நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 15 ஜனவரி, 2016

அச்சுத்துறை வழியாக அருந்தமிழ்ப்பணி!..



அன்னை அருள் அச்சகம், புதுச்சேரி என்ற பெயரை முனைவர் இரா. திருமுருகனார் நடத்திய தெளிதமிழ் ஏட்டில் பலவாண்டுகளுக்கு முன் பார்த்த நினைவு உண்டுஅன்னை அருள் அச்சகத்தினர் மற்ற அச்சகம்போல் வழக்கமான அச்சுப்பணிகளைத்தான் தொடக்கத்தில் செய்து கொண்டிருந்தனர். முனைவர் இரா. திருமுருகனார், பேராசிரியர் ம.இலெ. தங்கப்பா போன்ற அறிஞர் பெருமக்கள் இந்த அச்சுக்கூடத்திற்கு வருகைதரத் தொடங்கியதிலிருந்து அச்சகம் தமிழ்ப்பணிக்கு முதன்மைதரத் தொடங்கியது.

அன்னை அருள் அச்சகம் உரிமையாளர் திருவாளர் இரா. கோவிந்தசாமி அவர்கள் வள்ளலார், அம்பேத்கார், பாவேந்தர் உள்ளிட்டவர்களின் கொள்கைகளை அச்சிட்டு இலவசமாக அளிக்கத் தொடங்கினார். தமிழ் உணர்வாளர்களின் பார்வைக்கு இவை கிடைத்ததும் அச்சுக்கூடம் மெல்ல மெல்லத் தமிழ்ப்பணிக்கு உரிய வேடந்தாங்கலாகப் புதிய பரிமாணம் பெறத் தொடங்கியது.



திருவள்ளுவர் உருவம்கொண்ட பித்தளை விளக்கு உருவாக்கப்பட்டு அடக்க விலைக்குத் தரப்பட்டது. தமிழக எல்லைமீட்புப் போரில் உயிர்நீத்த சற்றொப்ப 300 தமிழ் வீரர்களின் படங்கள் திரட்டித் தொகுத்து, வரையப்பட்டு நாள்காட்டி வடிவில் தமிழகம் முழுவதும் பரவியது. தமிழகத்தின் திருக்கோயில்களின் அரிய படங்கள் போதிய குறிப்புகளுடன் அச்சிடப்பட்டு, உலகம் முழுவதும் சென்ற ஆண்டு இலவசமாக வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு நாள்காட்டி, திருவள்ளுவரின் திருவுருவம் அமைத்து, அழகாக வெளியீடு கண்டுள்ளது.

2016 ஆம் ஆண்டுக்கான நாட்குறிப்பேட்டை அன்னை அருள் அச்சகம் மிகச் சிறப்பாக வடிவமைத்துள்ளது. உலகத் தரத்திலான தாள், கட்டமைப்பு, செய்திகள் கொண்ட இந்த நாட்குறிப்பேடு விலைக்குக் கிடைக்கின்றது. 500 உருவா விலை குறிக்கப்பட்டுள்ள இந்த நாட்குறிப்பேடு தமிழன்பர்களுக்கு 250 உருவாவுக்குக் கொடுக்கப்பட உள்ளது.

2016 ஆம் ஆண்டு நாள் குறிப்பேடு 408 பக்கங்களைக் கொண்டுள்ளது. வள்ளலாரின் பாடலும், உலகம், விண்மீன், கோள்கள், ஓரைகள், கோள்களைக் கண்டுபிடித்தோர், உடுக்களின் பெயர்கள் உவாக்களின் பெயர்கள், காலம் குறித்த சிறப்புச் செய்திகளைக் கொண்டும், நம் தன் விவரக்குறிப்புகளைப் பொறித்துக்கொள்ளும் வகையிலும் நாட்குறிப்பேடு தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழறிஞர்களின் பிறந்தநாள், நினைவுநாள் குறிப்புகள், திருக்குறள், திருமந்திரம், நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம் போன்ற நெறிநூல்களின் பாடல்கள் பொருத்தமாக நாள்குறிப்பேட்டில் வழங்கப்பட்டுள்ளன.


அச்சுப்பணி வழியாக அருந்தமிழ்ப்பணியாற்றும் திருவாளர். இரா. கோவிந்தசாமி அவர்களின் தமிழ்ப்பற்றினை ஊக்கப்படுத்தும்வகையில் இவர்தம் பணிகளை ஆதரிப்பது தமிழர்தம் கடமையாகும்.

நாள்குறிப்பேடு, நாள்காட்டி, அச்சுவேலைகளுக்குத் தொடர்புகொள்க:
0091 413 2336204 /  2336205

அன்னை அருள் அச்சகம்
169, ஈசுவரன்கோயில் தெரு, புதுச்சேரி – 605 001

mothergraceoffset@gmail.com

இணையதளம் பார்வையிட இங்கு அழுத்துக

கருத்துகள் இல்லை: