நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 24 ஏப்ரல், 2013

இசையறிஞர் அரிமளம் சு. பத்மநாபன்




முனைவர் அரிமளம் சு.பத்மநாபன் அவர்கள்

இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் ஐயா அவர்களின் உதவியாளனாக யான் இருந்தபொழுது பலருக்கும் மடல் எழுதும் உரிமையை எனக்கு இசைமேதை அவர்கள் வழங்கியிருந்தார். அந்தக் காலத்தில் எனக்கு அறிமுகமான பெயர் அரிமளம் சு. பத்மநாபன். ஒருமுறை மதுரை- பசுமலையில் ஐயா அவர்களின் இல்லத்திலும் அரிமளம் அவர்களைக் கண்டுள்ளேன். புதுச்சேரிக்குப் பணிக்கு வந்த புதிதில் அரிமளம் அவர்களைத் தேடிச்சென்று காண்பதை வழக்கமாக்கிக்கொண்டேன். தமிழிசை பற்றியும், தமிழ் ஆராய்ச்சி உலகு பற்றியும் நெடுநாழிகை உரையாடுவது எங்கள் வழக்கம்.

வீ.ப.கா.சுந்தரம் ஐயாவின் கொள்கைகளை உள்வாங்கிக்கொண்டு பாடுதுறையில் வல்லுநராக விளங்குபவர் அரிமளம். தொல்காப்பியத்தையும், பத்துப்பாட்டையும் செம்மொழி நிறுவனத்திற்காக முற்றோதல் வகையில் ஆவணப்படுத்திய வரலாற்றுச் சிறப்புக்கு உரிமையாளர் நம் அரிமளம் அவர்கள். “ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழ விளங்கி” எனத் தொடங்கும் தண்டியலங்காரப் பாட்டின் சிறப்பை அரிமளம் அவர்களின் குரல்வழிக் கேட்டு முழுப்பொருள் உணர்ந்தேன். அதுபோல் திருக்குறளை அவர்கள் சுத்த தன்யாசி இராகத்தில் பாடிய குறட்பாக்களை ஆயிரம் முறையேனும் கேட்டிருப்பேன். இந்தோளப் பண் பாடுவதிலும் நம் அரிமளம் புகழ்பெற்றவர்.

இன்று(23.04.2013) அரிமளம் அவர்களுடன் இசைகுறித்துக் கலந்துரையாட வாய்ப்பு அமைந்தது. மூன்று மணி நேரத்திற்கும் மேல் நீண்ட எங்கள் உரையாடலில் பாவேந்தர் பாடல்கள், நாலாயிரப் பனுவல், கம்பராமாயணம், திருப்பாவை உள்ளிட்டவற்றை அரிமளம் பாடக் கேட்டு உள்ளம் உவகைகொண்டேன். அரிமளம் அவர்களின் தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.

அரிமளம் சு.பத்மநாபன் அவர்கள் புதுக்கோட்டையை அடுத்த அரிமளம் என்ற ஊரில் 14.06.1951 திருவாளர் அரிமளம் சுப்பிரமணியம், மங்களம் அம்மாள் ஆகியோரின் மகனாகப் பிறந்தவர். பிறந்த ஊரில் தொடக்கக் கல்வியைப் பயின்ற இவர் தந்தையாரிடம் முறைப்படி இசை கற்றவர். முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்றவர். கல்வியியலில் முதுகலை பயின்றவர். “தமிழ்நாடக இசை” குறித்துப் புதுவைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டவர்.

1976 இல் புதுவையில் அமைந்துள்ள கேந்திரிய வித்தியாலயா பள்ளியில் இசையாசிரியராகப் பணியில் இணைந்தவர். புதுவை அரசின் கல்வித்துறையில் 1977 இல் இணைந்து 2000  இல் விருப்ப ஓய்வுபெற்றார். அதன் பிறகு புதுவைப் பல்கலைக்கழகத்தின் நிகழ்கலைத்துறையில் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தவர். சென்னைப் பல்கலைக் கழகத்தின் இசைத்துறையிலும், திருச்சிராப்பள்ளி    கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியிலும் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர்.

  செம்மொழி நிறுவனத்தில் 2006 முதல் பணியில் இணைந்து தொல்காப்பியம், பத்துப்பாட்டு முற்றோதல் குறித்த குறுவட்டுகளை வெளியிட்ட அறிஞர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்து பணியாற்றிய பெருமைக்குரியவர்.

அரிமளம் அவர்களின் தமிழ்க்கொடைகள்:

 நூல்கள்:

 தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களில் இசைக் கூறுகள், 2000
 சங்கரதாஸ் சுவாமிகளின் சந்தங்கள் ஓர் ஆய்வு, 2002
சங்கரதாஸ் சுவாமிகளின் இரு நாடகங்கள், 2006(சாகித்திய அகாதமி )
 சங்கரதாஸ் சுவாமிகள் நாடகக் களஞ்சியம், 2008(காவ்யா வெளியீடு)
  தமிழிசையும் இசைத்தமிழும், 2009 (காவ்யா வெளியீடு)

கட்டுரைகள்  :  
  
சாகித்திய அகாடமி, புதுதில்லி, தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத்       தமிழாராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட  பல்வேறு அமைப்புகளின் மலர்கள், இதழ்கள், நூல்களில் ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள்.

பாடத்திட்டப் பணிகள்

சென்னைப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழக இசைத்துறைப் பட்டப் படிப்புகளுக்கான  பாடங்களில் சில.

புதுச்சேரி அரசுக் கல்வித்துறைக்காக ஒன்று முதல் பத்தாம் வகுப்புகளுக்கான இசைப் பாடத்திட்டத் தயாரிப்பு

குறுவட்டுகள்

வெளியீடு - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை.
.         பழந்தமிழ்ப் பாக்கள் மரபுவழிப் படித்தல், பாடுதல்
.        தொல்காப்பியம் முற்றோதல்
.         பத்துப்பாட்டு முற்றோதல்

பாடுதுறை :    மரபுவழிக் கலைஞர்

அரங்கிசை                :  42 ஆண்டுகள்
இசையாசிரியர்              :         40 ஆண்டுகள்
இசையமைப்பாளர    :         36 ஆண்டுகள்
ஆவணப்படங்கள்                –  2
 தமிழிசைக் குறுவட்டு          –  1
 இசை, நாட்டிய நாடகங்கள்    - 10
தமிழ்  இசைப் பயிலரங்குகள்  - 50 

பழந்தமிழிசையில் திருக்குறள் முழுமையும் ஆவணப் பதிவாக அகில இந்திய  வானொலி நிலையம்,    புதுச்சேரி.

திருக்குறள் இசைத் தமிழ் (தமிழிசைக் குறுவட்டுகள்)  தமிழ் மையம், சென்னை                  
  
சேர்ந்திசை இயக்குநர்:    தேசிய சேர்ந்திசைப் பயிற்றுநர்,
தேசிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், (NCERT), மனித வள மேம்பாட்டு அமைச்சகம், புதுடில்லி.

இந்தியாவின் அனைத்து மாநில இசையாசிரியர்கள், பள்ளி மாணவர்களுக்கு தேசிய, மொழி நல்லிணக்கத் தமிழ்ப் பாடல்களைப் பயிற்றுவிக்கும் பணி.

சிறப்புக் குறிப்புகள்:     9.8.1987 அன்று மும்பையில் பிரதமர் இராசீவ் காந்தி தலைமையில், ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில், கிராந்தி மைதானத்தில் 3000 பள்ளிக் குழந்தைகளைக் கொண்டு பாரதியார் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடச் செய்த சேர்ந்திசை நிகழ்ச்சி.

15.8.1987 அன்று  புதுதில்லி செங்கோட்டையில் இந்தியப் பிரதமர் கொடியேற்றும் நிகழ்ச்சியில் சேர்ந்திசை

5.9.1987 அன்று ஆசிரியர் தின விழாவில்  புதுச்சேரியில் சுற்றுச்சூழல் குறித்த பாடல்களை  3000 பள்ளிக் குழந்தைகள் பாட, 1000 குழந்தைகள் நாட்டியம் ஆடிய நிகழ்ச்சி.


 
                அரிமளம் அவர்கள் பெற்ற விருதுகள்:
                                                                                 
கலைமாமணி     (புதுச்சேரி  அரசு)
  விபுலானந்தர் விருது    (கிழக்குப் பல்கலைக்கழகம்,இலங்கை)
இராஜா சர் முத்தையா செட்டியார் விருது         (மதுரை)
ஞான  சரஸ்வதி பீட  புரஸ்கார்                        (சென்னை)
இசை ஞானச் சுடர்                                           (புதுச்சேரி)
தமிழ் இசை வேந்தர்                                         (விழுப்புரம்)
சங்கரதாசு சுவாமிகள் விருது                          (புதுச்சேரி)
நாடகச் செல்வம்                                              (சென்னை)
நாடக நற்றமிழ் ஞாயிறு                                   (மதுரை)
அருட்பா இசைமணி                                        (வடலூர்)
சுக நாத லய ஞான மணி                                  (மதுரை)
பெரும்பாண நம்பி                                           (இலால்குடி)
இசைத்தமிழ் அறிஞர்                                       (மதுரை)

அரிமளம் சு.பத்மநாபன் முகவரி:

முனைவர் அரிமளம் சு.பத்மநாபன்
14, மூன்றாம் குறுக்கு தெரு,
இராமன் நகர் (குறிஞ்சி நகர்),
இலாசுப்பேட்டை, புதுச்சேரி – 605 008
0413 – 2252342  /  94423 96550   
                                                                               
   arimalam.padmanabhan@ gmail.com        

அரிமளம் அவர்களின் இணையதளம்                                                                                                   

கருத்துகள் இல்லை: