நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 11 அக்டோபர், 2016

திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரி, சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம்



திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரி, சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளையுடன் இணைந்து தமிழ் இலக்கியங்களில் சமுதாயச் சிந்தனைகள் என்னும் பொருளில்  பன்னாட்டுக் கருத்தரங்கினை நடத்துகின்றது. பேராசிரியர்கள், ஆய்வறிஞர்கள், ஆய்வாளர்கள் கலந்துகொண்டு ஆய்வுரை வழங்கலாம்.

ஜமால் முகமது கல்லூரியின் வரலாறு

1951 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜமால் முகம்மது கல்லூரி அரசு உதவி பெறும் தன்னாட்சிக் கல்லூரியாகும். இது பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றது. 19 இளநிலை மற்றும் 21 முதுநிலைப் பட்டப்படிப்புகள் உள்ளன. 13 துறைகள் ஆய்வுத் துறைகளாகத் திகழ்கின்றன. கல்லூரியில் பயிலும், மொத்த மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 11,205. மேலும் அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் 131, நிர்வாக ஊதியம் பெறும் ஆசிரியர்கள் 297 என்ற சிறப்பு நிலைகளைப் பெற்றுத் திகழ்கிறது இக்கல்லூரி.

இக்கல்லூரி 1975-இல் வெள்ளி விழாவையும், 2001-இல் பொன்விழாவையும் 2011 – இல் வைர விழாவையும் கொண்டாடி மகிழ்ந்தது. 2001 – இல் NAAC குழுவால் ஐந்து நட்சத்திரத் தகுதி வழங்கப் பெற்றது. 2004-2005 கல்வி ஆண்டு முதல் தன்னாட்சிக் கல்லூரியாக விளங்குகின்றது. 2009 அக்டோபரில் இக்கல்லூரி NAAC குழுவால் (CGPA 3.6 out of 4.0) ‘A’ தகுதி கல்லூரியாக அங்கீகரிக்கப்பெற்றது. 2011-2012 கல்வியாண்டு முதல் பல்கலைக்கழக மானியக் குழுவால் ஆற்றல்வளத் தனித்தகுதி பெற்ற கல்லூரியாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இச்சிறப்புகளைப் பெற்ற ஜமால் முகம்மது கல்லூரி சமூகத்திற்கு உயர்கல்வியை வழங்கும் தன்மையால் சிறந்த நிர்வாகிகளையும், சிறந்த கல்வியாளர்களையும், சிறந்த அறிவியலாளர்களையும், சிறந்த சமூக ஆர்வலர்களையும், அறிவுத் திறன்மிக்கோர்களையும், கணினி வல்லுநர்களையும் மற்றும் ஆளுமைத் திறன்மிக்கோர்களையும் உருவாக்கி வருகிறது.

தமிழாய்வுத்துறை

               பேராசிரியர் M.கோவிந்தசாமி தேவர் அவர்களை முதல் ஆசிரியராகப் பெற்ற இத்துறையில் 1957 முதல் பகுதி I தமிழும், 1979 முதல் முதுகலைத் தமிழும் பயிற்றுவிக்கப்படுகின்றன. 2003-2004 கல்வி ஆண்டில் ஆய்வுத்துறையாக உயர்ந்தது. இதுவரை 31 ஆய்வாளர்கள் முனைவர் பட்டங்களையும் 100 ஆய்வாளர்கள் ஆய்வியல் நிறைஞர் பட்டங்களையும் பெற்றுள்ளனர். தற்பொழுது 38 முனைவர்பட்ட ஆய்வாளர்களும், 48 ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர்களும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இறையருட்கவிமணி கா. அப்துல் கபூர் அவர்களை முதல் தமிழ்த்துறைத் தலைவராகக் கொண்டு செயல்படத் தொடங்கியது இத்துறை. பெரும் புலவர் முனைவர் சி. நயினார் முகமது அவர்கள் துறைத்தலைவராகவும், கல்லூரி முதல்வராகவும் பணியாற்றினார். முனைவர் அர.அப்துல் ஜப்பார், முனைவர் பீ.மு. மன்சூர் ஆகியோர் துறைத் தலைவர்களாகவும், துணை முதல்வர்களாகவும் பணியாற்றினர்.

இத்துறையில் சமய நல்லிணக்க அறக்கட்டளை (நிறுவனர் முனைவர் சி. நயினார் முகமது), மீனாட்சி வைரவன் அறக்கட்டளை (நிறுவனர் பேரா. வை. சாத்தையா), சம்சுதீன் அறக்கட்டளை (நிறுவனர் பேரா. . சதகத்துல்லா), சிற்பி பாலசுப்பிரமணியம் அறக்கட்டளை (நிறுவனர் கவிஞர் சிற்பி) சொற்பொழிவுகள் மற்றும் UGC நிதியுதவியுடன் வருடம் பத்துச் சிறப்புச் சொற்பொழிவுகள் வழியாக ஆண்டுதோறும் சான்றோர் பலர் உரை நிகழ்த்துகின்றனர். இத்துறை கணினி ஆய்வுக் கூடத்தையும், 20,000 நூல்கள் கொண்ட நூலகத்தையும் பெற்று சிறந்து விளங்குகின்றது.

முஸ்தபா தமிழ் அறக்கட்டளை

சிங்கப்பூருக்கும், தமிழகத்துக்கும் இடையிலான இலக்கியத் தொடர்பினை மேம்படுத்தும் வகையில் சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை என்ற அமைப்பு 2007 – இல் தமிழ் ஆர்வலர் எம். எ.  முஸ்தபா அவர்களால் தொடங்கப்பெற்றது. இவ்வறக்கட்டளை பல நல்ல செயல் திட்டங்களைத் தீட்டி இலக்கியப்பணியாற்றி வருகின்றது.

தமிழ்ப்பணி

இவ்வறக்கட்டளை தமிழ் அறிஞர்களின் ஆராய்ச்சிக்கு உதவிசெய்து வருகின்றது. மேலும், மேல்நிலை தமிழ்க்கல்வி பயில்பவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில், சிங்கப்பபூர் தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களின் பெயரில் ஆய்விருக்கை ஒன்றை நிறுவி உள்ளது. இந்த ஆய்விருக்கையில் தொடர்ந்து சிறப்பாக ஆய்வு நடைபெற இருபது இலட்சம் உரூபாவினுக்குத் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பங்குகளை வாங்கித் தந்து அத்தொகை வழியாகக் கிடைக்கும் பணத்தைக் கொண்டு சிங்கைமலேசிய நாட்டு தமிழ் இலக்கியங்கள் குறித்த ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ள மலேசியா அமரர் திரு. ஆதி குமணன் நூலகத்திற்குச் சிங்கப்பூர் மலேசிய மண்ணில் தோன்றிய அறிஞர்கள் எழுதிய 1940 முதல் கிடைப்பதற்கரிய 3000 நூல்களை இவ்வறக்கட்டளைத் தேடித்தொகுத்து அன்பளிப்பாக வழங்கியிருக்கிறது.

தமிழ் இலக்கியங்களைப் பரப்பும் முயற்சிகளை மேற்கொள்ளுதல், தமிழறிஞர்களுக்கு உதவி செய்தல், ஆய்வு மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குதல் போன்றவை இந்த அறக்கட்டளையின் பணிகளில் குறிப்பிடத்தகுந்ததாகும்.

சிங்கப்பூர், மலேசியத் தமிழர்களின் வாழ்கையைப் பற்றியும், தமிழ் அறிஞர்களின் நூல்கள் குறித்தும் ஆய்வு செய்யும் ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட மாணவர்களுக்கு ஊக்கத்தொகையை இவ்வறக்கட்டளை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வழியாக வழங்கி வருகிறது.

சிங்கப்பூரில் நடக்கும் பல்வேறு இலக்கிய நிகழ்வுகளுக்கு இயன்ற வகையில் பொருளுதவி செய்து வருகின்றது. சிங்கப்பூர், மலேசியா, இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் சிறந்த படைப்பை ஆண்டுதோறும் தேர்வு செய்து கரிகாற்சோழன் தங்கப் பதக்க விருதையும் இவ்வறக்கட்டளை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வழியாக வழங்கி வருகிறது.

தி சிராங்கூன் டைம்ஸ் என்ற தமிழ் மாத இதழையும் நடத்தி வருகின்றது. சிங்கப்பூரில் வெளிவரும் ஒரே தமிழ் மாத இதழ் என்ற சிறப்பு இதற்குண்டு. இது சிங்கை அரசில் பதிவு செய்யப்பட்ட மாத இதழ் என்பது குறிப்படத்தக்கது.
              
இலங்கை, யாழ்பாண தமிழ் நூலகத்திற்கு 2011 முதல் இன்று வரை பல நூல்களைத் திரட்டி அனுப்புவதில இவ்வறக்கட்டளை முன்னிலை வகிக்கின்றது.
              
இஸ்லாமிய மார்க்கப் பெருநூல்களான திருக்குர்ஆன் விரிவுரை தஃப்சீர் இப்னு கஸீர், புகாரி, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸாயீ, இப்னுமாஜா போன்ற பிரசித்திப் பெற்ற ஆறு நபிமொழித் தொகுப்புகளையும் மிகச்சிறந்த மார்க்க அறிஞர்களைக் கொண்டு நல்ல தமிழில் மொழியாக்கம் செய்தும் சிறந்த தமிழ் இலக்கியங்களைப் பதிப்பிக்கும் நிலையமாக சென்னை ரஹ்மத் அறக்கட்டளையின் ரஹ்மத் பதிப்பகமும், எம். எ. முஸ்தபா அவர்களால் சென்னையில் 1993 – இல் நிறுவப்பெற்று, இன்று வரை சிறப்பாக இயங்கி வருகிறது. இதில் தமிழாக்க மேற்பார்வையாளராக கவிக்கோ அப்துல் ரகுமான் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத் தக்க ஒன்றாகும்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் பெண்களுக்காக  மார்க்கக் கல்வி மற்றும் தங்கும் வசதியுடன் 1300 மாணவிகள் கல்வி பயின்று கொண்டிருக்கும் ரஹ்மத் பெண்கள் மேல்நிலைப் பள்ளியையும், சென்னை ரஹ்மத் அறக்கட்டளையின் மூலம் நிறுவி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இங்கு LKG முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கப்படுகிறது. பெண்கள் மட்டும் தொழுவதற்காக ஒரு தனி பள்ளிவாசல் இருப்பது இந்த பள்ளியின் சிறப்புக் கூறாகும்.

இந்தப் பள்ளியின் தமிழ்த்துறை சார்பில் .வே.சா. பெயரில் இலக்கிய மன்றம் ஒன்றை நிறுவப்பட்டு 14 ஆண்டுகளாகத்  தொடர்ந்து விருதுகள்வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் தமிழகத்தின் சிறந்த மாணவ, மாணவிகளுக்கு ஒரு இலட்சம் ரூபாய் மற்றும் .வே.சா விருது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பன்னாட்டுக் கருத்தரங்கம்

ஜமால் முகம்மது கல்லூரி (தன்னாட்சி), முதுகலை & தமிழாய்வுத்துறையும் சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம்தமிழ் இலக்கியங்களில் சமுதாயச் சிந்தனைகள் என்னும் பொருண்மையில் 2016 திசம்பர் திங்களில் நடைபெறவுள்ளது.

பொருண்மை

               எட்டுத்தொகை நூல்கள், பத்துப்பாட்டு நூல்கள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், பிற்கால இலக்கியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், வைணவ இலக்கியங்கள், சைவ இலக்கியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள், சமண இலக்கியங்கள், பௌத்த இலக்கியங்கள், சித்தர் இலக்கியங்கள், இடைக்காலப் புலவர்களின் இலக்கியங்கள், அறநெறி நூல்கள், இசுலாமிய இலக்கியங்கள், கிறித்துவ இலக்கியங்கள், மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், புதுவகைக் கவிதைகள், நாடக இலக்கியங்கள், நாவல் இலக்கியங்கள், சிறுகதை இலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், குழந்தை இலக்கியங்கள், கட்டுரை இலக்கியங்கள் போன்ற இலக்கியங்களில் காணலாகும் அரசியல், கலை, பொருளாதாரம், பண்பாடு, நாகரிகம், மதம், இனம், சாதிப்பாகுபாடுகள், சமுதாயப் பிரதிபலிப்புகள் ஆகியவற்றைக் கண்டறியும் வகையில்தமிழ் இலக்கியங்களில் சமுதாயச் சிந்தனைகள்என்னும் தலைப்பில் இக்கருத்தரங்கு அமைகிறது. இதனை அடியொற்றிய தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகள் ஆய்வாளர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

கட்டுரைகள் 4 தாளில் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பாமினி எழுத்துருவில் கணினி அச்சிட்டு, அச்சுப்படியோடு குறுவட்டிலும் (CD) பதிவு செய்து அனுப்புதல் வேண்டும். jmctins2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அனுப்பலாம். கருத்தரங்கிற்கு வருகை புரியும் கட்டுரையாளர்களுக்குப் பயணப்படி வழங்க இயலாது. கட்டுரைகளைத் திருத்தம் செய்யவோ, மாற்றவோ அமைப்புக் குழுவிற்கு உரிமை உண்டு

கட்டுரை, பதிவுப்படிவம், கட்டணம் ஆகியவற்றை அனுப்ப நிறைவுநாள்  01.12.2016.

பேராளர் கட்டணம்ரூ.750.00 (US $.12)
ஆய்வாளர் கட்டணம்ரூ. 500.00 (US $.8)

கட்டணம்திருச்சியில் மாற்றத்தக்கதாக Head, Department of Tamil, Jamal Mohamed College, Trichy – 20 என்ற பெயரில் வரைவோலை (DD) அனுப்பவும்.

கட்டுரைகள் அனுப்ப வேண்டிய முகவரி & தொடர்புக்கு

முனைவர் . சிராஜுதீன்,
உதவிப்பேராசிரியர்
கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் & செயலர்
முதுகலை & தமிழாய்வுத்துறை
ஜமால் முகம்மது கல்லூரி (தன்னாட்சி)
திருச்சிராப்பள்ளி – 620 020
அலைபேசி – 9865721142




கருத்துகள் இல்லை: