நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 26 ஆகஸ்ட், 2015

பேராசிரியர் இரா. சாரங்கபாணியார் நினைவு இலக்கியப் பேருரை விழா



தமிழ்ப் பேராசிரியரும், திருக்குறள் ஆய்வுகளில் பெரும் பங்களிப்பு வழங்கியவர்களுமான பேராசிரியர் இரா. சாரங்கபாணியார் அவர்களின் நினைவு  இலக்கியப் பேருரை விழா 29.08.2015 காரி (சனி)க் கிழமை காலை 10.30 மணிக்குச் சேத்தியாத்தோப்புக்கு அருகில் உள்ள தீப்பாய்ந்த நாச்சியார்கோயில் வளாகத்தில் நடைபெற உள்ளது.

மொழியியல் பேரறிஞர் முனைவர் செ.வை.சண்முகம், முனைவர் மு.இளங்கோவன், பேராசிரியர் மருதூர் அரங்கராசனார், பேராசிரியர் த.சாமிநாதன், குமுடிமூலை திரு. கி. திருமாறன் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பிக்க உள்ளனர்.


நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருத்துவர் சா. அந்துவன்(இலண்டன்) அவர்களும் அவர்களின் குடும்பத்தாரும் செய்துள்ளனர். அனைவரும் கலந்துகொண்டு தமிழாய்வில் ஈடுபட்ட தலைமகனின் பெருமைகளை நினைவுகூரலாம்.

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

தமிழின் முதல் இலக்கண நூல்: தொல்காப்பியத்தை உலகெங்கும் பரப்ப பாரீஸில் உதயமாகும் புதிய அமைப்பு



குள.சண்முகசுந்தரம் / வை.ரவீந்திரன்

தொன்மைமிகு தொல்காப்பியத் தின் சிறப்புகளை உலகெங்கும் பரப்புவதற்காக தொல்காப்பிய மன்றம்என்ற அமைப்பு பாரீஸில் அடுத்த மாதம் 27-ம் தேதி தொடங்கப்படுகிறது.

தொன்மைமிக்க நூலான தொல் காப்பியம் தமிழின் முதல் இலக் கண நூலாகும். எழுத்து அதிகாரம், சொல் அதிகாரம், பொருள் அதிகா ரம் என மூன்று அதிகாரங்களாக உள்ள தொல்காப்பிய நூலில் 1600 நூற்பாக்கள் இடம் பெற்றுள்ளன. 1847-ல் தொல்காப்பியத்தை ஓலைச் சுவடி வடிவில் இருந்து அச்சு வடிவுக்கு மழவை மகாலிங்க ஐயர் முதன் முதலில் மாற்றினார்.

அமைப்பு ரீதியாக..

தமிழின் சிறப்புகளைச் சொல் லும் தொல்காப்பியம் குறித்து தமிழர்களுக்கு குறிப்பாக தமிழ் மாணவர்களுக்கு இன்னமும் சரியான புரிதல் இல்லை. திருக் குறள், சிலப்பதிகாரம், கம்பராமா யணம் அளவுக்கு அமைப்புரீதி யாக தொல்காப்பியம் பிரபலப்படுத் தப்படவில்லை. இந்தக் குறையை போக்குவதற்காகவே அடுத்த மாதம் லண்டனில் தொல்காப்பிய மன்றம்என்ற புதிய அமைப்பு தொடங்கப்படுகிறது.

இதன் முன்னோட்டமாக, மன் றத்தின் இணையதள முகவரி தொடக்க விழா புதுச்சேரியில் நடைபெற்றது. மன்றத்தின் இந்திய பொறுப்பாளராக புதுச்சேரி அரசு காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு ஆய்வு மையத்தின் தமிழ்த்துறை பேராசிரியர் மு.இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தி இந்துவிடம் கூறியதாவது:

தமிழ் இலக்கண பெருமை சொல் லும் தொல்காப்பியத்தின் மகத்து வம் தமிழர்களுக்கு தெரியாமல் இருக்கிறது. தொல்காப்பியத்தை வலைத்தளத்தில் பதிவேற்றி அனை வரும் அதை எளிதில் படிக்க வேண் டும் என்பதற்காக, ஓலைச் சுவடியில் இருந்த தொல்காப்பியத்தையும் அதன் பிற பதிப்புகளையும் டிஜிட் டலைஸ்டு செய்து வைத்திருக் கிறேன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் நான் கலந்து கொண்ட கருத்தரங்கில் சிவச்சந்திரன் என்ற பெரியவர் துண்டறிக்கை ஒன்றை விநியோகம் செய்தார். அதில் தொல்காப்பியத்தின் நான்கைந்து நூற்பாக்கள் அச்சிடப்பட்டிருந்தன. விசாரித்ததில், ’தொல்காப்பியத்தை அனைவரிடமும் கொண்டு செல் வதற்காக இப்படிச் செய்கிறேன்என்றார் பெரியவர். அவரது வீட்டில் இருந்த தொல்காப்பியம் சம்பந்தப்பட்ட நூல்களைப் பார்த்து விட்டு பிரமித்துப் போய்விட்டேன். தொல்காப்பிய மன்றம் தொடங்கும் யோசனை அங்குதான் உதித்தது.

தொல்காப்பிய கருத்துக்களை எளிமையான வடிவில் சாமானியர் களிடமும் தமிழே படிக்காத பொறி யாளர்கள், மருத்துவர்கள் உள்ளி டோரிடமும் கொண்டு சேர்ப்பதும் தான் இந்த மன்றத்தின் முக்கிய நோக்கம். இதில் தமிழறிந்த அனை வரும் இணையலாம்.

பிரான்ஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட இருக்கும் இந்த பன்னாட்டு அமைப்பின் தொடக்க விழா பாரீஸில் வரும் செப்டம்பர் 27-ம் தேதி நடைபெறும் தொல் காப்பிய ஆய்வில் ஈடுபட்டவர் களையும், தொல்காப்பியப் பரவலில் துணை நின்றவர்களை யும் அறிஞர் குழு அடையாளம் கண்டு ஆண்டு தோறும் அவர்களுக்கு மலேசிய தொல் காப்பிய அறிஞர் சீனி நைனா முகமது பெயரில் விருது வழங்கப் படும்.

மூதறிஞர் குழு

பொற்கோ (சென்னை பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர்), பேராசிரியர் கு.சிவமணி, பேராசிரி யர் அ.சண்முகதாஸ் (இலங்கை), இ.பாலசுந்தரம் (கனடா), சுப. திண் ணப்பன் (சிங்கப்பூர்), சிங்கப்பூர் சித்தார்த்தன், ம.மன்னர் மன்னன் (மலேசியா), பேராசிரியர் இ. மறை மலை, ஜீன் லாக் செவ்வியார் (பிரான்சு), சு. அழகேசன், புலவர் பொ.வேல்சாமி, சு. சிவச்சந்திரன் (லண்டன்) ஆகியோர் இந்த மன்றத்தின் மூதறிஞர் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள்.

தொடக்க விழாவின்போது, முதல் கலந்துரையாடல் கூட்டமும் நடைபெறுகிறது. இதில் இந்தியா, இலங்கை, கனடா, சிங்கப்பூர், மலேசியா, பிரான்சு, இங்கிலாந்து, சவுதி அரேபிய நாடுகளின் பேராசிரி யர்கள் பங்கேற்று கலந்துரையாடு கின்றனர். உலக தொல்காப்பிய மன்றத்தை tolkappiyam@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

உலக அளவிலான மன்ற பொறுப்பாளர்களாக கி.பாரதிதா சன் (பிரான்ஸ்), மு.இளங்கோவன் (இந்தியா), ஆம்பூர் மணியரசன் (ஜெர்மனி), ஹரிஷ் (இங்கிலாந்து), சந்தன்ராஜ் (சிங்கப்பூர்), வாணன் மாரியப்பன் (மலேசியா), அர வணைப்பு கு.இளங்கோவன் (குவைத்), பழமலை கிருஷ்ண மூர்த்தி (குவைத்), த.சிவபாலு (கனடா), சுரேஷ் பாரதி (சவுதி), அருள் பாலாசி வேலு (தைவான்), அன்பு ஜெயா (ஆஸ்திரேலியா), தி.நா.கிருஷ்ண மூர்த்தி (அந்தமான்) ஆகியோர் செயல்பட உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


நன்றி: தி இந்து (தமிழ்) 22.08.2015

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

உலகத் தொல்காப்பிய மன்றம் இணையதளம் தொடக்க விழா


புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் திரு. து. மணிகண்டன் இ.ஆ.ப. அவர்கள் புதிய இணையதளத்தைத் தொடங்கிவைக்கும் காட்சி.அருகில் தொல்காப்பிய அறிஞர்களும் ஆர்வலர்களும்

 உலகத் தொல்காப்பிய மன்றத்தின் இணையதளம் தொடக்க விழா மற்றும் கலந்துரையாடல் கூட்டம் புதுச்சேரியில் உள்ள செகா கலைக்கூடத்தில் 18.08.2015மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை நடைபெற்றது. புதுச்சேரி மாவட்ட ஆட்சித் தலைவர் து. மணிகண்டன் இ.ஆ.ப. அவர்கள் கலந்துகொண்டு இணையதளத்தைத் தொடங்கிவைத்து வாழ்த்திப் பேசினார். இணையத்தின் தேவையையும் இணையத்தில் உள்ள தமிழ்ச் செய்திகளையும் எடுத்துரைத்துப் பேசினார். இணையம் வழியாகத் தொல்காப்பியம் உலகம் முழுவதும் பரவ உள்ள செய்தியைப் பாராட்டி, இதுபோன்ற செயல்களில் தமிழ் ஆர்வலர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் சு. அழகேசன் அவர்கள் தலைமையில் கருத்துரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  பேராசிரியர் இரா. . குழந்தைவேலனார் அரங்க. மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். முனைவர் . பத்மநாபன் வரவேற்புரையாற்றினார்முனைவர் மு.இளங்கோவன் நோக்கவுரை யாற்றினார். பேராசிரியர் கு. சிவமணி அவர்கள் (செம்மொழி நிறுவன மேனாள் ஆய்வறிஞர்), முனைவர் ஒப்பிலா. மதிவாணன் அவர்கள் (சென்னைப் பல்கலைக்கழகம்), முனைவர் போ. சத்தியமூர்த்தி அவர்கள் (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்), பேராசிரியர் சூசை அவர்கள் (திருச்சிராப்பள்ளி), பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ அவர்கள்(பிரான்சு), முனைவர் க.தமிழமல்லன்(ஆசிரியர்- வெல்லும் தூயதமிழ்), பேராசிரியர் இரா.ச.குழந்தைவேலனார் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

தொல்காப்பியத் தாவரங்கள் என்ற ஆய்வுநூல் எழுதிய திரு. இரா. பஞ்சவர்ணம் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்பட்டார்.


 செதிருவாசகம் நன்றியுரையாற்றினார்.

முனைவர் சு.அழகேசன், மு.இளங்கோவன், திரு.து.மணிகண்டன் இ.ஆ.ப., முனைவர் க. தமிழமல்லன்

முனைவர் க. தமிழமல்லன் உரை

முனைவர் சூசை, முனைவர் போ.சத்தியமூர்த்தி, அரங்க.மாரிமுத்து, முனைவர் கு.சிவமணி,மு.இளங்கோவன். செ.திருவாசகம்,
பேராசிரியர் சக்திவேல்
இரா. பஞ்சவர்ணம் அவர்களைச் சிறப்பிக்கும் காட்சி

இரா.  பஞ்சவர்ணம் அவர்களுக்குப் பாராட்டு

உலகத் தொல்காப்பிய மன்றம் இணையதளம் தொடக்கம், செய்தியாளர் சந்திப்பு



தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தின் சிறப்பினை உலக அளவில் நிலைநாட்ட உலகத் தொல்காப்பிய மன்றம் என்ற அமைப்பு தொடங்கப்பட உள்ளது. பிரான்சில் 27.09.2015 இல் தொடக்க விழாவும் உலகத் தொல்காப்பிய அறிஞர்களின் கலந்துரையாடல் கூட்டமும், நடைபெறுகின்றன. இதில் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, கனடா, பிரான்சு, செர்மனி, சுவிசு, அமெரிக்கா, குவைத்து, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அறிஞர் பெருமக்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

முதற்கண் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் இணையதளத் தொடக்கவிழாவும், பிரான்சு நிகழ்ச்சி குறித்த கலந்துரையாடல் கூட்டமும்  புதுவையில் நடைபெற உள்ளன. அனைவரும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

நாள்: 18.08.2015 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இடம்: செகா கலைக்கூடம்(Sega Art Gallery), நீடா இராசப்பையர் தெரு, புதுச்சேரி

தலைமை: 
முனைவர் சு. அழகேசன் அவர்கள் (மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்)

முன்னிலை:

பேராசிரியர் இரா. ச. குழந்தைவேலனார் அவர்கள்
திரு. அரங்க. மாரிமுத்து அவர்கள்

வரவேற்புரை: முனைவர் ப. பத்மநாபன் அவர்கள் (செய்தித்துறையின் மேனாள் துணை இயக்குநர்)

நோக்கவுரை: முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்( செயலர், உலகத் தொல்காப்பிய மன்றம்)

இணையதளம் தொடங்கிவைத்து வாழ்த்துரை
திரு. து. மணிகண்டன் அவர்கள் இ.ஆ.ப.
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர்

கருத்துரை வழங்குவோர்:
பேராசிரியர் கு. சிவமணி அவர்கள் (செம்மொழி நிறுவன மேனாள் ஆய்வறிஞர்)

முனைவர் க. இளமதி சானகிராமன் அவர்கள் (புதுவைப் பல்கலைக்கழகம்)

முனைவர் ஒப்பிலா. மதிவாணன் அவர்கள் (சென்னைப் பல்கலைக்கழகம்

முனைவர் அரங்க. பாரி அவர்கள் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)

முனைவர் போ. சத்தியமூர்த்தி அவர்கள் (மதுரை காமராசர் பல்கலைக் கழகம்)

நன்றியுரை: திரு. செ.  திருவாசகம் அவர்கள்

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

முனைவர் இராச. கலைவாணியின் தொல்காப்பியத்தில் இசை - தொன்மையும் தொடர்ச்சியும் அறிமுகம்

                     முனைவர் இராச. கலைவாணி

  பேராசிரியர் இராச. கலைவாணி அவர்களின் தொல்காப்பியத்தில் இசை தொன்மையும் தொடர்ச்சியும் என்ற நூலினை அண்மையில் படிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. 608 பக்கங்களில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த நூல் தொல்காப்பியத்தை இசைப்பார்வைகொண்டு நோக்கி எழுதப்பட்டுள்ள அரிய நூலாகும்.

  தொல்காப்பியத்தில் இசைக்குறிப்புகள் என்று பேராசிரியர் வீ. ப. கா. சுந்தரம் அவர்கள் நூல் எழுதியிருப்பினும் முனைவர் இராச. கலைவாணியின் நூல் தொல்காப்பியத்தில் புதைந்துள்ள இசைக்குறிப்புகளைச் சங்க இலக்கியப் பின்புலத்தில் சிறப்பாக விளக்குகின்றது. இன்றைய ஆய்வாளர்கள் பெரும்பாலும் சங்கப் பனுவல்களை மேலோட்டமாகப் பார்க்கும் பார்வை கொண்டவர்களாக உள்ளனர். இச் சூழலில் இராச. கலைவாணி அவர்களிடம் இசைப்புலமை குவிந்துகிடப்பதால் மிக நுட்பமாகத் தொல்காப்பியத்தையும் சங்கப் பனுவல்களையும் ஊடுருவிப்பார்க்கும் ஆற்றல் பெற்றுள்ளதை அவரின் நூல் மெய்ப்பிக்கின்றது.

முனைவர் இராச. கலைவாணி அவர்களைப் படிக்கும் காலத்திலிருந்து  அறிவேன். இசைப் பேராசிரியர் ஞானாம்பிகை குலேந்திரன் அம்மா அவர்களிடம் அவர் இசையாய்வு மேற்கொண்ட நாள் முதல் அவரின் குரல் இசையில் எனக்கு ஈடுபாடு உண்டு. சிலவாண்டுகளுக்கு முன் சங்க இலக்கியத்தில் இசை என்னும் தலைப்பில் அவர் வரைந்த நூல் இசைத்துறையிலும் தமிழ் நூல்களிலும் அவர் நல்ல பயிற்சி உடையவர் என்பதை எடுத்துரைத்தது.

மக்கள் தொலைக்காட்சியில் இராச. கலைவாணி அவர்கள் நாளும் தமிழிசை முழங்கி விளக்கம் சொன்ன பாங்கால் உலக அளவில் புகழ்பெற்ற பாடகராக அனைவருக்கும் அறிமுகம் ஆனவர். அதுபோல் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் செம்மொழி இளம் அறிஞர் விருது பெற்ற பெருமைக்குரியவர். இத்துணைச் சிறப்புகளைப் பெற்ற இவரின் நூல்தான் தொல்காப்பியத்தில் இசை என்பது.


தொல்காப்பியத்தில் இசை என்னும் இந்த நூல் நூல் முகவுரை, இசை, பாவகை, பண்கள், இசைக்கருவிகள், இசை வடிவங்கள், இசை அழகணிகள், இசைக்கலைஞர்கள், கூத்துக்கள், நிறைவுரை என்றவாறு இயல் பிரிக்கப்பட்டுப் பொருத்தமான  ஆராய்ச்சி முடிவுகளைக் கொண்டுள்ளது.

இந்த நூல் தொல்காப்பியத்தை மட்டும் சுற்றிச் சுழலாமல் சங்கப் பனுவல்கள், நிகண்டுகள், சமய நூல்கள், சிற்றிலக்கியங்கள், இசை உருப்படிகள் எனப் பலதுறைச் செய்திகளால் புனையப்பட்டுள்ளது. பன்னூல் பயிற்சியும் இயைத்துக்காட்டும் பேராற்றலும் கொண்ட இராச. கலைவாணி அவர்களின் கடும் உழைப்பு பக்கங்கள்தோறும் மின்னி மிளிர்கின்றன.

 பேராசிரியர் இராச. கலைவாணி அவர்கள் இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் உள்ளிட்ட தமிழிசை அறிஞர்களின் ஆய்வு முடிவுகளை உள்வாங்கிக்கொண்டே இந்த நூலை எழுதியுள்ளார். பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் உள்ளிட்ட இசைமேதைகளின் உள்ளம் உணர்ந்ததால் தமிழிசைக்கும் தெலுங்கிசைக்குமான வேறுபாடுகளை நுட்பமுடன் துணிந்து பதிவு செய்துள்ளார்.

தொல்காப்பியத்தில் குறிக்கப்படும் இசை என்னும் சொல்லை எடுத்துக்கொண்டு விரிவான விளக்கம் தருகின்றார். இசை என்பதற்கு வசப்படுத்துதல், இயக்குதல், பொருந்துதல், உடன்படுதல், நரம்புகளைக் குறித்தல், ஏந்திசை, தூங்கிசை, ஒழுகிசை, துள்ளலிசை என்னும் ஓசை வகைகளைக் குறித்தல், புகழ்   என்னும் பல்வேறு பொருள்களைத் தருகின்ற  ஒரு சொல்லாக இருப்பதைக் காணமுடிகின்றது என்று முடிவு தருகின்றார் (பக்கம் 2).

 இசை என்னும் சொல் முதன்முதலில் இசை(Music) என்னும் பொருண்மையில் தொல்காப்பியம் உரியியலில்தான் இடம்பெற்றுள்ளது என்று உரைத்துவிட்டு, இசைப்பு இசையாகும் என்னும்(உரி.12) என்னும் நூற்பாவை மேற்கோள் காட்டுகின்றார். மேலும் பேராசிரியர் சி. இலக்குவனார் ஆங்கில மொழிபெயர்ப்பில் “Isaippu” means tune என்று கூறுவதையும், முனைவர் ஆல்பர்ட்டு, Isaippu means music என்று கூறுவதையும் எடுத்துக்காட்டித் தம் கருத்துக்கு அரண் சேர்க்கின்றார் (பக்கம் 11). அதுபோல் கம்பலை, சும்மை, கலி, அழுங்கல் என்ற இசை ஒலிக்குறிப்புச் சொற்களையும் சிறப்பாக விளக்கியுள்ளார்.

குடிலம் என்ற சொல்லுக்கு இந்த நூலில் பொருத்தமாக விளக்கம் தரப்பட்டுள்ளது. ஒரு நரம்பின் அல்லது சுரத்தின் ஒலியை அந்த  நரம்பில் மீட்டாமல் அதற்கு முன்னோ பின்னோ உள்ள நரம்பில் மீட்டி ஒலித்தல் குடிலம் எனப்படும் என்கின்றார் (பக்கம் 35). இந்த நூலில் இசை விரிவாக்கம் (சங்கதி) குறித்தும் விரிவாக ஆராய்ந்துள்ளார். சிலப்பதிகாரத்தில் “சீருடன் உருட்டல்” என்பதுதான் இசைவிரிவாக்கம் என்று அழகிய விளக்கம் தந்துள்ளார். இசைவிரிவாக்கம் குறித்து விளக்குமிடத்துக் கலைவாணி அவர்களின் தமிழ்ப்பற்றும் மான உணர்வும் முன்னிற்கின்றன.

பா வகைகள் என்னும் இரண்டாம் இயல் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படும் நான்கு வகை பாக்களையும் எடுத்துரைத்து, அதற்குரிய இன்றைய இராகங்களைக் குறிப்பிடுகின்றது. செப்பலோசை சங்கராபரணத்திலும், அகவலோசை ஆரபி இராகத்திலும் துள்ளலோசை கேதார கௌளை இராகத்திலும் தூங்கலோசை என்பது நாத நாமக் கிரியை இராகத்திலும் பாடப்பெறுதல் வேண்டும் என்று பல்வேறு சான்றுகாட்டி நிறுவுகின்றார்.

பண்கள் என்ற தலைப்பில் தொல்காப்பியர் குறிப்பிடும் பண்களைக் குறிப்பிடும்பொழுது மிகக் கவனமாக ஒருபதிவினைச் செய்துள்ளார். பெரும்பண்களில் முதல் பண் முல்லைப்பண் என்பதை அறிஞர்கள் குடந்தை ப.சுந்தரேசனார், வீ.ப.கா.சுந்தரம் உள்ளிட்ட அறிஞர்கள் உறுதிசெய்வர். அக்கருத்தை மிகச் சிறப்பாகப் பதிவுசெய்துள்ள திறம் பாராட்டினுக்கு உரியது. முல்லைப்பண், மருதப்பண், குறிஞ்சிப்பண், நெய்தற்பண் ஆகியவற்றுக்கு இன்றைக்கு வழங்கும் இராகங்களின் பெயர்களைப் பண்ணாய்வு மாநாட்டுச் செய்திகளின் அடிப்படையில் நமக்குத் தருகின்றார்.

இசைக்கருவிகள் என்ற தலைப்பில் யாழ், பறை, பிற தோல் கருவிகளைச் சிறப்பாக அறிமுகம் செய்துள்ளார். சங்க காலத்தில் வழக்கில் இருந்த 66 பறைகளின் பெயர்களை நமக்கு அடையாளம் கண்டு தந்துள்ளார்.

இசைவடிவங்கள் என்ற தலைப்பில் இயன்மொழி, உலா, ஊர், வெண்பா, கேசாதி பாதம், பாதாதி கேசம், தசாங்கம், கண்படைநிலை, துயிலெடைநிலை, தூது, தேவபாணி என்னும் இசைவடிங்கள் விளக்கப்பட்டுள்ளன.

இசை அழகணிகள் என்னும் ஆறாம் இயல் தொல்காப்பியத்தில் இடம்பெறும் முடுகு, வண்ணம் எனப்படும் அரிய இசைப்பகுதிகளை விளக்குகின்றது. சிலம்பு, தேவாரம், நாலாயிரம், பிற உருப்படிகளில் உள்ள முடுகு வடிவங்கள் விளக்கப்பட்டுள்ளன. தொல்காப்பியர் குறிப்பிடும் 20 வண்ணங்களை இப்பகுதியில் சிறப்பாக விளக்கியுள்ளார்.

இசைக் கலைஞர்கள் என்னும் ஏழாம் இயல் தொல்காப்பியத்தில் இடம்பெறும் கலைஞர்கள், சங்க நூல்களில் இடம்பெறும் கலைஞர்கள் குறித்த செய்திகளை நிரல்படத் தாங்கியுள்ளது. பாணர், கூத்தர், பாடினி, அகவுநர், அகவர், இயவர், கண்ணுளர், கலப்பையர், கிணைவன், கோடியர், துடியன், பறையன், பாடுநர் குறித்த பல்வேறு விவரங்கள் ஓரிடத்தில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

கூத்துக்கள் என்னும் இறுதி இயல் பண்டைக் காலத்தில்  வழக்கில் இருந்த பல்வேறு கூத்துகளைப் பற்றியும் அதனை நிகழ்த்தியோர் பற்றியும் சிறப்பாக விளக்கியுள்ளது. தொல்காப்பியம் குறிப்பிடும் கூத்துகளை நான்கு நிலையில் நூலாசிரியர் தொகுத்துக் காட்டுகின்றார். அவையாவன:

1. போர் நிகழ்வு கூத்துக்கள்
2. அக வாழ்வியல்கூத்துக்கள்
3. தெய்வ வழிபாட்டுக் கூத்துக்கள்
4. பொதுநிலைக் கூத்துக்கள்

 ஒவ்வொரு நிலத்திலும் நடந்த கூத்துகள் குறிப்பாக குன்றக் குரவை, ஆய்ச்சியர் குரவை உள்ளிட்ட சிலப்பதிகாரப் பகுதியில் நடந்த கூத்துகளை நினைவூட்டிப் பண்டைத் தமிழர்களின் கூத்துத் திறமையை ஆசிரியர் நிலைநாட்டியுள்ளார்

நிறைவில் நூலில் விளக்கப்பட்ட செய்திகள் தொகுத்து வழங்கப்பட்டுக் கற்பார்க்குப் பெருவிருந்தாக உள்ளது.

பண்டைக் காலத்தில் பண்பாட்டிலும் கலையிலும் மேன்மையுற்றிருந்த தமிழினம் இன்றைய திரைப்படத்தாலும், ஊடகங்களாலும், போலி அரசியல் கயவர்களாலும் தம் பெருமை நினையாமல் உழலும் சூழலில் இந்த அரிய நூலினைத் தமிழ்ப் பெருமை மீட்கும் நூலாக உருவாக்கியுள்ள இராச. கலைவாணி அவர்கள் தமிழர்களின் பாராட்டினுக்கு உரியவர்.

பேராசிரியர் இராச. கலைவாணி அவர்களின் வாழ்க்கையையும் என் பக்கத்தில் பதிந்து வைக்கின்றேன்.

பேராசிரியர் இராச. கலைவாணி அவர்கள் மயிலாடுதுறையையில் பிறந்தவர். தந்தையார் பி.டி.இராஜன் சிறந்த ஓவியர். பல்கலை வித்தகர். தாய் மனோன்மணி அம்மையார் சிறந்த பாடகி. இருவருக்கும் ஐந்தாவது மகளாகப் பிறந்தவர். இளமைக்காலம் முதற்கொண்டே முறையாகத் தன் தந்தையாரிடம் செவ்விசையைக் (கர்னாடக இசை) கற்றவர்.

தொடக்கக் கல்வியை மயிலாடுதுறை எ.இ.எல்.சி நடுநிலைப் பள்ளியிலும், ஆறாம் வகுப்பை மணவாழநல்லூரிலும் தொடர்ந்து பள்ளி இறுதிவரை மயிலாடுதுறை புனித சின்னப்பர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றவர். இளங்கலையில் இசையை விருப்பப் பாடமாக ஏற்றுத் திருவையாறு  அரசர் கல்லுரியில் இளங்கலை இசை பயின்றார். திருச்சிராப்பள்ளி சீதாலட்சுமி இராமசாமி கல்லுரியில் முதுகலை இசை பயின்றவர்.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் (காவடிச்சிந்துப் பாடல்களின் இசைநயம்),  முனைவர் பட்டப் படிப்பு (பாரதியார் பாடல்களின் இசைநயம்) ஆகியவற்றை நிறைவு செய்துள்ளார். அரசு நடத்தும் மாநில அளவிலான கல்வித் தேர்விலும் (SLET) தேர்ச்சி பெற்றுள்ளார்.

               முனைவர் இரா.கலைவாணி கோயமுத்தூர் அவினாசிலிங்கம் பல்கலைகழக இசைத்துறையில் 1997 முதல் 2013 வரை இணைப்பேராசிரியராக இருந்து தற்போது விருப்ப ஓய்வைப் பெற்றுள்ளார்.

    பல்வேறு இசை ஆய்வரங்கங்கள், மாநாடுகள், பன்னாட்டுக் கருத்தரங்குகள் ஆகியவற்றில் கலந்து கொண்டு இருநூறுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

  பாரதி ஓர் இசைக்களஞ்சியம், சங்க இலக்கியத்தில் இசை, தொல்காப்பியத்தில் இசை தொன்மையும் தொடர்ச்சியும், நாட்டுப்புற இசை வடிவங்களில் நாட்டு நலப்பணித்திட்ட விழிப்புணர்வுப் பாடல்கள் ஆகிய நூல் களை வெளியிட்டுள்ளார்.

               களம், 18, 19, 20 ஆம் நூற்றாண்டு இசைக்கலைஞர்களின் தொண்டு (3 தொகுதி), ஊற்று,  தமிழ்நுங்கு ஆகிய நூல்களின் பதிப்பாசிரியர்.

               சங்க இலக்கியத்தில் இசை என்னும் இவருடைய நூலுக்காக மாநில வங்கியின் 2005 -ஆம் ஆண்டின் சிறந்த நூலுக்கான முதற்பரிசை (10,000) பெற்றுள்ளார்.

               2006-2007 ஆம் ஆண்டின் செம்மொழி இளம் அறிஞர் விருதினை மேதகு குடியரசுத் தலைவர் திருமதி பிரதீபா பாட்டில் அவர்களிடமிருந்துப் பெற்றுள்ளார் (1 இலட்சம் பணப்பரிசு).

               சென்னை சோமசுந்தர ஆகமத் தமிழ்ப் பண்பாட்டு மன்றம் இவருக்குத் தமிழிசை மாமணி என்னும் பட்டத்தினை (2009) வழங்கிச் சிறப்பித்துள்ளது.

               2010 ஆம் ஆண்டு தமிழ்த்திணை என்னும் இணையதளம் தனது ஐந்தாண்டு நிறைவினைக் கொண்டாடும்போது இவருக்குத் தமிழ்த்திணை விருது (5.6.2010-ஏற்காடு) வழங்கிச் சிறப்பித்துள்ளது.

               மக்கள் தொலைக்காட்சியில் தமிழ்க்கூடல் என்னும் நிகழ்ச்சியில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து தேவாரப் பண்களைப் பற்றி இசையுரை ஆற்றியுள்ளார். மயிலாடுதுறை என்.தொலைக்காட்சி, எ.சி.யு.தொலைக்காட்சி ஆகியவற்றில் தேவாரப் பண்கள், ஆண்டாளின் பாசுரங்களை நாட்டிய அடவுகளுடன் சொற்பொழிவாக ஆற்றியுள்ளார்.

சங்க இலக்கியம், தேவாரம், திருவாசகம், திவ்விய பிரபந்தம், சித்தர் பாடல்கள், காவடிச்சிந்து, பாரதியார் பாடல்கள் ஆகியவற்றைப் பண்ணோடு பாடும் வல்லமை பெற்றவர். இசைத்துறையில் நம்பிக்கை தரும் ஆய்வுகளை நிகழ்த்தும் பேராசிரியர் இராச. கலைவாணி அவர்களின் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துகள்.




*****குறிப்பு:  

இக்கட்டுரைச் செய்திகளை எடுத்து ஆளும் நண்பர்கள்,  கலைக்களஞ்சியம் செய்வோர், வேறு இணையதளங்களுக்கு உருவம் மாற்றும் நண்பர்கள் எடுத்த இடம் சுட்டுங்கள்