நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 30 ஜூன், 2010

கோவை செம்மொழி மாநாடும் தமிழ் ஆய்வுப் போக்குகளும்


பேராசிரியர் கிரிகோரி சோம்சு தலைமையில் நான் கட்டுரை படைத்தல்

கோவையில் 2010 சூன் 23 முதல் 27 வரை முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடும்,அதன் சார்பாக ஒன்பதாம் தமிழ் இணைய மாநாடும் மிகச்சிறப்பாக நடந்தன.தமிழ் நாட்டரசின் சார்பில் நடந்ததால் அரசு எந்திரத்தின் அனைத்து ஆற்றலும் ஓரிடத்தில் குவிக்கப்பட்டு மாநாடு வெற்றியுடன் நடந்தேறியது.

தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களும்,துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி அவர்களும் ஆர்வமுடன் ஒன்றிணைந்து செயல்பட்டதும்,இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள்,காவல்துறை உயர் அதிகாரிகள் ஒன்றுகூடித் திட்டமிட்டதும் இந்தமாநாட்டின் வெற்றிக்கு அடிப்படைக் காரணங்களாகும்.

மாநாட்டுக்கான இடத்தேர்வு,போக்குவரவு,தங்குமிடம்,உணவு,அரங்க அமைப்புகள், கண்காட்சிகள், சிறப்பு மலர்கள்,பொது அமர்வு,கருத்தரங்க அமர்வுகள் என மாநாட்டின் அனைத்துக் கூறுகளும் எவ்வகையான குறையும் சொல்ல முடியாதபடி இருந்தன.மாநாட்டுக்கு வந்த அனைவரும் மாநாட்டின் சிறப்பினை இவ்வாறு குறிப்பிட்டனர். "இதுபோலும் ஒரு மாநாட்டை எதிர்காலத்திலும் கூட்ட முடியாது. அந்த அளவு இந்த மாநாடு வெற்றியுடன் நடந்தேறியது". ஆம்.இதுவரை நடந்த உலகத் தமிழ் மாநாடுகள் கட்சி மாநாடகாப் பல இடங்களில் நடந்தன. ஆனால் கோவையில் எங்கும் ஆளும் கட்சியினரின் கொடிகளோ,வெட்டுருவங்களோ காணப்படவில்லை.உலகெங்கும் இருந்து வந்த அறிஞர்கள் மாநாட்டைப் போற்றிப் புகழ்ந்த வண்ணம் சென்றதைக் கேட்க முடிந்தது.

ஓரிருவருக்குத் தங்குமிடம் கிடைக்காமல் போனதையும் குறிப்பிட்டார்கள்.பெரும்பபாலும் முன்பதிவு செய்தவர்களுக்கு இடம் மிகச்சிறப்பான விடுதிகளில் ஒதுக்கப்பட்டிருந்தது.இது போன்ற பெரு நிகழ்வுகளில் சிறு குறைகள் தென்படுவது இயற்கைதான்.செய்திப் பரிமாற்றத்தின் இடைவெளியால் மாநாட்டு அரங்கிலிருந்து பலர் இனியவை நாற்பது கண்காட்சிக்குச் செல்ல முடியாமல் தங்கிவிட்டனர்.

தமிழுக்கும்,தமிழருக்கும் பெருமை சேர்க்கும் தமிழாய்வை உலகத் தரத்தில் செய்துவரும் பின்லாந்து பேராசிரியர் ஆசுகோ பார்ப்போலா,பேராசிரியர் சார்ச்சு கார்ட்டு,பேராசிரியர் அலெக்சாண்டர் துபியான்சுகி, ஐராவதம் மகாதேவன்,தினமலர் கிருட்டினமூர்த்தி,கார்த்திகேசு சிவத்தம்பி உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கனவாகும்.

தமிழுக்கு ஆக்கம் சேர்க்கும் உல்ரிக் நிக்கோலசு,மில்லர்,தாமசு லெமான், உள்ளிட்டவர்களை மாநாட்டில் கண்டு பேசும் வாய்ப்பும் எனக்கு அமைந்தது.துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைக் கண்டு பேசவும் வாய்ப்பு கிடைத்தது.

தமிழ் இலக்கிய, இலக்கணங்களை மட்டும் ஆய்வு செய்யும் மாநாடாக இல்லாமல் தமிழர்களின் தொழில்நுட்பம்,அறிவியல்,வானியல், கட்டடக்கலை, கடலியல்,கப்பல் கலை பற்றிய செய்திகளை விளக்கும் மாநாடாகவும் இது விளங்கியது.அறிவியல் அறிஞர்கள் மயில்சாமி அண்ணாதுரை(சந்திரயான் திட்ட இயக்குநர்),நா.கணேசன்(நாசா விண்வெளி ஆய்வுமையம்,நெல்லை சு.முத்து,ஆரோக்கியசாமி பால்ராசு, ஆகியோரின் உரை கேட்கும் வாய்ப்பும் கண்டு உரையாடும் வாய்ப்பும் எனக்கு அமைந்தன.

செம்மொழி மாநாட்டுக்கு 2605 விருந்தினர்கள் உள்நாட்டிலிருந்தும்,வெளிநாட்டிலிருந்தும் வந்துள்ளனர்.இவர்கள் 92 விடுதிகளில் 1242 அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 55 தலைப்புகளில் 239 அமர்வுகளில் 913 ஆய்வுக்கட்டுரைகள் ( சூன் 24 முதல் 27 வரை ) படைக்கப்பட்டுள்ளன. 50 நாடுகளிலிருந்து 840 வெளிநாட்டுப் பேராளர்கள் வந்துள்ளதாகத் தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்(தினமணி 29.06.2010).

ஆய்வுக்கட்டுரைகள் சங்க இலக்கியப் புலவர்களின் பெயரில் திருவள்ளுவர் அரங்கு,இளங்கோ அரங்கு,நக்கீரர் அரங்கம்,கபிலர் அரங்கு,பரணர் அரங்கு,ஔவை அரங்கம்,பூங்குன்றனார் அரங்கம், வெள்ளிவீதியார் அரங்கம், பெருஞ்சித்திரனார் அரங்கம்,கோவூர் கிழார் அரங்கம், சாத்தனார் அரங்கம், காக்கைபாடினியார் அரங்கம்,அம்மூவனார் அரங்கம்,மாசாத்தியார் அரங்கம், நக்கண்ணையார் அரங்கம்,மாமூலனார் அரங்கம், மாங்குடி மருதனார் அரங்கம், உருத்திரங் கண்ணனார் அரங்கம், நப்பூதனார் அரங்கம்,பிசிராந்தையார் அரங்கம்,கல்லாடனார் அரங்கம், கம்பர் அரங்கம் என்று பெயரிடப்பட்டுக் கட்டுரை படிக்க உரிய இடமாக அமைந்தன.

கட்டுரை படைக்கப்பட்ட காட்சிகள் யாவும் காணொளியில் பதிவு செய்யப்பட்டன.
கட்டுரை படைக்கப்பெற்ற அரங்கு தவிர வளாகங்களில் அமர்ந்து உரையாட நிறைய இடவசதிகள் இருந்ததால் பலரும் வெளியில் அமர்ந்தும் கலந்துரையாடினர்.வளிக்கட்டுப்பாட்டு அறை என்பதால் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

தொல்காப்பியர் அரங்கில் பொது அமர்வுகளும்,ஆய்வரங்கத் தொடக்க விழாவும் நடந்தன. ஆய்வரங்கத் தொடக்க விழாவைத் தமிழ் நாட்டு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் தொடங்கிவைத்துச் சிறப்புரையாற்றினார்.

உலகெங்குமிருந்து வந்திருந்த தமிழறிஞர்கள் பலருடன் பழகும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. கனடாவிலிருந்து வந்திருந்த யோகரத்தினம்(திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்), மில்லர்,மன்னர்மன்னன்(மலேசியா)திண்ணப்பன்(சிங்கப்பூர்),இரத்தின.வேங்கடேசன்(சிங்கப்பூர்),ஆ.இரா.சிவகுமாரன்(சிங்கப்பூர்),மலேசியாவைச்சேர்ந்த பாவலர் சீனி நயினா முகம்மது, திருச்செல்வம், இளந்தமிழ், முத்து நெடுமாறன்,முரசு நெடுமாறன்,நற்குணன்,மதிவரன்,குமரன் உள்ளிட்டவர்களைக் கண்டு உரையாடினேன்.மேலும் தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த திண்ணப்பன் அவர்களுக்கு அவர் ஆய்வு தொடர்பாக உதவும் வாய்ப்பும் எனக்கு அமைந்தது.

அமெரிக்காவிலிருந்து வந்த ஆல்பர்ட்டு பெர்னான்டோவையும் இலண்டனிலிருந்து(பி.பி.சி) வந்திருந்த எல்.ஆர் செகதீசன் அவர்களையும்,பிரான்சிலிருந்து வந்த பேராசிரியர் முருகையன், பெஞ்சமின் லெபோ ஆகியோரையும் கண்டு உரையாடினேன்.

நான் பேராசிரியர் கிரிகோரி சோம்சு(ஹாங்காங்) அவர்கள் தலைமையில் தமிழ் மின் அகரமுதலிகள் என்ற தலைப்பில் செம்மொழி மாநாட்டில் கட்டுரை படித்தேன்.தமிழ் இணைய மாநாட்டில் தமிழ் இணையம் வளர்ச்சியும்,வாய்ப்பும் என்ற தலைப்பில் பேராசிரியர் கிருட்டினமூர்த்தி அவர்கள் தலைமையில் உரை நிகழ்த்தினேன்.

மேலும் தமிழ் இணைய மாநாட்டில் வலைப்பதிவு,தமிழ் இணையப் பயிலரங்கு நடத்துதல் பற்றிய என் பட்டறிவுகளைத் திரு.பத்ரி முன்னிலையில் இரவி, தேனி சுப்பிரமணியுடன் இணைந்து பகிர்ந்து கொண்டேன்.

நிறைவு விழா வரை இருந்து உலகத் தமிழர்களுடன் இணைந்து தமிழாராய்ச்சிப் போக்குகளை அறிந்து வந்தேன்.

கருத்துகள் இல்லை: