நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

இலங்கை-மலையகத் தமிழ் எழுத்தாளர் அந்தனி ஜீவா

அந்தனி ஜீவா 
     புதுச்சேரியில் நாளொரு இலக்கிய நிகழ்வுகள் நடந்த வண்ணம் இருக்கும். நூல் வெளியீடு, பிறந்தநாள் விழா, நினைவுநாள் விழா, பாராட்டு விழா, புத்தகக் கண்காட்சி, பக்தி விழாக்கள், சிறப்பு உரையாளர் பேச்சு, அறக்கட்டளைப் பொழிவு, வரவேற்பு விழா, வழியனுப்பு விழா, பாரதி விழா, பாவேந்தர் விழா எனப் பல வடிவில் விழாக்கள் நடக்கும். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் கலந்துகொள்வேன். 

     இலங்கையிலிருந்து அந்தனி ஜீவா வருகின்றார். அவர் ஈழத்து இலக்கியப் போக்குகள் குறித்து உரையாற்றுவார் என்று பாவலர் சீனு. தமிழ்மணி சில மாதங்களுக்கு முன் அழைப்பு விடுத்தார். அந்த நிகழ்வுக்குச் சென்றேன். வேறொரு வேலை இருந்ததால் உரையை மட்டும் கேட்டுவிட்டு, கலந்துரையாடலின் பொழுது வந்துவிட்டேன். எழுத்தாளர் சூரியதீபன் அவர்களும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். பேராசிரியர் ம.இலெனின் தங்கப்பா தலைமையில் விழா நடந்தது. மறுநாள் புதுச்சேரி பாரதிப் பூங்காவில் ஒரு நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யும்படி சீனு. தமிழ்மணியைக் கேட்டுக்கொண்டேன். அவரும் அந்தனியிடம் இசைவு பெற்றிருந்தார். அந்தனியும் சூரியதீபனும் பிரஞ்சு நிறுவன நூலகம் உள்ளிட்ட சில பகுதிகளைப் பார்வையிட்டுப் பாரதிப் பூங்கா வந்தனர். நானும் சீனு.தமிழ்மணியும் ஓர் ஒலிப்பதிவுக் கருவியுடன் பூங்காவில் நுழைந்து அறிமுகம் செய்துகொண்டோம். சில படங்களை நினைவுக்காக எடுத்துக்கொண்டேன். இவை இரண்டு திங்களுக்கு முன் நடந்தவை (இலங்கையில் அதிபர் தேர்தல் நடந்த சமயம்). அந்தனியிடம் மலையகத் தமிழர்கள் பற்றியும் பொதுவான கலை இலக்கிய முயற்சிகள் பற்றியும் உரையாடினோம். 

    தமிழகத்தைவிடவும் அங்குத் திட்டமிட்டுக் கூத்துக்கலையை எப்படியெல்லாம் வளர்த்துள்ளார்கள் என்பதறிந்து மகிழ்ந்தேன். மலையக மக்களின் அரசியல் முயற்சி, அரசியல் வாதிகளால் மலையக மக்கள் எப்படி ஏமாற்றப்பட்டார்கள் என்பது பற்றியெல்லாம் எடுத்துரைத்தார். தாம் ஆசிரியராக இருந்து நடத்தும் கொழுந்து என்னும் இதழ் பற்றியும் எடுத்துரைத்தார். பல நாடகங்களை உருவாக்கியும் இயக்கியும், நடித்தும், பல நூல்களை எழுதியும், தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்டும் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கும் அந்தனி ஜீவா அவர்கள் வாழ்க்கைக் குறிப்பை இங்குப் பதிவதில் மகிழ்கின்றேன். 

     அந்தனி ஜீவா அவர்கள் மலையக இலக்கியத்துக்குப் புத்துயிர் அளித்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர். மறைந்து கிடந்த மலையக இலக்கியங்களையும், இலக்கியப் படைப்பாளிகளையும் இலக்கிய உலகிற்கு நினைவூட்டியவர். இவர் சாகித்திய மண்டலப் பரிசில் பெற்ற அக்கினிப்பூக்கள்,ஈழத்தில் தமிழ்நாடகம், அன்னை இந்திரா, காந்தி நடேசையர், மலையகமும் இலக்கியமும், மலையகத் தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம் எழுத்தாளர்களின் பங்களிப்பு, மலையகம் வளர்த்த தமிழ், மலையகம் வளர்த்த கவிதை, கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள், அம்மா, மலையக மாணிக்கங்கள், முகமும் முகவரியும், திருந்திய அசோகன், நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்,மலையகத் தொழிற்சங்க வரலாறு உள்ளிட்ட குறிப்பிடத்தகுந்த நூல்களை எழுதியவர். 1970 அளவில் நாடகத் துறையில் கால்பதித்த ஜீவா இதுவரை 14 நாடகங்களை மேடையேற்றியுள்ளார். 

    1980 களில் மலையக வீதி நாடகங்களை அளித்த பெருமை இவரையே சாரும். அந்தனி ஜீவா அவர்கள் 1944 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் நாள் கொழும்பில் பிறந்தவர்.படிக்கும் காலத்தில் மாணவ நண்பர்களுடன் இணைந்து கரும்பு என்னும் சிறுவர் இதழை நடத்தியவர்.மாணவப்பருவத்தில் மாணவன்,தமிழருவி, திருமகன், கலைமலர் உள்ளிட்ட இதழ்களில் எழுதியவர். வீரகேசரி உள்ளிட்ட புகழ்பெற்ற ஏடுகளிலும் இவர் படைப்புகள் வெளிவந்துள்ளன. இதழாசிரியராக நமக்கு அறிமுகமானாலும் சிறுகதையாசிரியராக, நாடக ஆசிரியராக,நாடக இயக்குநராக, நூல் வெளியீட்டாளராகவும் விளங்குகின்றார். தமிழ்நாட்டில் வீதி நாடகப் பயிற்சி பெற்ற ஜீவா வெளிச்சம்,சாத்தான் வேதம் ஓதுகின்றது போன்ற முதன்மையான வீதி நாடகங்களைத் தந்துள்ளார்.1970 இல் இவர் உருவாக்கிய முள்ளில் ரோஜா நாடகம் தமிழ் அரங்கியல் உலகுக்கு இவரை அடையாளம் காட்டியது.30 ஆண்டுகளுக்கு முன் அரங்கேற்றப்பட்ட அக்கினிப்பூக்கள் நாடகம் இதுவரை 16 முறை அரங்கேற்றப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் சிக்கலை முன்வைக்கும் இந்த நாடகம் நடந்தபொழுது தொழிலாளர்கள் எழுந்து நின்று குரல்கொடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தும் அளவுக்கு உணர்வுமயமானது. இந்த நாடகம் நூல் வடிவிலும் வந்து பரிசில் பெற்றது. 

     சாரல் நாடனும் அந்தனியும் இணைந்து பதிப்பித்த தேசபக்தன் கோ.நடேசய்யர் என்ற நூல் தொழிற்சங்கவாதியான நடேசய்யரின் வரலாற்றைப் பதிவுசெய்துள்ளது. தமிழகத்தில் நடக்கும் இலக்கியக் கலந்துரையாடல்கள், மாநாடுகள், ஆய்வரங்குகளில் வாய்ப்பு நேரும்பொழுதெல்லாம் கலந்துகொள்கின்றார். தமிழகத்து முற்போக்கு இயக்கத் தோழர்களுடன் நல்ல உறவுகொண்டுள்ள அந்தனி அவர்கள் இலங்கை-தமிழ் எழுத்தாளர்களை இணைக்கும் பாலமாக விளங்குகின்றார்.இலங்கை எழுத்தாளரும், பதிப்பாளருமான திரு.புன்னியாமீன் அவர்கள் என் நெருங்கிய நண்பர். இவர்கள் இருவரும் நண்பர்கள் என்பதறிந்து மகிழ்கிறேன். பழகுதற்கு இனியவரும், இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் அமைந்த அந்தனி அவர்களின் நட்பை உயர்வானதாகப் போற்றுகின்றேன். நாடகம், தொழிற்சங்கம், கலை,இலக்கியம் என்று வாழ்வைச் செலவிடும் மலையகத்தின் மூத்த இதழாளரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. இவர் உதவியால் என் நூல்கள், இணையப்பணிகள் இலங்கைத் தமிழர்களுக்குத் தெரியத் தொடங்கியது. ஆம். தினக்குரலில் என் நூல் பற்றிய விரிவான மதிப்புரை வரைந்ததும், கொழுந்து இதழில் என்னைப் பற்றி அறிமுகம் செய்ததும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்துள்ளது.

பேரா. ம.இலெ. தங்கப்பா, சூரியதீபன், அந்தனி(இலக்கியம் நிகழ்ச்சி)
நான், சூரியதீபன், அந்தனி
சீனு.தமிழ்மணி, சூரியதீபன், அந்தனி

திங்கள், 19 ஏப்ரல், 2010

முனைவர் தமிழகனின் வழக்குச்சொல் அகராதி


முனைவர் பி.தமிழகன்

  திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நான் முனைவர்பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்தபொழுது பேராசிரியர் இரா.இளவரசு அவர்களின் தொடர்பு ஏற்பட்டது. இளவரசு ஐயா அவர்கள் சென்னையிலிருந்து திருச்சிராப்பள்ளி வந்தால் புலவர் பி.தமிழகன் அவர்களின் இல்லில் தங்குவது வழக்கம். இருவரும் உறவினர்கள்.புலவர் தமிழகன் அவர்கள் பள்ளியில் தமிழாசிரியராக அந்நாளில் பணிபுரிந்து வந்தார்கள்.என்னைப் பற்றிப் பேராசிரியர் உயர்மொழிகள் நவின்று அறிமுகப்படுத்தி வைப்பார்கள்.

  அந்நாளில் புலவர் அவர்கள் வழக்குச்சொல் அகராதி ஒன்று அணியப்படுத்தி வருவதாகச் சொன்னார்கள்.எனக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி.ஏனெனில் அந்நாளில் உழவியல் வழக்குச்சொல் என்னும் ஒரு சொல் தொகுப்பை நான் கரட்டுப்படியாக உருவாக்கி வைத்திருந்தேன்.

  நான் உழவர் குடியில் பிறந்தவன் ஆதலாலும் மூன்றாண்டுகள் உழவுத்தொழிலில் ஈடுபட்டு அதன் பிறகே கல்லூரிக்குப் படிக்க வந்தவனாதலாலும் எனக்கு உழவியல் சார்ந்த சொற்களையறிதலும் அதற்கு விளக்கம் வரைதலும் உவப்பானதாக இருந்தன.பின்னாளில் பேராசிரியர் பெருமாள்முருகன்,கண்மணி குணசேகரன் உள்ளிட்டவர்கள் அகராதிகள் வெளியிட்டபொழுது நாம் வெளியிட்டிருந்தால் நம் நூல் முதலில் வந்திருக்கும் என்று எண்ணியதுண்டு.இந்த நாள் வரை அந்த நூல் முற்றுப்பெறாமல் உள்ளது.இது நிற்க.

 புலவர் தமிழகன் ஐயாவைச் சந்திக்கும்பொழுதெல்லாம் வழக்குச் சொல்லகராதி எப்பொழுது வரும் என்று வினவுவது எங்கள் வேலையாகிவிட்டது. செப்பமாக வெளியிட விரும்பியதால் புலவரால் நாங்கள் விரும்பிய காலத்தில் வெளியிடமுடியவில்லை.

  எதிர்பாராத வகையில் சென்ற கிழமை புலவரின் வழக்குச்சொல் அகராதி நூல் கையினுக்கு வந்தது. புலவரைவிடவும் அவர் மேல் அன்புகொண்டிருந்த எங்களுக்கே மகிழ்ச்சி அதிகமாக இருந்திருக்கும். புலவர் அவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பிறந்து பல வட்டாரத்தில் தமிழாசிரியர் பணிபுரிந்தவர். ஆதலால் மிகநுட்பமாகப் பல சொற்களைப் பதிவுசெய்துள்ளார்கள்.

  புலவர் தமிழகன் அவர்களின் வழக்குச்சொல் அகராதி பற்றி சில சொற்கள் எழுதுகின்றேன்.பின்னர் விரிவாக இந்த நூல் பற்றி ஆய்வுரை ஒன்று வரைவேன்.


வழக்குச்சொல் அகராதி

 புலவர் தமிழகன் அவர்களின் வழக்குச்சொல் அகராதி 2009 இல் முதற்பதிப்பாக வெளிவந்துள்ளது.22+142= 164 பக்கத்தில் இந்நூல் இயன்றுள்ளது. உருவா எண்பது விலையுள்ள நூல்.நோக்குநூல் என்ற தலைப்பில் புலவர் இரா.இளங்குமரனார் அணிந்துரை தந்துள்ளார்.கொங்கு தேர்ந்துண்ணும் தும்பி போலும் வழக்குச்சொற்களைத் தேடித்திரட்டிய புலவர் தமிழகனின் உழைப்பை அணிந்துரையாசிரியர் அகம் குளிர்ந்து பாராட்டியுள்ளார்.

  ”முனைவர் தமிழகனார் கேட்டல், தொகுத்தல், அடைவுறுதல், விளக்கம் புரிதல், அச்சிடல் என்னும் ஐந்து சால்பூன்றிய மாளிகையாய்த் தமிழன்னைக்கு எடுத்த மாளிகை இஃது” என்று இளங்குமரனார் போற்றியுள்ளார்.இடால்-வலை; குட்டாலி-பாம்புப்புற்று என்னும் சொற்கள் அகராதிகளில் ஏற்றப்பட வேண்டிய சொற்களாகும் என்பது இரா.இளங்குமரனாரின் வேண்டுகை.

 புலவர் தமிழகனார் 1973 இல் பஞ்சப்பட்டி அரசுப்பள்ளியில் பணியாற்றிய காலம் முதல் அரிய சொல் வழக்குகளைக் கேட்டு வியந்து தொகுக்கத் தொடங்கிப் பல ஆண்டுகளின் தொகுப்பில் பல்லாயிரம் சொற்களாக நமக்குக் கிடைத்துள்ளன. பஞ்சப்பட்டி என்ற ஊரின் பள்ளி மாணவன் மூட்டுக்குட்டி என்று பெண் ஆட்டுக்குட்டியைக் குறிப்பிட்டது கண்டு, கேட்க, அம்மாணவன் பெண்குட்டியை “மூடு” என்போம் என்றான். தொல்காப்பியத்தில் மரபியலில் உரையாசிரியர் பேராசிரியர் “இவை இக்காலத்து வழக்கினுள் அரிய” (தொல்.மர.64) என்று குறிப்பிடுவது இன்றும் மக்கள் வழக்கில் இருந்தது கண்டு புலவர் மகிழ்ந்து சொல் தொகுப்பை வேகப்படுத்தியுள்ளார்.

  1982 இல் சோமரசன் பேட்டை என்ற ஊரில் பணிபுரிந்தபொழுதும் சொல் தொகுப்பு நடந்துள்ளது.இன்னும் அவர் சொல்தொகுப்புப் பணி நின்றபாடில்லை. வழக்குச்சொல்லகராதி நூலில் 2599 வழக்குச்சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளன.நூல் அச்சான இந்த நான்கு மாதத்தில் இன்னும் 60 சொற்களை நம் புலவர் அவர்கள் தொகுத்து வைத்துள்ளார்.அடுத்த பதிப்பில்தான் இதனை இணைக்க வேண்டும் என்று ஆர்வம் ததும்ப பேசுகின்றார். இந்த நூலில் முதன்மையான சொற்கள் சிலவற்றுக்குப் படம் வரைந்து இணைக்கப்பட்டுள்ளன.

வழக்குச்சொல்லகராதியில் சொற்கள் அகரவரிசையில் தரப்பட்டுள்ளன.

 வழக்குச்சொல்,அதற்குரிய பொருள்,அது தொடரில் இடம்பெறும் தன்மை, எந்தப் பகுதியில் வழங்குகிறது என்பதைக்குறிக்கும் குறிப்பு என்ற அமைப்பில் நூல் உள்ளது.

(எ.கா) அக்கச்சி-மூத்த உடன் பிறந்தாள். ’உன் அக்கச்சியைக் கூப்பிடு’ (பஞ்)

அங்காளி-நெருக்கமில்லாத,அங்கொன்றும் இங்கொன்றும்

அதம்புதல்-இடிபோல முழங்குதல்

அந்தோளி-அவ்விடம்

அருநாட்டியம்-தூய்மை உடைமை

அலர்-காளைகளின் கழுத்தில்மொட்டு(மலர்) வடிவில் கட்டப்படும் பெருஞ்சலங்கை

ஆண்டுமாறி-எதையும் விற்பவன்

உடையடி(த்தல்)-இளங்காளை,கிடாய்களின் விதையை நசுக்குதல்

உக்கழுத்து-முன் கழுத்து

ஊட்டுக்குட்டி- சின்னஞ்சிறு ஆட்டுக்குட்டி

ஓலவாய்-புரியாத பேச்சு பேசுபவன்

கச்சு-உப்பு மிகுதி

கடவு-வேலியில் உள்ள சிறுவழி

கண்டறை- வைக்கோல் போரில் வைத்துப் பிடுங்குதல்

சாக்கு-காரணம்

சிக்கம்- பை போலிருக்கும் வலை(தொரட்டியிலே சிக்கம் கட்டி மாங்காய் அறுப்போம்)

சிக்குப்பலகை- பெரிய புத்தகங்களை வைத்துப் படிக்க உதவும் பலகை

படுக்காளி-சோம்பேறி மாடு

பத்திரிப்பு- கட்டடங்களில் சிறிது ஒதுக்கி உள்ளே கட்டுதல்

பத்தை-சிறு தூறு

என்று வழக்கில் தொடர்ச்சியாகப் பயில்வனவும் அருகி வழங்குவனவுமான ஈராயிரத்து அறுநூறு சொற்களை அழியாமல் திரட்டித் தந்துள்ள முனைவர் பி.தமிழகனார் தமிழ் இலக்கிய வரலாற்றில் நினைவுகூரத்தக்கவரே!

முனைவர் பி.தமிழகனார் வாழ்க்கைக்குறிப்பு

 முனைவர் பி.தமிழகனின் இயற்பெயர் பி.இராசலிங்கம் என்பதாகும்.பெற்றோர் ப.பிச்சை-மீனாட்சியாகும்.இவர் பிறந்த ஆண்டு பள்ளிப் பதிவேடுகளின்படி 05.10.1946.உடன் பிறந்தோர் மூவர் ஆண்கள். இவர் பிறந்த ஊர் குமுளூர்-இலால்குடி வட்டம்,திருச்சிராப்பள்ளி மாவட்டம். தொடக்கக் கல்வியைக் குமுளூர் தொடக்கப்பள்ளியில் பயின்றவர். கல்லூரிக் கல்வியைக் கரந்தைப் புலவர் கல்லூரியில் பயின்றவர்(1965-1969).1976 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாகப் பி.லிட் பட்டத்தையும்,1980 இல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் வழியாக முதுகலைப்பட்டத்தையும் பெற்றவர்.

  பின்னர் கல்வியியல் இளையர்(982),கல்வியியல் முதுவர்(1986) பட்டத்தையும் பெற்றவர். முனைவர் பட்ட ஆய்வைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் வழியாகத் தொடர்ந்து "மரபியல் சொற்களும் சங்க இலக்கியப் பயன்பாடும்" என்ற தலைப்பில் அகராதியியல் துறையின் வழியாகப் பெற்றவர்.

 பள்ளித் தமிழாசிரியராகப் பணிபுரிந்த புலவர் அவர்கள் தஞ்சாவூர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணிபுரிகின்றார்.தமிழகத்தில் தொல்பொருள் ஆய்வு-புலவர் பாடநூல், வழக்குச்சொல்லகராதி என்பன இவர்தம் தமிழ்க்கொடையாகும்.

 தமிழறிஞர் இரா.இளங்குமரனாருடன் இணைந்து முதுமொழிக் களஞ்சியம் (ஐந்து தொகுதிகள்) (20,000 பழமொழிகளின் தொகுப்பு) ,சங்க இலக்கியங்கள்(15 தொகுதிகள்) ஆகிய நூல்களைப் பதிப்பித்துள்ளார். சீவக சிந்தாமணி நச்சினார்க்கினியர் உரையுடன் பத்திப்பித்துள்ளார். இவை யாவும் தமிழ்மண் பதிப்பக வெளியீடாக வந்துள்ளன.

 தமிழ் நூல்களைச் சேர்த்தலும் பாதுகாத்தலும் எனப் பணிகள் புரிந்துவருகின்றார்.

 திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கம், செண்பகத்தமிழ் அரங்கு, திருக்குறள் பேரவை, பாரதிதாசன் பல்கலைக்கழகம். திருச்சிராப்பள்ளி வானொலியில் சொற்பொழிவாற்றிய பெருமைக்குரியவர்.

புலவர் பி.தமிழகன் அவர்களின் முகவரி:

இளந்தமிழ்ப் பதிப்பகம்
2,பிச்சையம்மாள் நகர்,
காசாமலை,திருச்சிராப்பள்ளி-621 023
பேசி- 0413- 2457961

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

நாம் ஒன்று நினைக்க…

கல்லூரி மாணவனாக இருந்தபொழுது நூல் எழுதும் வேட்கை எனக்கு ஏற்பட்டது.என் பேராசிரியர் முனைவர் க.ப.அறவாணன் அவர்களிடம் படிக்கவும் ஆய்வு செய்யவும் வந்தபொழுது அந்த எண்ணம் பன்மடங்கு வளர்ச்சி பெற்றது.ஆண்டுக்கு ஒரு நூல் வெளியிட வேண்டும் என்று தம் மாணவர்களுக்கு ஐயா அன்புக்கட்டளை இடுவார்கள்.எங்களைப் பார்க்கும்பொழுது இந்த ஆண்டு என்ன நூல் வெளிவருகிறது என்பதே அவர் முதல் வினாவாக இருக்கும்.

மாணவர்கள் வெளியிடும் நூல்களை ஒரு விழா வைத்துத் தக்க அறிஞர்களை அழைத்துத் துறை சார்பில் விழா நடத்துவார்கள்.என் அச்சக ஆற்றுப்படை என்ற நூலைப் புதுச்சேரியில் நான் பயின்றபொழுது ஐயா நடத்திய விழாவில் வெளியிட்டார்கள்.

புலவர் இ.திருநாவலன் என்ற தமிழாசிரியர் அந்த நூலைப் பெற்றுக்கொள்வதாக இருந்தது. அன்னார் போராட்டம் ஒன்றில் கலந்துகொண்டு மருத்துவமனையில் இருந்ததால் விழாவுக்கு வரமுடியவில்லை. ஆனால் ஒரு வாழ்த்துப் பா அனுப்பியும் ஒரு பொன்னாடை அனுப்பி வைத்தும் என் முயற்சியை ஊக்கப்படுத்தினார்.அந்த ஆடையைப் போர்த்தி எனக்குச் சிறப்பு செய்து,நூலைப் பெற்றுக்கொண்டவர் பதிப்பாளர் வெள்ளையாம்பட்டு சுந்தரம் அவர்கள் ஆவார்(1992-93).

புலவர் இ.திருநாவலன் அவர்கள் எனக்குப் பின்னாளில் புதுச்சேரியில் வளர்ப்புத் தந்தையாக இருந்து உதவி வருபவர்.அவர்கள் குடும்பத்தில் ஒருவனாக மாறியது தனிக்கதை.இவ்வாறு நூல்வெளியீடுகளில் மகிழ்ந்திருந்த காலகட்டம் ஒன்று என் வாழ்வில் இருந்தது.

விடுதலைப்போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள் என்ற ஓர் அரிய நூலை யான் பதிப்பித்து என் பிறந்த ஊரில் வெளியிட்டேன்(1995 சனவரி).அந்த விழாவுக்குப் பேராசிரியர் தமிழண்ணல், பேராசிரியர் க.ப.அறவாணன்,பேராசிரியர் முனைவர் கோ.வீரக்குமரன் (கேரளா,வேளாண்மைப் பல்கலைக்கழகம்), அண்ணன் அறிவுமதி யாவரும் வந்திருந்தனர்.

உள்கோட்டை சனதா மாணிக்கம் அவர்கள் விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அவரின் குருகாவலப்பர்கோயில் அரிசி ஆலையில் விழாவை நடத்தினார்கள்.துரையானர் அடிகளின் மகனார் திருநாவலர்காந்தி உள்ளிட்டவர்கள் வந்திருந்தனர்.என் ஆசிரியர் குடந்தை கதிர். தமிழ்வாணன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்.மிகச்சிறப்பாக நடந்த அந்த விழாவுக்குப் புதுச்சேரியிலிருந்து வந்த என் பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்கள் செ.குறுக்குச்சாலையில் இறங்கி,அவ்வூர் சோழ அரசன் இராசேந்திர மாமன்னன் நடமாடிய மண் என்று அங்கிருந்து விழா நடைபெற்ற நான்கு கல் தொலைவையும் கங்கைகொண்ட சோழபுரம், குருகாவலப்பர்கோயில் ஆகிய கலைச்சின்னங்களைக் கண்டபடி அம்மா தாயம்மாளுடன் நடந்தே வந்தார்.நாங்கள் மகிழ்வுந்து ஏற்பாடு செய்தும் அதில் ஏறவில்லை. உந்துவண்டி ஆள் இல்லாமல் தனியே வந்தது.இது நிற்க.

அதன் பிறகு நூல் பல நான் எழுதியிருந்தாலும் வெளியீட்டு விழா என்று ஒன்று வைப்பதில்லை. விலக்காக என் திருமணத்தின்பொழுது என் முனைவர் பட்ட ஆய்வேடான பாரதிதாசன் பரம்பரை என்பதை வெளியிட நினைத்தோம்.முதல்நாள் வரும் அறிஞர்கள் இலக்கியம் சார்ந்து பேசட்டும் என்ற ஆர்வமே அதற்குக் காரணம்.பேராசிரியர் தமிழண்ணல், பேராசிரியர் இரா.இளவரசு,புலவர் கதிர். தமிழ்வாணன்,அண்ணன் அறிவுமதி,திரைப்பா ஆசிரியர் பா.விசய்(பா.விசய் திருமணத்தின்பொழுது(எங்கள் ஊரான உள்கோட்டையில்) முதல் நாள் நூல்வெளியீட்டுக்கு வித்திட்டதும் இந்த விழாதான் காரணம்) உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.நூல் வெளியிட்டனர்(2002).

இதன் பிறகு பணிச்சூழலால் பல ஊர்களில் வாழ நேர்ந்தது.பல நூல்கள் எழுதப்பட்டாலும் எங்கும் நூல் வெளியீடு நடக்கவில்லை.விழா நடத்தும் செலவில் இன்னொரு நூல் வெளியிட்டுவிடலாம் என்ற எண்ணமே காரணமாகும்.பல நூல்கள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடப்பதும் சோம்பலுக்கு ஒரு காரணம்.இதுவும் நிற்க.

சென்ற ஆண்டு யான் முயன்று எழுதிய அயலகத் தமிழறிஞர்கள், இணையம் கற்போம் என்ற இரு தொடர்களை அணியபடுத்தி நூலுருவாக்க நினைத்தேன்.நண்பர் அண்ணன் மதிராசு அவர்களிடம் நூல் வடிவப்படுத்தத் திட்டமிட்டேன்.அவர் மிகச்சிறந்த கலைஞர். வடிவமைப்பாளர். ஆனால் அதனிடையே மின்னஞ்சலில் தொடர்பில் இருந்து, அச்சுத்தொழிலுக்காக வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த தமிழ் அலை இசாக் அவர்களின் கலை உணர்வை வரவேற்க, அவரிடம் நூல் வடிவப்படுத்தும் பணியை ஒப்படைத்தேன்.

மின்னஞ்சலிலும் நேரிலுமாக நூல் வடிவப்படுத்தும் முயற்சி தொய்வின்றி நடந்தது.நூல் வெளிவந்தது.ஊடகத்துறை சார்ந்த பல நண்பர்கள் உதவி புரிந்ததால் என் நூலுக்குத் தீராநதி,அம்ருதா.உயிர்மை,கொழுந்து(இலங்கை),தினத்தந்தி,தினமணி,தினமலர் உள்ளிட்ட பல ஏடுகளில் நல்ல மதிப்புரை வந்தது.

புதுச்சேரியில் ஒரு சிறு வெளியீட்டு விழா வைத்து நூலை அனைவருக்கும் அறிமுகப் படுத்தலாம் என்று நண்பர்கள் ஆசையைத் தூண்டினார்கள்.யாரை அழைப்பது எப்படி நடத்துவது என்று பார்த்தபொழுது நம் கொள்கைக்கும்,மதிப்புக்கும் உரியவர்களை அழைக்க முடிவு செய்தோம்.பலரும் பல காரணங்களைச் சொல்லி நிகழ்ச்ச்சிக்கு வரமுடியாத நிலையைக் கூறினார்கள்.சிலரை உணர்வு சார்ந்து அழைத்தபொழுது போக்குவரவு தொடர்பில் முரண் ஏற்பட்டது.வானூர்தி வழியாக வருவதற்கும், சென்னையிலிருந்து புதுவைக்கு மகிழ்வுந்தில் வருவதற்கும் ஏற்பாடு செய்யச் சொன்னார்கள்.ஏழைப்புலவனால் இதற்கெலாம் என் செய இயலும்?.சிலர் பணி நெருக்கடி சொல்லிப் பின்வாங்கினர்.

விழாவுக்கு முன்பே நாள்குறித்து,சிறப்பு விருந்தினர்களைத் தேடிக்கொண்டிருந்தோம்.அரங்கிற்கு முன்பே பதிந்துவிட்டதால் உரிய நாளில் நடத்தியாதல் வேண்டும்.விழா ஏற்பாட்டுக்கு முன்வருவதாகச் சொன்ன நண்பர்கள் யாவரும் பின்வாங்கிக்கொண்டதால் நானும் ஓட்டுநர் ஏசுதாசன் ஐயாவும் அலைந்து திரிந்து அழைப்பு அடிப்பது முதல் அழைப்பு கொடுப்பது வரையிலான பணிகளைக் கவனித்தோம்.

அழைப்பிதழ் அடிக்கும்பொழுது….

சிறப்பு விருந்தினர் தேர்வு நான்கு நாளுக்கு முன்புதான் உறுதியானது.அவர் கல்வி நிலையில் உயர்பொறுப்பில் இருப்பவர்.புதுச்சேரிக்கு அவர் இயல்பாக வரும்நிகழ்வை அறிந்தேன்.அந்த வருகையை இதற்குப் பயன்படுத்தலாம் என்று நினைத்து ஒப்புதல் பெற்றோம்.அழைப்பிதழ் அச்சடித்து மூன்று நாளில் விழா ஏற்பாடுகளை முடித்தாதல் வேண்டும்.எனவே இன்றே அழைப்பிதழ் அச்சிட வேண்டும் என்று நினைத்து நண்பர் ஒருவரின் அச்சகத்திற்குச் சென்றோம்.

ஏழுமணிக்கெல்லாம் பணிபுரியும் பெண்கள் வீடு திரும்புவார்கள். ஆறு மணியளவில் அச்சுக்கூடம் சென்றோம்.கைவேலைகளை முடித்து எங்கள் பணியைத் தொடங்கினார்கள். முதலில் அழைப்பிதழ் அச்சிடத் தட்டச்சு செய்தார்கள்.முதற்கட்டமாக அழைப்பிதழில் இடக்கூடிய பெயர்களை முடிவு செய்யவே மணி ஏழைத் தொட்டது.இனிப் பெயர்களைச் சேர்க்கவோ நீக்கவோ எங்களுக்குக் காலம் வாய்ப்பாக இல்லை.ஒருவழியாகத் தட்டச்சிட்டு அதனை வரிசைப்படுத்தல், அழகுப்படுத்தல் வேலைகள் நடந்தன.

முதற்கட்டமாக முதல்படியை அச்சிட்டு வழங்கினார்கள்.மெய்ப்பு நோக்கினோம்.சில எழுத்துத் திருத்தங்கள்,எழுத்து மாற்றங்களைச் சொன்னோம் மாற்றியவண்ணம் இருந்தார்கள். அப்பொழுது தட்டச்சிட்டவரின் அருகில் இருந்த வேறொரு தட்டச்சருக்கு ஒரு தொலைபேசி, அச்சக உரிமையாளர் வழியாக வந்தது.அச்சுக்கூடம் எங்கும் ஒரே அழுகை.அச்சுக்கூடத்தில் பெருஞ்சோகம் கப்பியது.

மகிழ்ச்சியாக வேலை நடந்த இடத்தில் இப்பொழுது ஏன்?எதற்கு?அதற்காக இப்படியா?எல்லாம் தொலைக்காட்சியால் வந்தது?என்ற பேச்சாக மாறியது.இருக்கும் ஒரு மணி நேரத்தில் அச்சிட்டு இன்று இரவே சிறப்பு விருந்தினருக்கு அழைப்பிதழ் அனுப்பியாதல் வேண்டும்.அச்சக உரிமையாளர் கடையை மூட ஆயத்தமானார்.அதற்குள் அழுதுகொண்டிருந்த அம்மையாரை தானியொன்று பிடித்து வீட்டுக்குக் கொண்டு சென்றனர்.நானும் அழைப்பிதழ் தட்டச்சிட்டவரும் மட்டும் கடையில் இருந்தோம்.என்ன நடக்கிறது என்றே எனக்குப் புரியவில்லை.மற்ற பணியாளர்கள் உடன் பணியாற்றும் பணியாளர் குடும்பத்தில் இவ்வாறு நேர்ந்துவிட்டதே என்று அவர் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

இந்த நிலையில் நான் அழைப்பிதழை அழகுப் படுத்தவோ,சரிபார்க்கவோ,அல்லது வேறு அச்சுக்கூடத்தில் அச்சிடவோ நேரம் இல்லை.எனவே தட்டச்சிட்ட அவரிடம் மன்றாடி கணிப்பொறியில் உள்ளதை ஒரு மூலப்படி(மாஸ்டர்)ஒன்று எடுத்துக்கொடுக்கும்படி வேண்டினேன்.துன்பச்சூழலிலும் என் நிலை உணர்ந்து ஒரு படி எழுத்துக்கொடுத்தார்கள்.

அதனைக் கொண்டுபோய் வேறு ஓர் அச்சகத்தில் அச்சிட்டுத்தர வேண்டினேன்.மணி அப்பொழுது எட்டரை.அச்சுக்கூடம் பூட்டுவதற்கு அணியமாக இருந்தது.வேண்டா வெறுப்பாக என் வேலையை ஏற்றுகொண்டார்கள்.தாள் வாங்க வேண்டும் என்றனர்.கடைக்குத் தொலைபேசியிட்டு இவ்வளவு தாள்,உறை வேண்டும் என்றனர்.தானியில் கால் மணி நேரத்தில் தாள் கொண்டு வந்தேன்.

அரைமணிநேரத்தில் அச்சிட்டுகொடுக்க வேண்டினேன்.பத்து மணியளவில் அச்சிட்டுக் கொடுத்தனர்.அடுத்த கால் மணி நேரத்தில் தனித்தூது அலுவலகம் சென்று அழைப்பிதழில் முகவரி எழுதி மடலைப் பதிவு செய்தேன்.வெளியூர் உறைகளை வாங்க மறுத்தனர். ஏனென்றால் வண்டிகள் புறப்படத் தயார் நிலையில் இருந்தன.தொடர்ந்து அதே நிறுவனத்தில் பதிவு செய்வதால் கருணைகொண்டு வாங்கிக்கொண்டனர்.மிகபெரிய போராட்டத்துக்கு இடையே அழைப்பிதழ் தனித்தூது அலுவலகத்தில் சேர்ந்ததில் மிகுந்த மகிழ்ச்சி.நாளை சிறப்பு விருந்தினர் கையினுக்குக் கிடைத்துவிடும் என்று நம்பிக்கையுடன் இருந்தேன்.அமைதியாக வீடு வந்து சேர்ந்தேன்.

மீண்டும் ஒரு முறை அழைப்பிதழைப் பெருமிதத்துடன் எடுத்துப் பிறந்த குழந்தையைத் தடவிப் பார்ப்பதுபோல் பார்த்தேன்.அப்பொழுதுதான் மிகப்பெரிய தவறு நடந்துள்ளது தெரிந்தது.வரவேற்புரை,நன்றியுரை பெயர்கள் எல்லாம் பெரிய எழுத்தில் இருந்தன.சிறப்பு விருந்தினர் பெயர் சற்றுச் சிறிய எழுத்தில் அச்சேறியிருந்தது.இதனைக் கண்டால் சிறப்பு விருந்தினருக்கு வருத்தம் ஏற்படத்தான் செய்யும்.இவ்வளவு விரைவில் நடந்ததைச் சிறப்பு விருந்தினருக்கு எடுத்துச்சொல்ல வாய்ப்பே எங்களுக்கு அமையவில்லை.

சிறப்பு விருந்தினர் புதுச்சேரி வந்திருந்தும் விழாவுக்கு வரமுடியவில்லை.வந்த அறிஞர்களை வைத்துகொண்டு அயலகத் தமிழறிஞர்கள்,இணையம் கற்போம் நூல் வெளியீடு கண்டது.
அது சரி. இப்படிப் பெரிய தவறு நடக்கும் அளவுக்கு அச்சுக்கூடத்தில் பணிசெய்த அந்த பணியாளர் குடும்பத்தில் என்னதான் நடந்தது?.அவர்களின் ஒன்பது வயதுக்குழந்தை தற்கொலை செய்துகொண்டதாம். நூல்வெளியீட்டு விழாவில் மற்றவர்கள் பாராட்டியது உங்களுக்குத் தெரியும். எனக்கு அந்தத் தாயின் அழுகுரல் அன்றும், இன்றும் கேட்டுகொண்டே உள்ளது…

சனி, 17 ஏப்ரல், 2010

இசைத்தமிழ் இன்பத்துப்பால் நூல்வெளியீடு


முதல்வரின் நாடாளுமன்றச் செயலாளர் தி.தியாகராசன் அவர்கள் என்னைச் சிறப்பித்தல்.அருகில் இரா.அனந்தராமன்(ச.ம.உ)

புதுச்சேரி நண்பர்கள் தோட்டம் இலக்கிய அமைப்பினர் புதுச்சேரியின் இசைறிஞர் எல்.எசு.பி.செயராயர் அவர்கள் எழுதிய இசைத்தமிழ் இன்பத்துப்பால் நூலின் வெளியீட்டு விழாவை இன்று நிகழ்த்தினர்.பல்நோக்குச் சேவா சங்கம் அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு வரும்படியும் செம்மொழி இளம் அறிஞர் விருது பெற்றமைக்கு எனக்கும் முனைவர் கேசவ.பழனிவேலு அவர்களுக்கும் பாராட்டு நடைபெறும் எனவும் நண்பர்கள் தோட்டம் திருநாவுக்கரசு அவர்களும் புதுவை யுகபாரதி அவர்களும் வீட்டுக்கு வந்து நேரில் அழைப்பு நல்கினர்.புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள் என்றதும் மகிழ்ச்சியுடன் சென்றேன்.

எனக்கிருந்த பல்வேறு பணிகளையும் முடித்துக்கொண்டு விழா அரங்கை அடைவதற்கும் நிகழ்ச்சி தொடங்குவதற்கும் நேரம் சரியாக இருந்தது.திருக்குறள் காமத்துப்பாலை எளிய இசைத்தமிழ் உருப்படிகளாகச் (கீர்த்தனைகள்) செயராயர் அவர்கள் இயற்றியுள்ளார். இசையறிஞர் அரிமளம் பத்மநாபன் அவர்கள் இப்பாடல்களைப் பல்வேறு இசைகளில் பாடிக்காட்டியதும் அவையினர் மகிழ்ச்சியடைந்தனர். நாடகத் தமிழாகவும்,இயல்தமிழாகவும் அறிஞர்கள் இந்த நூலின் கருத்துகளை மதிப்பீடு செய்து பேசினர்.

இசைத்தமிழ் இன்பத்துப்பால் நூலை அரியாங்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் இரா.அனந்தராமன் அவர்கள் வெளியிட்டார்.புதுவை முதல்வரின் நாடாளுமன்றச் செயலாளர் திரு.தி.தியாகராசன் அவர்கள் எனக்குப் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசில் வழங்கினார்கள்.வெல்லும் தூயதமிழ் ஆசிரியர் முனைவர் க.தமிழமல்லன் அவர்களும் இசைத்தமிழ் ஆர்வலர் திரு.இராசாராமன் அவர்களும் எனக்கு ஆடைபோர்த்திச் சிறப்பித்தனர்.

புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் திருக்குறள் காமத்துப்பால் சிறப்பினை மிக அழகாக எடுத்துரைத்தார்கள்.தொல்காப்பியர் புணர்தல்,பிரிதல்,இருத்தல்,இரங்கல்,ஊடல் என்ற உரிப்பொருளைக் குறிப்பிட்டுள்ளார்.இந்தப் பண்டைத் தமிழகத்து ஐந்து நில மக்களின் உணர்வைத்தான் திருக்குறளார் ஐந்து பகுப்பாகப் பிரித்து( 5 X 50=250) இருநூற்று ஐம்பது குறட்பாவாகத் திருக்குறள் காமத்துப்பாலைத் தந்துள்ளார் என்று கூறியதும் அவையினர் மகிழ்ந்தனர்.

தம் சொல்லாய்வுத்திறத்தால் திருக்குறள் தெளிசாற்றை வழங்கினார்.தலைவி அமிழ்து, தலைவி பெற்ற மழலைகள் அமிழ்து,அவர் சொல் கேட்டல் அமிழ்து,அவர் தொட்ட உணவு அமிழ்து என்று திருக்குறளை ஐயா நினைவுகூர்ந்தமை மகிழ்ச்சி தந்தது.புலவர் பெருந்தகை இரா.இளங்குமரனாரின் பேச்சில் தமிழ் இலக்கியங்களின் மேற்கோள் ஆட்சி சிறப்பாக இருந்தது. பாவேந்தர் பாடல்வரிகளை எடுத்துக்காட்டியதும்,ஔவையார் வரிகளை மேற்கோள் காட்டியதும் சிறப்பாக இருந்தது.


புலவர் இரா.இளங்குமரனார் உரை


புலவர் இரா.இளங்குமரனார் என்னைச் சிறப்பித்தல்,அருகில் திரு.வேலாயுதம்,இராசாராமன்


முனைவர் அரிமளம் பத்மநாபன்


புலவர் இரா.இளங்குமரனாருடன் நான்

நிகழ்ச்சி முடிந்ததும் ஐயா மேடையிலிருந்து இறங்கி வந்து மலேசியப் பயணம் பற்றி என்னிடம் உரையாடினார்கள்.மலேசியாவில் தம் பயணத்தின்பொழுது எழுத்துத்திருத்திகளின் செயல்பாடுகளைக் கண்டித்துப் பேசியதையும்,விரைவில் எழுத்துத் திருத்தம் பற்றிய தமிழறிஞர்களின் கருத்துகள் அடங்கிய நூலினைத் தாம் வெளியிட உள்ளதையும் தெரிவித்தார்கள்.அனைவரிடமும் விடைபெற்று இரவு வீடு வந்துபொழுது மணி 11 இருக்கும்.

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

சங்க இலக்கியங்களில் வாய்மொழிப் பாடல்களின் தாக்கம்


ஆய்வரங்கில் உரையாற்றும் நான்

 பழங்காலத் தமிழர்களின் வாழ்க்கையை எடுத்துரைப்பதில் சங்க நூல்கள் முதன்மை பெறுகின்றன.தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, இரட்டைக் காப்பியங்கள் தமிழ்மொழியையும் பழந்தமிழக மக்கள் வாழ்க்கையையும் படம்பிடிக்கின்றன. பண்டைக் காலத்தில் எண்ணாகவும் எழுத்தாகவும் இருந்த தமிழர்களின் அறிவுக்கருவூலம் யாவும் எழுதி வைத்துப் படிக்கப்பெற்றன என்பதிலும் வாய்மொழியாக அடுத்த தலைமுறைக்குப் பரவின என்னும் கருத்து அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

 சங்க நூல்கள் செவ்வியல் தன்மையுடயனவாக இருப்பினும் அவற்றில் வாய்மொழி மரபுகள் பல காணப்படுகின்றன.அறிஞர் க.கைலாசபதி அவர்கள் தம் தமிழ் வீரநிலைக்கவிதை (TAMIL HEROIC POETRY) என்னும் முனைவர் பட்ட ஆய்வில் இதனை மிகச் சிறப்பாகத் தக்க சான்றுகளுடன் ஆராய்ந்துள்ளார். அவர்களின் ஆய்வை அடியொற்றிச் சங்க நூல்களில் காணப்படும் வாய்மொழிப் பாடல்களின் தாக்கம் பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது.

செவ்வியல் படைப்புகள் வாய்மொழிப்படைப்புகள் வேறுபாடு

படைப்புகள் என்பவை படித்தவுடன் விளங்குவதும் உண்டு. ஆழ்ந்து எண்ணி, எண்ணி, உணரக்கூடியதும் உண்டு. வாய்மொழி மரபு என்பது படித்தவுடன், கேட்டவுடன், பார்த்தவுடன் விளங்குவது ஆகும். செவ்வியல் மரபு என்பது எண்ணிப்பார்க்குந்தோறும் புதுப்புது பொருள் விளைப்பது ஆகும். அறிதோறும் அறியாமை என்பது போல் இருக்கும்.அன்றன்றும் புதுமையாக இருக்கும்.

செவ்வியல் படைப்புகளைப் பலாப்பழம் என்று உவமை காட்டலாம். பலாவைச் சுவைக்க முயற்சி தேவை. பழத்தைப் பூரி (வகுந்து) எடுக்கவேண்டும். தேவையற்ற பகுதிகளை நீக்க வேண்டும். அதன் பிறகு சுவைக்க வேண்டும். வாய்மொழிப் படைப்பைக் கொடிமுந்திரி (திராட்சை) எனலாம். சுவைக்க எந்த முயற்சியும் தேவையில்லை.எடுத்து உடன் சுவைக்கலாம்.

படித்தவுடன் விளங்குவதால், கேட்பதால் புரிவதால் வாய்மொழி மரபுகளை-படைப்புகளை எளிய படைப்பு என்று நினைக்க வேண்டாம்.இதில் கற்பனையிருக்கும். அறிவுச் செழுமை வெளிப்பட்டு நிற்கும். பழைமை காட்சி தரும்.புதுமை பொலிவு காட்டும். அதுபோல் செவ்வியல் மரபு என்பது பன்னெடுங்கால அறிவுத் தொடர்ச்சியைக் கொண்டிருக்கும். இத்தகு செவ்வியல் மரபுகள் வாய்மொழி மரபுகளின் செழுமை வடிவமாகக் கொள்ளலாம்.

நாட்டுப்புற மக்களின் படைப்புகள் கால ஓட்டத்தில் செவ்வியல் தன்மையுடையனவாக மலர்ச்சி பெறுவது உண்டு. மிகச்சிறந்த செவ்வியல் படைப்பாளிகளாக இருந்தாலும் பழந்தமிழ் மரபுகளை உள்வாங்கியே சிறந்த படைப்புகளை உருவாக்கியுள்ளனர். இதனைச் சங்க இலக்கியம் முதல் பாரதியார் காலம் வரை அறியமுடிகின்றது. குறுந்தொகையில் இடம்பெறும் "அகவன் மகளே அகவன் மகளே"என்பது பழங்காலத்தில் இருந்த கட்டுவிச்சிப் பாடலின் சாயல் எனலாம். சிலம்பில் இடம்பெறும் குரவைப்பாடல்கள், ஆய்ச்சியர் பாடல்கள் என்பவை அக்கால மலையுறை, காடுறை மக்களின் பாடலாக நமக்குப் புலப்படுகின்றன. இவற்றில் இடம்பெறும் சொற்கள், நிகழ்வுகள் யாவும் வாய்மொழி மரபுகளுக்கு உரிய தன்மைகளைக் கொண்டு விளங்குகின்றன.

 எனவே படைப்புகளை நுகரும்பொழுது அவற்றை ஆழ்ந்து, நுணுகி நோக்கித் தன் கற்பனையைக் கொண்டு, சிந்தனையின் துணையுடன் படைப்பை அணுகிப் பார்த்து அதன் அழகினை உணர்வது செவ்வியல் தன்மையாக வரையறை செய்யலாம். படைப்பைக் கேட்டவுடன் பார்த்தவுடன் புலப்பட்டுத் தெற்றென விளங்குவது நாட்டுப்புற மரபு அல்லது வாய்மொழி மரபு எனலாம்.

தொல்காப்பியர் எட்டுவகை வனப்புகளைக் குறிப்பிடும் இடத்தில்,

"சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து
தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின்
புலன் என மொழிப புலனுணர்ந்தோரே"(தொல்.செய்.241)

என்று புலன் பற்றி பாடியுள்ளமை நாட்டுப்புற மரபு அல்லது வாய்மொழி மரபு அறிய உதவும்.

இவ்வடிப்படையில் சங்க இலக்கியங்களை ஆழ்ந்து பார்த்துச் சிந்தித்துக், கற்பனையால் நிகழ்வுகளை மனக்கண்ணில் காண்பது வழக்கமாக உள்ளது. இவ்வாறு செவ்வியல் பண்புகளைப் பெற்ற சங்க இலக்கிய உருவாக்கம் என்பது எளிய நிலை மக்களின் வாழ்க்கையில் தோன்றிய பாடல்கள், கதைகள், மரபுகள், நடப்புகளை உள்வாங்கிக்கொண்டு உருவாகியுள்ளது. அதற்குரிய சான்றுகளைச் சங்க இலக்கியப்பரப்பில் திளைக்கும்பொழுது உணரமுடிகின்றது.

எனவேதான் சங்க இலக்கியப் புலவர்கள் அகச்செய்தியைப் பாடினால்கூடப் புறப்பொருள் சார்ந்த வரலாற்றை நினைவு கூர்கிறார்கள். புறப்பொருளைப் பாடினால் அகச்செய்தியை இணைத்துப் பாடுகிறார்கள். இவற்றை வெளிப்படுத்தும் பொழுது அந்த அந்த நிலத்தின் மக்கள் வாழ்க்கை முறைகளைப் பாடுகிறார்கள். அரசர்களைப் போற்றிப்பாடும் சூழலிலும் அந்த அந்த நிலத்து வாழும் எளிய நிலை மக்களின் மரபுகளைப் புலவர்கள் பாடியுள்ளனர்.

எட்டுத்தொகை நூல்களுள் புறநானூறு,நற்றிணை,குறுந்தொகை இவற்றில் செவ்வியல் தன்மை மிகுந்து காணப்படுகின்றன.மற்ற நூல்களில் வாய்மொழி மரபுகள் மிகுந்து காணப்படுகின்றன.

ஒரு வீரனைப் புகழ்ந்து பாடினால் அவனின் வீரம் மிகுத்துப் பேசும்பொழுது அவனைச்சார்ந்து புராண உருவாக்கமும், நாட்டுப்புறப்பண்பாடும் இயல்பாகவே உருவாகின்றன. அதுபோல் ஒரு தலைவியின் அழகினை மிகுத்துப் பேசும்பொழுதோ, அவளின் தனிமைத் துயரினைக் காட்சிப்படுத்தும் பொழுதோ சமூகச்சடங்குகள், நம்பிக்ககள், வழிபாடு, கடவுள்,இசை சார்ந்த செய்திகள் பதிவாகின்றன.

சங்க நூல்களில் இடம்பெறும் செய்திகளைக் கொண்டு அவற்றைச் சங்க நூல் என்பதிலும் பாண்பாட்டு எனவும் அரசவைப்பாட்டு எனவும் அழைப்பதைப் பொருத்தமெனக் கைலாசபதி குறிப்பிடுகின்றார் (பக்.10).காரணம் தெரிந்தோ, தெரியாமலோ அரசவையுடன் தொடர்புடையனவாகப் பல பாடல்கள் உள்ளன.அக்காலத்தில் பாடுதுறை வல்லுநராக இருந்த பாணர்கள் இந்தப் பாடல்களைப் பாடிப் பரவியதாலும், பெரும்பான்மையான பாடல்களில் பாணர், பொருநர், கூத்தர் என்னும் பாண்மரபினர் சிறப்பிக்கப்படுவதாலும் இப்பெயர் பொருத்தமாகிறது.

பாணர்கள் என்பவர்கள் எப்பொழுதும் அரசவையைச் சார்ந்தவர்களாகவே இருந்துள்ளனர். வீரநிலைக் காலத்தில் பாட்டுக்கலை என்பது தொழில்முறைப் பாணர்களின் வாய்மொழிகளாகவே இருந்துள்ளன. வாய்மொழிப்பாடல் புனைபவர்கள் எளிதாகப் பாடல் பாடச் சில வாய்பாடுகளை மொழியில் கொண்டுள்ளனர். இந்த வாய்பாடுகள் யாவும் வாய்மொழி இலக்கியங்களில் பொருந்திக்கிடக்கின்றன.

வாய்மொழிப்பாடல்களை ஆராயும்பொழுது இதனைக் கல்வியறிவில்லா மக்கள் இயற்றியிருப்பினும் அதிலும் அழகிய இலக்கண அமைப்புகளைக் காணமுடிகின்றது. 

மோனை, எதுகை, இயைபு, அந்தாதி, உவமை, உருவகம், புராணச் செய்திகளைக் காணமுடிகின்றது.

 பாடலடிகள் திரும்ப வரும் உத்திகள் வாய்மொழிப் பாடல்களில் மிகுதி.ஒருபொருள் மேல் பலவடுக்கும் உத்திகள் உண்டு. சொற்கள் யாவும் மக்களிடம் நன்கு அறிமுகமானவைகளாக இருக்கும்.மக்களின் உணர்வுகளைத் தொடும் வண்ணம் பாடலின் உட்பொருள் இருக்கும். இசையுடன் பாடுவதற்கு இயைய அமைந்திருக்கும். மக்களுக்கு அறிமுகமான செய்திகள் இருக்கும். (தொடக்கத்தில் திரைப்படம் வந்தபொழுது ஊமைப்படமாக இருந்தபொழுது மக்களுக்கு அறிமுகமான பாரத, இராமாயணக்கதைகள் இடம்பெற்றன. அக்கதை மக்களுக்கு நன்கு அறிமுகமானதால் படத்தைப் புரிந்துகொள்ள முடியும். இதுபோல் மக்களுக்கு அறிமுகமான இசை, கதையாக இருந்தால் படைப்புகள் எளிதில் சென்று சேரும் என நினைத்த புலவர்கள் மக்கள் வடிவங்களைத் தம் புலமை நயம் வெளிப்பட படைப்புகளாக உருவாக்கினர்.)

தொல்காப்பியத்தில் பல இடங்களில் வாய்மொழி மரபுகளுக்கு முதன்மையளிக்கப் பட்டுள்ளன. "கண்படை கண்ணிய கண்படை நிலையும்" (தொல்.பொருள்.புற.29)என்ற நூற்பாவடி அரசர்கள் உறங்குவதற்கு முன்பாகப் பாடல் இசைத்தமையை நினைவூட்டுகிறது.

யாப்பு வகைகளைத் தொல்காப்பியர் குறிப்பிடும்பொழுது ஏழு வகையான யாப்புகளைக் குறிப்பிடுகின்றார்.

"பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே
அங்கதம் முதுசொல்லொடு அவ்வேழ் நிலத்தும்(தொல்.செய்.79)

என்னும் இடத்தில் எழுவகை யாப்புகளைக் குறிப்பிடுகின்றார்.மேலும் அடிவரையறை இல்லாத வகைகள் என்று,

"அவைதாம்
நூலினான உரையினான
நொடியொடு புணர்ந்த பிசியினான
ஏது நுதலிய முதுமொழியான
மறைமொழி கிளந்த மந்திரத்தான
கூற்றிடை வைத்த குறிப்பினான" (தொல்.செய்.165)

என்று பாடியுள்ளார்.

மேற்கண்ட நூற்பாவில் விடுகதை (பிசி என்றும்), பழமொழி (முதுமொழி என்றும்) நாடோடிக் கதைகள்(உரை என்றும்), அக்கால மக்களின் வாழ்வுச் சடங்குகளில் இருந்த பெரு வழக்கான மந்திரம், குறிப்புமொழி முதலிய செய்திகளையும் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. பொருளதிகாரத்தில் குரவைக்கூத்து, அமலைக்கூத்து, வள்ளிக்கூத்து, வேலன் வெறியாட்டு, நடுகல் வழிபாடு போன்ற பலவகையான சடங்குகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றின் வழியாக அக்காலத்தில் பாடப்பெற்ற பாடல்கள் பற்றியும் உய்த்துணர வாய்ப்புகள் உள்ளன.

பண்ணத்தி என்று வாய்மொழியாகப் பாடப்பெறும் பாடல் பற்றியும் தொல்காப்பியர் விளக்கியுள்ளார். பண்ணத்தி என்பது கற்பனைகள் நிறந்தது எனவும் வாய்மொழியாக வழங்குவது எனவும் பொருள் கொள்ளலாம். பண்ணத்தி வடிவத்திற்குப் பேராசிரியர் சில பாடல் வடிவங்களையும் சான்றாகக் காட்டியுள்ளார்.

1.பாட்டுமடை(கூத்துகளின் பொழுது பாடப்படுவது)
2.வஞ்சிப்பாடல்(ஓடப்பாடல்)
3.மோதிரப்பாட்டு(நாடக நூல் வகை)
4.கடகண்டு(பழைய நாடக நூல்)

இவற்றின் வழியாகப் பழங்காலத்தில் வாய்மொழி மரபுகள் செழித்திருந்தன என்ற முடிவுக்கு வர இயலுகின்றது.

மேலும்"அளபிறந்து உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்"(தொல்.எழுத்து.33) என்னும் நூற்பாவின் துணைகொண்டு அக்காலத்தில் செழித்திருந்த பாடல்களையும், இசை இலக்கண நூல்களையும் உய்த்துணரமுடிகின்றது. இத்தகு இசைமரபுப் பின்புலத்தில் படைக்கப்பெற்ற சங்க இலக்கியத்தில் அக்காலத்தில் நிலவிய வாய்மொழி மரபுகள் உரிய இடங்களில் பதிவாகிக் கிடக்கின்றன.

சங்கப்பாடல்கள் உள்ளிட்ட மரபுப் பாடல்களைப் பாடி விளக்குவதுதான் அண்மைக்காலம் வரை இருந்தது. ஆனால் இன்று முற்றாகப் பாடிப் பயிற்றும் மரபு இல்லாமல் போனது. தமிழின் பாடல்களான திருக்குறள் உள்ளிட்ட சங்கப் பாடல்களை மலையாள மொழி பேசுவோர் மொழிபெயர்ப்பையும் இன்று பாடி நடத்தும் மரபு இங்குச் சிந்திக்கத்தக்கது.

வாய்மொழிப் பாடல்களைப் பாடத் தொடங்கும்பொழுது தொடக்கம் ஒரே மாதிரியாக இருப்பது உண்டு.விளித்தல் மரபை மிகுதியும் காணலாம்.

1."இராசாத்தி உன்னை எண்ணி இராப் பகலா கண் விழிச்சன்"
2."காக்கா குருவிகளா கருணனோட தோழர்களா"
3."ஆத்துக்குள்ள அஞ்சரளி தன்னானே போடு தில்லேலே போடு
அல்லி மலர்க்கொடியே"
4."சீரகம் பாத்தி கட்டி செடிக்குச் செடி குஞ்சம் கட்டி
சீமானார் பெத்த மவ அன்னபொண்ணு நடையே! "
5."கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மா தாயே!"

உள்ளிட்ட மக்களுக்கு அறிமுகமான நாட்டுப்புறப் பாடல்களைச் சான்றாகச் சுட்டலாம்.

கிரேக்க வாய்மொழிப் பாடல்களை,ஸ்லேவோனிய வீரநிலைப் பாடல்களை ஆராய்ந்த "பரி"(M.Parry,Whole Formulaic Verses in Greek and South Slavic Heroic Song,1933) பாடல்களின் தொடக்கம், முடிவு பற்றி எழுதியுள்ளார். குறிப்பிட்ட தொடக்கம், குறிப்பிட்ட முடிவுகள் இருப்பதை உணர்ந்தார். அதுபோல் தமிழ்ச்சங்கப் பாடல்களைப் பார்க்கும்பொழுது பாடல்களின் தொடக்கம், முடிவுப் பகுதிகள் சில வாய்பாடுகளுக்கு உட்பட்டு பாடப்பட்டுள்ளன என்கின்றார் கைலாசபதி அவர்கள்.நம் நாட்டுப்புறப் பாடல்களில் விளித்தல் மரபு காணப்படுவதை முன்பே கண்டோம்.

அதுபோல் எட்டுத்தொகை நூல்களில் இடம்பெறும் பல பாடலடிகளின் தொடக்கம் பழந்தமிழ்ப் பாடல்கள் விளித்தல் மரபைக் கொண்டிருந்தன என்பதற்குச் சான்றாக விளங்குகின்றன. இதனைக் கைலாசபதி மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார்.

"அன்னாய் வாழி வேண்டன்னை"(அகம் 48:1),"அம்ம வாழி தோழி"(ஐங்குறு.31)

என்னும் தொடக்கத்தன இதற்குச் சான்றாகும்.

பாடலின் முடிவு குறித்தும் ஒரு வாய்பாடு உண்டு.சங்க இலக்கியத்தில் பல இடங்களில் இந்த முடிவுகள் காணப்படுகின்றன.

"பஃறுளி மணலினும் பலவே!"
"காவிரி எக்கரிட்ட மணலினும் பலவே"
"நாடு கிழவோயே!"
"மலைகிழவோயே!"

என்பன யாவும் முடிவை ஒரு வாய்பாட்டுக்குள் அமைத்துப் பண்டைக்காலப் புலவர்கள் பாடியுள்ளனர் என்பது விளங்கும்.

சங்க இலக்கியத்தில் வீரனைப் புகழும்பொழுது இன்னோன் வழியில் வந்தவன் என்று குறிப்பிடுவது உண்டு."மருக"என்று விளிப்பது உண்டு.இத்தகு விளித்தல் முன்னோரின் சிறப்பு கூறுவது ஆகும்.

"பிழையா வள்ளன்மை மிக்க கௌரியர் வழித்தோன்றல்"
"அஞ்சு தகு படையின் செம்பியன் வழித்தோன்றல்"

என்று வரும் இடங்களில் முன்னோரின் சிறப்பு நினைவு கூரப்படுகின்றன.

இதுபோல் மரபுகூறும் முறை நாட்டுப்புறப் பாடல்களிலும் காணப்படுகின்றது.

"விருத்தா சலத்திலேயும் வீம குலத்திலேயும்
விசயா வயித்திலேயும் எங்கள் அம்மாவே
வேதனைக்குப் பெண்பொறந்தேன் பெத்த மாதாவே"

என்று குலம் பேசப்படுகிறது.

சங்க இலக்கியத்தில் அடைமொழிகள் மிகுதியாகக் காணப்படுகின்றன.இவை வாய்மொழி மரபில் மிகுதியாக இருப்பதுபோல் உள்ளன. வாய்மொழிப் பாடல்களில் ஓசைக்கும், இசைக்குமாக அடைமொழிகளைக் கலைஞர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

"பச்ச உருள மஞ்ச பத்தன்கட கொத்துமஞ்ச"
"காஞ்ச உருள மஞ்ச கன்னான்கட கொத்துமஞ்ச"
"கருப்பு நல்லா எம்மா இரயிலு வண்டி"

என்பன போன்ற பல அடைமொழிகளை நாட்டுப்புறப் பாடல்களில் காணமுடிகின்றன. அதுபோல் சங்க நூல்களில் பல இடங்களில் காணலாம்.

"கல்லா வன்பறழ்"
"கல்லாநீள்மொழி"
"கல்லா இளைஞர்"
"வெண்கோட்டு யானை"
"வெண்டலைப்புணரி"

என்று வரும் சங்க இலக்கியத் தொடர்கள் அடைமொழிகளாக அமைந்து சங்க நூல்கள் வாய்மொழியாகப் பாடப்பட்டன என்பதை உணர்த்தி நிற்கின்றன.

சங்க இலக்கியம்,காப்பியங்கள், தேவாரம், சிற்றிலக்கியம் உள்ளிட்ட பாடல்கள் யாவும் பாடும் மரபில் இருந்தவை. குருகுல கல்வி காலம் வரை இசையுடன் இருந்த தமிழ் இலக்கியங்கள் பின்னாளில் அனைவரும் பட்டப்படிப்புக்குப் படிக்கும் நிலைக்கு வந்த பிறகு படிப்படியே பாடும் நிலையை இழைந்துவிட்டது. அதன் பிறகு யாரேனும் பாடி நடத்தினால் வியப்புடன் நோக்கும் நிலை தமிழகத்தில் உருவாகிவிட்டது.

பின்னாளில் பாடல்களைப் பாடுபவர்கள் இல்லாமல் போனதால் சங்க இலக்கியங்கள் வாய்மொழியாகப் பாடப்பட்டது என்று நிறுவ வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

பா என்றால் பரந்துபட்டு செல்லல்வதோர் ஓசை என்பர் உரையாசிரியர்கள்.

வாய்மொழிப்பாடல்களில் கூறியது கூறல் இடம்பெறுவது இயல்பாக இருக்கும். எழுத்து,அசை, சீர், அடி யாவும் கூறியது கூறலாகப் பல இடங்களில் இடம்பெறும்.அதுபோல் ஒரு பொருள்மேல் அடுக்கி வருவதும் இயல்பே.

"அணைஞ்சிருந்து பால் கறக்க அணகயிறும் பொன்னால
சாய்ஞ்சிருந்து மோர்கடைய சாருமோட பொன்னால"

என்று நல்ல தங்காள் கதைப்பாடலில் இடம்பெறும் வரிகளில் எழுத்துகள்,சீர்கள் அடிக்கடி இடம்பெறுவதைக் காணலாம்.

"சின்னச் சம்பா நாத்தெடுத்து ஏலேலங்கடி ஏலோ நீங்க
சேர்ந்து நல்லா நடுங்கடியோ ஏலேலங்கடி ஏலோ"

"குண்டு சம்பா நாத்தெடுத்து ஏலேலங்கடி ஏலோ நீங்க
குனிஞ்சு நல்லா நடுங்கடியோ ஏலேலங்கடி ஏலோ"

"அழகுச் சம்பா நாத்தெடுத்து ஏலேலங்கடி ஏலோ நீங்க
அடுக்கி நல்லா நடுங்கடியோ ஏலேலங்கடி ஏலோ"

என்று வரும் நாட்டுப்புறப் பாட்டடியில் ஒருபொருள்மேல் மூன்றடுக்கி நிற்கும் மரபைக் காண்கிறோம்.

‘ஓராம் கரகம் எடுத்துகிட்ட கன்னியா
ஓரூரு மோளங்கள் கொட்டிகிட்ட கன்னியா
கொட்டி முழக்கிகிட்டு போரகன்னி யாரோடி
நான்தாண்டி கன்னி வழியோட போறவ
வழியோட போறியா வனம்பாக்க போறியா
வாடுற பொண்ணுக்காக வாதாட போறியா
வாதாட போறியா சூதாட போறியா
சீர்காழி அம்மானோட தெண்டனிட போறியா....

இரண்டாம் கரகம் எடுத்துகிட்ட கன்னியா
இரண்டூரு மோளங்கள் கொட்டிகிட்ட கன்னியா
கொட்டி முழக்கிகிட்டி போர கன்னி யாரோடி...’

என்று வரும் வாய்மொழிப் பாடலில் அடியும், சீரும் அடிக்கடி பாடலில் இடம்பெறுவதைக் காண்கிறோம். இதே அமைப்பைச் சங்க நூல்களில் பல இடங்களில் காணமுடிகின்றது. இசைக்கு முதன்மை தரும் கலிப்பாவில் இத்தகு அமைப்பு மேம்பட்டு நிற்பதைக் காணமுடிகிறது.


"அடிதாங்கும் அளவின்றி அழலன்ன வெம்மையால்
கடியவே கனங்குழாய் காடென்றார் அக்காட்டுள்
துடியடி கயந்தலை கலக்கிய சின்னீரைப்
பிடியூட்டிப் பின்னுண்ணும் களிறுஎனவும் உரைத்தனரே

இன்பத்தின் இகந்து ஒரீஇ,இலை தீந்த உலவையால்
துன்புறூஉம் தகையவே காடென்றார் அக்காட்டுள்
அன்புகொள் மடப்பெடை அசைஇய வருத்தத்தை
மென்சிறகால் ஆற்றும் புறவுஎனவும் உரைத்தனரே

கல்மிசை வேய் வாடக் கனைகதிர் தெறுதலான்
துன்னரூஉம் தகையவே காடு என்றார் அக் காட்டுள்
இன் நிழல் இன்மையான் வருந்திய மடப்பிணைக்குத்
தன்நிழலைக் கொடுத்து அளிக்கும் கலை எனவும் உரைத்தனரே"(கலித்தொகை, 11)

எனவும் வரும் பாடலடிகள் இசையுடன் வாய்மொழியாகச் சங்கநூல்கள் பாடப்பட்டமைக்கு அரிய சான்றாக விளங்குகின்றன.

வாய்மொழிப்பாடல் என்பது ஒரு பாடலில் இடம்பெறும் சொல்,தொடர் அதே மாதிரியாக வேறுபாடலில் இருக்கும். குறிப்பாகத் தாலாட்டில் வரும் தொடர் வேறொரு ஒப்பாரிப்பாடலில் இடம்பெறுவது உண்டு.சில நேரங்களில் வருணனைகள் ஒன்றாக இடம்பெறுவதும் உண்டு,

அதுபோல் சங்க இலக்கியங்களில் ஒரு இடத்தில் இடம்பெறும் சில தொடர்கள் அதே செறிவுடன் வேறு இடங்களில் இடம்பெறுவது உண்டு. பாடல்களைப் பிற பாடல்களுடன் ஒப்பிடுவது வாய்மொழிப் பாடலின் மரபாகும். அதே தன்மையில் பல இடங்களில் ஒப்பிட்டு நோக்கும் தன்மையில் சங்க இலக்கிய அடிகள் உள்ளன. உ.வே.சா.வின் சங்க இலக்கியப் பதிப்புகளின் துணையுடன் இவ் ஒப்பீட்டு இடங்களை அறியலாம்.

அறிஞர் கைலாசபதி அவர்கள் இந்தக் கூற்றை மெய்ப்பிக்க முல்லைப்பாட்டு நூலின் முதல் 31 பாடலடிகளை எடுத்துக்காட்டி இதில் இடம்பெறும் பல சொற்கள் தொடர்கள் சங்க இலக்கியத்தின் பல இடங்களில் இடம்பெறுவதைப் பட்டியலிட்டுக் காட்டுகின்றார். 31 பாடலடிகளில் 33 இடங்களில் கூறியது கூறல் பண்பு இருப்பதை எடுத்துக்காட்டுகிறார். குறிப்பாக நனந்தலை யுலகம், வலம்புரி பொறித்த, தடக்கை, நீர்செல நிமிர்ந்த மாஅல்போல, பாடிமிழ் பனிக்கடல், வலனேர்பு, கொடுஞ்செல வெழிலி, பெரும்பெயல் பொழிந்த, சிறுபுன் மாலை, அருங்கடிமூதூர், இனவண்டார்ப்ப, நறுவீ முல்லை, அரும்பவிழ் அலரி, எனவரும் பாடலடிகள் சங்க நூல்களில் பல இடங்களில் இடம்பெற்றுள்ளதைச் சங்க நூல் பயிற்சியுடையார் யாவரும் அறியலாம்.

சிலப்பதிகாரம் இசையுடனும்,பிற கலையுடனும் நெருங்கியத் தொடர்புடைய நூலாகும். சிலப்பதிகாரம் நாடகக்காப்பியம் என்பதும் முத்தமிழ்க் காப்பியம் என்பதும் பண்டைக் காலத்தில் இந்த நூல் இசையுடன் பாடப்பட்டது என்பதைக் காட்டும். அடிகளார் அக்காலத்தில் மக்களின் வாய்மொழி இசையை உள்வாங்கிப் பல இடங்களில் செவ்விசையாக்கி அளித்துள்ள பாங்கை அறிஞர்கள் சிலம்பில் காண்கின்றனர். தமிழர்களின் கூத்து மரபில் வாழ்த்துப் பாடல் பாடித் தொடங்குவது மரபாக உள்ளது.அத்தகு வாழ்த்து இறை வாழ்த்தாகவோ, அரச வாழ்த்தாகவோ இருக்கும். ஆனால் அடிகளார் இயற்கை வாழ்த்தைப் பாடித் தம் காப்பியத்தில் புதுமை செய்துள்ளார்.மேலும் ஐவகையாகப் பிரிக்கப்பட்ட தமிழர் நிலத்தில் இருந்த மக்களின் வாய்மொழிப் பாடல் மரபுகளை, கூத்துகளை உள்வாங்கிக்கொண்டு அவ்வந்நில மக்களின் வாய்மொழியாகப் பல பாடல்களைத் தந்துள்ளார். கந்துகவரி என்று பந்தடிக்கும் பாடல்களை அறிமுகப்படுத்தும் அடிகளார் அக்காலத்தில் இருந்த வாய்மொழி வடிவான பந்தடிப் பாடலைத் தம் காப்பியத்தில் கந்துகவரியில் வாழ்வித்துள்ளார்.

"பொன்னிலங்கு பூங்கொடி பொலஞ்செய்கோதை வில்லிட
மின்னிலங்கு மேகலைக ளார்ப்பவார்ப்ப வெங்கணும்
தென்னன் வாழ்க வாழ்கவென்று சென்றுபந்தடித்துமே
தேவரார மார்பன்வாழ்க வென்று பந்தடித்துமே" (சிலம்பு.வாழ்த்துக்காதை 20)

என்பது கந்துகவரிப் பாடலாகும்.

மேலும் அதே வாழ்த்துக் காதையில் அம்மானைவரி என்னும் அமைப்பில் பெண்கள் கண்ணகியை வாழ்த்திப் பாடிய,

"வீங்குநீர் வேலி யுலகாண்டு விண்ணவர்கோன்
ஓங்கரணங் காத்த வுரவோன்யா ரம்மானை
ஓங்கரணங் காத்த வுரவோ னுயர்விசும்பில்
தூங்கெயின் மூன்றெறிந்த சோழன்கா ணம்மாணை
சோழன் புகார்நகரம் பாடேலோ ரம்மானை"(சிலம்பு.வாழ்த்து. 16)

என்னும் பாடலடிகள் சிலம்பு உள்ளிட்ட நூல்கள் மக்களின் வாய்மொழியில் இருந்தமையை நமக்கு எடுத்துரைக்கின்றன.

மேலும் கானல்வரியில் இடம்பெறும் ஆற்றுவரி,சார்த்துவரி,திணைநிலைவரி உள்ளிட்ட வரிப்பாடல்கள் யாவும் மக்கள் வழக்கில் இருந்த இசைகொண்டு அடிகளாரால் பாடப்பட்டுள்ளது. அதுபோல் முல்லை நில மக்களின் இசையான முல்லைப் பண்ணை (செம்பாலை-அரிகாம்போதி) ஆய்ச்சியர் குரவையிலும், குறிஞ்சிநில மக்களின் இசையான படுமலைப் பண்ணை (குறிஞ்சி யாழ்-நடபைரவி) நடுகற் காதையிலும், குன்றக்குரவையிலும், நெய்தல் நில மக்களின் இசையான விளரிப்பாலை, செவ்வழிப் பண்ணைக்(தோடி) கானல் வரியிலும், மருதநில மக்களின் பண்ணான கோடிப்பாலையை (கரகரப்பிரியா) வேனிற் காதையிலும், பாலைநில மக்களின் இசையான அரும்பாலையைப் (சங்கராபரணம்) வேட்டுவ வரியிலும், புஞ்சேரி இறுத்த காதையுள்ளும் விளக்கியுள்ளார். எனவே தமிழர்களின் செவ்விசை, வாய்மொழியிசை காட்டும் சிலப்பதிகாரத்தின் வழியாகவும் சங்கப்பாடல்களில் வாய்மொழி மரபுகள் புதைந்து கிடப்பதை உணரலாம்.


பேராசிரியர் குமரன்


புலவர் செ.இராசு அவர்களுடன் நான்

(தஞ்சாவூர் அடுத்த பூண்டி திருபுட்பம் கல்லூரியில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நடத்திய சங்க இலக்கியப் பயிலரங்கில் 21.02.2010 இல் சங்க இலக்கியங்களில் வாய்மொழிப் பாடல்களின் தாக்கம் என்ற தலைப்பில் ஆற்றிய உரை இது. பேராசிரியர் செ.இராசு (ஈரோடு), பேராசிரியர் குமரன்,பேராசிரியர் மனோகரன், பேராசிரியர் மு.செல்வராசு உள்ளிட்ட அறிஞர்கள் பார்வையாளர்களாக இருந்து உரை கேட்டனர். மாணவர்கள், ஆய்வாளர்கள் பார்வையாளர்களாக இருந்து சிறப்பு சேர்த்தனர். பேராசிரியர் செ.இராசு அவர்களும் பேராசிரியர் குமரன் அவர்களும் மாணவர்கள் சார்பில் வேண்டிக் கொண்டதன் பேரில் பின்னுரையாகப் பல நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிக் காட்டினேன். மீண்டும் ஒருமுறை கல்லூரியின் சிறப்புப் பேச்சுக்கு நாட்டுப்புறப் பாடல்கள் என்ற தலைப்பில் உரையாற்ற அழைத்தனர். அந்த அளவு சங்க இலக்கியங்களில் இருந்த வாய்மொழி மரபுகளையும் நாட்டுப்புறப் பாடல்களையும் இசையுடன் பாடிக்காட்டி விளக்கினேன்.)

புதுச்சேரி நண்பர்கள் தோட்டத்தின் இலக்கிய விழா

புதுச்சேரியில் நண்பர்கள் தோட்டத்தின் இலக்கிய விழா இன்று மாலை (16.04.2010) நடைபெறுகிறது.புதுச்சேரி இலப்போர்த் வீதியில் உள்ள பல்நோக்குச் சேவா சங்க அரங்கில் மாலை ஆறு மணியளவில் நடக்கும் விழாவில் செயராயரின் இசைத்தமிழ் இன்பத்துப்பால் நூல்வெயீடு நடைபெறுகின்றது.

அரியாங்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் இரா.அனந்தராமன் நூலை வெளியிடத் தமிழறிஞர் இரா.இளங்குமரனார் நூல் அறிமுகம் செய்து சிறப்புரையாற்றுகின்றார்.

முனைவர் க.தமிழமல்லன்,பாவலர் துரை மாலிறையன்,முனைவர் நா.இளங்கோ,முனைவர் அரிமளம் பத்மநாபன்,முனைவர் அறிவுநம்பி ஆகியோர் உரையாற்றுகின்றனர். பாராட்டுச் செய்தல் என்ற நிகழ்ச்சியில் முதல்வரின் நாடாளுமன்றச் செயலாளர் தி.தியாகராசன் அவர்கள் கலந்துகொண்டு இந்திய அரசின் செம்மொழி விருதுபெறும் முனைவர் மு.இளங்கோவன், முனைவர் கேசவ.பழனிவேலு ஆகியோரைப் பாராட்டுகின்றார்.

நண்பர்கள் தோட்டத்தின் தலைவர் ப.திருநாவுக்கரசு வரவேற்புரையாற்றவும் பொதுச் செயலாளார் சுந்தரமுருகன் தொடக்கவுரையாற்றவும் புதுவையுகபாரதி இணைப்புரையாற்றவும் உள்ளனர்.

புதன், 14 ஏப்ரல், 2010

சங்க இலக்கியம் காட்டும் கரிகாற்சோழன்


குடந்தைக் கல்லூரியின் கருத்தரங்கில் மு.இளங்கோவன்

 தமிழக அரசர்களின் வரலாற்றையும் தமிழர் வரலாற்றையும் அறிவதற்குச் சங்க இலக்கியங்கள் பெரிதும் துணைபுகின்றன. சங்க நூல்களில் மூவேந்தர்கள் பற்றியும் (சேரர்கள் 20, சோழர்கள் 18,பாண்டியர்கள் 14) குறுநில மன்னர்கள், படைத்தலைவர்கள் (ஏறத்தாழ 150 பேர்) பற்றியும் அயல் நிலங்களில் வாழ்ந்த அரசர்கள் பற்றியும் பல குறிப்புகள் காணப்படுகின்றன (மேற்கோள்: சங்க கால மன்னர்களின் காலநிலை, தொகுதி1,ப.1). புலவர்கள் அகத்துறை, புறத்துறை சார்ந்த பாடல்களை இயற்றும்பொழுது உவமை வழியாகவும், சில புலவர்கள் நேரடியாகவும் பண்டைத் தமிழக அரசர்கள் பற்றியும், பிற தேயத்து அரசர்கள் பற்றியும் குறிப்புகளைத் தந்துள்ளனர். இவ்வாறு குறிப்புகள் காணப்பட்டாலும் இன்னாருக்குப் பின்னர் இன்னார் அரசாண்டார்கள் என்று உறுதிபடக் கூறுவதற்குச் சான்றுகள் குறைவாக உள்ளன. அவ்வாறு காணப்படும் சான்றுகளைக் கொண்டு முடிந்த முடிபாக வரலாற்றைப் பதிய முடியாமல் அறிஞருலகம் கருத்துவேறுபட்டு நிற்கின்றது. அவ்வகையில் கரிகாற் சோழன் வரலாறும் அறிஞர்களுக்கு இடையே கருத்து வேறுபாட்டைக் கொண்டுள்ளது.

கரிகாலன் தந்தை

 கரிகாலன் வரலாற்றை ஆராய்வதற்கு நமக்குப் புறநானூறு, அகநானூறு, பொருநராற்றுப்படை, பட்டினப்பாலை, சிலப்பதிகாரம்,மணிமேகலை உள்ளிட்ட நூல்கள் பெருந்துணைபுரிகின்றன. இவற்றுள் பொருநராற்றுப் படையில் இடம்பெறும் அரசன் கரிகாலன் எனவும் பட்டினப் பாலையில் இடம்பெறும் அரசன் திருமாவளவன் எனவும் அறிஞர்கள் குறிப்பிடுவது உண்டு. இவ்வாறு குறிப்பிடப்படும் இருவரும் ஒருவரா, வேறானவர்களா எனவும் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு. மயிலை சீனி.வேங்கடசாமி, தி.வை.சதாசிவ பண்டாரத்தார், புலவர் கோவிந்தன், அறிஞர் பே.க.வேலாயுதம் உள்ளிட்டவர்களின் கருத்தை எடுத்துரைத்துக் கரிகாலன் வரலாற்றை இக்கட்டுரை ஆராய முனைகிறது.

 கரிகாலனின் சிறப்பை நாம் முழுமையாக அறிவதற்குக் கலிங்கத்தை ஆண்ட காரவேலனின் கல்வெட்டு நமக்கு உதவுகிறது.காரவேலன்(கி.மு 176-163) என்பவன் கலிங்கத்தை 13 ஆண்டுகள் ஆண்டவன்.அவன் 11 ஆம் ஆட்சியாண்டில் (அதாவது கி.மு.165 இல்) தமிழகத்தை வென்றுள்ளான். அவனின் அத்திகும்பா கல்வெட்டில்" இன்றைக்கு 113 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியத் "திரமிள சங்காத்தம்" (தமிழர் கூட்டணியை) உடைத்தேன் என்று குறிப்பு உள்ளது.இதனைப் பொருநராற்றுப்படையாலும் உணரலாம்.

முடத்தாமக்கண்ணியார் பாடிய பொருநராற்றுப்படையில்,

"முரசுமுழங்கு தானை மூவரும் கூடி
அரசவை இருந்த தோற்றம் போல"

என மூவேந்தரும் கூடியிருந்த காட்சி பேசப்படுகிறது.எனவே கரிகாலன் அவையில் இக்கூட்டணி உருவானது என்று உணரலாம்.

 கலிங்க நாட்டிற்கு மேற்கே வடுகர் நாட்டைத் தமிழர்கள் ஆண்டுள்ளனர். 113 ஆண்டுகள் கூட்டணியாக இருந்து தமிழர்கள் வடபுலம்வரை ஆண்டதால் கலிங்கர்களால் தமிழர்களை வெல்லமுடியவில்லை.பின்னாளில் இந்தப் பகுதியை இரேணாட்டுச் சோழர்கள் ஆண்டனர்.

 கி.மு.278 இல் வடக்கிலிருந்து ஒரு படையெடுப்புத் தமிழகத்தின் மேல் நடக்கிறது(கி.மு.300 இல் மௌரியர் படையெடுப்பு நடந்துள்ளதையும் இங்குக் கவனிக்க வேண்டும். சந்திரகுப்த மௌரியன் எடுத்த மோவூர் படையெடுப்பு இதுவாகும்). கி.மு.278 இல் சந்திரகுப்த மௌரியரின் மகன் பிந்துசாரன் என்பவன் படையெடுத்தபொழுது தமிழர்கள் ஒன்றுகூடி எதிர்த்தனர்.வடக்கே 16 அரசர்களை எதிர்த்து, பாடலிபுத்திரம் திரும்பினான். சந்திரகுப்தன் படையெடுப்பு வடுகர் நாட்டின் வழியாக நடந்தபொழுது வடுகர்களும் படையுடன் சேர்ந்து தமிழகம் வந்தனர். இவர்களுக்குப் பாடம் கற்பிக்க வடுகர்நாட்டை வென்று 113 ஆண்டுகள் தமிழர் கூட்டணி ஆண்டது.இவ்வாறு தமிழர் கூட்டணியான திரமிள சங்கார்த்தம் உருவாக அடிப்படைக் காரணமாக விளங்கியவன் கரிகாலனே ஆவான் (கி.மு.278). இவன்தான் கூட்டணிக்கு முதன்மை தந்திருக்க வேண்டும். ஏனெனில் வடநாட்டுப் படையெடுப்பால் முதலில் பாதிக்கப்படுவது சோழநாடே ஆகும். எனவே சோழ அரசன் கரிகாலன் தலைமையில் படை அமைக்கப்பட்டிருக் கலாம்.

 கரிகாலன் காலத்தில் சோழநாட்டுக்கு இரண்டு தலைநகரங்கள் இருந்துள்ளன.உறையூரைத் தலைநகராகக்கொண்டு தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் அரசாண்டான். கழுமலத்தைத் (சீர்காழி) தலைநகராகக் கொண்டு கரிகாலனின் தந்தை உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி அரசாண்டான். இளஞ்சேட்சென்னி இறந்த பிறகு கரிகாலன் பிறந்தான். உடன் பிறப்பு இவனுக்கு இல்லை. இரும்பிடர்த்தலையார் என்ற புலவரால் வளர்க்கப் பெற்றவன். பொருநராற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் இவன். இவன் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டாகும். கழுமலத்திலிருந்து பின்னாளில் நெய்தலங்கானல் தலைநகரானது. நெய்தலங்கானல் என்பது இன்று பூம்புகாருக்கு மேற்கே ஐந்துகல் தொலைவில் நெய்தல்வாசல் எனப்படுகிறது.

 திருமாவளவன் நெய்தலங்கானத்திலிருந்து ஆட்சி செய்த இளஞ்சேட் சென்னியின் மகனாவான். மாவளத்தான் என்று இளமையில் அழைக்கப்பட்டான். பின்னர்த் திருமாவளவன் எனப்பட்டான். திருமாவளவனின் அண்ணன் நலங்கிள்ளியாவான். நலங்கிள்ளிக்குப் பிறகு அவன் மகன் நலங்கிள்ளி சேட்சென்னி என்பவன் சில காலம் அரசாண்டான். பின்னர் இறந்துபட்டான். அதன் பிறகு திருமாவளவன் அரசேறினான். உடன் இருந்த மன்னர்களை வென்றதுடன் வடநாட்டு மன்னரையும் இலங்கை மன்னரையும் இவன் வென்றான். காவிரிக்குக் கரையமைத்ததும், உறையூரிலிருந்து தலைநகரைப் பூம்புகாருக்கு மாற்றியதும் இவனே. காவிரியை இவன் கி.மு.11 ஆம் ஆண்டு பார்வையிட்டான் எனப் பே.க.வேலாயுதம் குறிப்பார்(பக்கம் 12). பட்டினப்பாலை இவன் மீது பாடப்பட்ட நூலாகும். அதனைப் பாடிய கடியலூர் உருத்திருங்கண்ணனார் அவர்களுக்குப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசளித்தான். இவனுக்குக் கரிகாலன் என்ற பெயரும் உண்டு என்பதை மணிமேகலை வழியாக அறியமுடிகிறது.

 திருமாவளவனின் காலத்தில் தொண்டைநாட்டை ஆண்டவன் தொண்டைமான் இளந்திரையன் ஆவான். திருமாவளவனின் மகன் செங்கணான் ஆவான். இவன் காலத்தில் சேரநாட்டை ஆண்டவன் கணைக்கால் இரும்பொறை. சோழநாட்டின் மேல் படையெடுத்துத் தோற்றவன். செங்கணானின் படை வலிமை பற்றி குறிப்பிடும் அயல்நாட்டுப் பயணியான பிளைனி, "இந்த நாட்டில் மற்றொரு நகரமும் இருக்கிறது. அதன் பெயர் கதுமுலா என்பதாகும். அந்நகரம் கடற்கரையில் உள்ள பட்டினமாக விளங்குவதோடு, பல நாட்டு மக்கள் வணிகம் செய்யும் இடமாகவும் விளங்குகிறது. மற்றும், ஐந்து நதிகள் ஒன்றுகூடிக் கடலில் விழும் இடத்தில் உள்ளது.அதன் அரசினிடம் வலிமை வாய்ந்த 1600 யானைப் படைகள் உள்ளன.150 ஆயிரம் காலாட்படைகளும்,5000 குதிரைகளும் உள்ளன" என்று குறிப்பிடும் பிளைனியின் காலம் கி.பி.23-79 ஆகும்.இங்குக் குறிப்பிடப்படும் கதுமலா என்பது கழுமலமாகிய சீர்காழியைக் குறிக்கும்.

 வலிமை வாய்ந்த படையுடைய செங்கணானுடன் கழுமலம் என்ற ஊரில் கணைக்கால் இரும்பொறை பொருது தோற்றவன்.

 கோப்பெருஞ்சோழனுக்கு இரு மகன் இருந்தனர்.மூத்தவன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்;இளையவன் இளஞ்சேட் சென்னி.

 காரவேலன் கி.மு 165 இல் படையெடுத்து வந்தான். 11 ஆண்டுகள் படைதிரட்டித் தமிழகத்தை நோக்கி வந்தான். திருக்கோவிலூருக்கு அருகில் காரவேலன் படையும், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் படையும் பொருதன. திருமுடிக்காரியின் முள்ளூர் மலையில் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஒளிந்தான். உறையூர் காரவேலன் வசமானது. அங்கிருந்து பெரும்படையுடன் மதுரைக்கு வந்தான்.

 காரவேலன் படை மதுரை சென்று திரும்பியபொழுது சோழர் படைதிருப்பித் தாக்கக் காரவேலன் படை தோற்றது. காரவேலன் படையினர் தோற்றதுடன் பாழி என்ற ஊரில் வீரர்கள் சிலர் ஒளிந்துகொண்டனர்."குடித்தம் ஆதலின் பாழி" என்னும் குறிப்பு இதனை உறுதிப் படுத்தும்.

 உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி இறந்த பிறகு கரிகாலன் பிறந்தவன். எனவே தாய் வயிற்றிலிருந்து தாயம் எய்தி என்ற தொடர் உறுதிப்படுத்தும். கரிகாலன் பொறுப்பில் வடுகர் நாடு ஆளப்பட்டது.இவன் ஆணை பெற்று இரேணாட்டுச்சோழர்கள் ஆட்சி செய்தனர். இரேணாட்டுச் சோழர்கள் என்பவர்கள் கரிகாலன் மரபினர் என்பர்.

 கரிகாலனின் தந்தை உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி ஆவான். இவன் கழுமலத்தைத் (சீர்காழி) தலைநகராகக் கொண்டவன். இவன் காலத்தில் சேரநாட்டில் உதியஞ்சேரலும், அந்துவஞ்சேரலும் ஆட்சிபுரிந்துள்ளனர். மேலும் பாண்டியநாட்டில் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி ஆட்சி செய்தவன். வழுதியை இரும்பிடர்த்தலையார் பாடியுள்ளார். உறையூரிலிருந்து ஆட்சி செய்தவன் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியாவான். உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி இறந்த பிறகு கரிகாலன் பிறந்தவன். கரிகாலனின் காலம் புலவர் மாமூலனார் காலமான கி.மு.325- கி.மு.278 ஆகும். இவன் மீது சேரன் பெருஞ்சேரலாதனும் பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதியும் பதினொரு வேளிரும் கூடிப் படையெடுத்தனர். வெண்ணியில் போர் நடந்தது.சேரன் புறப்புண் நாணி உயிர்விட்டான். பாண்டியன் கொல்லப்பட்டான்.

 கரிகாலனைப் பாண்டிய நாட்டுக் கருங்குளவாதனார் பாடியுள்ளார். அவர் பிறந்த கருங்குளம், "கரிகால சோழ நல்லூரான கருங்குளம்" எனக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. எனவே கருங்குளம் உள்ளிட்ட பகுதிகள் கரிகாலனுக்கு உரிமையுடையதாக இருந்தது.

 கரிகாலனுக்கு ஆண் வாரிசில்லை. ஒரே மகள் ஆதி மந்தி ஆட்டனத்தியை மணந்தாள். எனவே கரிகாலனுக்குப் பிறகு அவன் மரபு இல்லாமல் போனது என்று அறிஞர் பே.க.வேலாயுதம் குறிப்பர் (சங்க கால மன்னர் வரிசை).

 கரிகாலனைப் பொருநராற்றுப்படை ஆசிரியர் முடத்தாமக்கண்ணியார் பின்வருமாறு புகழ்ந்துரைக்கிறார்.

 வென்ற வேலினையும், அழகிய தேர்களையும் உடைய இளஞ்சேட் சென்னியின் மகன் எனவும் முருகனது சீற்றத்தைப் போலச் சீற்றத்தையும், பகைவருக்கு அச்சத்தையும் தரும் தலைவன் கரிகாலன். தாயின் வயிற்றிலிருக்கும்பொழுதே அரச உரிமையைப் பெற்றவன். தன் பகைவர்கள் தன் வலியறிந்து ஏவல் செய்யவும், அவ்வாறு ஏவல் செய்ய மறுத்த பகைவர்களின் நாடுகள் கவலைகொள்ளவும் அரசாட்சி செய்தவன். கடல்மேல் தோன்றும் கதிரவன் ஒளிவீசியவாறு விண்ணில் உலா வருவது போல் பிறந்த நாள்தொட்டு தம் ஆட்சியைச் சிறப்புறச் செய்தவன். யாளியின் குட்டி,பால் உண்டலை மறவாத இளம் பருவத்திலேயே ஆண் யானையைக் கொன்றதுபோல், பனம்பூவை அணிந்த சேரனையும், வேப்பம்பூ மாலை அணிந்த பாண்டியனையும் வெண்ணிப் போரில் வென்றவன், ஆத்திமாலை அணிந்தவன், கரிகால் பெயருடையவன் என்று குறிப்பிடுகிறது.

"வென் வேல்
உருவப் பல்தேர் இளையோன் சிறுவன், 130
முருகற் சீற்றத்து உரு கெழு குருசில்,
தாய் வயிற்றிருந்து தாயம் எய்தி,
எய்யாத் தெவ்வர் ஏவல் கேட்ப,
செய்யார் தேஎம் தெருமரல் கலிப்ப,
பவ்வ மீமிசைப் பகற் கதிர் பரப்பி, 135
வெவ்வெஞ் செல்வன் விசும்பு படர்ந்தாங்கு,
பிறந்து தவழ் கற்றதன் தொட்டு, சிறந்த நன்
நாடு செகிற்கொண்டு நாள்தொறும் வளர்ப்ப,

ஆளி நல் மான் அணங்குடைக் குருளை
மீளி மொய்ம்பின் மிகு வலி செருக்கி 140
முலைக் கோள் விடாஅ மாத்திரை, ஞெரேரென,
தலைக்கோள் வேட்டம் களிறு அட்டாங்கு,
இரும் பனம் போந்தைத் தோடும், கருஞ் சினை
அர வாய் வேம்பின் அம் குழைத் தெரியலும்,
ஓங்கு இருஞ் சென்னி மேம்பட மிலைந்த 145
இரு பெரு வேந்தரும் ஒரு களத்து அவிய,
வெண்ணித் தாக்கிய வெருவரு நோன் தாள்,
கண் ஆர் கண்ணி, கரிகால் வளவன்"(பொருநர்.129-148)

என்னும் பாடலடிகள் கரிகாலனின் வரலாறு உணர்த்துகின்றன.

கரிகாலன் பற்றி மாமூலனார்(கி.மு.325-250) பாடிய அகநானூற்றுப்பாடலில்

"கனவ ஒண் படைக்
கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்
பொருது புண் நாணிய சேரலாதன்
அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்தென" (அகம் 55,9-13)

(ஒளிபொருந்திய படையுடைய கரிகாலனுடன் வெண்ணிப் போர்க்களத்தில் போரிட்டபோது புறப்புண்ணிற்குப் பெரிதும் நாணிய சேரலாதன் தான் தோல்வியடைந்த போர்க்களத்திலேயே வாள் ஏந்திய கையுடன் உண்ணா நோன்பு இருந்து உயிர்நீத்தான் என்ற குறிப்பு காணப்படுகிறது). எனவே கரிகாலனின் வெண்ணிப்போர் பற்றி அறியமுடிகிறது.

கரிகாலன் பற்றி பரணர்(கி.மு.325-கி.மு.250) கூறும் கருத்துகள்

கரிகாலன் பற்றி பரணர் அகநானூற்றில் பல குறிப்புகளைத் தருகின்றார்.

"விரிஉளைப் பொலிந்த பரியுடை நல் மான்
வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த
பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார்,
சூடா வாகைப் பறந்தலை, ஆடு பெற
ஒன்பது குடையும் நன் பகல் ஒழித்த
பீடு இல் மன்னர்" (அகம்,125,16-21)

விரிந்த தலையாட்டம் கொண்ட விரைவாக ஓடும் குதிரைப்படையுடன் கூடிய பகைவருக்கு அச்சம் தரும் பெரிய வாளுடைய கரிகால் வளவன் முன்பாக நிற்க ஆற்றல் அற்றவரகளாக வாகைப்பறந்தலை என்ற ஊரில் கரிகாலன் வெற்றிபெற, அவனை எதிர்த்தொன்பது மன்னர்களும் ஒன்பது குடைகளைப் பகற்பொழுதில் விட்டுவிட்டுச் சென்றனர்.

அகநானூற்றின் (246)பாடலில் மேலும் சில செய்திகளைக் குறிப்பிட்டுள்ளார்.

"காய் சின மொய்ம்பின் பெரும் பெயர்க் கரிகால்
ஆர்கலி நறவின் வெண்ணிவாயில்,
சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின்
இமிழ் இசை முரசம் பொரு களத்து ஒழிய,
பதினொரு வேளிரொடு வேந்தர் சாய,
மொய் வலி அறுத்த ஞான்றை,
தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே" (அகம்.246,9-14)

 சினமும் பேராற்றலும், பெரும் புகழும் வாய்த்த கரிகால் வளவன் வெண்ணிவாயில் என்னும் இடத்தில் பகையரசர்களை அவர்களின் பேரொலி எழுப்பும் வீரமுரசு போர்க்களத்தே கிடக்க, வேளிர் பதினொருவர், இருபெரு வேந்தர்களை நிலைகெட்டுப் போகும்படி அவர்களின் படையாற்றலை அழித்தான்.அந்த நாளில் அவனின் தாய் பிறந்த அழுந்தூரில் மகிழ்ச்சி ஆர்ப்பு எழுந்தது.

 கரிகாலன் கழார் என்னும் ஊரில் பெரிய சுற்றத்துடன் இருந்து புனலாட்டைக் கண்டு மகிழ்ந்த பொழுது,சிறந்த வேலைப்பாடு அமைந்த வீரக்கழல் காலில் புரள,கரிய கச்சணிந்து அடிவயிற்றில் மணியும் கட்டிக்கொண்டு, கஞ்சத்தாளம் ஒலிக்கப் புனலாடலை விரும்பி ஆடும் ஆட்டனத்தியின் அழகை விரும்பிக் காவிரியாறு அவனைக் கவர்ந்துகொண்டது. ஆட்டனத்தி ஆதி மந்தியின் கணவன் ஆவான். கணவனை இழந்த பிறகு ஆதிமந்தியுடன் வாரிசு இல்லாமல் கரிகாலனின் ஆட்சிக்குப் பிறகு அவன் மரபு இல்லாமல் ஆகியிருக்கும்.

இதனை,

"கழாஅர் முன்துறை,
கலி கொள் சுற்றமொடு கரிகால் காண,
தண் பதம் கொண்டு, தவிர்ந்த இன் இசை
ஒண் பொறிப் புனை கழல் சேவடிப் புரள,
கருங் கச்சு யாத்த காண்பின் அவ் வயிற்று,
இரும் பொலம் பாண்டில், மணியொடு தௌ¤ர்ப்ப,
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து,
காவிரி கொண்டு ஒளித்தாங்கு"(அகம்.376)

என்னும் பாடலால் அறியலாம்.

கரிகாலன் பற்றி கழாத்தலையார் பாடியது

"உவவுத் தலைவந்த பெரு நாள் அமையத்து,
இரு சுடர் தம்முள் நோக்கி, ஒரு சுடர்
புன்கண் மாலை மலை மறைந்தாங்கு,
தன் போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த
புறப் புண் நாணி, மறத் தகை மன்னன்
வாள் வடக்கிருந்தனன்"(புறம்.65)
சேரமான் பெருஞ்சேரலாதான் வடக்கிருந்து உயிர் விட்ட செய்தி இப்பாடலில் பதிவாகியுள்ளது.


கரிகாலனை வெண்ணிக்குயத்தியார் பாடியது


"நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி,
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால்வளவ!
சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
5 வென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே
கலி கொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,
மிகப் புகழ் உலகம் எய்தி,
புறப் புண் நாணி, வடக்கிருந்தோனே?"(புறம் 66)

 கரிகாலனைப் பழந்தமிழ் நூல்கள் பாடியுள்ளதுடன் பிற்கால நூல்களும் பாடியுள்ளன. அவற்றுள் விக்கிரமசோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா, குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ், கலிங்கத்துப் பரணி உள்ளிட்ட நூல்களில் வரும் குறிப்புகள் சிறப்பாகச் சுட்டத்தக்கன.

"தெள்ளருவிச்
சென்னிப் புலியேறு இருத்திக் கிரிதிரித்துப்
பொன்னி கரை கண்ட பூபதி" விக்கிரம சோழன் உலா

"தலையேறு
மண்கொண்ட பொன்னிக் கரைகட்ட வாராதான்
கண்கொண்ட சென்னிக் கரிகாலன்" -குலோத்துங்க சோழன் உலா

முழுகுல நதிக்கரசர் முடிகொடு வகுத்தகரை
முகில்தொட அமைத்தது அறிவோம்
இருபுறமும் ஒக்க நினது ஒருபுலி பொறித்த வட
இமகிரி திரித்தது அறிவோம்"- குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்

"தொழுது மன்னரே கரைசெய் பொன்னி"
- கலிங்கத்துப் பரணி

"செண்டுகொண்டு கரிகாலன் ஒருகாலின் இமயச்
சிமயமால்வரை திரித்து அருளி,மீள அதனைப்
பண்டு நின்றபடி நிற்க இது'என்று முதுவில்
பாய்புலிக் குறிபொறித்து அது மறித்த பொழுதே"- கலிங்கத்துப் பரணி

"தத்துநீர் வரால் குறிமி வென்றதும்
தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர் பொன்
பத்தொடு அறுநூறு ஆயிரம் பெறப்
பண்டு பட்டினப்பாலை கொண்டதும்"- கலிங்கத்துப்பரணி

பிற்கால நூல்களும் உரையாசிரியர்களும் கரிகாலனையும் திருமாவளவனையும் ஒன்றாகவே கருதும் போக்கைக் காணமுடிகிறது. அதுபோல் இருவரின் போர்வெற்றி,சிறப்புகளையும் மயங்கியே கூறுகின்றன.


ஆய்வறிஞர் கு.சிவமணி


அறிஞர்கள் தியாகராசன், கு.சிவமணி

(குடந்தை அரசு கல்லூரியும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து நடத்திய சங்க இலக்கியம் காட்டும் சோழநாட்டியல் என்னும் தலைப்பிலான கருத்தரங்கில் கலந்துகொண்டு சங்க இலக்கியம் காட்டும் கரிகாற் சோழன் என்ற தலைப்பில் 22.02.2010 இல் உரையாற்றினேன். பூம்புகார் அறிஞர் தியாகராசன், அறிஞர் கு.சிவமணி உள்ளிட்டவர்கள் அரங்கில் இருந்தனர். பேராசிரியர் அ.ம.சத்தியமூர்த்தி அவர்கள் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளராக இருந்து வழிநடத்தினார். தமிழ் ஆய்வுச்சூழலில் புதிய பார்வையில் இக்கட்டுரை உருவாகியுள்ளது. விரித்து எழுதப்படவேண்டிய இக்கட்டுரை பற்றி மாற்றுக் கருத்துகளை அறிஞர்கள் முன்வைக்க இடம் உண்டு. தமிழக வரலாற்றில் சீர்காழி மிகவும் முதன்மையிடம் பெறும் ஊராக உள்ளதை இத்தலைப்பில் ஆராயும்பொழுது உணர்ந்தேன். பூம்புகார் ஆய்வுகளுக்கு எந்த அளவு முதன்மை தருகின்றோமோ அந்த அளவு சீர்காழி கடலாய்வுகளுக்கு முதன்மை தரவேண்டும். வழக்கம்போல் இல்லாமல், தமிழ்ப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் இக்கட்டுரையை எடுத்துப் பயன்படுத்தும் போது எடுத்த இடம், எழுதிய ஆசிரியன் பற்றிய குறிப்பை வழங்க வேண்டுகிறேன். தமிழாய்வில் புதிய பார்வையை வழங்கிய என் பேராசிரியர் முனைவர் பே.க.வேலாயுதம் ஐயாவுக்கு நன்றி.)

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் தமிழ் இணையப் பயிலரங்கம்


வரவற்கும் தமிழ்த்துறை கட்டடம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத் தமிழ்த்துறையில் 10.04.2010 காலை 10 மணியளவில் தமிழ் இணையப் பயிலரங்கம் தொடங்கியது.தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு.பாண்டி அவர்கள் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி அனைவரையும் வரவேற்றார்.அடுத்து 10.30 மணிக்குத் தொடங்கிய என் உரை பிற்பகல் 1.30 மணி வரை காட்சி விளக்கத்துடன் நீண்டது.

தமிழகத்தில் மின்வெட்டு அதிகமாக இருப்பதால் எந்த நேரம் மின்சாரம் நிற்கும் என்று தெரியாது.எனவே இந்த முறை மின் இணைப்பும் இணைய இணைப்பும் இருக்கும்பொழுதே இணையத்திலிருந்து காட்ட வேண்டிய பகுதிகளை முதலில் காட்டி விடுவோம் என்று தமிழ்த் தட்டச்சுக்கு உதவும் என்.எச்.எம் எழுதியை நிறுவுவதை முதலில் காட்டித்,தமிழ்த்துறை கணிப்பொறியைத் தமிழில் தட்டச்சிடும்படி முதலில் செய்தேன்.

தமிழ்த்தட்டச்சு விசைப்பலகை வரலாற்றை நினைவுகூர்ந்து தமிழ் 99 விசைப்பலகையை அரங்கிற்கு அறிமுகப்படுத்தி அனைவரையும் தமிழ்த்தட்டச்சுக்கு அழைத்தேன்.மின்னஞ்சல் அனுப்புவது,உரையாடுவது(chat),மின்னஞ்சல் செய்யும்பொழுது அதில் உள்ள அமைப்புகளை (செட்டிங்) எடுத்துரைத்தேன். அனைவரும் உரையாட்டின் விரைவு கண்டு மகிழ்ந்தனர்.இணைய இணைப்பில் இருந்த தமிழ்த்தேனீ,குழலி,மணிகண்டன் உள்ளிட்டவர்கள் வாழ்த்துரைத்ததும் அவையினர் மகிழ்ந்தனர்.

உதவிப் பதிவாளர் முனைவர் கி.காளைராசன் அவர்கள் கலந்துகொண்டு ஆர்வமுடன் பல வினாக்களை எழுப்பினார்.அவர் திருப்பூவணம் என்னும் ஊரினர்.திருப்பூவணப் புராணம் பற்றி முனைவர் பட்ட ஆய்வு செய்து பட்டம் பெற்றவர்.பன்னூல் ஆசிரியர்.(அவர் செல்பேசி எண் + 91 94435 01912). கொரியா நா.கண்ணன் அவர்கள் அந்த ஊரினர் என்ற நினைவு எனக்கு வந்து, அவர் பற்றி சொன்னதும் அவையில் இருந்தவர்கள் மகிழ்ந்தனர்.அவரின் தமிழ் மரபு அறக்கட்டளையை உரையின் பிற்பகுதியில் விளக்குவேன் என்றேன்.

கி.காளைராசன் அவர்களுக்கு மின்னஞ்சல் கணக்கு உருவாக்கியதுடன் திருப்பூவணம்1 என்ற பெயரில் வலைப்பூ ஒன்றும் உருவாக்கினேன்.இதுபோல் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் ஒரு வலைப்பூ உருவாக்கித் தங்கள் பகுதி வரலாறு,பண்பாடு,பழக்கவழக்கம், ஆய்வுகள், படைப்புகளை இணையத்தில் ஏற்ற வேண்டும் என்றேன்.அதுபோல் பல்கலைக்கழகங்கள் வலைப்பூ உருவாக்குவதைப் பாடமாக்க வேண்டும் என்றும்,ஆய்வேடுகளைத் தேர்வு முடிந்த பிறகு பல்கலைக்கழக இசைவுடன் இணையத்தில், வலைப்பூவில் ஏற்ற வேண்டும் என்றும் என் விருப்பம் தெரிவித்தேன்.அனைவரும் என் கருத்துக்கு இசைவு தெரிவித்தனர். நம் காளைராசன் ஐயா தம் ஆய்வேட்டை விரைவில் வலைப்பூவில் ஏற்றுவேன் என்று உறுதியுரைத்தார்கள்.

பின்னர் மதுரைத் திட்டம்,தமிழ் மரபு அறக்கட்டளை,தமிழ் விக்கிப்பீடியா,தமிழ் விக்சனரி பற்றி எடுத்துரைத்தும் நூலகம்,திண்ணை,கீற்று உள்ளிட்ட தளங்களைக் காட்டியும் அனைவரையும் இணையத்தில் எழுதும்படியும் வேண்டினேன்.தமிழ் இணையத்துக்கு உழைத்த-உழைக்கும் அறிஞர்கள்,கணிப்பொறித்துறை வல்லுநர்களை நினைவு கூர்ந்தேன்.தமிழாய்வுக்கு இணையம் எந்த எந்த வகையில் உதவும் என்பதையும் அயல்நாட்டுத் தமிழர்களுடனும்,உள்நாட்டுத் தமிழர்களுடனும் இணையத்தில் எவ்வாறு தொடர்புகளை மேம்படுத்திக் கொள்வது என்றும் எடுத்துரைத்தேன்.

இணையத்தின் இன்றியமையாமையை அனைவரும் உணர்ந்தனர்.இதுவரை இந்தத்துறை பற்றி அறியாமல் இருந்தமைக்கு அனைவரும் வருந்தியதையும்,இனி இதில் ஆர்வமுடன் செயல்பட உள்ளதையும் உணர்ந்தேன்.

என் முயற்சிக்கு நல்ல பயன் எதிர்காலத்தில் தமிழகத்தில் விளையும் என்ற நம்பிக்கையுடன் அனைவரிடமும் விடைபெற்றேன்.முனைவர் அறவேந்தன்,முனைவர் கா.கணநாதன், திருவாளர் சிதம்பரம் உள்ளிட்ட தோழர்களையும் முனைவர் காளைராசன்,மற்ற ஆய்வாளர்களையும் சந்திக்க வாய்ப்பு நல்கிய முனைவர் மு.பாண்டி அவர்கள் என்றும் என் நன்றிக்குரியவர்.ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுமாணவர்கள் பயன்பெறும் வண்ணம் இந்தப் பயிலரங்கம் நடந்தது.


முனைவர் மு.பாண்டி


கா.கணநாதன் உள்ளிட்ட பார்வையாளர்கள்


வரவேற்புரையாற்றிய முனைவர் மு.பாண்டி


பார்வையாளர் வரிசையில் கி.காளைராசன்,மு.பாண்டி


அரங்கில் இருந்த ஆய்வு மாணவிகள்


பயிலரங்கம் பற்றிய கருத்துகளைப் பதிவு செய்யும் ஆய்வு மாணவி


பயிலரங்கில் நான்