நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 15 ஜூன், 2012

கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை, 4ஆம் ஆண்டு இலக்கியப்பரிசு


எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி

பொதுவுடைமை இயக்க உணர்வுகளை நெஞ்சில்தாங்கி எளிய வாழ்க்கை வாழ்ந்துவருபவரும் தமிழகத்தின் மூத்த படைப்பாளியுமான எழுத்தாளர் கு.சின்னப்பபாரதியின் படைப்புகள் தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க பெருமைக்குரியன. இவர்தம் சங்கம், தாகம் உள்ளிட்ட புதினங்கள் உலகின் பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு மக்களால் ஆர்வமுடன் படிக்கப்பட்டு வருகின்றன.

மூத்த எழுத்தாளர் சின்னப்பபாரதி அவர்கள் தம்மையொத்த படைப்பாளிகளை ஊக்குவிக்கும் முகமாக மக்கள்கொடைப்பணத்தில் ஓர் அறக்கட்டளை நிறுவி அதன்வழியாக ஆண்டுதோறும் படைப்பாளர்களை அழைத்துப் பரிசில் நல்கிப் பாராட்டிவருகின்றார். அந்தவகையில் சென்ற ஆண்டு "இணையம் கற்போம்" என்ற என் நூலும் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பரிசு வழங்கிப் பாராட்டப்பெற்றது. அப்பொழுதாதன் எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி அவர்களை நேரில் கண்டேன். என் படைப்புகளையும் என் முயற்சிகளையும் கு.சின்னப்பபாரதி அவர்களுக்கும் அறக்கட்டளைக்கும் அறிமுகம் செய்தவர்கள் நாமக்கல் செல்வம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர் செல்வராஜ் ஐயா அவர்கள் ஆவார். கல்லூரி முதல்வர் திரு.செந்தில் அவர்கள் என் இணையம் கற்போம் நூலைக் கற்று மாணவர்களுக்கு அந்த நூலை அறிமுகம் செய்த பெருமைக்குரியவர். இவ்வாறு எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் அறக்கட்டளை இந்த ஆண்டும் பரிசிக்குரிய நூல்களை வரவேற்று அறிவிப்பு செய்துள்ளது. அறிவிப்பைக் கீழ்வரும் பகுதியால் அறிக.

கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை, 4ஆம் ஆண்டு இலக்கியப்பரிசு நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை, 4ஆம் ஆண்டு இலக்கியப்பரிசுக்கு தமிழ் எழுத்தாளர்களிடமிருந்து நூல்களை வரவேற்கிறது.

இந்த ஆண்டு முதல் முதன்மைப்பரிசு ரூ.1½ இலட்சம் (ரூபாய் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம்) வழங்க அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. பிற சிறப்புப்பரிசுகள் ஒவ்வொரு துறைக்கு ஒரு பரிசாக ரூபாய் பத்தாயிரம் வீதம் வழங்கப்படவுள்ளது. பணமுடிப்புடன் கேடயமும் சான்றிதழும் வழங்கப்படும். 2012, அக்டோபர் 2ஆம் நாள், காந்தி பிறந்த நாளன்று இப்பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

விதிமுறைகள்:

• நாவல், கட்டுரை(இலக்கிய ஆய்வு உட்பட), சிறுகதை, மொழிபெயர்ப்பு, கணினித் தமிழ்இலக்கியம், சிற்றிதழ்கள், இணைய இதழ்கள், சமூகசேவை, நாடகம், கவிதை மற்றும் சிறந்த பத்திரிக்கையாளர் ஆகிய துறைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

• எழுத்தாளர், பதிப்பாளர் அல்லது அவர்கள் சார்பாக யாரும் நூல்களை அனுப்பி பரிந்துரைக்கலாம்.

• விண்ணப்பப் படிவம் www.kucbatrust.com/application_fom.pdf என்ற இணைய தளத்தில் கிடைக்கும். பிரதி எடுத்து நிரப்பி அனுப்பிட வேண்டும்.

• விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பத்துடன் பரிசுக்கான பரிந்துரை நூல்களின் மூன்று பிரதிகள் அனுப்பி வைத்திட வேண்டும்.

• சிற்றிதழ்கள் எனின் 2011ஆம் ஆண்டு வெளிவந்த அனைத்து இதழ்களின் மூன்று பிரதிகளை அனுப்ப வேண்டும்.

• சிறந்த பத்திரிக்கையாளர் விருதுக்கு, பெயரை யார் வேண்டுமானாலும் பரிந்துரைக்கலாம்.
அவரது பணிகளை விபரமாக விண்ணப்பப்படிவத்துடன் பின் இணைக்க வேண்டும்.

• பரிசுத்தெரிவு இறுதி முடிவு அறக்கட்டளையின் தனிப்பட்ட முடிவாகும்.

• இந்தியா, சர்வதேச நாடுகளில் வாழ்ந்து வரும் தமிழ்ப்படைப்பாளிகள் எவரும் கலந்து கொள்ளலாம்.

• படைப்புகள் ஐந்து ஆண்டுகளுக்குள் அதாவது 01.01.2007 முதல் 31.12.2011 வரை வெளிவந்ததாக இருத்தல் வேண்டும்.

• ஐந்து ஆண்டுகளுக்கு உள்ளான படைப்புக்களில் முதன்மைப் பரிசுக்கான தகுதியான நூல்கள் கிடைக்கப் பெறாவிட்டால் தமிழ் இலக்கியப்பரப்பில் வாழ்நாள் இலக்கிய சாதனையாளர் என்கிற வகையில் தகுதியான ஒருவருக்கு அறக்கட்டளை பரிசு வழங்கும்.

• பரிசுக்கான விண்ணப்பமும் நூல்களும் ஜுலை 15ஆம் தேதிக்குள் வந்துசேரவேண்டும். காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக பரிசீலிக்கப்படமாட்டாது.

• விண்ணப்பம் மற்றும் நூல்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி,

திரு. சி. க. கருப்பண்ணன், IRS(ஓய்வு)
துணைத்தலைவர்,
கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை,
செல்லம் மழலையர் பள்ளி,
சின்ன அய்யம்பாளையம் (அஞ்சல்),
நாமக்கல் (மாவட்டம்),
தமிழ்நாடு – 637 003.
அலைபேசி: 9487090666

மேற்கண்ட அறிவிப்பினைக் கு. சின்னப்பபாரதி அறக்கட்டளையின் தலைவர். டாக்டர். பொ. செல்வராஜ், செயலாளர். திரு.கா.பழனிச்சாமி, ஆகியோர் வெளியிட்டுள்ளார்கள்.

நன்றி: கு.சின்னப்பபாரதி இணையதளம்

கருத்துகள் இல்லை: