நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 23 ஜூலை, 2016

புதுச்சேரியில் தொல்காப்பியப் பதிப்புகள் குறித்த சிறப்புச் சொற்பொழிவு!


புலவர் பொ.வேல்சாமி சிறப்புரை

புதுச்சேரியில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் சார்பில் தொல்காப்பியப் பதிப்புகள் குறித்த சிறப்புச் சொற்பொழிவு 23.07.2016 (சனிக்கிழமை) மாலை 6.30 மணி முதல் 8 மணி வரை நடைபெற்றது. புதுச்சேரி நீட இராசப்பையர் தெருவில் உள்ள செகா கலைக்கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பேராசிரியர் தெ. முருகசாமி தலைமை தாங்கினார். முனைவர் மு.இளங்கோவன் அறிமுக உரையாற்றினார்.

நாமக்கல்லைச் சேர்ந்த புலவர் பொ. வேல்சாமி தொல்காப்பியப் பதிப்புகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தொல்காப்பிய நூலின் சிறப்பு, தொல்காப்பியம் இரண்டாயிரம் ஆண்டுகாலத்தில் ஏற்படுத்திய மொழிக்காப்பு முயற்சி, பிற்கால இலக்கண நூல்களில் தொல்காப்பியத்தின் தாக்கம் பற்றி விரிவாக உரையாற்றினார். தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் 1847 இல் மழவை மகாலிங்க ஐயரால் ஓலைச்சுவடியிலிருந்து முதன்முதல் அச்சுவடிவம் கண்டதையும் அதனைத் தொடர்ந்து தொல்காப்பியம் நூற்றுக்கும் மேற்பட்ட அறிஞர்களால் மறுபதிப்புச் செய்யப்பட்டுள்ளதையும் ஆய்வுநோக்கில் எடுத்துரைத்தார். இந்தப் பதிப்புகளின் வரலாறு, சிறப்புகள், நிறை, குறைகள் குறித்துப் புலவர் பொ.வேல்சாமி விளக்கினார். இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த தொல்காப்பியப் பதிப்புகள் பற்றியும் தம் மதிப்பீடுகளைப் பகிர்ந்துகொண்டார்.

முனைவர் ப. கொழந்தசாமி நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் புதுவைத் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

பேராசிரியர் தெ. முருகசாமி அவர்களின் தலைமையுரை

புலவர் பொ.வேல்சாமி அவர்களைச் சிறப்பிக்கும் தூ.சடகோபன் ஐயா

புலவர் பொ.வேல்சாமி அவர்களுக்கு முனைவர் அலெக்சு தேவராசு அவர்கள் நூல்களை அன்பளிப்பாக வழங்குதல்

தமிழுரையை ஆர்வமாகச் செவிமடுக்கும் அறிஞர்கள்

புலவர் பொ.வேல்சாமி அவர்களின் சிறப்புரையைக் கேட்க இங்கே அழுத்துக

கருத்துகள் இல்லை: