நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

பேராசிரியர் ச.சம்பந்தமூர்த்தி அவர்களின் வருகை...




அலுவலகத்துக்குக் கல்லூரிப் பணிநாளிலும், இல்லத்துக்கு காரி, ஞாயிறு கிழமைகளிலும் நண்பர்கள் சிலர் வருகை தந்து மகிழ்ச்சியூட்டுவார்கள். இன்று பேராசிரியர் ச.சம்பந்தமூர்த்தி அவர்கள் கல்லூரிக்கு வருகை தந்து மகிழ்ச்சியூட்டினார். இருவரும் இரண்டுமணிநேரம் சங்க இலக்கியங்கள் பற்றி உரையாடினோம். குறிஞ்சிநிலக் காட்சி பற்றி எங்கள் பேச்சு நகர்ந்தது.

பேராசிரியர் அவர்கள் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், புல முதன்மையராகவும் இருந்து ஓய்வுபெற்றவர்கள். ஐயா பற்றி முன்பே ஒரு பதிவு இட்டுள்ளேன்.அதியச முருங்கையை உருவாக்கிச் சாதனை படைத்தவர். அடிக்கடித் தம் புதுச்சேரி இல்லத்துக்கு அழைப்பார்கள். எனக்கு உள்ள இடைவெளி இல்லாத பணிகளால் காலம் தாழ்ந்துகொண்டே போகிறது. எப்படியும் விரைந்து சென்றுவர வேண்டும்.

பழந்தமிழரின் வேளாண்மை, வாழ்க்கைமுறை பற்றியே எங்கள் உரையாடல் இருந்தது. குறிஞ்சி நிலம் பற்றிய செய்திகளை நினைவிலிருந்த அடிப்படையில் பகிர்ந்துகொண்டோம். கடம்ப மரம் பற்றி நான் சொன்னேன்.அச்சொல் கிரேக்கத்தில்,இலத்தினில் இருப்பதை ஐயா சொன்னதும் எனக்கு மகிழ்ச்சி மேலிட்டது.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தலமரம் கடம்பமரம். அங்குக் கடம்பமரத்தைத் தலமரமாக வைக்க நம் பேராசிரியர் எவ்வளவோ முயன்றும் அதிகாரி ஒருவர் தடைக்கல்லாக இருந்து மரம் நடமுடியாமல் இருந்துவிட்டார்.

குறிஞ்சி பற்றிய செய்தி குறிஞ்சிப்பாட்டு,மலைபடுகடாம், சிலம்பு(குன்றக்குரவை), குறுந்தொகை,குறிஞ்சிக்கலி, குற்றாலக்குறவஞ்சி உள்ளிட்ட நூல்களில் இருப்பதை எடுத்துரைத்தேன். இது பற்றி விரிவாகச் சிந்திக்கவேண்டும்.

எங்கள் பேச்சின் ஊடே தேநீரின் கதை என்ற சிறு நூலை அன்பளிப்பாகத் தந்தார்கள்.40 பக்கம் உள்ள அந்த நூலில் நாம் ஆர்வமுடன் பருகும் தேநீர் வரலாற்றையும்,சிறப்பையும் மிகச்சிறப்பாகச் சொல்லியுள்ளார். இந்த நூலைப் பார்த்ததும் விக்கிப்பீடியாவுக்கு ஒரு நல்ல கட்டுரை கிடைத்தது என்று நினைத்தேன்.பேராசிரியர் செல்வா பார்த்திருந்தால் மிக மகிழ்வார்.

இந்த நூலில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில்தான் தேயிலைச்செடிகள் தோன்றின. வடகிழக்கு மாநிலங்கள்,மியான்மர்,தென்கிழக்குச் சீனா,திபெத் முதலிய பகுதிகளில்தான் தேயிலை முதலில் காணப்பட்டது என்கின்றார்.

தேயிலை பழைய சீனமொழியில் Tu என்று அழைக்கப்பட்டது.இந்த Tu என்ற பெயர்தான் Te ஆக மாறிப் பின்னர் Tea என்று மாறியது என்கின்றார்.இதுபோல தேயிலைக்கு Cha என்ற பெயரும் சீனாவில் வழக்கத்தில் இருந்தது.அந்தப் பெயர் மருவி Chai என்று அழைக்கப்பட்டது என்கின்றார்.

தேயிலையின் தாவரவியல்பெயர் கெமிலியா சைனன்சிசு என்பதாகும்.இந்தத் தேயிலை சீனாவிலும் அசாமிலும் காணப்பட்டது.முதலில் சீனாவில் இருந்த தேயிலைச்செடிதான் கண்டு பிடிக்கப்பட்டது.தேயிலையைச் சைனா இரகம் என்றும் அசாம் இரகம் என்றும் இரண்டாகப் பிரிப்பர்.தமிழ்நாட்டில் அதிகமாகப் பயிரிடப்படுவது அசாம் இரகம் ஆகும்.1823 இல் இராபர்ட்டு புருசு என்ற படைவீரர் அசாமில் தேயிலையைக் கண்டுபிடித்தார்.தேநீரின் வரலாறு சற்றொப்ப 5000 ஆண்டு வரலாறு உடையது என்கின்றார்.

தேநீருக்கு 25 மேற்பட்ட மருத்துவக்குணங்கள் உண்டு என்று நூலில் குறிப்பிட்டுள்ளார்.

தேயிலை புற்றுநோய் வராமல் தடுக்கும்.இரத்தக்குழாயின் உள்சுவற்றைச் சுத்தம் செய்யும்.இரத்த அழுத்தம்,மன அழுத்தம் போக்கும்.குடலைத் தூய்மைப்படுத்தும்.ஊக்கம் தரும்.வாயின் கெட்ட வாடையை நீக்கும்.உடல் எடை குறைக்கும்.சளி,தலைவலி போக்கும்.முகத்தைத் தேநீர்கொண்டு கழுவ பொலிவுபெறும்.

தேயிலை கருப்புத்தேயிலைத்தூள்,பச்சைத்தேயிலைத்தூள்,ஊலாங் தேயிலைத்தூள்,வெள்ளைத் தேயிலைத்தூள் என்று வகைப்படுத்தப்படுவதுண்டு.பச்சைத்தேயிலை சிறந்தது என்றும் இதில் பால் கலக்காமல் உண்டால் நல்ல பயன் உண்டு என்றும் குறிப்பிட்டுவிட்டு மேலும் பயனுடைய பல தகவல்களைப் பேராசிரியர் ச.சம்பந்தமூர்த்தி எழுதியுள்ளார்.எளிய நடையில் அரிய நூல் தந்த பேராசிரியர் நம் மதிப்புக்கும்,நன்றிக்கும் உரியவர்.

தொடர்புக்கு
முனைவர் ச.சம்பந்தமூர்த்தி
40,நான்காவது குறுக்குச்சாலை, இரண்டாவது முக்கியச்சாலை,
மூகாம்பிகை நகர்,
நயினார் மண்டபம், புதுச்சேரி-605 004,இந்தியா
0413-2358848

1 கருத்து:

Murugeswari Rajavel சொன்னது…

தேநீர் குறித்த பல அரிய பயனுள்ள தகவல்களைத் தந்துள்ளீர்கள்.நன்றி