நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

காவ்யா தமிழ் -கலை,இலக்கிய,பண்பாட்டு இதழ்


காவ்யா முதலிதழ் முகப்பட்டை

பேராசிரியர் சு.சண்முகசுந்தரம் அவர்களை நான் பல்கலைக்கழக மாணவனாக இருந்தபொழுதே அறிவேன்(1993). அவர் பெங்களூரில் தங்கிக் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றியபொழுதும் நாட்டுப்புறவியல் துறைசார்ந்து பல நூல்களை வெளியிட்டவர். அவர் வெளியிட்ட நூல்களை நான் ஆர்வமுடன் கற்றுள்ளேன். நாட்டுப்புறவியல் துறையில் பேராசிரியர் அவர்களின் நூல்கள் எனக்கு அரிச்சுவடிபோல் அமைந்து அந்தத் துறையில் ஈடுபாடுகொள்ளச்செய்தது. மரபிலக்கண நூல்களில் பயிற்சிபெற்ற எனக்கு நாட்டுப்புறவியல் ஆய்வில் பேராசிரியர் போன்றவர்களின் நூல்கள்தான் ஈடுபாட்டை ஏற்படுத்தின.

பேராசிரியர் சு.சண்முகசுந்தரம் அவர்களை இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கில் ஆண்டுதோறும் சந்திப்பது வழக்கம். ஆய்வுப்படிப்பிற்குப் பிறகு கல்லூரியில் பணியாற்றிய காலங்களில் கருத்தரங்குகள், புத்தகக் கண்காட்சிகள், இலக்கியக் கூட்டங்களில் சந்திப்பது உண்டு. சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் யான் பணிபுரிந்தபொழுது (1997-98) பேராசிரியர் நடத்திய தன்னனானே இதழில் கட்டுரை எழுதியதும் உண்டு.

பேராசிரியர் சு.சண்முகசுந்தரம் அவர்கள் பெங்களூரு கல்லூரிப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு சென்னைக்குக் குடிபெயர்ந்து பதிப்புத்துறையில் முழுவதும் கவனம் செலுத்தியபொழுது அடிக்கடி அவர்களின் பதிப்பக நூல்கள் புதிது புதிதாக வெளிவந்தவண்ணம் இருந்ததை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்.

தமிழ்ப்பேராசிரியர்களுள் பதிப்புச்செம்மல் ச.மெய்யப்பன் ஐயாவைப் போல் தரமான தமிழ்நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருவதுடன் இன்னும் ஆய்வுமாணவரைப் போல் களப்பணியாற்றித் தகவல் திரட்டும் அவரின் செயல்பாடு எனக்கு வியப்பைத் தருகின்றது. சிறுகதை, புதினம், கவிதை, ஆய்வுகள் என்று பன்முகத்தளங்களில் தடம்பதித்த பேராசிரியர் சு.சண்முகசுந்தரம் அவர்கள் தமிழ்நாட்டுப் பேராசிரியர்களுக்கு ஒரு முன்மாதிரியானவர். ஆய்வுமாணவர்களுக்கு எடுத்துக்காட்டான ஆய்வுமாணவர். படைப்பாளிகளுக்கு ஊக்கம் தரும் ஒரு படைப்பாளி. எழுத்தாளர்களுக்கு இவர் பதிப்பகம் ஒரு வேடந்தாங்கல்.

இன்றையப் பதிப்புச்சூழல் மிகச்சிக்கலான காலகட்டதில் உள்ளது. அரசு நூலகத்துறை நூலகங்களுக்கு நூல்களை வாங்குவதை நிறுத்தியுள்ளது. புத்தகக் கண்காட்சிகளில் சோதிடம், சமையல், ஆன்மீகம், சமயச் சொற்பொழிவாளர்களின் நூல்கள், தொலைக்காட்சி அறிமுகப் பேச்சாளர்களின் நூல்களே பெருமளவு விற்பனையாகின்றன. கல்லூரி, பல்கலைக்கழக நூலகங்கள் ஆண்டுக்கணக்கைச் சரிசெய்யவே நூல்களை வாங்குகின்றன. அவற்றைக் கழிவு அடிப்படையில் பெரும் புத்தக நிறுவனங்கள் கணக்காக விற்பனைக் கணக்கை முடித்துவிடுகின்றன. இந்த நிலையில் தரமான தமிழ்நூல்களை வெளியிடுவோர் நிலை பரிதாபத்துக்குரியதாக உள்ளது. இந்த நிலையில் பேராசிரியர் சு.சண்முகசுந்தரம் அவர்கள் தொடர்ச்சியாகப் பலதுறை நூல்களை வெளியிட்டு வருவது மகிழ்ச்சி தருகின்றது.

நாட்டுப்புறவியல் துறையில் ஆய்வு செய்பவர்களை இந்த உலகம் மற்ற துறையில் ஆர்வம் இல்லாதவர்கள் என்று முத்திரை குத்திவிடுவது உண்டு. சு.சண்முகசுந்தரம் அவர்கள் நாட்டுப்புறவியலிலும், சங்கநூல்களிலும், புத்திலக்கியங்களிலும், திரையிலக்கியங்களிலும் பரந்துபட்ட அறிவுடையவர் என்பதை அவர் பதிப்பித்துள்ள நூல்களே சான்றாக நின்று நமக்கு உணர்த்துகின்றன.

பேராசிரியர் அவர்கள் அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்கள். இவை தமிழ் ஆராய்ச்சித்துறைக்கும், படைப்பிலக்கியத் துறைக்கும் பெரும் பங்களிப்புச் செய்வனவாகும். 1981 இல் பதிப்புப்பணியில் ஈடுபட்ட பேராசிரியர் சு.சண்முகசுந்தரம் அவர்கள் தம் காவ்யா பதிப்பகம் சார்பில் இதுவரை 660 நூல்களைப் பதிப்பித்துள்ளார். 30 ஆண்டுகளாகப் பெங்களூருவில் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி 2006 இல் விருப்ப ஓய்வு பெற்ற பெருமைக்குரியவர் இவர்.

பேராசிரியர் சு.சண்முகசுந்தரம் அவர்கள் நெல்லை மாவட்டம் கால்கரை என்ற ஊரில் 30.12.1949 இல் பிறந்தவர். பெற்றோர் திருவாளர்கள் சுடலைமுத்து தேவர், இசக்கியம்மாள் ஆவர். பிறந்த ஊரிலும், வடக்கன்குளத்திலும் தொடக்கக் கல்வி பயின்ற நம் பேராசிரியர் அவர்கள் இளங்கலைப் பட்டத்தைப் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் முடித்தவர். முதுகலைத் தமிழிலக்கியத்தைச் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பயின்றவர். சென்னைப் பல்கலைக் கழகத்தில் 1977-இல் முனைவர் பட்டத்தைத் 'திருநெல்வேலி மாவட்ட நாட்டுப்புறப் பாடல்களில் சமுதாய அமைப்பு' என்ற தலைப்பில் ஆய்வு செய்து பெற்றவர். 1978 முதல் பெங்களூரு செயின்ட் சோசப் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியைத் தொடங்கியவர். பணி ஓய்வுக்குப் பிறகும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தகைசால் பேராசிரியராகப் பணிபுரிகின்றார். இதுவரை பல்கலைக்கழக நிதிநல்கைக்குழு, செம்மொழி நிறுவனம் ஆகியவற்றில் நான்கு ஆய்வுத் திட்டங்களை மேற்கொண்டு நிறைவுசெய்துள்ளார்.

காவ்யா காலாண்டிதழ்

பேராசிரியர் சு.சண்முகசுந்தரம் அவர்கள் அண்மையில் காவ்யா என்றபெயரில் இலக்கிய வளர்ச்சிக்குக் காலாண்டிதழ் ஒன்றினை வெளியிட்டுவருகின்றார். தரமான ஆய்வுக்கட்டுரைகள் இதழை அழகுப்படுத்துகின்றன. முதல் இதழில் சிறுகதைகள், நேர்காணல்கள், கட்டுரைகள், கவிதைகள், மதிப்புரைகள், திரை விமர்சனம், இலக்கிய நிகழ்வுகள், மூத்த எழுத்தாளர் செயகாந்தன் பேச்சு, உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. மறவர்களும் குற்றப் பரம்பரைச் சட்டமும் என்ற பேராசிரியர் சு.சண்முகசுந்தரம் அவர்களின் கட்டுரை, சங்க இலக்கியத் தொகை நூல்கள் நாட்டுப்புறப்பாடல்கள் என்ற பேராசிரியர் துளசி இராமசாமி அவர்களின் கட்டுரை, உடல் அரசியல் - கழிவறைக் கிறுக்கல்கள் என்ற முனைவர் இரா.அய்யப்பன் கட்டுரை, கோவை ஞானியின் வானம்பாடிகளின் கவிதை இயக்கம், பழந்தமிழ்ச் சமூகத்தில் சமயத்தின் தோற்றம் என்ற சிலம்பு நா.செல்வராசுவின் கட்டுரை முதலியன குறிப்பிடத்தக்கன.

காவ்யா தமிழ்

காவ்யா இரண்டாம் இதழ் முகப்பட்டை

காவ்யா இரண்டாம் இதழ் காவ்யா தமிழ் என்ற பெயருடன் வெளிவந்துள்ளது. செயகாந்தனின் உருசிய நட்புறவு விருது விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் ஆற்றிய ஆழமான இலக்கிய உரை, திராவிடத் தெய்வம் கண்ணகி என்ற பேராசிரியர் சு.சண்முகசுந்தரம் அவர்களின் கட்டுரை, தாமரைத்திரு ந.முத்துசாமியின் நாடகம், நீல பத்மநாபனின் மலையாள கவிதை மொழிபெயர்ப்பு, மா.அரங்கநாதனின் கட்டுரை, துளசி இராமசாமியின் சிலப்பதிகாரம் தெருக்கூத்துக் கதைப்பாடல், இதயகீதனின் கள்ளர்வரலாறு, குறிப்பிடத்தக்கன. மேலும் பதிவுகள், திரைப்பட விமர்சனம், நூல் மதிப்புரைகள், நிகழ்வுகள் காவ்யா புராணம் என்ற தலைப்புகளில் சுவையூட்டும் பல செய்திகள் இடம்பெற்றுள்ளன.

பலதுறைசார்ந்த செய்திகளாகவும், பலதரப்பட்ட வாசகர்களுக்குப் பயன்படும் வகையிலும் இதழ் வெளிவந்துள்ளது. பழைமைக்கும் புதுமைக்கும் பாலம் கட்டும் முயற்சியில் காவ்யா ஈடுபட்டுள்ளதால் வாழ்த்துகின்றேன். ஆய்வுமாணவர்கள் படிக்க வேண்டிய இதழ், ஆராய்ச்சியாளர்கள் படைக்கத் தகுந்த கட்டுரைகளை இந்த இதழில் வெளியிட்டுத் தரமான வாசகர்களைப் பெறலாம்.

அச்சு ஊடகத்தில் இருக்கும் காவ்யா இதழைப் பேராசிரியர் சு.சண்முகசுந்தரம் அவர்கள் மின்வடிவப்படுத்தினால் உலகத் தமிழர்களுக்குப் பெரிதும் பயன்படக்கூடிய இதழாகத் தரம் உயர்த்தலாம். தமிழ் வடவேங்கடம் தென்குமரி எல்லை கடந்து உலகப்பெருவெளியை எல்லையாகக் கொண்டுள்ளது. தமிழின் தரமான செய்திகளைப் படிப்பதற்கு உலகத் தமிழர்கள் ஆயத்தமாக உள்ளனர். கனடாவிலும், மலேசியாவிலும், தமிழீழத்திலும், ஆத்திரேலியாவிலும், சிங்கப்பூரிலும், குவைத்திலும், துபாயிலும் தரமான இலக்கிய ஆர்வலர்கள் தமிழகத்திலிருந்து வெளிவரும் இலக்கியப் படைப்புகளுக்கு - ஆய்வுரைகளுக்கு வானம்பாடி மழைத்தண்ணீருக்குக் காத்திருப்பதுபோல் காத்துள்ளனர். அவர்களுக்கு உரிய மின்வடிவில் காவ்யா தமிழ் அமுதம் படைக்கட்டும். மூத்த பேராசிரியர் சு.சண்முகசுந்தரம் அவர்களின் தமிழ்ப்பணியைத் தமிழ் உலகம் போற்றி மதிக்க வேண்டுகின்றேன்.

காவ்யா தமிழ்- காலாண்டிதழ்
விலை - தனி இதழ் 100-00 உருவா

தொடர்புக்கு:

காவ்யா,
16, இரண்டாம் குறுக்குத்தெரு,
டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை- 600 0024

மின்னஞ்சல்: kaavyabooks@gmail.com
செல்பேசி: +91 9840480232
பேசி: 044- 23726882

காவ்யா பதிப்பகத்தின் இணையதளம்

புதுவையில் பாவேந்தர் சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்துச், சிறப்புச் செய்தல்!


புதுவை முதல்வர் அவர்கள் பாவேந்தர் சிலைக்கு மாலை அணிவித்தல்

தமிழ் மக்களுக்குப் பாடல்கள் வழியாக உணர்ச்சியூட்டித் தமிழ் உணர்வுபெறச் செய்தவர் பாவேந்தர் பாரதிதாசன் ஆவார்.

பாவேந்தர் பிறந்த புதுவை மண்ணில் ஒவ்வொரு ஆண்டும் புதுவை அரசின் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். இன்று(29.04.2012) காலை பதினொரு மணியளவில் புதுவை சட்டப்பேரவையின் எதிரில் உள்ள பாவேந்தர் சிலைக்குப் புதுச்சேரி முதல்வர் ந.அரங்கசாமி அவர்கள், சட்டப்பேரவைத்தலைவர் சபாபதி அவர்கள், அமைச்சர்கள் இராசவேலு அவர்கள், தியாகராசன் அவர்கள், அரசுகொறடா நேரு அவர்கள் மாலை அணிவித்துச் சிறப்புச் செய்தனர். பிற தமிழமைப்புகளைச் சார்ந்தவர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

புதுவையில் உள்ள பாவேந்தர் இல்லத்துக்கு நான் காலை 10 மணிக்குச் சென்றேன். மன்னர் மன்னன் ஐயா எங்களுக்கு முன்னதாக நினைவில்லத்தில் குடும்பத்தினருடன் இருந்தார்கள். பாவேந்தர் சிலைக்கு மாலை அணிவிக்கும் இடத்துக்குப் புறப்படுவோம் என்றார். பாவேந்தர் பெயரன் கோ.பாரதியின் வண்டியில் திரு.மன்னர்மன்னன் அவர்கள் அமர்ந்துகொண்டார். நான் என் வண்டியில் பாவேந்தர் சிலை அமைவிடத்திற்குச் சென்றேன். அங்குப் பொதுவுடைமை இயக்கத்தவர்களும், திராவிடர் கழகத்தினரும் பாவேந்தர் சிலைக்கு மாலை அணிவித்து உரையாடிக்கொண்டிருந்தனர். பல்வேறு இலக்கிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றுகூடினர்.

புதுவை முதல்வர் அவர்களும், அமைச்சர் பெருமக்களும் ஆர்வமுடன் வந்து மாலை அணிவிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பின்னர் பாவேந்தரின் நினைவில்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலக்கிய நிகழ்வுகளை அமைச்சர் பெருமக்கள் பார்வையிட்டு வாழ்த்தினர்.
பாவேந்தரின் குடும்பத்தினர், பாவேந்தர் பற்றாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக ஒன்றுகூடித் தமிழ்ச்சமூக வளர்ச்சிக்குப் பாடல்வழி பாடுபட்ட மாபெரும் பாவலரை நினைவுகூர்ந்தனர்.


மன்னர்மன்னன் ஐயா அவர்களுடன் மு.இ, மற்ற நண்பர்கள்


திராவிடர் கழகத்தினர் ஐயா மன்னர்மன்னன் அவர்களுடன்

நானோர் பாவேந்தன்…


பாவேந்தர் பாரதிதாசன்

பாவேந்தர் பாரதிதாசன் தம்மைப் பற்றி எழுதிய பாடல்

தமிழி லக்கணம் தமிழி லக்கியம்
எனக்குச் சொல்லிக்கொடுத்தவர், புதுவைத்
திருப்புளி சாமி ஐயா, செந்தமிழ்
இருப்பே என்னும் பங்காரு பத்தர்,
புலவர்க்குப் புலமை ஈந்து நிலவு
பெரும்புகழ்ப் பெரிய சாமிப் பிள்ளை
என்பவர் ஆவர். இவர்களின் அருளினால்
பதினே ழாண்டும் பற்றா இளையேன்
நாற்பது புலவர் தேர்வில் முதலாத்
தெரிவு பெற்றேன். காரைக்காலின்
ஒரு பகுதியான நிரவியில் ஓர் இடம்
அந்த இடத்தை அடையக் கருதிப்
புலவர் பல்லோர் போட்டியிட்டனர்.
யானும் பதினெட்டாண் டெய்தினேன். ஆயினும்
இளையன் ஆதலால் அவன் அவ்விடத்தை
அடைதல் ஆகாதென்றனர் ஆள்வோர்.
ஆயினும் நானே அதனை அடையச்
சட்டங் காட்டித் தடைகளை நீக்கி
அன்றுஎனை நிரவி ஆசிரியன் ஆக்கினார்.
அவர் யார்? கல்வித்துறைச் செயலாளர்
பொய்இலா ராகிய “கையார்” என்க.

முப்பத் தேழாண் டலுவல் பார்த்தேன்.
ஓய்வு பெற்றேன் ஊதியப் பேற்றுடன்.
அலுவலில் இருந்த அத்தனை நாளிலும்
அறவழி தவறிய அதிகாரிகளின்
எதிர்ப்பிலா நேரமே இல்லை; அக்கடலை
வென்று நீந்தா வேளையே இல்லை.
அலுவல் கால நிலை இது. ஆயினும்,
ஆசை பற்றிய தமிழின் தொண்டில்
ஒட்டிய என்உளம் வெட்டினும் பிரியாது.

வெண்பா முதலிய எழுதும் என்கை;
வண்ணம் பாடிக் கொண்டிருக்கும் வாய்!
முப்பதாண்டு முடியும் வரைக்கும்நான்
எழுதிய அனைத்தும் என்ன சொல்லும்?
கடவுள் இதோஎன்று மக்கட்குக் காட்டிச்
“சுடச்சுட அவன்அருள் துய்ப்பீர்” என்னும்!
ஆயினும் கடவுளுருவம் அனைத்தையும்
தடவிக் கொண்டுதான் இருந்ததென் நெஞ்சம்!

பாடலிற் பழமுறை பழநடை என்பதோர்
காடு முழுதும் கண்டபின் கடைசியாய்ச்
சுப்பிரமணிய பாரதி தோன்றியென்
பாட்டுக்குப் புதுமுறை புதுநடை காட்டினார்.
நானும் அவர்க்கே எழுத்தியல் உதவுமோர்
தொண்டினால் அவர்க்கும் புலவர்க்கும் தோன்றும்
சண்டையில் வெற்றி கண்டிடச் செய்தேன்.

முட்புதர்க் களாப்பழம் அதனில் மொய்க்கும்
கட்புலம் போல என்றன் உள்ளம்
சாதி என்பதோர் இடரைத் தவிர்த்தும்
சழக்கே என்பதோர் பெரும்படை தாக்கியும்
இளைஞர்களுக்குத் தமிழ்நலம் தந்து ஆசிரியர்
ஆக்குமோர் தொண்டினை நோக்கி நடந்தது.
நல்லாசிரியன்மார் நல்லாசிரியைமார்
பல்லோர் என்னிடம் பயின்றவர் இன்றும்
அலுவலில் அழகுற வாழ்கின்றார்கள்.

திலகர் செய்த உரிமைக் கிளர்ச்சியால்
கொலைமுதற் பற்பல குற்றம் சுமந்த
மாசிலா மனத்து மாடசாமியும்
அன்புறு பாரதி அரவிந் தர்முதல்
வன்முறையுடையரால் வருந்துவார்க்கு உதவியாய்ப்
பன்முறைப் புதுவையில் செத்துப் பிழைத்தேன்.
மக்கள்நலம் காத்தல் கண்டு ஆளவந்தார்
எக்கேடு சூழினும் அஞ்சேன்.ஒருநாள்
சிறைக்கதவு திறக்கப்பட்டது; சென்றேன்;
அறைக்கதவு புனிதப்பட்டது மீண்டேன்.
புதுவை அரசியற் போரில் இறங்குவேன்;
இதைவையேன் எனில் அதை விட்டுவையேன்.
நாய்பல நாற்புறம் வாய்திறக்கினும்
தாய்மொழித் தொண்டும் தவறியதில்லை.

நன்றி மறந்தவர் இன்று வரைக்கும்
குன்று கொணர்ந்து தூற்றுவர்; நன்றெனப்
பட்டதைச் செய்வேன்; பகைவருக்கு அஞ்சேன்.
வாய்ப்பு நேர்ந்த போதெல்லாம் பிறரைத்
தூக்கிவிடுவதில் சோர்ந்ததே இல்லை.

படிப்புத் தந்தேன் சோறுதந்தேன்தலை
எடுக்கச் செய்தேன்; என்தலைதனை அவன்
அறுக்க முயன்ற போதும் சிரித்தேன்;
குறுக்கிற் பாய்ந்தும் பெரியவன் ஆகட்டும்
என்று நினைத்திருக்கின்றேன். இன்றும்!

என்கை பற்றி எழுந்து, பின்என்னையே
துன்புறுத்தும் பிள்ளைகள் பற்றிய
கதைகள் பலஉள. தடைகள் கணக்கில;
எதையும் தாண்டி இந்நாள் எழுபதாம்
ஆண்டினை ஈளைநோய் அங்காந்த வாயையும்
தாண்டி அடைந்தேன்; சாவு தோற்றது!
மெய்யே! ஆயினும் மெய்இலா உலகில்
என்னை இன்னும் வாழச் சொன்னார்
புலவர் இராம நாதன் அவர்கள்!

நானோர் பாவேந்தன் என்பதை
நானிலத் தமிழர் நன்றே அறிவர்.
என்பாட்டுச் சுவையில் ஈடுபட்டவர்
நோக்கினால் நூற்றுக்கு நாற்பதின்மர்.
என்நடை தம்நடை; என்யாப்புத் தம்யாப்பென்று
இந்நாள் எழுந்துள பாவலர் தம்மை
எண்ணினால் இருப்பவர் தம்மில் நூற்றுக்குத்
தொண்ணூற் றொன்பது பேர்எனச் சொல்லுவர்.

திரைப்படப் பாட்டும் பேச்சும் செய்பவர்
இருப்பிடம் என்றன் நூல்களின் இருப்பிடம்!
அவரால் வெளிவந்துள்ள திரைப்படம்
என்நூற் சொல்லை மாற்றியது குறிப்பிடும்!
பழியே தவர்மேல்? என்நூல் அல்லது
வழியேதவர்க்கு? கற்பனை ஏது?
கட்சித் தலைவர்தம் கட்சிக் குழந்தையின்
தொட்டில் ஆட்டப் பாடிய பாட்டும்
வளர்க்கப் பாடி வந்த பாட்டும்
என்பாட்டாகும்! என்பாட்டுக்குப்
பின்பாட்டுப் பாடினோன் அதனைத் தன்பாட்டு
என்று இயம்பும்-இது குன்றின் விளக்காம்!
எனினும் நாட்டுப்பற்றுள நல்லவர்
மிகப்பலர் என்றன் பாட்டின் மேன்மையை
உணர்ந்து சிலசொல் உரைத்த துண்டு.
முட்டுக் கட்டை இட்டதில்லை
மற்றும் தமிழே உயிரென வாழும்
தோழர் சில்லோர் வாழ்வின் பயனென
என்பாட்டுக்களை என்றன் நூல்களை
வரப்படுத்தி முறைப்பட வாய்விட்டு
வீட்டிலும் கூட்டந்தன்னிலும் மிக்க
ஒழங்குறப் பாடுகின்றதும் உண்மையே.

ஒருநாள் ஓரிலக்கம் மக்கள் கூடிக்
கால் இலக்கம் வெண்பொற்காசும்
பொன்னின் ஆடையும் ஈந்ததும் பொய்யன்று.
இவர்களன்றி மேல்நான் இயம்பிய
இழிந்தோர் என்னை ஒழிக்கத் தமிழையே
ஒழிக்கவும் தயங்கா உள்ளம் படைத்தவர்.

புலவர் இராம நாதன் அவர்கள்
தமது பெருந்தமிழ்ப் புலமையால் தாவி
என்றன் நூல்கள் அனைத்தையும் எடுத்துக்
"கவிஞரும் காதலும்" எனப்பெயர் கொடுத்துத்
திறனாய்வு வையம் காணச்செய்தார்.
நான்காணும்அவர் நல்ல எண்ணம்
என்றன் எழுபதாம் ஆண்டின் பின்னும்
நன்றுநான் இன்பமாய் வாழ்வதற்கான
நோற்றலின் ஆற்றல் தருவதாம்! வள்ளுவர்
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கென் றருளினார்.
புலவர் இராம நாதனார் நூல்பல
உலகினுக் களித்துல குளவரை வாழ்கவே.

(01.03.1960 ஆம் நாளன்று பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய இந்தப் பாடல் தஞ்சைப் பேராசிரியர் புலவர் ந.இராமநாதனார் எழுதிய "கவிஞரும் காதலும்" நூலுக்கான வாழ்த்துப் பாவாகும். அனைவருக்கும் பயன்படும் வகையில் பாவேந்தர் பிறந்தநாளான இன்று (29.04.2012) தட்டச்சிட்டு இணையத்தில் பதிகின்றேன்)

சனி, 28 ஏப்ரல், 2012

புதுச்சேரியில் பாவேந்தர் விழா

புதுவையில் அமைந்துள்ள புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் இன்று(28.04.2012) மாலை 7 மணி அளவில் பாவேந்தர் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் வி.முத்து அவர்களின் தலைமையில் விழா சிறப்புடன் நடந்தது.

பொறிஞர் மு.பாலசுப்பிரமணியன் அவர்கள் வரவேற்புரையாற்ற, பாவேந்தரின் மகன் தமிழ்மாமணி மன்னர்மன்னன் அவர்கள் முன்னிலையுரையாற்றினார் புதுச்சேரி அரசு கொறடா திரு.கோ.நேரு அவர்கள் பாராட்டுரை வழங்கப், பாவேந்தரின் பெயரன் திரு.கோ.பாரதி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

சென்னைக் கிறித்தவக் கல்லூரியின் முன்னைத் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் தி.இராசகோபாலன் அவர்கள் பாவேந்தரின் கவிதைச்சிறப்பு குறித்து அரிய சொற்பெருக்காற்றினார். உலகத்துக் கவிஞர்களின் கவிதைகளிலிருந்து பாவேந்தர் கவிதை மேம்பட்டு நிற்பதைத் திறம்பட எடுத்துரைத்தார். ஒரு மணி நேரம் நிகழ்ந்த அரிய உரையில் புதுவைத் தமிழன்பர்கள் ஈடுபட்டு மகிழ்ந்தனர்.


சிறப்பு விருந்தினருக்கு நூல்பரிசு வழங்கும் காட்சி: திரு.தனசேகரன், .தி.இராசகோபாலன், வி.முத்து, மன்னர்மன்னன், கோ.பாரதி உள்ளிட்டோர்


தமிழ்மாமணி மன்னர்மன்னன் உரை


கல்விச்செம்மல் வி.முத்து தலைமையுரை



பேராசிரியர் தி.இராசகோபாலன் உரை

வியாழன், 26 ஏப்ரல், 2012

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை(பெட்னா) பொறுப்பாளர்கள் தேர்வு

வட அமெரிக்காவில் உள்ள, ஐக்கிய அமெரிக்கா மாகாணங்களில் உள்ள தமிழ்ச்சங்கங்கள், கனடா நாட்டில் உள்ள தமிழ்ச்சங்கங்கள் ஆகியவற்றை ஒரு குடையின் கீழ்க் கொண்ட கூட்டமைப்பாக, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக இயங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பேரவையின் ஆண்டுவிழா மிகச்சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு இப்பேரவை 2012 சூலைத் திங்கள் 6, 7, 8 ஆகிய நாள்களில் அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் தனது வெள்ளி விழாவைக் கொண்டாட உள்ளது. இதற்காகத் தாய்த்தமிழகத்திலிருந்து சிறப்பு விருந்தினர்களை அழைத்து வெள்ளிவிழாவை மிகச்சிறப்பாக நடத்த அமெரிக்காவில் வாழும் தமிழ்ப்பற்றாளர்கள் மிகவிரிவாகத் திட்டமிட்டு வருகின்றனர்.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின், 2012-2014 ஆகிய ஆண்டுகளுக்கான தேர்தல் பணிகள் கடந்த ஒரு மாதமாகத், தேர்தல் அலுவலர் திரு.சிவானந்தம் மாரியப்பன்(மின்னசோட்டா தமிழ்ச்சங்கம்) அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்றன.

இத்தேர்தலில், சற்றொப்ப 26 தமிழ்ச்சங்கங்கள், பேரவைப் பேராளர்கள், வாழ்நாள் உறுப்பினர்கள் எனப் பலரும் நேரடியாகப் பங்கு பெற்றார்கள். முடிவில், கீழ்க்கண்டவர்கள் பேரவைப் பொறுப்பாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டதாகத் தேர்தல் அதிகாரி நியூயார்க் நகரில் அறிவித்துள்ளார்.

தலைவர் : முனைவர் தண்டபாணி குப்புசாமி
(பனை நிலம் தமிழ்ச் சங்கம் - சார்ள்சுடன் - தென் கரோலினா)
துணைத் தலைவர்: திரு.பீற்றர் யெரோணிமூஸ்
(வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் - வாசிங்டன் டி.சி.)
செயலாளர்: பதிவர் பழமைபேசி என்கிற திரு. மெளன.மணிவாசகம்
(தென்-மத்தியத் தமிழ்ச் சங்கம் - மெம்ஃபிசு - டென்னசி)
துணைச்செயலாளர்: திருமதி. செந்தாமரை பிரபாகர்
(சார்லட் நகர தமிழ்ச் சங்கம் - வட கரோலினா)
பொருளாளர்: திரு. தங்கமணி பாலுச்சாமி
(அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் - அட்லாண்டா - ஜார்ஜியா)
இயக்குநர் 1: திரு. கரு மலர்ச்செல்வன்
(பேரவை ஆயுட்கால உறுப்பினர் - ஃக்யூசுடன் - டெக்சாசு)
இயக்குநர் 2: திரு. யோபு தானியேல்
(மிசெளரித் தமிழ்ச் சங்கம் - செயிண்ட் லூயிசு - மிசெளரி)
இயக்குநர் 3: திரு. பிரகல் திரு
(கனடியத் தமிழர் பேரவை - கனடா)
இயக்குநர் 4: திரு. சாரங்கபாணி குகபாலன்
(இலங்கைத் தமிழ்ச் சங்கம் - அமெரிக்கா)

தேர்வு செய்யப்பட்ட பொறுப்பாளர்களுக்கு உலகெங்கும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர். புதிய பொறுப்பாளர்கள் அனைவரும், சூலை மாதம் அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் சிறப்பாக நடைபெறவிருக்கும் பேரவை வெள்ளிவிழாவில் தத்தம் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்கள்.

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

புதுச்சேரியில் செவாலியர் இரகுநாத் மனே அவர்களின் நாட்டிய நிகழ்வு




புதுச்சேரியில் பிறந்து, பிரான்சில் வாழ்ந்துவரும் தாளசுருதி அமைப்பின் நிறுவுநரும், புகழ்பெற்ற நாட்டிய, இசைக்கலைஞருமான செவாலியர் இரகுநாத் மனே அவர்களின் புகழ்பெற்ற நாட்டிய நிகழ்வு புதுவை, அம்பலத்தடையார் தெருவில் உள்ள அம்பலத்தாடும் திருமடத்தில் 22.04.2012(ஞாயிறு) மாலை 6.30 மணி முதல் 7.30 மணிவரை நடைபெற உள்ளது. புகழ்பெற்ற நாட்டியக்கலைஞர்கள், இசையார்வலர்கள், வெளிநாட்டுப் பார்வையாளர்கள் பலர் வருகைதருகின்றனர். அனைவரும் கலந்துகொள்ளலாம்.

வியாழன், 19 ஏப்ரல், 2012

புதுவையில் பாவேந்தர் பெருவிழா-2012

புதுவையில் பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் பாவேந்தர் பெருவிழா-2012 கொண்டாடப்பட உள்ளது. 20.04.2012 மாலையில் கலையரங்கம், பாட்டரங்கம், கருத்தரங்கம், நூல்வெளியீடு உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

பாவேந்தர் புகழ் விருது அறிஞர்களுக்கு வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சியில் பாவேந்தரின் மகன் மன்னர்மன்னன், புதுவை சட்டப்ரேவைத் தலைவர் வ.சபாபதி, அமைச்சர் தி.தியாகராசன், சட்டமன்ற உறுப்பினர் க.இலட்சுமிநாராயணன், கல்விச்செம்மல் வி.முத்து, முனைவர் அ.அறிவுநம்பி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். பாவேந்தர் பேரன் கோ.பாரதி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்துகின்றார்

இடம்: வேல்சொக்கநாதன் திருமண நிலையம், புதுச்சேரி
நாள்: 20.04.2012,(வெள்ளிக்கிழமை) நேரம் மாலை 5.30 முதல்

சனி, 14 ஏப்ரல், 2012

பச்சையப்பன் கல்லூரியில் நடந்த திருவள்ளுவர் திருநாள் நிகழ்ச்சி நிரல்(1935)

1935 மே மாதம் 18, 19 ஆகிய நாள்களில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார் தலைமையில் நடந்த திருவள்ளுவர் திருநாள் நிகழ்ச்சி பற்றிய செய்தி செந்தமிழ்ச்செல்வி இதழில்(சிலம்பு 13, பரல் 10) வெளியாகியுள்ளது. இதில் கலந்துகொண்ட அறிஞர்கள், நிகழ்ச்சி நிரல் குறித்த பல செய்திகள் இதில் இடம்பெற்றுள்ளன.



திருவள்ளுவர் நாள் நிகழ்ச்சி நிரல்


திருவள்ளுவர் நாள் நிகழ்ச்சி நிரல்


திருவள்ளுவர் நாள் நிகழ்ச்சி நிரல்

திருவள்ளுவர் ஆண்டு குறித்த மறைமலையடிகளாரின் உரைச்சுருக்கம்

1935 மே மாதம் 18,19 ஆகிய நாள்களில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் முதல்நாள் மறைமலையடிகளார், "திருவள்ளுவரும் திருக்குறளும்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்த உரையின் சுருக்கம் செந்தமிழ்ச்செல்வி இதழில் (சிலம்பு 13, பரல் 10 பவ-வைகாசி) வெளிவந்துள்ளது. இந்த இதழில் திருவள்ளுவர் படம் ஒன்றும் திருக்குறள் குறித்த பிற அறிஞர்களின் அரிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. தனித்தமிழ்த்தந்தை மறைமலை அடிகளாரின் உரைச்சுருக்கம் கொண்ட கட்டுரை உலகதமிழர்களின் பார்வைக்கு வைக்கப்படுகின்றது. திருவள்ளுவர் ஆண்டு குறித்த ஆய்வுக்கு இது உதவும்.


பக்கம் 1


பக்கம் 2


பக்கம் 3


பக்கம் 4


பக்கம் 5

திருவள்ளுவர் திருநாள்


அறிக்கை 1-1


அறிக்கை 1-2


அறிக்கை 2-1


அறிக்கை 2-2

திருவள்ளுவர் பிறந்தநாள் கொண்டாடுவதற்கு விரிவாகத் திட்டமிட்டு 1935 இல் தமிழறிஞர்கள் இரண்டு அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர் என்பதைச் செந்தமிழ்ச்செல்வி இதழ் வாயிலாக அறியமுடிகின்றது. திருவள்ளுவர் ஆண்டுவிழா குறித்த வேறு சில துண்டுச்செய்திகளும் இதழில் காணப்படுகின்றன. இரண்டு அறிக்கைகளையும் ஆய்வாளர்களின் பார்வைக்கு வைக்கின்றேன்.

நன்றி: செந்தமிழ்ச்செல்வி, கழக வெளியீடு

1935 திருவள்ளுவர் விழாவின் அரிய படம்


சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் 1935 மே மாதம் 18 இல் தனித்தமிழ்த் தந்தை மறைமலை அடிகளார் தலைமையில் நடைபெற்ற திருவள்ளுவர் விழாவின் அரிய படம்

நன்றி: செந்தமிழ்ச்செல்வி மாத இதழ்

சனி, 7 ஏப்ரல், 2012

பேராசிரியர் மருதூர் இளங்கண்ணன்


பேராசிரியர் மருதூர் இளங்கண்ணன் (18.04.1932- 29.10.2005)


 பேராசிரியர் மருதூர் இளங்கண்ணன் அவர்கள் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் மருதூரில் வாழ்ந்த கந்தசாமி முதலியார் தனபாக்கியம் அம்மாள் ஆகியோரின் அருமை மகனாகப் பிறந்தவர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் பாலகிருட்டினன் என்பதாகும். இளங்கண்ணன் என்னும் பெயரில் பின்னாளில் அறியப்பட்டவர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்ற பெருமைக்குரியவர். கரூர், கும்பகோணம், சேலம், திருவண்ணாமலை, விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

 பேராசிரியர் மருதூர் இளங்கண்ணன் அவர்கள் பாட்டும் உரையும் வரைவதில் பேராற்றல் மிக்கவர். இவர்தம் உரைநடையில் ஆசிரிப்பாவின் அழகினைக் கண்டு மகிழலாம். சங்க நூற்புலவருக்கு நிகரான மொழிநடை கைவரப்பெற்றவர். இவர் இயற்றிய எழிற்பாண்டியம் நூல் இவர்தம் யாப்புநூற் பயிற்சிக்குச் சான்று பகரும். வனமலர், இன்ப வாழ்வு, மலர்வனம் என்னும் படைப்புகள் என்றும் இவருக்குப் புகழ்சேர்ப்பன. செயங்கொண்டம் உமையாள் தோட்டத்தில் அமைதி வாழ்வு வாழ்ந்து, அருந்தமிழ்த்தாயின் திருவடி அடைந்தவர்.

நூல்: எழிற்பாண்டியம்


எழிற்பாண்டியம்

 எழிற்பாண்டியம் நூலின் முதற்பதிப்பு 1980 இல் வெளிவந்தது. விலை 5.50 ஆகும். 1981 மதுரையில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டிற்கு வரும் வெளிநாட்டுத் தமிழறிஞர்கட்கு நல்வரவியம்பிக் காணிக்கையாக்கப் பெற்றுள்ளது. 101 தலைப்புகளில் பாடல்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடலுக்கும் ஆசிரியர் விளக்கம் தந்துள்ளார். பாடல் புனைந்த நாள், நேரம் ஒவ்வொரு பாடலின் அடியிலும் குறிக்கப்பட்டுள்ளன.

 காதல் வாணிகம் என்னும் தலைப்பில் ஆசிரியர் வரைந்துள்ள பாடலுக்கு அறிமுகமும் பாடலும் கீழ்வருமாறு அமைந்துள்ளது.

 “ஆயிரம் பொருள்வரும் அங்காடி மருங்கில், வருபொருள் குறைவெனின் தருவிலை மிகுதி; வருபொருள் மிகையெனின் தருவிலை குறைவு. இது வாணிகத் துறையின் வழக்கென அறிவோம். ஆனால், அகத்துறை வாழ்விற்கும் அமையுமிவ் விதியெனப் புலம்புகூர் தலைவி புகல்கின்றாள் கேளுங்கள்.

அரும்பெறற் காலை அவா,விலை மிகுதலும்
மிகைவரின், அவாவொடு விலைவீழ்ந்து படுதலும்
வாணிப மருங்கில் வழக்கென மொழிப;அது
காதற்கும் பொருந்தல் காண்க!இன் களவில்
பெறற்கரி தாயநம் பீடுகெழு தோட்கவர்
நயப்போ டளியும் நனிபெரிது; இனியே
நினைதொறும் அதுபெறும் மனையறக் காலை
பொலிமலர் உண்கண் புதல்வற் பயந்ததும்
மலிபொருள் அனைத்துமன் தோளே!
விலையற்று அதற்கவர் விழைந்துசெய் அளியே!

22.10.68 பகல் 12.25

தொடுதோள் பணிமகன் என்னும் தலைப்பில் அமைந்த பாடல் பின்வருமாறு அமைகின்றது.

தெருவிடை அமர்ந்து செருப்புத்தொழில் செய்வோன், தெருப்போவார் அடியெலாம் பார்ப்பதே போல, மகளுக்கு அன்னை மாப்பிள்ளை பார்த்தாள். மகளோ, தன்மணப் பெருஞ்சுமை தன்பெற்றோருக்கில்லாமல், தனக்கேற்ற துணைவனைத் தானாகவே தேடிக்கொண்டாள். மகளின் திறனெண்ணி மகிழ்கின்றாள் அன்னை.

சிலைநிகர் இருபால் இளையரும் மேனிலைக்
கலைபயில் கழகத்து நிலைகுலை வின்றித்
தலைத்தலைச் சிறக்கும் சால்பின் ஒருவனொடு
இயம்படு மொழியின் நயம்படப் பழகி,அவன்
நல்ல்ல நெஞ்சகம் மெல்ல்லப்புக் கினியவன்
மனையகம் பொலியநற் துணையுமா யினளால்,
தொழில்பெறு வேட்கைய தொடுதோற் பணிமகன்
அதரிடைப் படுவோர் அழபார்ப் பதுபோல்
கலைபயில் இளையரைக் காண்தொறும் திரண்ட
மயிர்வார் முன்கையின் மடந்தைமெல் லாகம்
துயில்தகை உண்டுகொல் எனப்பல நோக்கிப்
பன்னாள் முயன்ற என்னினும்
நன்றுவல் லவளென் நல்வியன் னோளே!

நூல்: இன்பவாழ்வு

இன்பவாழ்வு

முதற்பதிப்பு நவம்பர்1958, இண்டாம் பதிப்பு மார்ச்சு 1980. விலை 5.50. இன்பவாழ்வு என்னும் நூல் 13 தலைப்புகளில் செய்திகளைக் கொண்டுள்ளது. ஆசிரியரின் எழிற்பாண்டியம் நூலில் இடம்பெற்ற பாடல்களை அனைவரும் படித்து மகிழ வேண்டும் என்ற நோக்கில் ஆசிரியர் உரையும் பாட்டுமாக இந்த நூலை யாத்துள்ளார். அரிய முன்னுரை நூலுக்கு அழகு சேர்க்கின்றது. ஆசிரியரின் உரைவரையும் திறனுக்கு இந்த நூல் அரிய சான்றாக விளங்குகின்றது.

நூல்: வனமலர் (கவிதைகள்)


வனமலர்

முதற்பதிப்பு 1978 இல் வெளிவந்தது. விலை 5 உருவா. தமிழ்த்தென்றல் திரு.வி.க, தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராசர் ஆகிய பெருமக்களை நினைவுகூர்ந்து ஆசிரியர் வனமலரைத் தமிழ்மக்கள்முன் படையல் செய்துள்ளார். ஆசிரியர் முன்னுரையில், “என் கவிதைகளில் கடுநடை மிக்கனவும் உண்டு. எளிமை மிக்கனவும் உண்டு. வனமலர் நடுத்தர நடையது ஈண்டும் சில அருஞ்சொற்கள் விழுவதை என்னால் தவிர்க்க இயலவில்லை. யான்பெற்ற பயிற்சி அப்படி. என் செய்வது?” என்று குறிப்பிட்டுள்ளார்.

27 தலைப்புகளில் பாடல்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. பயன்தரு குறிப்புகளும் உள்ளன.

நூல்: TREASURE OF CHILDREN சிறுவர் செல்வம்

சிறுவர் செல்வம்

ஆங்கிலத்தில் பாடல் புனைவதிலும் பேராசிரியர் மருதூர் இளங்கண்ணன் அவர்கள் திறன்பெற்றவர். சிறுவர்களுக்கான ஆங்கிலப்பாடலும் அதற்கான தமிழ்ப்பாடலும் கொண்ட தொகுப்பாகச் சிறுவர் செல்வத்தை வழங்கியுளாளர். பதிப்பு ஆண்டு இல்லை. விலை 7.00


நூல்: மலர்வனம்

மலர்வனம்

மலர்வனம் என்னும் தலைப்பில் சிறு நூல் ஒன்றையும் மருதூர் இளங்கண்ணன் எழுதியுள்ளார். 50 காசு விலையுடையது. பதிப்பு ஆண்டு இல்லை. சிறுவர்களுக்கான பாடல்களைக் கொண்ட தொகுப்பு இது. தமிழ்ப்பாடல்களுடன் ஆங்கிலப் பாடல்களும் இடம்பெற்றுள்ளன.

கொக்கு என்னும் தலைப்பில் உள்ள பாடல் சிறுவர்களைக் கவரும் என்பதுபோல் நம் உள்ளத்திலும் நிற்கிறது.

கொக்கு ஒன்று நின்றது!
குளத்து மீனைத் தின்றது!
மீனு விக்கிக் கொண்டது!
விண்ணில் கொக்கு சென்றது!
ஐயோ! எங்கே போனதோ!
அங்கே என்ன ஆனதோ!
உங்களுக்குத் தெரியுமேல்
எங்களுக்குஞ் சொல்லுங்கோ!

பாகற்காய்

பாகற்காய் என்ற தலைப்பில் கீழ்வரும் பாடல் அமைகின்றது.

குண்டுக் குண்டுப் பாகற்காய்!
கொம்பு போலும் பாகற்காய்!
வட்ட வட்டப் பாகற்காய்!
வறுவல் செய்த பாகற்காய்!
உண்டால் கீறிப் பூச்சியை
உடனே கொல்லும் பாகற்காய்!
உண்டு உண்டு மகிழலாம்!
ஓடி யெல்லாம் வாருங்கோ!

என்று அமைந்த பாடல் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியூட்டும்.

பேராசிரியர் மருதூர் இளங்கண்ணன் நினைவுகள்…


 திருப்பனந்தாள் செந்தமிழ்க்கல்லூரியில் நான் பயின்ற பொழுது பொது நூலகத்திற்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அவ்வாறு ஒரு மாலை நேரத்தில் பழைய நூல்களைத் தேடிக்கொண்டிருந்தபொழுது ஒரு நூல் கண்ணில் தென்பட்டது. அதனை இயற்றியவர் மருதூர் இளங்கண்ணன், உமையாள் தோட்டம், செயங்கொண்டம் என்று இருந்தது. நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நம் பகுதியிலிருந்து ஒரு நூல் வெளியாகியுள்ளதே என்ற வியப்பே என் மகிழ்ச்சிக்கான காரணமாகும். மருதூர் இளங்கண்ணன் யார் என்று நண்பர்களை வினவி முகவரி அறிந்தேன்.


பேராசிரியர் மருதூர் இளங்கண்ணன் 

 பின்பொரு நாள் செயங்கொண்டம் சென்று பேராசிரியர் மருதூர் இளங்கண்ணன் அவர்களைக் கண்டு மகிழ்ந்தேன். திருவாளர் கருப்பையா அவர்களின் மருத்துவமனையின் பின்புறம் அகன்ற நிலப்பரப்பில் சிறிய அளவில் குடில் அமைத்துப் பேராசிரியர் தங்கியிருந்தார். எஞ்சிய நிலப்பகுதியைப் பாதுகாப்பதில் பேராசிரியர் அவர்களின் வாழ்க்கை அமைந்தது. பின்னாளில் இந்த நிலம் யாவும் வீட்டுமனைகளாக விற்கப்பட்டன.

 பேராசிரியர் மருதூரார் அவர்களிடம் சற்றொப்ப ஏழாண்டுகளுக்கும் மேலாகப் பழகியுள்ளேன். அவரின் தம்பிதான் பேராசிரியர் பே.க.வேலாயுதம் அவர்கள் என்று அறிந்து மகிழ்ந்தேன். பின்னர் திருச்சிராப்பள்ளிக்குப் படிக்கச் சென்றபிறகு வேலாயுதனாருடன் நல்ல தொடர்பு அமைந்தமையை முன்பும் பதிந்துள்ளேன். இது நிற்க.

 பேராசிரியர் மருதூர் இளங்கண்ணன் அவர்கள் பழகுதற்கு இனிய பண்பாளர். அவர்களின் துணைவியார் மிகப்பெரும் செல்வ வளம் படைத்த குடும்பத்தில் பிறந்தவர்கள். மருதூர் இளங்கண்ணன் அவர்களைச் சந்திக்கச் செல்லும்பொழுதெல்லாம் அம்மா அவர்கள் அன்புடன் விருந்தோம்புவதை வழக்கமாகக் கொண்டவர். என்னை அவர்கள் இருவரும் மகனாகப் பாவித்து அன்புகாட்டுவர். பேராசிரியர் அவர்கள் அன்பு மேலீட்டில் என்னை உரிமையுடன் கண்டிக்கவும் தயங்காதவர். அவரின் முரட்டுக்குரல் இன்றும் என் காதில் ஒலித்தவண்ணம் உள்ளது. பெருஞ்செல்வ வளம் உடையவராக ஐயா அவர்கள் இருந்தார்கள். அதேபொழுது சிக்கனமாகவும் இருப்பார்கள்.

 பேராசிரியர் மருதூர் இளங்கண்ணன் அவர்களின் துணைவியார் பெயர் பத்மாவதி ஆகும். நம் பேராசிரியர் இப்பெயரைத் தமிழ்ப்படுத்தி மருதவதி என்று அமைத்தார். இவர்களுக்கு இரு ஆண்மக்கள் பிறந்தனர். முதல் மகன் எழிற்பாண்டியன், இரண்டாம் மகன் குமாரபாண்டியன் ஆவார்.

 1992 முதல் 1998 வரையில் ஐயாவுடன் நல்ல தொடர்பில் இருந்தேன். அதன்பிறகு ஐயாவைப் பற்றி வினவியவண்ணம் இருந்தேனே தவிர அவர்களைக் கண்டு உரையாடும் வாய்ப்பு பின்னாளில் அமையாமல் போனது. மருதூர் இளங்கண்ணன் அவர்கள் என் நூல் முயற்சியை அறிந்து ஊக்கப்படுத்துவார். என் நூல்களைப் படித்து, பிழை நீக்கி வழங்கியதும் உண்டு. ஒவ்வொரு வாரமும் அவர்களைக் காண வேண்டும் என்று விரும்புவார். ஒருமுறை நான் செல்லத் தவறினாலும் அன்பால் கடிந்துகொள்வார்.

 பேராசிரியர் மருதூர் இளங்கண்ணன் எழுதிய குழந்தைப்பாடல்கள் சிலவற்றை அச்சிட வேண்டும் என்று விரும்பினார் (1998அளவில்). திருச்சிராப்பள்ளியில் இருந்த அரசி கணிப்பொறியகத்தில் அவர்களின் அச்சாக்க விருப்பத்தைச் சொல்லி அறிமுகப்படுத்தினேன். ஆனால் பேராசிரியரின் விருப்பத்துக்கு ஏற்ப அச்சகத்தாரால் ஈடுகொடுக்க முடியவில்லை. அந்த அளவு அச்சகத்தாரைப் பேராசிரியர் அவர்கள் விரைந்து முடிக்கச்சொல்லி விரைவுபடுத்தியதால் அந்த அச்சுப்பணி முடியவில்லை என்று பின்னாளில் அறிந்தேன். பேராசிரியர் அவர்களுக்கு சிறுநீரகக்கல் இருந்தது. ஆனால் இயற்கை மருத்துவத்தில் குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் இறையீடுபாட்டில் இருந்து நிறைவில் இயற்கை எய்தியதாக அறிந்தேன். அவரின் மறைவுக்குப் பிறகு அவர்தம் குடும்பத்தினரைச் சந்திக்க வாய்ப்பு எனக்கு அமையாமல் போனது.

 பேராசிரியர் மருதூர் இளங்கண்ணன் அவர்கள் அனைவரிடமும் அன்புடன் பழகும் இயல்பினர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றபொழுது அனைவராலும் கவிஞரே என்று அழைக்கப்பட்டவர். புகழ்பெற்ற பேராசிரியர்களிடம் கல்வி பயின்ற பெருமைக்குரியவர். ஆங்கிலம், தமிழ் இருமொழிகளிலும் வல்லவர். பாட்டும் உரையும் வரைவதில் பெரும் புலமையுடையவர். உரைநடையில் எழுதினாலும் ஆசிரியப்பா அமைப்பு வந்து இயற்கையாகப் பொருந்தும். அதனால் அவரின் இளம் முனைவர் பட்ட ஆய்வேட்டை மொழிநடையைக் காரணம் காட்டி ஏற்கத் தயங்கினர். பட்டம் பெறமுடியாமல் போனது. ஔவையார் என்ற தலைப்பில் ஐயா அவர்கள் ஆய்வு செய்ததாக நினைவு. அருமையான ஆய்வு. ஆனால் நம் பல்கலைக்கழகங்களின் முரட்டுத்தனமான விதிமுறைகளால் பேராசிரியரால் பட்டம் பெற முடியாமல் போனது. அவரிடம் இருந்த பெரும் செல்வ வளத்தால் ஒரே நாளில் அவர் எழுதியவற்றை நூலாக்கியிருக்கமுடியும். ஆனால் அனுசரித்துப் போகும் இயல்பு ஐயாவிடம் இல்லாததால் அவர்களின் படைப்புகள் வெளிவராமலும் வெளிவந்தவை பரவலாக்கம் பெறாமலும் போயின. எனினும் தமிழ்நூற் பயிற்சியுடைய ஆய்வாளர்கள் முயன்றால் பேராசிரியர் மருதூர் இளங்கண்ணன் அவர்களின் படைப்புகளை ஆய்வு செய்யலாம். பதிப்பித்து வெளியுலகிற்குக் கொண்டுவரலாம்.

 பேராசிரியர் ஒரு மழலையர் பள்ளியை நடத்திய நினைவும் எனக்கு வருகின்றது.

 பேராசிரியர் வேலாயுதம் ஐயாவுடன் உரையாடிக் கொண்டிருந்தபொழுது பேராசிரியர் மருதூர் இளங்கண்ணன் அவர்கள் மறைந்த செய்தியை அறிந்து அதிர்ந்துபோனேன். அவரைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பை இணையத்தில் பதிவற்குப் வேலாயுதனாரிடம் பல ஆண்டுகளுக்கு முன் பெற்று வந்தாலும் பதியாமல் ஐயாவின் புகைப்படம் ஒன்றிற்காகக் காத்திருந்தேன். அரிய அந்தக் குறிப்பும் எங்கோ தவறிவிட்டது. எனவே இருக்கும் செய்திகளையாவது பதிந்துவைப்போம் என்று பதிகின்றேன். பேராசிரியர் மருதூர் இளங்கண்ணன் அவர்களுடன் பழகிய பல நினைவுகள் என் மனக்கண்ணில் தோன்றி மறைகின்றன.

 ஐயா அவர்கள் விருந்தோம்புவதில் பேரீடுபாடு கொண்டவர். ஒருமுறை  அவர்களின் செயங்கொண்டம் வீட்டில் மிகப்பெரிய விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார்கள். அவர்களின் குடும்பத்தார் அனைவரும் கலந்துகொண்டனர். பகலுணவு கறி, கோழி என்று புலால்மணங்கமழ விருந்து நடந்தது. அனைவரும் வயிறார உண்டோம். அம்மா அனைவருக்கும் விருந்து (!) பரிமாறியது நினையுந்தொறும் மகிழ்ச்சி தருகின்றது. அப்பெருமகனார் என்மேல் கொண்டிருந்த அன்பு நினைத்து இருகண்ணில் நீர்பெருகுகிறது. அன்பிற்கு உண்டோ அடைக்குந் தாழ்? நனைகின்றேன்.

நன்றி: இரா.இரவி, மலங்கண்குடியிருப்பு
படம் உதவி:குமாரபாண்டியன்

எழுத்தாளர் சங்கமித்ரா மறைவு


எழுத்தாளர் சங்கமித்ரா

பெரியாரியல் அறிஞரும் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் வடநாட்டிற்குச் சென்று மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தியவரும், பன்னூலாசிரியரும், இதழாசிரியருமான அறிஞர் சங்கமித்ரா அவர்கள் இன்று (07.04.2012) காலை திருச்சிராப்பள்ளி -தென்னூரில் உள்ள மணிகண்டன் பிளாசா குடியிருப்பில் உள்ள அவர்தம் இல்லத்தில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். சங்கமித்ராவுக்கு அகவை 72 ஆகும். நாளை 08.04.2012 காலை எட்டுமணிக்கு உடல் நல்லடக்கம் செய்யப்பெறும்.

பலவாண்டுகளாக என்னுடன் நல்ல தொடர்பில் இருந்த எழுத்தாளர் சங்கமித்ரா அவர்களை மருத்துவர் நா.மாசிலாமணி அவர்கள் எனக்கு அறிமுகம் செய்துவைத்தார்கள். சங்கமித்ரா அவர்கள் எழுதிய ஓர் எருதும் சில ஓநாய்களும் என்னும் நூல் புகழ்பெற்ற ஒன்றாகும். வங்கியில் மேலாளராகப் பணியாற்றிப் பலருக்கும் உதவியாக வாழ்ந்தவர். தன்னம்பிக்கை நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். சங்கமித்ரா பதிலளிக்கிறார், பெரியார் முழக்கம் உள்ளிட்ட பல இதழ்களை நடத்தியவர்.

சங்கமித்ரா அவர்கள் எழுத்தாளர் கி.இரா அவர்களை உயர்வாக மதித்தவர். புதுச்சேரிக்கு வரும்பொழுது மறவாமல் எழுத்தாளர் கி.இரா அவர்களைச் சந்தித்து உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். சங்கமித்ராவின் இறப்புச்செய்தி அறிந்ததும் கி.இரா. அவர்கள் பெரிதும் வருந்தினார்கள்.

சங்கமித்ரா அவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

தரங்கை. பன்னீர்ச்செல்வன் அவர்கள்


தரங்கை. பன்னீர்ச்செல்வன் அவர்கள்

  தரங்கை. பன்னீர்ச்செல்வன் அவர்கள் நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் 26.07.1942 இல் பிறந்தவர். பெற்றோர் சவுரிராசனார், சந்திரவுதயம் ஆவர். பள்ளிப் பருவத்தில் பாடல் புனையும் ஆற்றல்பெற்ற இவர் 1961 இல் தென்மொழி ஏட்டின் அறிமுகத்தால் தனித்தமிழில் பாடல்புனையும் ஆற்றல்பெற்றார். இவர் இயற்றிய கனித்தொகை நூலுக்குப் பேராசிரியர் ந.இராமநாதனார் அவர்கள் ஆய்வுரை வழங்கியுள்ளார்.

  தென்மொழி, பூஞ்சோலை, அறிவு, கைகாட்டி, மாணாக்கன், தமிழ்ச்சிட்டு, தமிழரசு, குயில்(திண்டிவனம் வகாபு), முதன்மொழி, நெய்தல், பாவேந்தர் குயில் (மன்னர் மன்னன்), இளந்தமிழன், தேசியம், கவியமுதம், செந்தமிழ்ச்செல்வி உள்ளிட்ட இலக்கிய ஏடுகளில் தொடர்ந்து பாடல் எழுதி வருபவர்.

  தரங்கை மறுமலர்ச்சி மன்றம், உலகத் தமிழ்க்கழகம், பகுத்தறிவாளர் கழகம், மாணாக்கம் (பொறுப்பாசிரியர்), வேந்தம் (திங்களிதழ் இயக்குநர்), தமிழ்ச்சான்றோர் பேரவை எனப் பொதுப்பணிகளில் கால்பதித்தவர். பாவாணர், பெருஞ்சித்திரனார் கொள்கைகளில் ஈடுபாடுடையவர். முனைவர் தமிழ்க்குடிமகனார், வெ.கோவலங்கண்ணனார், த.ச.தமிழனார், வி.பொ. பழனிவேலனார், ந.நாகராசன் உள்ளிட்டோரின் அன்பில் வளர்ந்தவர். பிள்ளைகளின் பள்ளிச் சான்றிதழ்களில் சாதி தமிழம் எனவும் மதம் நாத்திகம் எனவும் பதிந்தவர்.

இவர் மனைவி இரேணுகாதேவி ஆவார்.

மக்கள் செல்வம்:
ப.இ.செங்கதிர்ச்சோழன்
ப.இ.செம்மொழிப்பிராட்டி
ப.இ.செந்நாவளவன்
ப.இ.செம்புலச்செள்ளை
ப.இ.செந்தமிழ்க்கிள்ளி

தங்கைக்குச் சாதிமறுப்புத் திருமணம் செய்துவைத்தவர்.

தரங்கை. பன்னீர்ச்செல்வன் இயற்றிய நூல்கள்

1. நறுந்துணர்(1971)
2. ஐம்பதிகம்(1974)
3. தமிழ இனமே(1983)
4. இல்லறத்தாரே(1984)
5. தமிழா(1984,85)
6. தலைக்கடன்(1985)
7. நெய்தலகம்(1985)
8. கொற்றவெண்பா
9. பொற்குவை
10. புலனெறி
11. வேந்தம்
12. செந்தமிழ்ச்செய்யுட்கோவை
13. கனித்தொகை(1987)
14. தமிழ்த்தேன்

தரங்கை. பன்னீர்ச்செல்வன் அவர்கள் சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்குச் சென்று தமிழ்முழக்கம் செய்த பெருமைக்குரியவர்.



தரங்கை. பன்னீர்ச்செல்வன் அவர்கள்(இளமைத்தோற்றம்)



நறுந்துணர்



கனித்தொகை



முகவரி:
தரங்கை. பன்னீர்ச்செல்வன் அவர்கள்
6-39, கீழைக்குருவாடி,
போலகம் அஞ்சல்
திருமருகல்(வழி) 609 702, நாகை மாவட்டம்

தரங்கை. பன்னீர்ச்செல்வன் அவர்களுக்குரிய வலைப்பூ

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

மணல்மேட்டு மழலைகள்


மணல்மேட்டு மழலைகள்

என் எழுத்து ஈடுபாடு பாட்டுத்துறையில்தான் முதன்முதலில் இருந்தது. கரணியம் பாவலரேறு பெருஞ்சித்திரனார், பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா ஆகியோரின் பாட்டுநூல்களில் இளம் அகவையில் யான் ஈடுபட்டுக்கிடந்தேன். ஆய்வுத்துறைக்கு வராமல் இருந்தால் நான் ஒரு பாவலனாகவே அறிமுகமாகியிருப்பேன். அந்தத் துறையில் யாரேனும் என்னை ஊக்கப்படுத்தி வளர்த்திருந்தால் ஒரு பாவியம் புனையும் ஆற்றலைப் பெற்றிருப்பேன்.

மாணவப்பருவத்தில் பல மரபு வடிவங்களை அவ்வப்பொழுது எழுதிப் பழகிப் பல பாடல்கள், நூல்கள் வெளியிட்டிருந்தாலும் என்னையும் என் படைப்புகளையும் அறிமுகம் செய்வதற்கோ எடுத்துப் பேசுவதற்கோ நண்பர்கள் அமையாமல் போனதால் நம் முயற்சிகள் பல வெளியுலகிற்குத் தெரியாமலே போயின(என் ஆசிரியர் மருதூர் இளங்கண்ணன் அவர்கள் மிகப்பெரிய பாவலர். சங்கப்பாடல் ஒத்தே அவர் உரைநடை இருக்கும். எழிற்பாண்டியம் உள்ளிட்ட பல நூல் எழுதிய அவரையே பலர் அறியாமல் இருக்கும்பொழுது நாம் அறியப்படாமல் போனதில் வியப்பொன்றும் இல்லை. பேராசிரியர் மருதூர் இளங்கண்ணன் அவர்கள் பற்றி விரைவில் எழுதுவேன்).

சங்க இலக்கிய நடையில் பாடல்புனைபவர்கள் தமிழகத்தில் அருகியே உள்ளனர். அவர்களை அரசும், தமிழமைப்புகளும் போற்ற வேண்டும். விளம்பர வெளிச்சம் இருப்பவர்களே இன்றைய நிலையில் பல்வேறு பரிசில்களைக் கவர்ந்துவிடுகின்றனர். இந்நிலையில் உண்மையான தமிழ்ப்புலமை உடையவர்கள் போற்றப்படவேண்டும். என் அரங்கேறும் சிலம்புகள் நூல் பொதிகள் புதுவையில் நேர்ந்த மழைப்பாதிப்பில் அனைத்தும் பாழடைந்தன. அரங்கேறாமல் என் நூல் “சிலம்புகள்” குப்பைக்குச் சென்றன. அதன் பிறகு மரபுப்பாடல்களை எழுதுவதிலும் வெளியிடுவதிலும் நாட்டம் இல்லாமல் போனது.

ஆனால் மணல்மேட்டு மழலைகள் என்ற மழலைப் பாடல் தொகுப்பை அவ்வாறு என்னால் ஒதுக்கிவைக்கமுடியாது. இந்த நூலின் ஒவ்வொரு பாடல்கள் எழுந்ததற்கும் ஒரு கரணியம் இருக்கும். தமிழகத்தின் தாய்த்தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு என் பாடல்கள் பயன்பட்டன என்பதை அண்மையில் அறிந்து மகிழ்கின்றேன். நல்ல தமிழ்ப்பற்றுடைய குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்று எழுதிய நோக்கம் பத்தாண்டுகளாக நடைமுறையில் இருந்துள்ளதை மேட்டூரில் உள்ள தாய்த்தமிழ்ப்பள்ளியின் முன்னோடி அன்பர் திரு.தமிழ்க்குரிசில் அவர்கள் அறிவித்ததை எண்ணி எண்ணி மகிழ்கின்றேன். தாய்த்தமிழ்ப்பள்ளிக்கு உருவாக்கப்பட்டுள்ள பாடப் புத்தகத்தில் மூன்று பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இனி மணல்மேட்டு மழலைகள் என்ற பாட்டு நூலுக்கு வருவோம்:

மணல்மேட்டு மழலைகள் என்ற பாட்டு நூல்1997 இல் வெளிவந்தது. இது 80 பக்கம் கொண்ட நூல் ஆகும். இந்த நூலில் 33 பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு படம் அச்சிடப்பட்டிருக்கும். இந்தப் படங்கள் 1992 இல் நான் புதுவைப் பல்கலைக்கழகத்தில் படித்தப்பொழுது என் நண்பர் மதிசூடி அவர்களின் தட்டச்சுப் பயிலகத்தில் தங்கியபொழுது ஒரு சுதைச்சிற்பியால் வரையப்பட்டது. அந்த ஓவியர் பெயர் திருவாளர் செல்வம் ஆகும். ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு இந்த நூல் அச்சானது(1997). அண்ணன் திரு. நாகராசன் அவர்கள்(மாணவர் நகலகம்) அச்சிடுவதற்கு உதவினார்கள். நூல் படிகள் யாவும் தீர்ந்தன. மறுபதிப்புக்கு வாய்ப்பு இல்லை. தேவைப்படும் அன்பர்களுக்கு ஒளியச்சில்தான் இந்த நூல்படிகள் அனுப்பிவைக்கப்படுகின்றன.

மணல்மேட்டு மழலைகள் நூலுக்கு மலேசியா நாட்டைச் சேர்ந்த தமிழறிஞர், பாப்பா பாவலர் முரசு.நெடுமாறன் அவர்கள் அணிந்துரை வழங்கியுள்ளார். இந்த அணிந்துரையில் பின்வருமாறு முரசு அவர்கள் பாராட்டியுள்ளார்.

”இப்போது ஆராய்ச்சியுலகின் இளந்தளிரான தம்பி மு.இளங்கோவன் “மணல்மேட்டு மழலைகளை” அறிமுகப்படுத்துகிறார். குழந்தை இலக்கியத்தில் இது இவர்தம் கன்னி முயற்சியாகும். படைப்புலகில் அடியெடுத்து வைக்கும் இவர்தம் முதல் அடியை அழுத்தமாகவே ஊன்றியிருக்கிறார். இவர் எழுப்பும் பாட்டுக்குரல் மழலைத் தென்றலாய்த் தவழ்ந்து வந்து பிஞ்சு மனங்களைத் தாலாட்டுகிறது. தட்டிக்கொடுக்கிறது; ஊக்கமூட்டுகிறது; உயர்நெறிகளை அவர் நெஞ்சில் பதியவைக்கிறது…….
ஒரு நல்ல குழந்தைப்பாவலர் உருவாகிறார் என்னும் நம்பிக்கையை ஊட்டும் இப் படைப்பு, தமிழ்க்குழந்தை இலக்கிய உலகிற்கு ஒரு புதுவரவாகும். வாழ்க! வளர்க! வெல்க! தம்பி இளங்கோவன்! என்று வாழ்த்தியிருந்தார்.

மணல்மேட்டு மழலைகள் நூலில் இடம்பெற்றுள்ள முதல் பாடல் அத்தையைப் பற்றி அமைந்திருக்கும். பாவலர்கள் பெரும்பாலும் அம்மா பற்றியே மிகுதியாக எழுதியிருப்பார்கள். எங்கள் அத்தை எங்கள் மீது அளவுகடந்த பாசம் செலுத்துவார். எனவே அவர் நினைவைப்போற்றி முதல்பாடல் அமைகின்றது

1.அத்தை

அத்தை நீங்கள் வருக!
ஆப்பம் சுட்டுத்தருக!
முத்தம் ஒன்று கொடுப்பேன்!
முன்னே நானும் குதிப்பேன்!

அத்தை நீங்கள் வருக!
அருமைத் தமிழ்நூல் தருக!
முத்தாய் அதனைக் கற்பேன்!
முன்னோர் வழியில் நிற்பேன்!


2.ஏண்டா கண்ணே அழுகின்றாய்

பச்சைக் கிளியே இங்கே வா!
பஞ்சுக் கையால் ஒன்றைத் தா!
இச்சிச் என்றே முத்தங்கள்
எச்சில் ஒழுக அள்ளித்தா!

சோழப்புலியே பாய்ந்துவா!
சுவையாய்க் கனிகள் தந்திடுவேன்!
வேழப் புலியாய் விளங்கிடவே
ஏண்டா கண்டே அழுகின்றாய்!

தென்னன் மீனே திரும்பிப்பார்!
தென்தமிழ் இனத்தை விரும்பிப்பார்!
கன்னல்மொழியில் கதைசொல்வேன்!
கருத்தாய் நீயும் கேட்டுப்பார்!

சேரன் வில்லே செந்தமிழே!
செக்கச் சிவந்த கொய்யாவே
வீரம் நீயும் விளைவிப்பாய்!
வீழ்ந்த தமிழை மலர்விப்பாய்!

3.பொங்கல்விழா

பொங்கல் விழா வந்தது!
புதிய ஆடை தந்தது!
எங்கள் அப்பா வருவார்!
இனிய பழங்கள் தருவார்!

கட்டுக்கரும்பு வாங்குவோம்!
கடித்துத் தின்ன ஏங்குவோம்!
வெட்டித் தருவார் பாதியை!
வீட்டில் வைப்பார் மீதியை!

வெள்ளைச் சோறு பொங்குவோம்!
வெல்லச் சோறும் பொங்குவோம்!
பிள்ளை நாங்கள் உண்ணுவோம்!
பெரிதும் மகிழ்ந்து துள்ளுவோம்!

4.கணிப்பொறி

கணிப்பொறியாம் கணிப்பொறி!
கணக்குப் போடும் கணிப்பொறி!
மணித்துளியில் நூறுவகை
மாற்றம் செய்யும் கணிப்பொறி!

அச்சு வேலை செய்யலாம்!
அழகுப்பொம்மைப் போடலாம்!
வேண்டும் பொழுது மகிழ்ந்திட
விளையாட்டும் ஆடலாம்!

அறிவு உலகின் நுட்பங்கள்
அறிய இதனைக் கண்டனர்!
இளைய தம்பி இதனைநீ
இயக்க இன்றே பழகிடு!

வெளியீடு:
வயல்வெளிப் பதிப்பகம்,
இடைக்கட்டு,உள்கோட்டை(அஞ்சல்)
கங்கைகொண்டசோழபுரம்(வழி)
அரியலூர் மாவட்டம்-612 901