நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 22 ஜூலை, 2015

அரவணைப்பு அறக்கட்டளையின் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா!


 பாகூர் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாண்புமிகு பேரவைத் தலைவர் வ. சபாபதி அவர்கள் நிதியுதவி வழங்குதல்

அரவணைப்பு அறக்கட்டளையின் சார்பில் படிக்கும் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா  புதுச்சேரி சட்டப் பேரவைத் தலைவர் வ. சபாபதி அவர்களின் தலைமையில் 19.07.2015 நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இரண்டரை இலட்சம் ரூபாய் நிதியுதவி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. தந்தையை இழந்த மாணவர்களின் கல்விநலனுக்கு அரவணைப்பு அறக்கட்டளை ஒவ்வொரு ஆண்டும் நிதி உதவி வழங்கி வருகின்றது. அந்த வகையில் இரண்டாம் ஆண்டு நிதியுதவி வழங்கும் விழா புதுச்சேரி சற்குரு ஓட்டலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் பேராசிரியர் மு. இளங்கோவன் வரவேற்றார். பேராசிரியர் இரா.. குழந்தைவேலனார் நோக்கவுரையாற்றினார். அரங்க. மாரிமுத்து அவர்கள் முன்னிலையுரையாற்றினர்.


 பொறியாளர் கு.இளங்கோவன் எழுதிய A Layman's Peak-Reach என்ற நூலினைப் பேரவைத்தலைவர் வ. சபாபதி அவர்கள் வெளியிட, பேராசிரியர் ம. இலெ. தங்கப்பா, பேராசிரியர் ப.அருளி ஆகியோர் முதலிரு படிகளைப் பெற்றுக்கொண்டனர். அருகில் எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், பேராசிரியர் இராச. குழந்தைவேலனார், அரங்க. மாரிமுத்து, செ. திருவாசகம் உள்ளிட்டோர்.

அரவணைப்பு அறக்கட்டளையின் நிறுவுநர் குவைத்து கு. இளங்கோவன் அறிமுகவுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் கலந்துகொண்டு மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை உரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பாகூர் அரசுப்பள்ளி, காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி, புதுவைப் பல்கலைக்கழகம், போப் ஜான்பால் கல்வியியல் கல்லூரி சார்ந்த மாணவர்கள் நிதியுதவி பெற்றனர். மேலும் இந்தியக் குடியரசுத்தலைவரின் செம்மொழி இளம் அறிஞர் விருதுபெற்ற முனைவர் ஏ. எழில்வசந்தன் அவர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் பாராட்டு செய்யப்பட்டது. செ. திருவாசகம் நன்றியுரை வழங்கினார்.


செவ்வாய், 21 ஜூலை, 2015

மரபுக்கொரு தமிழியக்கன்


                                                             
                                                       

                          புதுச்சேரியில் புகழ்பெற்ற தனித்தமிழ்ப் பாவலர் தமிழியக்கன் ஆவார். கவிஞரேறு வாணிதாசனாரின் அன்புக்குரிய மாணவர். இவர்தம் பாடல்கள் தமிழ்மரபு போற்றுவன. இவர் பற்றி முன்பும் எழுதியுள்ளேன். தம் ஆசான் திறம் நினைந்து பன்மணிமாலை எனும் பாத்தொகுப்பை வழங்கியுள்ளார். நாளை வெளியீடு காண உள்ள இந் நூலுக்கு யான் வரைந்த அணிந்துரை இஃது.                                                                                              

அறத்திற்கொரு புலவன் திருவள்ளுவன்; சொல்லுக்கு ஒரு புலவன் கம்பன்; தனித்தமிழுக்கு ஓர்அரிமா பாவாணர் எனத் தனித்திறம் பெற்றோர் வரிசை நீளும்;  அவ்வரிசையில்  மரபுக்கொரு  புலவர் தமிழியக்கன் என்னுமாறு இலக்கணமரபு, இலக்கிய மரபெனத் தலைசிறந்து நிற்பவர் - எந்தை, என் ஆசானெனப்  போற்றத் தக்கவர், தனித்தமிழ்ப் பாவலர் தமிழியக்கன். அகத்திலும்  புறத்திலும் மரபுவழாது ஒண்டமிழுக்கு உரம்சேர்க்கின்றவர் இவர்; இதனை, இலக்கியமாகவும், இலக்கணமாகவும் தந்துள்ள நூல்களே வெளிப்படுத்தி நிற்கின்றன. இவ்வுயர்வுக்குக் காரணமாய் அவரே இயம்புவனவாகவும், நாம் உணர்வனவாகவும், கீழ்வருவன புலப்படுத்தும்:

# தக்க பருவத்தில் கவிஞரேறு வாணிதாசனாரை ஆசானாகப் பெற்றமை;

# தனித்தமிழ் இதழ்களான தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் போன்றவற்றின் தொடர்புகள், இவற்றின் சிறப்பாசிரியரான, பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் நேரடித் தொடர்புகள்;

# தனித்தமிழ் அரிமா தேவநேயப்பாவாணருடன் இலக்கண இலக்கியம் சார்ந்த நேரடித் தொடர்புகள்     இவற்றால், ‘தனித்தமிழ்ப் பாவலர்' தமிழியக்கன் எனப் போற்றப்பட்டவர்.                               

தம் ஆசானாம்- கவிஞரேறு வாணிதாசனாரின், நூற்றாண்டு விழா நினைவாக இன்றவர் ஆக்கி வெளியிட்டுள்ள மரபிலக்கியமான கவிஞரேறு வாணிதாசனார் பன்மணிமாலை' என்னுமிந்நூல் பன்மணிகளாகவே  மின்னுகின்றன. இதனைப் புலவரேறு வ.கலியபெருமாள் அவர்கள் திறம்பட ஆய்வு செய்துள்ளார்; ஆதலின் யான் நூலாய்வில் புகாமல் சிலவற்றைக் கூறிக் கற்க வழிவிடுகிறேன்.

மரபிலக்கியத்தில் இரட்டை மணிமாலை, நான்மணி மாலை என்பனவே காணப்படினும், அவற்றின் வழி, பன்மணிமாலை எனும் புதிய மரபாக்கம் தான் கவிஞரோறு வாணிதாசனார் பன்மணிமாலை'. தம் ஆக்கங்களில் ஏதாவதொரு புதுமையைக் காட்டித் தம் ஆசானைப் பின்பற்றி நிற்கிறார். இயற்கையப்          போற்றுதல், புரட்சிக் கருத்துகளைப் போற்றுதல், பகுத்தறிவுக் கருத்துகளைப் போற்றுதல் போன்ற பிறவற்றிலும் புதிய, மரபுநெறி வழா முறைகளைப் பின்பற்றுவதில் தமிழியக்கன் தனித்தே விளங்குகிறார்.

இந்நூலாசிரியர் வாணிதாசனாரின் மாணவராதலின் நூல்நெடுக ஆசானின், சிறப்புகளாக அன்பு, அமைந்த பண்பு, விருந்தோம்பல், விழுதுகளை உருவாக்கும் வேட்கை, செயல், கல்விச்சிறப்பு, பாப்புனை  திறம், ஆக்கிய நூல்கள், அடைந்த சிறப்புகள், தமக்கும் ஆசானுக்கும்  உள்ள தொடர்புகள்  எனத் தம் ஆசான் சிறப்புகளையே விரிவாகக் கூறிச் செல்கிறார்.

கவிஞரேறு வாணிதாசனாரைத், தனித்தமிழ்ப்பாவலர் தமிழியக்கனார், தம் படைப்புகளின் வழி, மொழி, இனம், நாடு, பகுத்தறிவுக்கொள்கை, பொதுவுடைமைக் கொள்கை ஆகியவற்றுடன் இலக்கிய இலக்கணப் போக்கில், புதுமை, தொல்புகழ் மரபு மாறாத புலமை, இவற்றோடு தொடர்ந்து பீடுநடை போடுகிறார் என்பதை இந்தப் படைப்பாலும் அறியலாம்.

வாணிதாசனாரின் வளமான மரபுக்குத் தரமான தமிழியக்கன் எடுத்துக்காட்டாகத் திகழ்வது கண்டு, கற்போர் நெஞ்சம் களிப்புறும்; பாராட்டும்! 

வாழ்க வளர்க அவர்தம் தனிதமிழ்த்தொண்டு! 

வியாழன், 16 ஜூலை, 2015

அரவணைப்பு அறக்கட்டளையின் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா




கொங்குமண்டலத்தில் பிறந்து, தம் கடும் உழைப்பாலும் அறிவாற்றலாலும் முன்னேறி, குவைத்து நாட்டில் பணிபுரிபவர் பொறியாளர் கு.இளங்கோவன் ஆவார். இவர் தம் உழைப்பில் ஈட்டிய பொருளைப் பெற்றோரை இழந்த மாணவர்களின் கல்விநலனுக்கு உதவும் வகையில் அரவணைப்பு அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவி ,ஆண்டுதோறும் நிதியுதவி வழங்கிவருகின்றார். இதுவரை எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவக் கண்மணிகள் இந்த நிதியுதவியால் பயன்பெற்றுள்ளனர்.

அந்த வகையில் புதுவையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவும் நோக்கில் அரவணைப்பு அறக்கட்டளை இரண்டாவது ஆண்டாக நிதியுதவி வழங்குகின்றது. அதற்கான விழா, நிகழ்ச்சி நிரலில் கண்டவண்ணம் நடைபெற உள்ளது. மேலும் அண்மையில் இந்தியக் குடியரசுத்தலைவரின் செம்மொழி இளம் அறிஞர் விருது பெற்ற முனைவர் . எழில்வசந்தன் இந்த நிகழ்ச்சியில் பாராட்டப்படவுள்ளார். அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.
நாள்: 19.07.2015, (ஞாயிறு) நேரம்: மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை
இடம்: சற்குரு உணவகம்,என்.டி.மகால் அருகில், புதுச்சேரி

 நிகழ்ச்சி நிரல்
தமிழ்த்தாய் வாழ்த்து
இறை வாழ்த்துப் பாடல்கள்
தலைமை: 
மாண்புமிகு வ. சபாபதி (எ) கோதண்டராமன் அவர்கள்
பேரவைத் தலைவர், புதுச்சேரி சட்டப்பேரவை

மாணவர்களுக்கு நிதியுதவி வழங்குதல்
 மாண்புமிகு தி. தியாகராசன் அவர்கள்
மின்துறை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், புதுச்சேரி அரசு

சிறப்புரை: 
எழுத்துச்செல்வர் லேனா தமிழ்வாணன் அவர்கள், சென்னை

முன்னிலை
பேராசிரியர் இரா.ச. குழந்தைவேலனார் அவர்கள்
 திரு. அரங்க. மாரிமுத்து அவர்கள்

அறிமுகவுரை: 
பொறியாளர் கு.இளங்கோவன் அவர்கள், அரவணைப்பு அறநிலை

வரவேற்புரை: 
திரு. சுந்தர முருகன் அவர்கள், சாகித்திய அகாதெமி, உறுப்பினர்

நோக்கவுரை: 
முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்

ஏற்புரை:. 
முனைவர் ஏ. எழில்வசந்தன் அவர்கள்

நன்றியுரை: 
திரு. செ. திருவாசகம் அவர்கள்



செவ்வாய், 14 ஜூலை, 2015

தனித்தமிழ் இயக்கம் நடத்தும் தனித்தமிழ்ச் சிறுகதைப்போட்டி பரிசு 3000.00 உருவா!


  புதுச்சேரியில் தனித்தமிழ் இயக்கம் என்னும் இலக்கிய அமைப்பு பல்வேறு தமிழ்ப்பணிகளைச் செய்துவருகின்றது. அவ்வகையில் தனித்தமிழ்ச் சிறுகதைப் போட்டியை இந்த அமைப்பு அறிவித்துள்ளது. படைப்பார்வம் உடையவர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டு பரிசில்களை வெல்லலாம்.

போட்டி நெறிமுறைகள்:

 1. 4 தாளில் 5 பக்கம்கொண்ட, குமுகாயக் கதைகள், பிறசொற்கள்
பிறமொழிப் பெயர்கள் கலவாத நடையில்எழுதப்படல்வேண்டும்.

2. கதையின் இரண்டு படிகளை அனுப்பவேண்டும். ஒருபடியில்மட்டும் பெயர், முகவரிகளைத் தனித்தாளில் இணைத்து அனுப்புக. கதையின்ந்தப் பக்கத்திலும் எழுதியவர்பெயர் இருக்கக்கூடாது.

3. மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படா

4.தேர்தெடுக்கப்பட்ட கதைகள் வெல்லும்தூயதமிழ்மாதஇதழில்வெளியிடப்படும்.

5. நடுவர் தீர்ப்பே இறுதியானது .

6. சிறுகதைப் படைப்பாளர் உறுதிமொழி இணைக்க வேண்டும்

  • பொறிஞர் இரா.தேவதாசு இவ்வாண்டு  பரிசுகள் வழங்குகிறார்.

இரண்டு முதற்பரிசுகள் 750.00=1500
இரண்டு இரண்டாம் பரிசுகள் 500.00=1000
இரண்டு மூன்றாம்பரிசுகள் 250.00= 500

  • கதைகள் வந்துசேர வேண்டிய கடைசி நாள்: 20.8.2015


முகவரி : 

முனைவர் க. தமிழமல்லன், தலைவர், தனித்தமிழ் இயக்கம்,
66, மாரியம்மன்கோயில்தெரு, தட்டாஞ்சாவடி, புதுச்சேரி-605009
        
தொ:0413-2247072,  செல்பேசி 9791629979

திங்கள், 13 ஜூலை, 2015

பேராசிரியர் இ. பாலசுந்தரம்

பேராசிரியர் . பாலசுந்தரம்
  
   ஈழத்து மண்ணில் தமிழ் கற்றவர்களும், தமிழ்ப்பணியாற்றியவர்களும் உலக அளவில் தங்கள் பணிகளை விரிவாகச் செய்துள்ளனர். இத்தகு அறிஞர் பெருமக்கள் இன்றும் தமிழ்ப்பணியில் தொய்வில்லாமல் உழைத்துவருகின்றனர். அவர்களுள் இப்பொழுது கனடாவில் வாழும் பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். தமிழ், தமிழர்களுக்கு ஆக்கம் நல்கும் நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்பதில் ஆர்வம்காட்டி வரும் இவர்தம் வாழ்க்கைக் குறிப்பையும், பணிகளையும் என் பக்கத்தில் பதிந்துவைக்கின்றேன்.

பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி அவர்கள் இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டம் காரைதீவு என்னும் ஊரில் 05.09.1946 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் இளையதம்பி,  செல்லம்மா ஆவர். காரையூரான், கலைப்பிரியன், இலக்கியப்பிரியன் என்னும் பெயர்களில் படைப்புகளை வழங்கியவர்.

இளமைக்கல்வியைக் காரைதீவு இராமகிருஷ்ண மிசன் பாடசாலையிலும், உயர்பாடசாலைக் கல்வியை மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்திலும் பயின்றவர். பின்னர் பி.ஏ. சிறப்புக் கலைமானி படிப்பைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் (1969), முனைவர் பட்டத்தைக் கொழும்புப் பல்கலைக்கழகத்திலும்(1977), முனைவர் பட்டப் பின்படிப்பினை இங்கிலாந்து, செவ்பீல்ட் பல்கலைக்கழகத்திலும்(1992-94), உயர்நிலை கவுன்சிலிங் டிப்ளோமா படிப்பைக், கனடா - ரொறன்ரோ,      ஜோர்ஜ் பிறவுண் கல்லூரியிலும் பயின்று பெற்றவர்(2002)

பேராதனைப் பல்கலைக் கழகத்திலும் (1969-1970) கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் (1971-1983) தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். அதன்பிறகு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை விரிவுரையாளராகப் (1984-1990) பணியாற்றி, 1991 முதல் 1994. வரை பேராசிரியராகத் தமிழ்ப் பணியாற்றிய பெருமைக்குரியவர். புலம்பெயர் வாழ்க்கையில் கனடாவில் குடியமர்வுச் சேவை அலுவலர்(1997-1998) என்னும் பணியில் இருந்தவர். 1999 முதல் 2004 வரை தமிழ்நாடு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வெளிநிலை பட்டப்படிப்பு - ரொறன்ரோவில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.  2006 முதல்  அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கனடா வளாகத்தின்  தமிழ்த்துறைத் தலைவர்     பணியில் இருந்தவர். 1996 முதல் ரொறன்ரோ மாவட்ட பாடசாலைச் சபை அனைத்துலக மொழிக் கல்வி - தமிழ் ஆசிரியர் என்று பணிபுரிந்தவர். இவர் இலக்கணம், இலக்கியம், நாடகம், நாட்டுப்புற இலக்கியம் ஊர்ப்பெயராய்வு உள்ளிட்ட துறைகளில் ஈடுபாடு உடையவர்.


புலமைப் பரிசுகள்:
                                                                                                                       
(1) பிரித்தானியா பொதுநலவாய நாடுகளுக்கான உயர்நிலைப் புலமைப் பரிசு, செவ்பீல்ட்         பல்கலைக்கழகம், இங்கிலாந்து. 1992-1994
(2) அமெரிக்கப் பல்கலைக் கழகங்களுக்கான விருந்தினர் கல்விப் புலமைப் பரிசு,  ஐக்கிய அமெரிக்க கல்வி, கலாசாரப் பிரிவு, ஐக்கிய அமெரிக்கா. 1990
(3) அமெரிக்க கல்வித் திணைக்களப் புலமைப்பரிசு, அமெரிக்க கல்வி நிறுவனம் கைதரபாத். இந்தியா, 1988     
(4) ருசிய நாட்டு அரசாங்கப் புலமைப் பரிசு, புஷ்கின் ரூசியமொழி, பண்பாட்டு கல்வி நிறுவனம், மாஸ்கோ,1984                                
(5) படி பேங் புலமைப் பரிசு - பேராதனைப் பல்கலைக்கழகம், 1966-1969
(6) நாட்டாரிசை இயல்பும் பயன்பாடும் - என்ற நூல் சாகித்திய மண்டலப்பரிசு கலாசார அமைச்சு, இலங்கை.1991

வெளியிட்ட நூல்கள்:

1. பண்டைத் தமிழர் பண்பாடு: காலமும் கருத்தும் - மீளாய்வு. (அச்சில்)

2. பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் பெற்றோரின் பங்களிப்பு,    விவேகா அச்சகம். ரொறன்ரோ, 2009

3. Exploration in Sri Lankan Tamil Folklore, Manimekalai Pirasuram,  Madras, 2008

4. விபுலாநந்தம் - தமிழின மேம்பாடு நோக்கிய சிந்தனைகள், விவேகா அச்சகம்,          கனடா, 2004
5. மட்டக்களப்பு மாவட்டத் திருமண நடைமுறைகள், விவேகா அச்சகம், ரொறன்ரோ.2003

6. நாட்டாரிசை - இயல்பும் பயன்பாடும். யாழ்ப்பாணம் நாட்டார் வழக்கியல் கழக வெளியீடு, மேக்கூரி அச்சகம், 1991
7. ஒப்பனைக் கலை. கத்தோலிக்க அச்சகம் -யாழ்ப்பாணம். 1990

8. தமிழ் இலக்கியத்தில் சித்த மருத்துவம், கத்தோலிக்க அச்சகம், யாழ்ப்பாணம், 1989.           இரண்டாம் பதிப்பு மணிமேகலைப் பிரசுரம் 2003
9.  இடப்பெயராய்வு வடமராட்சி தென்மராட்சி, மேக்கூரி அச்சகம், யாழ்ப்பாணம், 1989
10. இடப் பெயராய்வு காங்கேயன் கல்வி வட்டாரம், யாழ்ப்பாணம், 1988

11. காத்தவராயன் நாடகம் - பதிப்பு, யாழ்ப்பாண மாவட்ட கலாசார சபை வெளியீடு,          கத்தோலிக்க அச்சகம், யாழ்ப்பாணம், 1986
12. நாட்டார் இலக்கியம் ஆய்வும் மதிப்பீடும் - மட்டக்களப்பு மாவட்டம், சென்னை,  தமிழ்; பதிப்பகம், 1979, இரண்டாம் பதிப்பு 2003.






(மேலட்டை உதவி: நூலகம் இணையதளம்)

சாதனைகள்:

1. கல்வியிலும் ஆராய்ச்சியிலும் அடைந்த சாதனைகளால் யாழ்ப்பாணப்    பல்கலைக்கழகம் திறமையடிப்படையில் இணைப்பேராசிரியர் பதவி வழங்கியமை.
2. பொதுநலவாய நாடுகளின் சிறப்புப் புலமைப் பரிசில் பெற்றமை.
3. புலமைப்பரிசில்கள் பெற்று இந்தியா, ரூசியா, ஐக்கிய அமெரிக்கா,
இங்கிலாந்து ஆகிய நாடுகளில் மேலாய்வு மேற்கொண்டமை.
4. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களைக்கொண்டு காத்வராயன், சத்தியவான் சாவித்திரி ஆகிய இசைநாடகங்களைத் தயாரித்து யாழ்ப்பாணம், திரிகோணமலை, மன்னார், கொழும்பு ஆகிய இடங்களில் 49 தடவைகள் மேடை ஏற்றி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நாடகத்துறை வரலாற்றில் சாதனை படைத்தமை.
5. பல ஆண்டுகள் ஆய்வு செய்து யாழ்ப்பாண மாவட்டத்து இடப்பெயர்கள் பற்றிய் நூலை ஈழத்தமிழர் வரலாற்றுக் களஞ்சியமாக வழங்கியமை.
6. கனடாவில் பல்வேறு கலை மன்றங்களின் சார்பாகப் பெரும் கலைவிழாக்கள்- ரொறன்ரோவில் திருவையாறு முதலான கலை நிகழ்ச்சிகள் நடத்தியமை


கனடாவில் கிடைத்த சிறப்பு விருதுகள்:

(1) 2010 - கனடிய குடிவரவு அமைச்சின் தொண்டர் சேவைக்கான விருது.

(2). 2009 - “Outstanding Achievement Award”- Awarded at the Settlement &                      Education Partnership Toronto – Celebration of 10 years of  success,                      by the  Citizenship and Immigration Canada, Toronto District School Board     and Thorncliffe Neighborhood Office

(3) 2008 - “செந்தமிழ்க் காவலர்” -விருது துர்க்கேஸ்வரம்., ரொறன்ரோ, ஸ்ரீதுர்க்கா தேவி அம்பாள் தேவஸ்தானம், கனடா

(4) 2007 -“வித்யா பூஷன்”, விருது - கம்பன் விழாக்குழு, மேருபுரம் பத்திரகாளி அம்மன் தேவஸ்;தானம்ரொறன்ரோ.

(5) 2007 - “சிறந்த கல்விச் சேவைக்கான விருது” – The Arajen Beauty Centre,    Annual Tamil Cultural Beauty Contest Event, Toronto

(6). 2006 -  “Tamils’ Information Award” – In Recognition of his outstanding and                            exemplary contribution to Tamil Studies and Research for over forty years, by Tamils Information,  Toronto.

(7) 2006 -  “முத்தமிழ் வித்தகர்தமிழர் செந்தாமரை வெளியீட்டகம், ரொறன்ரொ.

(8) 2006 -  “சிவத் தமிழ் வித்தகர்” – ரொறன்ரொ வரசித்தி விநாயகர் தேவஸ்தானம்,

(9) 2006 -  “வண்டமிழ் வள்ளல்” – ரொறன்ரொ தமிழர் பண்பாட்டுக் கழகம்.

(10) 2000 - “திருத் தொண்டர்”- விருது வேதாந்த ஞான மன்றம் - கனடா.

 கழகங்களில் வகித்த பதவிகள்:

1. தமிழ்ப் பண்பாட்டு மேம்பாட்டு ஒன்றியம் - கனடா, தலைவர் 2011---
2. காரைதீவு மக்கள் ஒன்றியம் - கனடா, தலைவர் 2009….
3. கதிர்ஒளி வாரப் பத்திரிகை - ஆசிரியர் குழு உறுப்பினர் 2009…..
4. விபுலாநந்தர் கலை மன்றம் - கனடா- தலைவர் 2003-2006, காப்பாளர் 
5. சிவானந்தா வித்தியாலயம் பழைய மாணவர் மன்றம்-கனடா, காப்பாளர் 2010..
6. மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம். இலங்கை. காப்பாளர். 2010 …
7. இலங்கை பட்டதாரிகள் கழகம் - கனடா, துணைத் தலைவர் 2009 -2011
8. உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், (உலகத் தாயமைப்பு) காப்பாளர்;,
   கல்வித்துறைப் பொறுப்பாளர் 2002- 2011.
9. உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் -கனடாக்கிளை- காப்பாளர் 2000-2011
10. கனடா கந்தசுவாமி கோயில் அறங்காவல் சபை உறுப்பினர் 2000- 2002
11. ஒன்ராறியோ நுண்கலைக் கல்லூரி - ஆலோசகர்குழு உறுப்பினர் 2003 
12. Ontario Multi Cultural Association- Vice President 2001-2003 
13. தமிழ்ப் பெற்றோர் சங்கம் - ரொறன்ரோ, செயற்குழு உறுப்பினர் 2002..
14. அக்கினிக்குஞ்சு - இணையத்தளம் - கனடா ஆலோசகர்
15. நாடடுப்புற வழக்கியல் கழகம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்;. தலைவர் 1990-1994
16. கொழும்புத் தமிழ்ச் சங்கம் - துணைத் தலைவர், 1982
17. இலங்கை கலாசார பேரவை - நாடகக் குழு உறுப்பினர், 1978 - 1983
18 மட்டக்களப்பு அபிவிருத்திச் சங்கம், கொழும்பு - செயலாளர்,1977- 1983
19. யாழ்ப்பாண மாவட்டக் கலாசார சபை உறுப்பினர் 1985-1988

 கனடாவில் ஊடகத்துறைப் பணிகள்:

1.1997ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாகப் பத்திரிகைகளில் தமிழர் பண்பாடு - கனேடிய குடிவரவுச் சட்டம் – முதலான செய்திகள் பற்றித் தொடர்ச்சியாக கட்டுரைகள் எழுதி வார இதழ்களான தமிழர் செந்தாமரை- கதிர் ஒளி வாரப் பத்திரிகைகளில் கட்டுரைகள்  எழுதிவருதல்.

2. தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றில் கலந்துரையாடல் –கருத்துரை,  நேர்காணல் என்ற நிகழ்வுகளில் பங்கேற்றல்.

 பங்கேற்ற கலை, இலக்கிய, பண்பாட்டு மாநாடுகள்:

1.1996. 2006. 2007. 2009. 2010 உலகத்தமிழ் பண்பாட்டு இயக்க மகாநாடுகள்: (கனடா. ஜேர்மனி. மலேசியா. தென்னாபிரிக்கா.)
2.1998 இலிருந்து வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை(பெட்னா) நடத்திவரும் இலக்கிய  நிகழ்வுகளில் கலந்து கொண்டமை.
2.1993 -  Folklore Conference, Sheffield, U.K.
3.1990 – Folklore Conference, Oakland, San Francisco, USA
4. 1984 – Language and Cultural Conference , Pushkin Institute, Moscow, USSR
5. 1980 - முதலாவது உலக இந்து கலாசார மாநாடு, கொழும்பு
6. 1974 - நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, யாழ்ப்பாணம்.

  கனடாவில் நடைபெறும் இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டு தமிழ் இலக்கியச்சிறப்பை எடுத்துரைத்துப் பரப்பிவரும் பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்களின் தமிழ்ப்பணி தொடர நெஞ்சார்ந்து வாழ்த்துகள்!


**** இக்குறிப்புகளை எடுத்தாள விரும்புவோர் எடுத்த இடம் சுட்டுக.


ஞாயிறு, 12 ஜூலை, 2015

அரியலூர்ப் புத்தகத் திருவிழா-2015




தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கமும்,  நேஷ்னல் புக் டிரஸ்ட்டும் இணைந்து அரியலூர் மாநகரில் அரியலூர்ப் புத்தகத் திருவிழா-2015 என்னும் பெயரில் அரியதொரு புத்தகக் கண்காட்சியை நடத்துகின்றன. சூலை 17 முதல் சூலை 26 வரை இந்தப் புத்தகக் கண்காட்சி அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டுத்திடலில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை சிறப்பாக நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

செம்மொழி நிறுவனத்தில் சீரிய பணியாற்றிய பேராசிரியர் க. இராமசாமி அவர்களின் பெரும் முயற்சியில் இந்தப் புத்தகக்கண்காட்சி நடைபெற உள்ளது. முதல்நாள் மாலை ஐந்து மணிக்கு நடைபெறும் தொடக்கவிழா நிகழ்வில் மேனாள் இந்தியக் குடியரசுத்தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் விழாவினைத் தொடங்கிவைத்துச் சிறப்புப் பேருரையாற்றுகின்றார்.

திரு. சீனி. பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெறும் இந்தப் புத்தகத் திருவிழாவில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் திரு. எ. சரவணவேல்ராஜ் இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையுரையாற்றுகின்றார். திரு. சந்திரசேகர் சாகமூரி இ.ஆ.ப. அவர்கள் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசு வழங்குகின்றார். திரு. மெ. மீனாட்சி சோமசுந்தரம் அவர்கள் நன்றியுரையாற்ற உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கல்வியாளர்கள், தமிழறிஞர்கள், திரைத்துறைக் கலைஞர்கள் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர். உடையார்பாளையம் அரண்மனை, அரியலூர் அரண்மனை சார்ந்த அரசகுடியினர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

அரியலூர் மாவட்டம் கல்வியாளர்களும், அரசியல் தலைவர்களும், தொழில் முனைவோர்களும் நிரம்பிய ஊர். இவ்வூரில் நடைபெறும் புத்தகத் திருவிழா மாணவர்கள், பொதுமக்களுக்குப் பெரும் பயன் நல்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அரியலூருக்குத் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கும்பகோணம், பெரம்பலூர், சிதம்பரம் உள்ளிட்ட நகரங்களிலிருந்து பேருந்துகளில் பயணம் செய்யலாம். அதுபோல் சென்னை - திருச்சிராப்பள்ளி தொடர்வண்டிகள் அனைத்தும் அரியலூரில் நின்று போகும்.

திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், விழுப்புரம் மாவட்டம் சார்ந்த பொதுமக்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் இந்தப் புத்தகத் திருவிழாவை நன்கு பயன்படுத்திக்கொள்ள முடியும்.


மேலும் விவரங்களுக்கு: அரியலூர்ப் புத்தகத் திருவிழாவின் இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.