. நடேசன் அவர்கள் வழியாக டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு குறித்த தனஞ்செய்கீர் அவர்களின் நூலினைக் க. முகிலன் அவர்கள் மொழிபெயர்த்ததை அறிந்து அந்த நூலினை வாங்கிக் கற்றேன். அம்பேத்கரின் வாழ்க்கையையும் அவர் ஆர்வமுடன் கல்வி கற்ற வரலாற்றையும் கற்று மகிழ்ந்தேன். நான் மாணவர்களுக்குக் கல்வி ஆர்வம்கொண்ட அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை உரிய நேரங்களில் நினைவுகூர்ந்து சொல்வதுண்டு.

அம்பேத்கரின் வாழ்கை வரலாற்றை மிகச்சிறப்பாக உள்வாங்கிக்கொண்டு இந்த நூல் க.முகிலனால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தனஞ்செய்கீர் அவர்கள் காந்தி உள்ளிட்ட தேசத் தலைவர்களின் வரலாற்றை மிகச்சிறப்பாக எழுதிய பெருமகனார் ஆவார். அவர் எழுத்துவழி அம்பேத்கர் வாழ்க்கை நம் உள்ளத்தில் என்றும் நிலைபெறும் வகையில் க.முகிலன் அவர்கள் இந்த நூலைத் தந்துள்ளார்.

க.முகிலன் அவர்கள் பலவாண்டுகளாக வரைந்துள்ள கட்டுரைகள் யாவும் தொகுக்கப்பெற்றுத் தனித்தனி நூல்தொகுப்புகளாக வெளிவரவேண்டும் என்பது நம் விருப்பம். தோழர் க. முகிலன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.

க.முகிலன்

க.முகிலன் அவர்களின் இயற்பெயர்  அ.கிருட்டிணன் என்பதாகும். பெற்றோர் பெயர் திருவாளர்கள் பெரிய கண்ணப்பன் - இராமாஞ்சி ஆகும். இவர்தம் குடும்பப்பெயர் “அகத்தி” என்பதன் அடிப்படையில் அ.கிருட்டிணன் என்று அழைக்கப்பெற்றார். 19.08.1943 இல் பிறந்தவர். பிறந்த ஊர் சோளிங்கபுரம். இவ்வூரில்தான் இவர்தம் தொடக்க, உயர்நிலைக்கல்வி அமைந்தது. புகுமுக வகுப்பு வேலூர் ஊரிசு கல்லூரியில் அமைந்தது.  

முகிலன் அவர்கள் கோவை வேளாண்மைக் கல்லூரியில்1965 முதல் 1969 வரை இளம் அறிவியல் - வேளாண்மை பயின்று பட்டம் பெற்றவர். படித்து முடித்த உடன் 1969 இல் அரக்கோணத்தில் வேளாண்மை அலுவலராகப் பணியில் இணைந்தவர். 
முகிலன் அவர்கள் படிக்கும் காலத்திலேயே தமிழ்ப்பற்றுடையவராக விளங்கினார். இவரின் வகுப்புத்தோழர் பேராசிரியர் சோதிவாணன் ஆவார். பேரா. சோதிவாணன் அவர்களின் உடன்பிறப்புகள் இரா. கணேசன்  அவர்களும் "உதவும் உள்ளங்கள்" சந்திரசேகரனும் ஆவர். இரா. கணேசன் அவர்கள் கிண்டிப் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவரும் மிகச்சிறந்த தமிழ்ப்பற்றாளர். இவர்களுடன் அமைந்த நட்பு தமிழின் பக்கம் க. முகிலன் அவர்களை இழுத்தது.

க.முகிலன் அவர்கள் மொழிஞாயிறு பாவாணர் தலைமையில் திருமணம் செய்துகொண்டவர் (1968). தனித்தமிழ் இயக்க ஈடுபாடும், உவமைக்கவிஞர் சுரதாவின் தொடர்பும் முகிலன் அவர்களுக்கு வாய்த்தது.

1973 இல் தந்தை பெரியார் அவர்கள் சென்னையில் ஒரு மாநாடு நடத்தினார். அதில் அறிஞர் வே. ஆனைமுத்து அவர்களின் உரையைக் கேட்டு மகிழ்ந்து, அறிஞர் வே. ஆனைமுத்துவின் தொடர்பு கிடைத்தது. வே. ஆனைமுத்து அவர்கள் 1974 இல் சிந்தனையாளன் ஏட்டைத் தொடங்கியபொழுது தொடர்பு வலிமையானது. 1988 முதல் சிந்தனையாளன் ஏட்டில் தொடர்ந்து நாட்டு நடப்புகளை மையமிட்ட கட்டுரைகளை முகிலன் வரைந்துவருகின்றார்.

1978 இல் வே. ஆனைமுத்து அவர்கள் அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டினைக் கூட்டினார். அப்பொழுது ஆனைமுத்து அவர்களுடன் இணைந்து பணிபுரிய வாய்ப்புகள் அமைந்தன.

தனஞ்செய் கீர் அவர்களால் 1954 இல் எழுதி வெளியிடப்பட்ட அம்பேத்காரின் வாழ்க்கை வரலாற்றை முகிலன் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்தார். இந்த மொழிபெயர்ப்பை மூன்று மாதம் வே. ஆனைமுத்து அவர்களுடன் இணைந்து ஒப்பிட்டு மொழிநடை செப்பம் செய்யப்பட்டது. 1992 சூன் மாதம் அம்பேத்கர் நூல் வெளிவந்துள்ளது.

முகிலன் அவர்கள் தொடர்ந்து அறிவார்ந்த கட்டுரைகளைச் சிந்தனையாளன் ஏட்டில் எழுதிவருகின்றார். மார்க்சிய நோக்கிலும் பெரியாரிய நோக்கிலும் சிந்திக்கும் இப்பெருமகனார் தமிழியக்க மேடைகளில் தம் கருத்துகளைத் துணிந்து எடுத்துரைக்கும் சிந்தனையாளர். தமிழும் ஆங்கிலமும் அறிந்த இப்பெருமகனார் தொடர்ந்து தமிழர் மேம்பாட்டுப்பணிகளில் ஈடுபடவேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பாகும்.

வியாழன், 2 மே, 2013

புதுவையின் பெண் பாவலர் பூங்கொடி பராங்குசம்


புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்கள்

புதுச்சேரியில் தொடர்ந்து தமிழ் இலக்கிய வினைபாடுகளில் முன்னிற்பவராகப் பூங்கொடி பராங்குசம் அவர்கள் விளங்குகின்றார். புதுச்சேரியில் வாழ்ந்த புதுவைச்சிவம், செகதாம்பாள் இணையருக்கு மகளாக 09.10,1946 இல் பிறந்தவர்.  

பூங்கொடி அவர்கள் தொழில்முனைவர் பராங்குசம் அவர்களை இல்லறத்துணையாக ஏற்றுத் தமிழ்ப்பணியைத் தொடர்ந்து ஆற்றி வருகின்றார். புலவர், பி.லிட், எம்.. பட்டங்களைப் பெற்று முதுநிலைத் தமிழாசிரியராகப் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்றவர். இவர்களுக்குத் தமிழரசி செந்தில்குமார், எழிலரசி சிரிதர், , தமிழ்முத்து ஆகிய மக்கள் செல்வங்கள் வாய்த்தனர்.

பூங்கொடி அவர்கள் புதுச்சேரி அரசிடம் இயல்துறையில் கலைமாமணி விருது பெற்ற முதல் பெண் விருதாளர் ஆவார். இவர் புதுச்சேரியில் மரபுப் பாவில் நூல் இயற்றிய முதல் பெண்  கவிஞர் ஆவார்.

செய்பணி :
1.  இயக்குநர் - ஆனந்தா இரும்புத் தொழிலகம்
2.  நிறுவுநர் - இலக்கியப் பொழில் இலக்கிய மன்றம்
3.  நிறுவுநர் அன்பு வட்டம் மகளிர் அமைப்பு                                                                                                 
4.  பொருளாளர் - ஆசிரியர் நலவாழ்வுக்குழு
5. பொருளாளர் - தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக்குழு.
6. செயற்குழு உறுப்பினர் - விவேகானந்தா சிறுவர் இல்லம்
7. இயக்குநர், முன்னாள் தலைவி - புதுச்சேரி இன்னர் வீல்சங்கம்.
8. துணைத்தலைவர் - நுண்கலைத் தமிழ்மன்றம்
9. துணைத்தலைவர் : தமிழ்த்தொண்டன் பாரதி  இலக்கியக் கழகம்.

பூங்கொடி பராங்குசம் பெற்ற விருதுகள்:

 புதுச்சேரி அரசின் கலைமாமணி  விருது.
புதுச்சேரி அரசின் பாரதியார் நூற்றாண்டு விழா விருது.
புதுச்சேரி அரசின் பாவேந்தர் நூற்றாண்டு விழாப்பட்டம்
புதுச்சேரி அரசின் காமராஜ் நூற்றாண்டு விழா விருது
புதுச்சேரி அரசின் விடுதலைப் பொன்விழா விருது
கவிஞர் புதுவைச்சிவம் நூற்றாண்டு விருது
சூரிய விசயகுமாரி - துரை மாலிறையன் அறக்கட்டளையின் அன்னை தெரசா இலக்கிய விருது
வெற்றித் தமிழர் பேரவையின் (வைரமுத்து) விருது
புதுவைக்குப் புகழ்சேர்க்கும் பெண்மணி விருது
மாவட்ட இன்னர்வீல் சங்க விருதுகள்
சிகரம் தொட்ட மகளிர் விருது
கவிதைப்பூங்கா (நண்பர்கள் தோட்டம்) மற்றும் பல்வேறு அமைப்புகள், அறக்கட்டளைகள் மூலம் வெள்ளிப் பாவரங்க விருது, இலக்கிய மாமணி விருது, செந்தமிழ்ச்சுடர் விருது,  தீந்தமிழ்த் தென்றல் விருது, கண்ணியச் செம்மல் விருது,  இலக்கியச் செம்மல் விருது போன்ற பல்வேறு விருதுகள்.

படைப்புகள் :

1.  வண்ண விளக்குகள் - மரபுக் கவிதை
2.  இலக்கியப் பொழில்
3.  மறுமலர்ச்சிக் கவிஞர் புதுவைச்சிவமும் பெண்ணியற் சிந்தனையும்
4.  புதுவைச்சிவத்துடன் பொன்னான நாட்கள்
5.  முத்தமிழ்ச் சுடர் முனைவர் இரா. திருமுருகனார் (ஆய்வு நூல்)

வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரை வழங்குவதும், இலக்கிய அரங்குகளில் நடைபெறும் பட்டிமன்றம், கருத்தரங்குகளில் கட்டுரை வழங்குவதும் இவர் ஈடுப்பட்டுச் செய்யும் பணிகளாகும். புதுவையின் புகழ்மிக்க பெண்மணிகளுள் குறிப்பிடத்தகுந்தவர் இவர்.

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் முகவரி:   
  
"முத்தகம்''
23, அன்னை தெரசா தெரு, இராசா நகர்,
புதுச்சேரி - 13. தொ.பே. 2201129.
செல்பேசி : 9843224827.



புதன், 1 மே, 2013

மொழிபெயர்ப்பு அறிஞர் கு. பாலசுப்பிரமணியன் அவர்கள்



 கு.பாலசுப்பிரமணியன் அவர்கள்

தமிழ்நாட்டு அரசின் மொழிபெயர்ப்புத்துறையில் குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புப் பணிகளைச் செய்து ஓய்வுபெற்றவர் மொழிபெயர்ப்பு அறிஞர் கு.பாலசுப்பிரமணியன் அவர்கள். தமிழிலும் ஆங்கிலத்திலும் நல்ல புலமையும் பயிற்சியும்கொண்ட கு. பாலசுப்பிரமணியன் அவர்கள் தமிழுக்கு ஆக்கமான பல மொழிபெயர்ப்புகளை அமைதியாகச் செய்துவழங்கியுள்ளார். ஆர்ப்பாட்டம் இல்லாத இந்த அறிஞரின் தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.

கு. பாலசுப்பிரமணியன் அவர்கள் விருதுநகர் மாவட்டம் வாடியூரில் 09.06.1943 இல் பிறந்தவர். பெற்றோர் திருவாளர்கள் மீ.குருசாமி, குருவம்மாள் ஆவர். பள்ளிக்கல்வியைத் தியாகராசபுரத்திலும், உயர்நிலைக் கல்வியை நடுவூர்ப்பட்டியிலும் நிறைவுசெய்தவர். பட்டப் படிப்பைச் செந்தில்குமார நாடார் கல்லூரியில் பயின்றவர். இக்கல்லூரியில் பயிலுங்காலத்தில் ஆங்கிலத்தில் நல்ல பயிற்சி ஏற்பட்டது. பேராசிரியர்கள் வில்லியம்ஸ், நாராயணசாமி நாயுடு உள்ளிட்டவர்களிடம் பயின்ற காரணத்தால் தமிழும் ஆங்கிலமும் நன்கு அறிந்தார்.

1964-65 இல் தமிழாசிரியராகப் பணியாற்றினார். 1967-69 இல் தமிழ் உரையாளராகப் பணியாற்றினார். 1970 முதல் 2001 வரை மொழிபெயர்ப்புத் துறையில் பணி. மொழிபெயர்ப்பு அலுவலராகவும், உதவி இயக்குநராகவும், துணை இயக்குநராகவும் பணிபுரிந்த பெருமைக்குரியவர். இதழியலில் முதுகலைப் பட்டயப்படிப்பு முடித்தவர். பல இதழ்களுக்குத் துணையாசிரியராக இருந்து பணிபுரிந்துள்ளார்.

மாலத்தீவு உயர்நீதி மன்றத்தில் நடைபெற்ற வழக்கில் மொழிபெயர்ப்பாளராக இருந்து பணிசெய்த பெருமைக்குரியவர். உழைப்பவர் உலகம் என்ற இதழின் துணை ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் வரவு செலவுத்திட்ட மொழிபெயர்ப்புப் பணியில் மொழிபெயர்ப்புப் பொறுப்பு அதிகாரியாகக் கடமையாற்றியவர்.

அறிஞர் மு.வ. எழுதிய கரித்துண்டு புதினத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான சூளாமணியின் ஆங்கில மொழிபெயர்ப்புப் பதிப்பில் இணைப்பதிப்பாசிரியராக இருந்து பணியாற்றியுள்ளார். இரண்டு தொகுதிகளாக வெளிவந்த நூல் இதுவாகும். பெருமழைப்புலவரின் உரையுடன் வெளிவந்த இந்த நூல் பதிப்பில் இவரின் உழைப்பு அதிகம் அமைந்தது.

சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் (பிர்லா கோளரங்கம்) கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு உழைத்து வருகின்றார்.

தமிழுக்குரிய செம்மொழித் தகுதி குறித்து அறிஞர் ஹார்ட்டு வரைந்த மடலினைத் தமிழில் மொழிபெயர்த்த பெருமை இவருக்கு உண்டு. இன்னும் தமிழுக்குப் பயன்படும் பல மொழிபெயர்ப்புகளையும் அறிக்கைகளையும் இவர் உருவாக்கித் தந்துள்ளார். பாரதியார் படைப்புகள் குறித்தும் இவர் பல கட்டுரைகள் வரைந்துள்ளார்.

விளம்பர வெளிச்சம் விரும்பாமல் வேராக இருந்து தமிழ்ப்பணிபுரிவதால் பெரும்பான்மை மக்களுக்கு அறிஞர் கு. பாலசுப்பிரமணியன் அவர்களின் பணி தெரிய வாய்ப்பில்லாமல் போனது. தமிழர்களால் போற்றிக் கொண்டாடப்பட வேண்டிய இத்தமிழ்ப் பற்றாளர் கானவன் என்ற புனைபெயரிலும் எழுதிவருகின்றார். சென்னை குரோம்பேட்டையில் தமிழ் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார் இந்த இருமொழிப் புலமையாளர்.