நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 21 மே, 2017

நாகர்கோயில் உலகத் திருக்குறள் மாநாட்டு நினைவுகள்...

இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் ஐயாவிடம் நலம் வினவுதல்

மு.இ, அருமை அண்ணாச்சி வி.ஜி.சந்தோஷம் அவர்களுடன்..

திருவாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த மாட்சிமைதங்கிய அரசியார் கௌரி பார்வதி பாய் அவர்களை வரவேற்று அழைத்துச் செல்லும் காட்சி: மு.இ, அறிஞர் பத்மநாபன் உள்ளிட்டோர்


  நாகர்கோயிலில் உள்ள ஸ்காட் கிறித்தவக் கல்லூரி அரங்கில் 2017 மே 17,18,19 ஆகிய மூன்று நாளும் அனைத்துலகத் திருக்குறள் மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பேராளர்கள் வருகை தந்து ஆய்வுரை வழங்கினர். சென்னையில் உள்ள ஆசியவியல் நிறுவனமும், மொரீசியசு நாட்டில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் அமைப்பும் இணைந்து இந்த மாநாட்டிற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்திருந்தன. இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் திருக்குறள் ஆர்வலர்கள் இந்த மாநாட்டிற்கு வருகை தந்திருந்தனர். அறிஞர்களின் ஆய்வுரைகளைச் செவிமடுக்கவும், நண்பர்களைச் சந்தித்து ஆய்வுப்போக்குகளை அறிந்துகொள்ளவும் நான் சென்றிருந்தேன்.

 முனைவர் ஜான் சாமுவேல், பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன், இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், வி.ஜி.பி. உலகத் தமிழ்ச்சங்கத்தின் தலைவரும் மிகச்சிறந்த திருக்குறள் பற்றாளருமான அருமை அண்ணாச்சி வி.ஜி. சந்தோஷம், முனைவர் நா.கணேசன், பேராசிரியர் கிரிகோரி ஜோம்ஸ், பேராசிரியர் அ. சண்முகதாஸ், பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ், பேராசிரியர் மருதநாயகம், பேராசிரியர் கா.செல்லப்பன், பேராசிரியர் சொர்ணம்(மொரீசியசு) முனைவர் முகிலை. இராசபாண்டியன், அறிஞர் திருவள்ளுவன் இலக்குவனார், முனைவர் கடவூர் மணிமாறன், கவிஞர் காவிரிநாடன், திருக்குறள் இராம. மாணிக்கம், பேராசிரியர் பா. வளன்அரசு, முனைவர் பத்மநாபன், பா.மா. ஆறுமுகம், ’கொங்கு கல்வெட்டு ஆய்வு’ துரை. சுந்தரம், நெல்லை ஆ. சுந்தரம் உள்ளிட்ட நண்பர்களைச் சந்திக்கவும் கண்டு உரையாடவுமான வாய்ப்பு எனக்கு அமைந்தது.

 திருக்குறள்கயமைஅதிகாரச் செய்திகளும் மாக்கியவெல்லியின் சிந்தனைகளும் என்ற தலைப்பில் என் கட்டுரை அமைந்தது. கயமை அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள செய்திகள் இத்தாலிய அரசியல் அறிஞன் மாக்யவெல்லியின் இளவரசன் நூலில் எவ்வாறு எதிரொலிக்கின்றது என்பதை எடுத்துரைக்கும் வகையில் என் கட்டுரையை அமைத்திருந்தேன். சற்றொப்ப இரண்டு திங்களாகப் பல நூல்களையும் திருக்குறள் உரையையும் கற்று என் கட்டுரையை வடிவமைத்திருந்தேன். நாமக்கல் புலவர் பொ.வேல்சாமி அவர்களுடன் உரையாடி, என் கட்டுரைச் செய்திகளை செழுமைப்படுத்தினேன்.

 மாநாடு நடைபெறும் நாளில் காலைப்பொழுது ஒன்றில் சுசீந்திரம் திருக்கோயில் சென்று அங்குள்ள இசைத்தூண்களையும், சிற்பங்களையும் கண்டு வந்தோம். அதுபோல் தேரூர் சென்று கவிமணி அவர்களின் நினைவு இல்லம் கண்டோம். இதற்குரிய ஏற்பாடுகளைச் செய்த ஆய்வறிஞர் பத்மநாபன், முனைவர் நா. கணேசன் ஆகியோர்க்கு நன்றியன்.

 தமிழுக்கு ஆக்கமான பணிகளைத் தொடர்ந்து செய்துவரும் ஆசியவியல் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் ஜான் சாமுவேல், மொரீசியசு நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன் ஆகியோர் அனைவரின் பாராட்டுக்கும் உரியவர்கள்.

மு.இ, முனைவர் நாக. கணேசன், கவிஞர் வி.ஜி. சந்தோஷம்
மு.இ, முனைவர் நாக. கணேசன், கவிஞர் வி.ஜி. சந்தோஷம்

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

போற்றுதற்குரிய மாநாடு ஐயா