நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 29 ஜூலை, 2011

பனைநிலத்தாரின் வரவேற்பு…


சுந்தரவடிவேல், பழைமைபேசி, நா.முத்துக்குமார், மு.இளங்கோவன்,ரவி தமிழ்வாணன்

அமெரிக்காவின் தெற்குக் கரோலினா மாநிலத்தில் வாழும் தமிழர்கள் பனைநிலத் தமிழ்ச்சங்கம் என்னும் பெயரில் அமைப்பு நிறுவிப் பல்லாண்டுகளாகத் தமிழ்ப்பணியாற்றி வருகின்றனர். அவர்களும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் இணைந்துதான் இந்த ஆண்டு பேரவையின் 24 ஆம் ஆண்டு விழாவைச் சார்ல்சுடன் நகரில் கொண்டாடியது.

முதல்நாள்(01.07.2011) நிகழ்வுக்குச் சார்ல்சுடன் நகரின் கடற்கரை ஓரம் உள்ள மீன்காட்சியக அரங்கில் மாலை ஆறு மணியளவில் கூடினோம். விடுதி அறையிலிருந்து நானும், வானொலி மட்டைப்பந்து அறிவிப்பாளர் அப்துல் ஜப்பார் ஐயாவும் அரங்கிற்குச் சென்றோம்.

போக்குவரவுக்குப் பொறுப்பேற்ற தோழர்கள் விழாவுக்கு வந்தவர்களை அன்புடன் வரவேற்று அழைத்துச் செல்வதில் ஒருவருக்கு ஒருவர் போற்றும்படி முன்வந்து பணிசெய்தனர், தோழர் சுந்தரவடிவேல், பேராசிரியர் தண்டபாணி குப்புசாமி, உள்ளிட்டவர்களின் குழுவினர் அனைத்து நிலைகளிலும் திறம்படப் பணியாற்றினர்.

சார்ல்சுடன் கடற்கரையில் வனப்புடன் திகழும் மீன்காட்சிய அரங்கில் சிறிய அளவில் மேடை அமைத்திருந்தனர். கடற்காற்று தவழும் திறந்தவெளியில் அனைவரும் ஒன்றுகூடிக் கடலழகைச் சுவைத்தபடியும் உரையாடியும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து மகிழ்ந்தோம்.

திரைக்கலைஞர் அண்ணன் நாசர் அவர்களும் அவர்களின் துணைவியார் கமிலா நாசர் அவர்களும் வந்திருந்தனர். அவர்களைப் போல் நகைச்சுவை நடிகர் அண்ணன் சார்லி அவர்களும் வந்திருந்தார். திரைப்பா ஆசிரியர் நண்பர் நா.முத்துக்குமார் அவர்களும் புதுகை பூபாளம் குழுவினரும் வந்திருந்தனர். மேலும் சில திரைக்கலைஞர்கள் வந்திருந்தனர். நாசர் அண்ணன் அவர்களும் சார்லி அண்ணன் அவர்களும் பலநாள் பழகியவர்கள் போல் ஒருவருக்கொருவர் அன்புகாட்டியமை அமெரிக்கத் தமிழர்களைப் பெரிதும் கவர்ந்தன.

தமிழகத்திலிருந்து வந்த நாங்களும் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனோம். எங்களைப் போல் அமெரிக்காவின் பல பகுதிகளிலிருந்து வந்த தமிழன்பர்கள் பலரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனோம்.

புதுச்சேரியில் பிறந்து பணியின் நிமித்தம் அமெரிக்காவில் வாழும் தமிழன்பர்கள் சிலரை உரையாடல் வழியாக அறிய முடிந்தது. அனைவரையும் ஒளிக்கலைஞர் திரு.கண்ணன் அவர்கள் தன் கருவியால் ஒன்றிணைத்தார். அந்தந்த நிமிடங்களை ஒளிக்கலைஞர் திரு.கண்ணன் அவர்கள் உயிருடையதாக மாற்றினார். அனைவரையும் மேடைக்கு அழைத்து முதலில் அறிமுகம் செய்தார்கள். சுருக்கமாக ஒவ்வொருவரும் எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டோம்.

நாளைமுதல் நடைபெறும் விழாக்களில் தொடர்ந்து உரையாடுவோம் என்று கூறி அறிமுகம் ஆனோம். நண்பர் சுந்தரவடிவேல் அவர்கள் என்னுடைய தமிழ் இணைய ஆர்வத்தையும், நாட்டுப்புறப் பாடல்துறையில் எனக்கிருந்த ஈடுபாட்டையும் சொல்லி அறிமுகம் செய்து ஒரு நாட்டுப்புறப்பாடலைப் பாடச்சொன்னார். நானும் ஒரு பாடலைப் பாடி அறிமுகம் ஆனேன். ஒலிவாங்கி இடையில் இயங்க மறுத்ததால் பாடலை இடையில் நிறுத்தி மீண்டும் பாடுவேன் என்று சுருக்கமாக ஓரிரு மொழிகளை மொழிந்து அரங்கினர் உள்ளத்தில் இடம்பிடித்தேன்.

பாட்டும், பேச்சும் தொடர்ந்தபடியே உணவும் பரிமாறப்பட்டது. நம்மூரிலிருந்து வந்த அன்பர்கள் பலரும் அன்றுதான் வானூர்தியில் வந்து சேர்ந்தார்கள். எனவே அவர்கள் உறக்கக் கலக்கத்தில் இருந்தனர். அமெரிக்காவில் மாலைப்பொழுது என்றாலும் அது நம்மூர் விடியற்காலை நேரம் என்பதால் அவர்களால் உணவை விரும்பி உண்ணமுடியாத நிலையில் இருந்தனர். எனக்கு ஓரளவு உடல் ஒத்துழைத்தது.

உணவு முடித்து, மீன்காட்சியகத்தை மேலோட்டமாகப் பார்த்து மகிழ்ந்தேன். நீர்நிலைகளைச் செயற்கையாக அமைத்து அதில் உயிர் வாழும் உயர்வகை மீன்களை உலவவிட்டுள்ளனர். பெரிய வடிவ மீன்கள் அங்கும் இங்கும் செல்வதும் சிறிய மீன்கள் அதனை ஒட்டிக்கொண்டு அங்கும் இங்கும் ஓடுவதாக இருந்தமை கண்கொள்ளாக் காட்சியாகும். சற்றொப்பப் பத்து மணியளவில் நாங்கள் மாலை நிகழ்வை முடித்துக்கொண்டு அறைக்குத் திரும்பினோம்.


கடற்கரையில் தமிழ் ஆர்வலர்கள்

அறையில் என்னுடன் ஒன்றாகத் தங்கியிருந்தவர் வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஜப்பார் ஐயா அவர்கள் ஆவார். இவர் பல செய்திகளை உரையாடலில் பரிமாறினார். இவர் ஒரு செய்திக் களஞ்சியம். அவரைப் பேசச்செய்து ஒளிக்காட்சியாகப் பதிவு செய்து பாதுகாக்க வேண்டும். வானொலி, உலக வரலாறு, மட்டைப்பந்து பற்றிய பல செய்திகளை அவர் எவ்விதக் குறிப்புமில்லாமல் பலமணிநேரம் பேசும் ஆற்றல் உடையவர். உலக ஒலிபரப்புகள் பற்றி அறிவிப்புச் செய்த அந்தப் பெருமகனார் ஓர் உண்மையை மறைக்காமல் நினைவுகூர்ந்தார்.

வானூர்தி நிலையத்திலிருந்து பிரான்சிசு மரியான் விடுதிக்கு வந்த என்னை அன்புடன் வரவேற்ற முத்து அவர்கள் என் கைப்பைச் சுமையைப் பகிர்ந்தவராய் விடுதி அறைக்கு என்னுடன் வந்தார்கள். எங்களுக்கு ஒரு திறவியை விடுதி மேலாளர்கள் தந்ததனர். நாங்கள் முதலில் அறையில் நுழையும் நினைவில் திறப்பதற்குரிய அட்டையைக் கதவுப் பகுதியில் உள்ளிட்டு உள்ளே நுழைந்தோம். எங்களுக்கு முன்பாக அறைக்கு வந்திருந்த அப்துல் ஜப்பார் ஐயாவுக்கு நாங்கள் அறிவிப்பு செய்யாமல் நுழைந்த செயல் பெரிய அதிர்ச்சியைத் தந்தது என்றார்கள்.

ஆம். அவர் அறைக்கு வரும்பொழுது யாரோ சொல்லியனுப்பினார்களாம். இந்தப் பகுதியில் அடிக்கடி திருட்டு நடப்பது உண்டு. எனவே எக்காரணம் கொண்டும் கதவை அறிமுகம் இல்லாதவர்கள் வந்து தட்டினால் திறக்க வேண்டாம் என்று கூறியிருந்தார்கள். அதனால் ஒருவகை அச்சத்தில் இருந்த ஐயாவுக்கு எங்கள் எதிர்பாரா நுழைவு அதிர்ச்சி தந்திருக்கும். நாங்கள் வெளி ஆள் அல்லது கள்வர் என்று நினைத்து ஐயா அவர்கள் அச்சப்பட்டதை மனந்திறந்து சொன்னார்கள். நாம் புதியவராக நுழைந்தாலும் விடுதியில் கதவைத் தட்டிச்செல்வது நன்று என்று ஒரு பாடம் கற்றேன்.

கருத்துகள் இல்லை: