நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 12 அக்டோபர், 2010

வியன்புகழ் கொண்ட பாவாண!


மொழிஞாயிறு பாவாணர்

மட்டம் தட்டித் தமிழ்மொழியை
மாற்றார் பலரும் இகழ்ந்துரைக்கப்
பட்டம் பதவி பொருள்தேடிப்
பாரில் புலவர் வாழ்ந்தனரே!
பட்டம் பதவி பொருள்தேடும்
பாவிக் குமூகம் சேராமல்
திட்டம் போட்டுத் தீவிரமாய்த்
தேன்தமிழ் காத்தாய்! பாவாண!

வில்லை எடுத்துப் போரிட்டு
வீரம் விளைத்தோர் கூட்டத்தில்
சொல்லை எடுத்தே ஆராய்ந்து
சுவையாம் தமிழை வளர்த்தனையே!
சொல்லை எடுத்தே ஆராய்ந்து
சூழ்ச்சி பலவும் ஒளிசெய்தாய்!
நெல்லும் பூவும் தூவிஎழில்
நின்தாள் பணிந்து போற்றுகிறோம்!

அயலான் மொழியைக் கற்றால்தான்
அயலான் மண்ணில் பணிகிடைக்கும்
முயலைப் போலும் நெஞ்சுடையார்
முழங்கும் சொற்கள் கேட்டனமே!
முயலைப் போலும் நெஞ்சுடையார்
மூடத் தனத்தைப் பற்றாமல்
வியனார் புகழ்கொள் பாவாண
விரிதமிழ் காக்க கற்றனையே!

வாழும்போதே அறிஞர்களை
வாடவிட்டே, இறந்தபின்பு
தாழும் மாலை கொண்டோடித்
தலையில் சூட்டி உலகு உருகும்!
தாழும் மாலை கொண்டோடித்
தலையில் சூட்ட யாம்வரினும்
வீழும் பூவைக் கண்டவுடன்
வேண்டல் விளக்கம் தொடங்கிடுமே!

கல்லாக் குழந்தை இந்நாளில்
கல்வி வல்லார் போல்காட்டி
நல்லோர் செயல்கள் பலசெய்து
நாண உலகை மருட்டிடுமே!
நல்லோர் போலும் மலையளவு
நயந்து நூல்கள் கற்றாலும்
எல்லோய்! நீதான் பாவாண
இளமைக் குழந்தை என்பேனே!

பெற்றோர் மறைந்த பின்னாளில்
பொருள்கள் பற்றும் குழந்தையர்தாம்
உற்ற தாயர் தந்தையரை
உள்ளம் உருகிப் போற்றுவராம்!
உற்ற தாயாய்த் தந்தையராய்
ஒளிரும் அறிவு வழங்கியதால்
கற்ற மாந்தர் பலர்கூடிக்
கைகள் தொழுது வணங்குகிறோம்!

(2002 இல் எழுதியது)

கருத்துகள் இல்லை: