நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

புதுவைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையின் புலமுதன்மையராக முனைவர் க. இளமதி சானகிராமன் பொறுப்பேற்பு…


 முனைவர் க.இளமதி சானகிராமன் அவர்கள்

புதுவைப் பல்கலைக்கழகத் தமிழியல்துறையின் புல முதன்மையராகப் பேராசிரியர் முனைவர் கஇளமதி சானகிராமன் அவர்கள் அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்டார். புதுவைப் பல்கலைக்கழகம் தொடங்கிய காலம் முதல் தமிழியல் துறையில் துணைப்பேராசிரியர்(1987), இணைப்பேராசிரியர், பேராசிரியர் என்ற நிலைகளில் பணியாற்றியவர். புதுவைப் பல்கலைக்கழகத்தின் விடுதிக் காப்பாளராகத் தொடர்ந்து பணியாற்றுவது இவர்தம் கூடுதல் சிறப்பாகும். இவர்தம் பணிக்காலத்தில் எம்போலும் மாணவர்களுக்கு நல்லறிவும் நற்பண்புகளும் ஊட்டி வளர்த்த பெருமைக்குரியவர்.

பேராசிரியர் கஇளமதி சானகிராமன் அவர்கள் சித்தர் இலக்கியங்கள் குறித்த ஆய்வுகளைத் தொடர்ந்து நிகழ்த்தி வருபவர். இத்துறையில் ஒப்பாரும் மிக்காரும் இல்லா வகையில் பெரும் புலமை பெற்றவர். இவரின் மேற்பார்வையில் பலர் இளம் முனைவர் பட்டங்களும், பலர் முனைவர் பட்டங்களும் பெற்றுள்ளனர். தடைகளைத் தகர்த்து, உயர்நிலை எய்திய பேராசிரியர் அவர்களுக்கு அவர்களின் மாணவர்கள்  சார்பில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கின்றோம். இவர்தம் பெருமைமிகு வாழ்க்கையை இங்குப் பதிந்துவைக்கின்றேன்.

முனைவர் கஇளமதி அவர்கள் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் வாழ்ந்த புலவர் கு. கண்ணையா - தனலெட்சுமி  ஆகியோரின் அன்பு மகளாக 18.10.1955 இல் பிறந்தவராவார். தொடக்கக்கல்வி, உயர்நிலைக்கல்வியை உடையார்பாளையம் அரசு பள்ளியில் பயின்றும், புகுமுக வகுப்பு, இளங்கலை வகுப்பு ஆகியவற்றைக் கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரியில் பயின்றும் தம் கல்வியார்வத்தை மெய்ப்பித்தவர். மிகவும் பின்தங்கியப் பகுதியான இவ்வூரில் பிறந்து, உயர் கல்வி கற்று நேரிய வழியில் உயர்நிலைக்கு வருதல் அரிதினும் அரிது. ஏற்பட்ட இடர்களை நீக்கி, உயர்நிலை எய்திய பேராசிரியர் அவர்களின் உழைப்பைப் போல் மாணவர்கள் உழைத்தால் உயர்நிலை எய்தலாம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர்(1980). சித்தர் பாடல்கள் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் 1987 இல் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் அதே பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பொது நிருவாகம் (2005), இளங்கல்வியியல் (1984), மொழியியல் - சான்றிதழ் (1982) தெலுங்கு - சான்றிதழ் (1983), சைவ சித்தாந்தம் பட்டயம் (2001), மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையில் முதுகலைப் பட்டம் (1991), பெண்ணியவியல் - முதுகலைப் பட்டயவியல் (2003) ஆகிய பட்டங்களையும், பட்டயங்களையும், சான்றிதழ்களையும் பெற்றுத் தம் பல்துறைப் புலமையைப் பெருக்கிக்கொண்டவர்.

சித்தர் இலக்கிய அகராதி என்னும் தலைப்பில் ஆய்வுத்திட்டம் மேற்கொண்டவர். பன்னாட்டுக் கருத்தரங்குகளை நடத்தியவர். பல்கலைக்கழகத்தின் சார்பில் இரண்டுமுறைப் புத்தொளிப் பயிற்சிப் பணிகளைக் கவனித்தவர். பல்வேறு பயிற்சிப் பட்டறைகளில் கலந்துகொண்டு பங்களிப்பு செய்தவர். பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு ஆய்வுரைஞர் குழு,  பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பாடத்திட்டக்குழு ஆகியவற்றில் உறுப்பினராகவும் தேர்வுக்குழு உறுப்பினராகவும் பணியாற்றி வருபவர்.

பல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகொள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா சென்றுவந்தவர்.

பேராசிரியர் க. இளமதி அவர்களின் தமிழ்க்கொடை:

  • பேரின்பப் பெருவாழ்வு( 1988)
  • சித்தர்களும் சமூகப் பார்வையும்
  • சித்தர்களின் சிந்தனைகள்
  • ஓம் சத்குரு அப்பா பைத்திய சுவாமிகளின் வாழ்வும் பணியும்
  • நல்லாசிரியர் புலவர் கு.கண்ணையா வாழ்வும் பணியும்
  • நம்மைப் போல் (சிறுகதைகள்)
  • எரிமலையாய் (சிறுகதைகள்)
  • மெழுகுவர்த்திகள் (சிறுகதைகள்)
  •  சிவவாக்கியார் பாடல்கள் செம்பதிப்பு
  • கொங்கணிச் சித்தர் பாடல்கள் தொகுப்பும் திறனாய்வும்
  • சித்தர் இலக்கியம்
  • பெண்ணியம் பேச..
  • சமயத்தமிழ்


உள்ளிட்ட பல நூல்களைத் தந்தவர். இவற்றுள் பல நூல்கள் பல்வேறு பரிசில்களைப் பெற்றுள்ளன.

  முனைவர் க.இளமதி அவர்களின் கணவர் பெயர் திருவாளர் சானகிராமன் ஆகும். இவர் பேராசிரியர் அவர்களின் அனைத்துப் பணிகளுக்கும் ஆய்வுகளுக்கும் துணைநிற்கும் பேருள்ளம் படைத்தவர். மாணவர்களைத் தம் உடன் பிறந்தாராக நினைந்து பழகும் இந்த இணையர் நீடுவாழ நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.


சனி, 16 ஆகஸ்ட், 2014

முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 19 வது ஆண்டுவிழா, இலக்கிய மன்ற விழா




பெண்கல்விக்கு முதன்மை வழங்கித் தமிழ்வள்ளல் சிங்கப்பூர் எம்.எ. முஸ்தபா அவர்களால் முத்துப்பேட்டையில் நடத்தப்படும் ரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 19 வது ஆண்டுவிழா, இலக்கிய மன்ற விழா மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது. இன்று 16.08.2014 சனிக்கிழமை மாலை 5 மணிக்குத் தமிழ்த்தாத்தா உ.வே.சா. இலக்கிய மன்ற விழாவும், நாளை 17.08.2014 ஞாயிறு மாலை பள்ளியின் ஆண்டு விழாவும் நடைபெற உள்ளன.

ரஹ்மத் பள்ளியின் ஆண்டு விழா சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர் எஸ்.நாகமுத்து அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. சிறப்பு விருந்தினராக உயர்திரு டத்தோ முகமது இக்பால் அவர்கள் ( Chairman, Business Advisory Council United Nations Escap And Chairman Malaysian Institute of Management) கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்.  

இலக்கிய மன்ற விழாவில் திரைப்பட நடிகர் திரு டெல்லி கணேஷ், முனைவர் இரத்தின. வேங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர். திரு. இராஜ்மோகன் அவர்கள் நன்றியுரை வழங்குவார்.

சிறப்பு இலக்கிய உரைகள், பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அனைவரும் வருகை தரலாம்.


வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

குறளன்பன் புலவர் ஆ.வே.இராமசாமியார் மறைவு

குறளன்பன் புலவர் ஆ.வே.இராமசாமியார்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூரை அடுத்த வைரிசெட்டிப்பாளையம் என்னும் ஊரில் தமிழ்த்தொண்டும், திருக்குறள் தொண்டும் செய்துவந்து சான்றோர் குறளன்பன் புலவர் ஆ. வே. இரமசாமியார் அவர்கள் நேற்று (14.08.2014) அதிகாலை 2 மணியளவில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் எந்த ஓர் இலக்கிய நிகழ்வு நடைபெற்றாலும் ஐயா அவர்களை அங்குக் காணலாம். 1987 முதல் ஐயா அவர்களின் தமிழ்ப்பணியை நான் நன்கு அறிவேன். அவர் மகன் திருவள்ளுவன் அவர்கள் குடந்தை ஓவியக்கல்லூரியில் பயின்றபொழுது என் மாணவராற்றுப்படை நூலுக்கு ஓவியம் வேண்டி அங்குச் சென்றேன். அப்பொழுது(1989-90 அளவில்) குறளன்பன் ஆ.வே.இராமசாமியார் குறித்து முழுமையாக அறிந்தேன்.

அதுபோல் என் கெழுதகை நண்பரும் தமிழ்ப்பற்றாளரும், புலவரின் தலைமாணாக்கருமாகிய சிவ. முத்துக்குமாரசாமி அவர்கள் ஐயாவின் திருக்குறள் தொண்டையும் பண்பு உள்ளத்தையும் மிக உயர்வாகச் சந்திப்பின் பொழுதுகளில் எல்லாம் எடுத்துரைக்க மகிழ்ந்து கேட்டுள்ளேன். அதன்பிறகு நடந்த தமிழ்வழிக் கல்வி மாநாடு, உண்ணா நோன்பு அறப்போர்கள், திருவள்ளுவர் தவச்சாலை விழாக்கள், தமிழ்ச்சான்றோர் பேரவை விழாக்கள், திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்க விழாக்கள், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் விழாக்கள்,  குளித்தலை தமிழ்க் கா.சு நினைவு இலக்கிப்பேரவை விழாக்களில் எல்லாம் குறளன்பன் அவர்களைப் பன்முறை கண்டு உரையாடும் பேறுபெற்றுள்ளேன்.

அப்பழுக்கற்ற தூய பண்பாளர் அவர். திருக்குறளைக் கற்றதோடு அமையாமல் அதன் வழி நின்று காட்டியவர். இன்பத்தில் பங்குகொள்ளும் இற்றைப் போலி மாந்தர்களிடையே, பழகியோர் துன்பத்தில் இருந்தால் அத்துன்பத்தில் தேடிச் சென்று பங்கேற்ற பெருமகனார் இவர். அன்னாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினர், திருக்குறள் பற்றாளர்கள், தமிழறிஞர்களுக்கு என் ஆழ்ந்த வருத்தத்தை மீண்டும் தெரிவித்துக்கொள்கின்றேன். குறளன்பன் ஆ.வே. இராமசாமியார் அவர்களின் தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிந்துவைத்து உலகத் தமிழர்களுக்கு அவர் பெருமைமிகு பணிகளை நினைவூட்டுகின்றேன்.

ஆ.வே.இராமசாமியார் அவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூரை அடுத்த ஆலத்துடையான்பட்டி என்னும் ஊரில் வாழ்ந்த திருவாளர்கள் வேங்கடாசலம் ரெட்டியார், செல்லம்மாள் ஆகியோரின் அன்பு மகனாக 11.04.1928 இல் பிறந்தவர். இவருடன் பிறந்தோர் ஆண்மக்கள் மூவரும், பெண்மக்கள் இருவருமாக அமைந்தனர். திருவாட்டி கி. தனம் அவர்களை இல்லறத் துணையாக ஏற்றுத் திருவள்ளுவன், தொல்காப்பியன் என்னும் மக்கட்செல்வங்களைப் பெற்று  மண்ணுலகில் நீடுபுகழுடன் வாழ்ந்தவர்.

ஆ.வே. இராமசாமியார் அவர்கள் உள்ளூர்த் திண்ணைப்பள்ளியில் தொடக்கக் கல்வியையும், அடுத்து மேட்டுப்பாளையம் நடுநிலைப்பள்ளியில் பயின்றும் கல்வி அறிவு பெற்றார். திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழ்க்கல்லூரியில் இவருக்குப் பேராசிரியர்களாக வாய்த்த சான்றோர்கள் இராம.கோவிந்தசாமி, அ.அரங்கசாமி, சிவப்பிரகாச சேதுராயர், எச்.வி. வேங்கடராமர், என்.இராமசாமி ஆவர்.

வைரிசெட்டிப்பாபளையம் சுவாமி விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் 32 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். வைரிசெட்டிப்பாளையம் திருக்குறள் பேரவைச் செயலாளராகப் பணியாற்றியவர். 1985 இல் நடைபெற்ற ஆசிரியர் கூட்டமைப்பின் அறப்போரில் பங்கேற்றுச் சிறை சென்றவர். தமிழ்வழிக் கல்விக்காகத் தமிழ்ச்சான்றோர் போரவை சென்னையில் நடத்திய சாகும் வரையிலான உண்ணா நோன்பில் பங்கேற்றவர். தில்லியில் நடந்த உண்ணாநிலைப்போரிலும் பங்கேற்றவர்.

தம் உழைப்பில் கிடைத்த நிதியில் தாம் பணிபுரிந்த பள்ளியில் தம் பெற்றோர் பெயரிலும், அல்லூர் தவச்சாலையிலும், குளித்தலை கா.சு. பிள்ளை நினைவு இலக்கியக்குழுவிலும், தலைநகர்த் தமிழ்ச்சங்கத்திலும் பல அறக்கட்டளைகளை நிறுவித் தம் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்தியவர்.

மாவட்ட நூலகம், ஒன்றியத் தொடக்கப்பள்ளி, தமிழ்த்தாய்த் திருக்கோயில், தமிழ்க்குடில் உள்ளிட்ட அமைப்புகளின் புரவலராகத் திகழ்ந்தவர்.

திருக்குறள் தொடர்பில் 13 நூல்களும், இலக்கியத் திறனாய்வு அடிப்படையில் 4 நூல்களும் பா நூல்கள் 5, தன்வரலாற்று நூல்கள் 2, பயண நூல்கள் 2, தன்னம்பிக்கைநூல் 1 என்ற அளவில் தமிழுக்கும் மக்களுக்கும் பயன்தரத்தக்க நூல்களை வழங்கிய பெருமகனார்.

வீடுபோற்றவும், நாடுபோற்றவும் வாழ்ந்த, துன்பத்தைக் கண்டு அஞ்சாத தமிழுருவான புலவர் ஆ.வே.இராமசாமி அவர்களின் பெருமை இவ்வுலகு உள்ள அளவும் நின்று நிலவட்டும்.


வீடியோ இணைப்பு
முதுமுனைவர் இரா.இளங்குமரனார் வழங்கும் இரங்கலுரை

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

பயன்பாட்டுப் பார்வையில் துறைதோறும் தமிழ் – பன்னாட்டுக் கருத்தரங்கம்




சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) பயன்பாட்டுப் பார்வையில் துறைதோறும் தமிழ் என்னும் தலைப்பில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் நிதி உதவியுடன் பன்னாட்டுக் கருதரங்கம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 25, 26 ஆகிய நாள்களில் சென்னையில் நடைபெறும் இந்தப் பன்னாட்டுக் கருத்தரங்கில் பேராசிரியர்கள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் கலந்துகொண்டு கட்டுரை படைக்கலாம்.

வெளிநாட்டுப் பேராளர்களும் பங்கேற்கலாம். வெளிநாட்டுப் பேராளர்கள் 70 அமெரிக்க டாலரும், இந்தியப் பேராளர்கள் உருவா 500, ஆய்வு மாணவர்கள் உருவா 350 , பங்கேற்பாளர்கள் உருவா 150 செலுத்திப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

வரைவோலை எடுக்க வேண்டிய பெயர்

Dr. Angayarkanni, Department of Tamil, Ethiraj College for Women, Chennai

கட்டுரைகள் 5 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கருத்தரங்கக் கட்டுரைகள் நூல்வடிவில் வெளிவர உள்ளன.

கட்டுரைகள் அனுப்ப இறுதிநாள்: 30.09.2014

மின்னஞ்சல் முகவரி: tamilbk2014@gmail.com

வலைப்பதிவு: இங்கே செல்க

கட்டுரை வரைவோலை அனுப்ப வேண்டிய முகவரி:

தமிழ்த்துறைத் தலைவர்,
எத்திராஜ் மகளிர் கல்லூரி(தன்னாட்சி)
சென்னை- 600 008

தொடர்புக்கு:

கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள்:
முனைவர் சு. புவனேசுவரி 94444 18670

முனைவர் பா. கௌசல்யா 91763 63139


பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் மகள் வசந்தா தண்டபாணி மறைவு

வசந்தா தண்டபாணி

பாவேந்தரின் அன்புமகள் வசந்தா தண்டபாணி அவர்கள் தம் 84 ஆம் அகவையில் புதுச்சேரியில் 13.08.2014 பிற்பகல் இரண்டு மணியளவில் இயற்கை எய்தினார். இன்று 14.08.2014 வியாழன், முற்பகல் 11 மணியளவில் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. வசந்தா அம்மா அவர்களின் உடல் புதுச்சேரி முத்தியால்பேட்டை, வசந்தம் நகரில் உள்ள மருத்துவர் சேரன் இல்லத்தில் பொதுமக்கள் வணக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. தமிழ் ஆர்வலர்கள், பாவேந்தர் பற்றாளர்கள், உறவினர்கள், நண்பர்கள் இறுதி வணக்கம் செலுத்தி வருகின்றனர்.
                           

வசந்தா அம்மா அவர்களைப் பலவாண்டுகளாக நான் நன்கு அறிவேன். தனித்துப் பலமுறை உரையாடியுள்ளேன். உவமைக்கவிஞர் சுரதா அவர்கள் கலந்துகொண்டு எனக்குப் பாவேந்தர் மரபுப்பாவலர் பட்டம் சென்னையில் வழங்கியபொழுது அம்மா வசந்தா தண்டபாணி அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள். அந்த அரிய படம் ஒன்று  இருப்பில் இருந்தது. கூடுதல் படங்களைப் பிறகு பார்வைக்கு வைப்பேன்.

உவமைக்கவிஞர் சுரதா, மு.இ., வசந்தா அம்மா

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் நூற்றாண்டு விழா




தமிழிசைக்குத் தொண்டு செய்த பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாரின் தொண்டினை நினைவுகூரும்முகத்தான் தஞ்சாவூரில் அமைந்துள்ள தமிழ்ப்பல்கலைக்கழகம் அன்னாருக்கு நூற்றாண்டு விழாவினைக் கொண்டாட உள்ளது. இத்தகு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வைக் கொண்டாட  முன்வந்த மாண்பமை துணைவேந்தர் முனைவர் ம. திருமலை ஐயா அவர்களையும் இசைத்துறைத் தலைவர் முனைவர் இ. அங்கயற்கண்ணி அம்மா அவர்களையும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் பாராட்டக் கடமைப்பட்டுள்ளனர். இவ்வரிய நிகழ்ச்சி கீழ்வரும்வண்ணம் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. தமிழிசை ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.

நூற்றாண்டு விழா நிகழ்விடம்: பேரவைக் கூடம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு

நாள்: 12.08.2014, செவ்வாய்கிழமை, நேரம்: முற்பகல் 10.30 மணி

வரவேற்பு: முனைவர் இ.அங்கயற்கண்ணி அவர்கள்,
தலைவர், இசைத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம்

தலைமையுரை; முனைவர் ம. திருமலை அவர்கள், துணைவேந்தர், 
தமிழ்ப் பல்கலைக்கழகம்

தமிழிசை வளர்ச்சியில் குடந்தை ப.சுந்தரேசனாரின் பங்கு நூல்வெளியீடு:
கலைமாமணி முனைவர் ஈ.காயத்ரி அவர்கள், துணைவேந்தர்,  தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம்

நன்றியுரை: முனைவர் இரா. மாதவி அவர்கள்

தொகுப்புரை: முனைவர் செ. கற்பகம் அவர்கள்      

கருத்தரங்க அமர்வுகள்

அமர்வு 1:  2.00 - 3. 30  
தலைமை : முனைவர் எம். பிரமீளா அவர்கள்
இசைத்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம்

அமர்வு 2: 3.45 – 5.30 
தலைமை: பேராசிரியர் மா. வயித்தியலிங்கன் அவர்கள்


ஆய்வறிஞர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களின் படைப்புகள் குறித்தும் , பணிகள் குறித்தும் ஆய்வுரை வழங்க உள்ளனர்.


வியாழன், 7 ஆகஸ்ட், 2014

தொல்காப்பிய அறிஞர் செ.சீனி நைனா முகமது ஐயா அவர்கள் மறைவு!

 தொல்காப்பிய அறிஞர் சீனி.நைனா முகமது அவர்கள்

  மலேசியாவில் தொல்காப்பியத்தைப் பரப்புவதைத் தம் வாழ்நாள் பணியாகக் கொண்டு இயங்கியவரும் உங்கள் குரல் என்னும் இதழின் ஆசிரியரும் பன்மொழிப் புலமையாளரும் தமிழ்ப்பற்றாளருமான ஐயா செ.சீனி நைனா முகமது அவர்கள் இன்று 07.08.2014 பகல் 2 மணியளவில் மலேசியத் திருமண்ணில் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து ஆழ்ந்த துயருற்றேன். நான்கு ஆண்டுகளுக்கு முன்(20.05.2010) மலேசிய நண்பர்களுடன் பினாங்கு நகரில் நடு இரவில் ஐயா அவர்களைச் சந்தித்தபொழுது அன்பொழுக எங்களுடன் உரையாடிய பெருமைக்குரியவர். அது நாள் முதல் தொடர்ந்து தொடர்பில் இருந்தோம்.
                    
  கடந்த ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அண்ணன் எம். எ. முஸ்தபா அவர்களுடன் ஒரு இரவு விருந்தில் அருகமர்ந்து உண்டு மகிழ்ந்தமையும் மறுநாள் காலை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அவர் உரை கேட்டமையும் நெஞ்சில் நிழலாடுகின்றன. இசுலாமியப் பெருமக்களுள் தமிழுக்கு உழைத்தோர்களைப் பலராகப் பட்டியலிட்டுப் போற்றமுடியும். அந்த அறிஞர் பெருமக்களுள் தொல்காப்பியத்தை நுட்பமாகக் கற்ற பெருமையும் மலேசிய மண்ணில் எடுத்துரைத்துப் பரப்பிய பெருமையும் ஐயா சீனி நைனா முகமது அவர்களுக்கு உண்டு. தமிழ் பற்றியோ, தமிழர் பற்றியோ எவரேனும் குறைத்துப் பேசிவிட்டு ஐயாவிடமிருந்து தப்பிச் செல்லமுடியாது. அந்த அளவு தமிழ்ப்பற்றுடையவராக விளங்கியவர்.

மலேசிய மண்ணில் தமிழ் வளர்ச்சிக்குத் தொடர்ந்து கடமையாற்றிய ஐயா சீனி நைனாமுகமது அவர்களின் இழப்பு தமிழுலகிற்கு ஈடு செய்ய இயலாத இழப்பு. அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், மலேசியத் தமிழ் உறவினர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.

தொல்காப்பிய அறிஞர் சீனி. நைனா முகமது அவர்களின் புகழ் இந்த உலகம் உள்ளவரை நின்று நிலவட்டும்!!

 அறிஞர் சீனி நைனா முகமது அவர்கள் குறித்த என் பழைய இடுகை.


திங்கள், 4 ஆகஸ்ட், 2014

கண்ணகித் திருநாள், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் நூற்றாண்டு விழா - பூம்புகார்



பூம்புகாரில் அமைந்துள்ள பத்தினிக்கோட்டத்தில் 2014 ஆகத்து 5, 6 நாள்களில் கண்ணகித் திருநாள் நடைபெறுகின்றது. 05. 08. 2014 காலை 10 மணிக்குக் கல்லூரி மாணவர்களுக்கான சிலப்பதிகாரம் இசைப்போட்டித் தேர்வு நடைபெறும். மாலை 6 மணிக்கு மேல் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழா நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்கு மேனாள் வானொலி நிலைய இயக்குநர் காத்த. துரைசாமி அவர்கள் தலைமை தாங்குகின்றார். பேராசிரியர் மா.வயித்தியலிங்கம், திரு. மா. கோடிலிங்கம், முனைவர் மு.இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டு பண்ணாராய்ச்சி வித்தகர் குறித்த நினைவுரையாற்ற உள்ளனர்.

 மறுநாள் (06.08.2014) பத்தினிக்கோட்ட அறநிலையின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் திரு. அரு.சோமசுந்தரம், திருமதி பெ. வனிதா, செந்தமிழ்ப் புரவலர்  இரா. இராஜசேகரன், பேராசிரியர் தி.இராசகோபாலன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.

 தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

பேராசிரியர் இரா.ச. குழந்தைவேலனார் அறக்கட்டளை இண்டாம் ஆண்டுப் பெருவிழா கடலூரில் நடைபெறுகின்றது!


  பேராசிரியர் இரா.ச. குழந்தைவேலனார் அறக்கட்டளை நடத்தும் இண்டாம் ஆண்டுப் பெருவிழா கடலூர் சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் 03.08.2014 மாலை 5.30 மணிக்கு நடைபெறுகின்றது. இந்த விழாவில் திருவருட்பாவில் வாழ்வியல் நெறிகள் என்னும் தலைப்பில் அமைந்த நூலின் வெளியீடு நடைபெற உள்ளது.

  திருவருட்பா இசைத்தலுடன் தொடங்கும் விழாவில் முனைவர் விசயலெட்சுமி வெற்றிவேல் எழுதிய திருவருட்பாவில் வாழ்வியல் நெறிகள் என்னும் நூல் வெளியிடப்படுகின்றது. கவிஞர் இரா. ச. சொக்கநாதன் தலைமையில்  நடைபெறும் விழாவில் பேராசிரியர் இரா.ச. குழந்தைவேலனார் அவர்கள்  அறிமுகவுரையாற்றுகின்றார். நூலினை வெளியிட்டு வாழ்த்துரை வழங்க தவத்திரு ஊரன் அடிகளார் இசைந்துள்ளார். நூலின் முதற்படியினைப் புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் முனைவர் வி. முத்து அவர்கள் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்குவார். 

  இந்த விழாவில் விருதுகள் வழங்கியும் பாராட்டுப் பட்டயம் வழங்கியும் சிறப்புப் பேருரையாற்ற முனைவர் ஔவை. நடராசன் அவர்கள் இசைந்துள்ளார். தமிழார்வலர்கள் திரளாகக் கலந்துகொள்ள உள்ள இந்த நிகழ்ச்சிக்கு அனைவரையும் அறக்கட்டளையினர் அழைத்து மகிழ்கின்றனர்.