நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

ஆச்சார்யா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டு விழா!







புதுச்சேரிவில்லியனூரில் அமைந்துள்ள ஆச்சார்யா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் 20.04.2018 மாலை நடைபெற்ற ஆண்டுவிழாவில் கலந்துகொண்டு, உரையாற்றும் அரிய வாய்ப்பு எனக்கு அமைந்தது. "உலகத் தரத்திலான கல்வி" (world Class Education) என்னும் மூல மந்திரத்தை இலக்காகக் கொண்டு நடைபெறும் இக்கல்லூரியின் மேலாண்மை இயக்குநர் திரு. ஜெ. அரவிந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஆண்டு விழாவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டனர். தமிழர்களின் தொழில்நுட்ப அறிவைச் சுருக்கமாக எடுத்துரைத்து, உரையாற்றினேன். பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினேன். கல்லூரி முதல்வர் முனைவர் எல்.இராமச்சந்திரன் அவர்களும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்களும், மாணவர்களும் இந்த நிகழ்ச்சிக்குரிய ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர். புதிய புதிய மாணவர்களைச் சந்திக்கும் இதுபோன்ற விழாக்களில் உரையாற்றுவது தமிழால் கிடைத்த பேறு என்றே சொல்லவேண்டும்.



செவ்வாய், 17 ஏப்ரல், 2018

கங்கைகொண்ட சோழபுரத்தில் உலகத் தொல்காப்பிய மன்றம் கிளை தொடக்கம்!



  தமிழறிஞர்கள் கு.சிவமணி, க.இராமசாமி, செ.வை.சண்முகம், பெஞ்சமின் இலெபோ உள்ளிட்டோர் முன்னிலையில் சோழன்குமார் அவர்கள் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தலைமை அலுவலகத்தின் கல்வெட்டைத் திறந்துவைத்தல்.

     வரலாற்றுச் சிறப்புமிக்க கங்கைகொண்டசோழபுரத்தில் 2018, ஏப்ரல் 15 ஆம் நாள், ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்கு உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கிளை தமிழறிஞர்களின் முன்னிலையில் தொடங்கப்பட்டது. உலகத் தொல்காப்பிய மன்றம் என்பது தொல்காப்பியம் என்ற தமிழ் இலக்கண நூலை உலக அளவில் பரப்பும் அமைப்பாகும். இந்த அமைப்பின் கிளை கனடா, மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் மிகச் சிறப்பாக இயங்குகின்றது.

     அரியலூர் மாவட்டம், குருகாவலப்பர்கோவில் மீரா மகாலில் நடைபெற்ற தொடக்க விழாவில்  திருவாளர்கள் சுகுமார், அருண் குழுவினரின் நாகசுர இன்னிசை  முழங்க, உலகத் தொல்காப்பிய மன்ற நிகழ்ச்சிகள் தொடங்கின. செம்மொழி நிறுவனத்தில் முன்னைப் பொறுப்பு அலுவலராகப் பணியாற்றிய பேராசிரியர் க. இராமசாமி அவர்களின் தலைமையில் நிகழ்ச்சி தொடங்கியது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய முனைவர் செ.வை. சண்முகம், பிரான்சு நாட்டின் பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ, நெதர்லாந்து நாட்டின் பொறியாளர் கோபி இரமேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்து உரையாற்றினர்.

     இந்த நிகழ்ச்சிக்குச் சிறப்பு அழைப்பாளராக அய்வறிஞர் கு. சிவமணி (மேனாள் முதல்வர், கரந்தைத் தமிழ்க் கல்லூரி), அழைக்கப்பட்டு, தகுதியுரை வழங்கினார். உலகத் தொல்காப்பிய மன்றத்தின் செயலாளர் முனைவர் மு.இளங்கோவன் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் நோக்கங்களை எடுத்துரைத்து, உ.தொ. மன்றம் தோன்றிய வரலாற்றினை நினைவுகூர்ந்து உரையாற்றினார்.

     மொழியியல் அறிஞர் செ.வை.சண்முகம் அவர்களுக்குத் "தொல்காப்பிய ஆய்வறிஞர்" என்னும் விருதும், பேராசிரியர் க. இராமசாமி அவர்களுக்குச் "செம்மொழிச் செம்மல்" என்ற விருதும் வழங்கிப் பாராட்டப்பட்டது.
முனைவர் க.இராமசாமி அவர்களுக்குச் செம்மொழிச் செம்மல் என்னும் விருதளித்துப் பாராட்டும் சோழன் குமார் அவர்கள்

மொழியியல் அறிஞர் செ.வை.சண்முகம் அவர்களுக்குத் தொல்காப்பிய ஆய்வறிஞர் என்னும் விருதளித்துப் பாராட்டும் ஆய்வறிஞர் கு. சிவமணி அவர்கள்

     பல்வேறு தமிழ்ப்பணிகள் செய்த  மூத்த தமிழறிஞர்களான முனைவர் அ. ஆறுமுகம், புலவர் மா. திருநாவுக்கரசு, புலவர் மு. செல்வராசனார், புலவர். கு. கணேசமூர்த்தி, புலவர் சு. இராசகோபால், புலவர் ஆலவாய் அ. சொக்கலிங்கம், புலவர் சி. பன்னீர்செல்வம், மா. சுப்பிரமணியன் ஆசிரியர், பூவை. சு. செயராமன், ஆகியோரைத் தமிழ் ஆர்வலர் சோழன் குமார் சிறப்பித்து, நினைவுப் பரிசு வழங்கினார்.

     உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தலைமை அலுவலகத்தின் கல்வெட்டினைத் தமிழ் ஆர்வலர் திரு. சோழன்குமார் திறந்துவைத்தார். பேராசிரியர் இ. சூசை, முனைவர் ப. பத்மநாபன், முனைவர் உ. பிரபாகரன்,  முனைவர் சா. சிற்றரசு,  முனைவர் அ. சிவபெருமான், பேராசிரியர் ச. திருஞானசம்பந்தம், செ. திருவாசகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

     பொறியாளர் இரா. கோமகன் குத்துவிளக்கேற்றித் தொடங்கிவைத்த இந்த நிகழ்ச்சிக்குத் தியாக. மோகன், கி. முல்லைநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     உலகத் தொல்காப்பிய மன்றப் பொறுப்பாளர்கள் சு. இளவரசன், ஸ்ரீ. ஸ்ரீகாந்த், கா. செந்தில், செ. திருவள்ளுவன், சா. க. கொளஞ்சிநாதன், கருப்பையன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

     தூ. சடகோபன், பாவலர் கலியபெருமாள் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ, திருவாட்டி இலெபோ அவர்கள் சிறப்பிக்கப்படுதல்
புலவர் கு.கணேசமூர்த்தி அவர்களைச் சிறப்பிக்கும் பேராசிரியர் இ. சூசை

உலகத் தொல்காப்பிய மன்றத்தின் இணையதளம் பார்க்க இங்கே செல்லவும்.


சனி, 14 ஏப்ரல், 2018

கங்கைகொண்ட சோழபுரத்தில் உலகத் தொல்காப்பிய மன்றம் கிளை தொடக்கவிழா!





      தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். இதனை உலக அளவில் பரப்பும் அமைப்பு உலகத் தொல்காப்பிய மன்றம் ஆகும். இந்த அமைப்பு பிரான்சில் தொடங்கப்பட்டு, கனடா, மலேசியா, ஜப்பான் நாடுகளில் கிளைகளைக் கொண்டு செயல்படுகின்றது. இந்த அமைப்பின் கிளை வரலாற்றுச் சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரத்தில் ஏப்ரல் 15 ஆம் நாள், ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்குத் தொடங்கப்பட உள்ளது.

      கங்கைகொண்ட சோழபுரத்தை அடுத்துள்ள குருகாவலப்பர்கோவில் மீரா மகாலில் நடைபெறும் தொடக்க விழாவிற்குச் செம்மொழி நிறுவனத்தில் முன்னைப் பொறுப்பு அலுவலராகப் பணியாற்றிய பேராசிரியர் க. இராமசாமி தலைமை தாங்குகின்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய முனைவர் செ.வை. சண்முகம், பிரான்சு நாட்டின் பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ, நெதர்லாந்து நாட்டின் பொறியாளர் கோபி இரமேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகைதர உள்ளனர்.

      இந்த நிகழ்ச்சிக்குச் சிறப்பு அழைப்பாளர்களாக அய்வறிஞர் கு. சிவமணி (மேனாள் முதல்வர், கரந்தைத் தமிழ்க் கல்லூரி), பேராசிரியர் இரா. ச. குழந்தை வேலனார் (நிறுவுநர், கடலூர்த் தமிழ்ச்சங்கம்)  அழைக்கப்பட்டுள்ளனர்.

      உலகத் தொல்காப்பிய மன்றத்தின் செயலாளர் முனைவர் மு.இளங்கோவன் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் நோக்கங்களை எடுத்துரைத்து உரையாற்றுவார்.

      பல்வேறு தமிழ்ப்பணிகள் செய்த  மூத்த தமிழறிஞர்களான புலவர் இ. கோ. குஞ்சிதபாதன் பிள்ளை, முனைவர் அ. ஆறுமுகம், புலவர் மா. திருநாவுக்கரசு, புலவர் மு. செல்வராசனார், புலவர் கூத்தங்குடி அரங்கராசனார், புலவர். கு. கணேசமூர்த்தி, புலவர் சு. இராசகோபால், புலவர் பல்லடம் மாணிக்கம், பண்ணுருட்டி இரா. பஞ்சவர்ணம், புலவர் ஆலவாய் அ. சொக்கலிங்கம், புலவர் சி. பன்னீர்செல்வம், மா. சுப்பிரமணியன் ஆசிரியர், பூவை. சு. செயராமன், ஆகியோரைத் தமிழ் ஆர்வலர் சோழன் குமார் சிறப்பித்து, நினைவுப் பரிசு வழங்க உள்ளார்.

      உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தலைமை அலுவலகம் திறப்பு விழாவும் இந்த நிகழ்ச்சியில் நடைபெற உள்ளது.

      பேராசிரியர் இ. சூசை, முனைவர் ப. பத்மநாபன், முனைவர் அரங்க. பாரி, முனைவர் க. திலகவதி, முனைவர் உ. பிரபாகரன்,  முனைவர் சா. சிற்றரசு,  முனைவர் அ. சிவபெருமான், செ. திருவாசகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

      பொறியாளர் இரா. கோமகன் குத்துவிளக்கேற்றித் தொடங்கிவைக்கும் இந்த நிகழ்ச்சிக்கு தியாக. மோகன், கி. முல்லைநாதன், ந. பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

      உலகத் தொல்காப்பிய மன்றப் பொறுப்பாளர்கள் சு.இளவரசன், ஸ்ரீ.ஸ்ரீகாந்த், கா. செந்தில், செ. திருவள்ளுவன், சா. க. கொளஞ்சிநாதன், நா. பாலசுப்பிரமணியன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

உலகத் தொல்காப்பிய மன்றத்தின் இணையதளம்:  http://www.tholkappiyam.org/

தொடர்புக்கு: 9442029053 /  9786332261