நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 18 நவம்பர், 2015

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் கு. இராமசாமி அவர்கள் மீண்டும் பொறுப்பேற்பு!

பேராசிரியர் கு. இராமசாமி அவர்கள் 

பேராசிரியர் கு. இராமசாமி அவர்கள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டு, நேற்று 17.11.2015 பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார் என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். மாண்புநிறை துணைவேந்தர் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளையும் உரித்தாக்குகின்றேன். 

நுண்ணுயிரியல் துறையில் உலக அளவில் புகழ்பெற்ற அறிவியல் அறிஞராகப் பேராசிரியர் கு. இராமசாமி அவர்கள் போற்றப்படுபவர். நேர்மைக்கும், கண்டிப்புக்கும், எளிமைக்கும் பெயர்பெற்ற பேராசிரியர் கு.இராமசாமி அவர்கள் தகுதிக்கும், திறமைக்கும் முதன்மையளிப்பவர்.  மிகச்சிறந்த தமிழ்ப்பற்றுடையவர். இவர் உழவர்குடியில் தோன்றியதால் வேளாண்மைக் கல்வி அடித்தட்டு மக்களுக்கும் கிடைக்கவேண்டும் என்ற உயரிய சிந்தனையுடன் செயல்படுவர். மரபுவழி வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிப்பவர். அதேபொழுது தேவையான தொழில் நுட்பங்களைப் பின்பற்றுவதிலும் ஆர்வம்கொண்டவர்.

பேராசிரியர் கு. இராமசாமி அவர்கள் திருவாரூர் வேலுடையார் பள்ளியில் பள்ளிக் கல்வியையும், அறந்தாங்கி அரசுப்பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு, முதுநிலைப் பட்டப்படிப்பையும் பயின்றவர். பெல்சியத்தில் உள்ள கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் முதுமுனைவர் (Post-Doctoral) பட்டம் பெற்றவர்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தம் பேராசிரியர் பணியைத் தொடங்கிய இவர் பல்வேறு துறைகளில் தலைவராகவும், புல முதன்மையராகவும் விளங்கியவர். பல்வேறு தனியார் கல்வி நிறுவனங்களில் வேளாண்மைக் கல்வி வளர்ச்சிக்கும், கல்வி வளர்ச்சிக்கும் பங்களிப்பு நல்கியவர். கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் விளங்கியவர். உலகின் பல நாடுகளுக்கும் சென்று தம் அறிவாய்வுக் கட்டுரைகளை வழங்கி அறிஞர்களின் பாராட்டினைப் பெற்றவர். இதுவரை 120 - க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும், 7 நூல்களையும் படைத்தவர். வேளாண்மை, சுற்றுச்சூழல், மண்வளம் சார்ந்த பல்வேறு குழுக்களின் ஆலோசகராகப் பணியாற்றியவர்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 10-ஆவது துணைவேந்தராக 26.8.2012-இல் முனைவர் கு. ராமசாமி அவர்கள் பொறுப்பேற்றர். இவரின் மூன்று ஆண்டு பதவிக் காலம் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் நாள் நிறைவடைந்தது.

இதற்கிடையே, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்குப் புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கான மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழுவைத் தமிழக அரசு அமைத்தது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.என்.வேதநாராயணனைத் தலைவராகக் கொண்ட இந்தக் குழுவில், சன் அக்ரோ பயோடெக் ஆய்வு மையத்தின் இயக்குநர் சீனிவாசன் சித்தானந்தம், தில்லி ஐ.சி.ஏ.ஆர். இயக்குநர் எஸ்.அய்யப்பன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்தக் குழுவுக்கு 40-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களை அனுப்பி இருந்தனர். துணைவேந்தர் பதவிக்கான 3 பேர் அடங்கிய பரிந்துரைப் பட்டியல் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது.

இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்த கு.ராமசாமி அவர்களை இரண்டாவது முறையாக வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமித்து வேந்தரும், ஆளுநருமான கே.ரோசய்யா உத்தரவிட்டார்.

இதையடுத்து, பல்கலைக்கழகத்தின் 11-ஆவது துணைவேந்தராக கு.ராமசாமி அவர்கள் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். பேராசிரியர் கு.இராமசாமி அவர்கள் 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையிலும் இந்தப் பதவியில் நீடிப்பார்.


நன்றி: தினமணி 18.11.2015

கருத்துகள் இல்லை: