நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 14 ஏப்ரல், 2018

கங்கைகொண்ட சோழபுரத்தில் உலகத் தொல்காப்பிய மன்றம் கிளை தொடக்கவிழா!





      தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். இதனை உலக அளவில் பரப்பும் அமைப்பு உலகத் தொல்காப்பிய மன்றம் ஆகும். இந்த அமைப்பு பிரான்சில் தொடங்கப்பட்டு, கனடா, மலேசியா, ஜப்பான் நாடுகளில் கிளைகளைக் கொண்டு செயல்படுகின்றது. இந்த அமைப்பின் கிளை வரலாற்றுச் சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரத்தில் ஏப்ரல் 15 ஆம் நாள், ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்குத் தொடங்கப்பட உள்ளது.

      கங்கைகொண்ட சோழபுரத்தை அடுத்துள்ள குருகாவலப்பர்கோவில் மீரா மகாலில் நடைபெறும் தொடக்க விழாவிற்குச் செம்மொழி நிறுவனத்தில் முன்னைப் பொறுப்பு அலுவலராகப் பணியாற்றிய பேராசிரியர் க. இராமசாமி தலைமை தாங்குகின்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய முனைவர் செ.வை. சண்முகம், பிரான்சு நாட்டின் பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ, நெதர்லாந்து நாட்டின் பொறியாளர் கோபி இரமேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகைதர உள்ளனர்.

      இந்த நிகழ்ச்சிக்குச் சிறப்பு அழைப்பாளர்களாக அய்வறிஞர் கு. சிவமணி (மேனாள் முதல்வர், கரந்தைத் தமிழ்க் கல்லூரி), பேராசிரியர் இரா. ச. குழந்தை வேலனார் (நிறுவுநர், கடலூர்த் தமிழ்ச்சங்கம்)  அழைக்கப்பட்டுள்ளனர்.

      உலகத் தொல்காப்பிய மன்றத்தின் செயலாளர் முனைவர் மு.இளங்கோவன் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் நோக்கங்களை எடுத்துரைத்து உரையாற்றுவார்.

      பல்வேறு தமிழ்ப்பணிகள் செய்த  மூத்த தமிழறிஞர்களான புலவர் இ. கோ. குஞ்சிதபாதன் பிள்ளை, முனைவர் அ. ஆறுமுகம், புலவர் மா. திருநாவுக்கரசு, புலவர் மு. செல்வராசனார், புலவர் கூத்தங்குடி அரங்கராசனார், புலவர். கு. கணேசமூர்த்தி, புலவர் சு. இராசகோபால், புலவர் பல்லடம் மாணிக்கம், பண்ணுருட்டி இரா. பஞ்சவர்ணம், புலவர் ஆலவாய் அ. சொக்கலிங்கம், புலவர் சி. பன்னீர்செல்வம், மா. சுப்பிரமணியன் ஆசிரியர், பூவை. சு. செயராமன், ஆகியோரைத் தமிழ் ஆர்வலர் சோழன் குமார் சிறப்பித்து, நினைவுப் பரிசு வழங்க உள்ளார்.

      உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தலைமை அலுவலகம் திறப்பு விழாவும் இந்த நிகழ்ச்சியில் நடைபெற உள்ளது.

      பேராசிரியர் இ. சூசை, முனைவர் ப. பத்மநாபன், முனைவர் அரங்க. பாரி, முனைவர் க. திலகவதி, முனைவர் உ. பிரபாகரன்,  முனைவர் சா. சிற்றரசு,  முனைவர் அ. சிவபெருமான், செ. திருவாசகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

      பொறியாளர் இரா. கோமகன் குத்துவிளக்கேற்றித் தொடங்கிவைக்கும் இந்த நிகழ்ச்சிக்கு தியாக. மோகன், கி. முல்லைநாதன், ந. பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

      உலகத் தொல்காப்பிய மன்றப் பொறுப்பாளர்கள் சு.இளவரசன், ஸ்ரீ.ஸ்ரீகாந்த், கா. செந்தில், செ. திருவள்ளுவன், சா. க. கொளஞ்சிநாதன், நா. பாலசுப்பிரமணியன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

உலகத் தொல்காப்பிய மன்றத்தின் இணையதளம்:  http://www.tholkappiyam.org/

தொடர்புக்கு: 9442029053 /  9786332261

கருத்துகள் இல்லை: