நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 1 ஜூன், 2010

மண்மணம் மாறாத மருதூர்...

அரியலூர் மாவட்டம் செம்மண் நிறைந்த பகுதி.ஒரு வரியில் எழுதலாம். பொட்டல்காடு. செம்பறாங்கல் அடுக்குகளால் சிந்தைந்து கிடக்கும் ஊர்கள்;வறண்ட நிலங்கள் எங்கும் தெரியும்.முந்திரித் தோப்புகள் மிகுதி.வேலை வாய்ப்பு குறைந்த பகுதி.எனவே இளைஞர்கள் வெளிநாட்டுக்கும்,வெளி மாநிலங்களுக்கும் புறப்பட்டுவிடுகின்றனர்.எத்தனையோ வரலாற்றுச் சுவடுகளை இந்தப் பகுதி கொண்டுள்ளது.

கங்கைகொண்டசோழபுரம்,உடையார்பாளையம் குறுநிலமன்னர்களின்(ஜமீன்) அரண்மனை, அரியலூர் பாசில்கள்,சுதைமாவுக்குரிய (சிமெண்டு) உருவாக்க உதவும் மண் வளம் கொண்ட பகுதி இது.இங்கு உள்ள நிலக்கரி உலக அளவில் தரமானது.அதனால் இந்தப் பகுதியை நெய்வேலிக்கு அடுத்துக் குறிவைத்து மக்களை வெளியேற்றும் முயற்சி எப்பொழுதோ தொடங்கிவிட்டது.ஒரு வரலாற்றுச்சின்னம் காசுக்கு விலையாகிவிட்டது.

அறிவாற்றலில் சிறந்த எத்தனையோ மேதைகள் இந்தப் பகுதியில் பிறந்தாலும் அவரவர்கள் பணிக்குச் சென்று நகரப்பகுதிகளில் தங்கிவிட்டதால் வறண்டு கிடக்கும் இந்தப் பகுதி வரைபடங்களில் மட்டும் வாழ்ந்துகொண்டுள்ளது.உடையார்பாளையம் வேலாயுதம், ஆயுதக்களம் ஆ.கோ.இராகவன்,சுண்ணாம்புக்குழி தியாகராசன் உள்ளிட்ட மிகப்பெரிய தலைவர்கள் பிறந்து வளர்ந்த இந்தப் பகுதியில் திராவிட இயக்கம் மிகச்சிறப்பாக வளர்ந்தது.தந்தை பெரியார் அறிஞர் அண்ணா உள்ளிட்ட தலைவர்களுக்கு விருப்பமான பகுதியாக இது இருந்தும் அரசால் சரியாகக் கண்டுகொள்ளப்படாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டது.

செயங்கொண்டம், ஆண்டிமடம்,மீன்சுருட்டி,தா.பழூர்,உடையார்பாளையம்,செந்துறை என்ற பேரூர்கள் இந்தப் பகுதியில் உண்டு.இவற்றைச் சார்ந்து எத்தனையோ சிற்றூர்கள் உண்டு. ஊராட்சிகள் உண்டு. இந்தப்பகுதியில் உருவான நாடாளுமன்ற உறுப்பினர்களோ,சட்டமன்ற உறுப்பினர்களோ இந்தப் பகுதி மக்களிடம் ஒப்போலை கேட்டு ஊர்வலம் வருவதோடு சரி.அதன் பிறகு மக்கள் வளர்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் உரிய பணிகளைச் செய்ததே இல்லை என்பதை இந்தப் பகுதியில் வளர்ச்சியில்லா நிலைமைகொண்டு உணரலாம்.குறைந்த அளவு அடுத்த தேர்தல் பற்றி கூட சிந்திக்காத இவர்களா அடுத்த தலைமுறை பற்றி சிந்தித்துவிடப் போகிறார்கள். செயங்கொண்டம் தொகுதி தமிழக அரசியலில் அண்மைக்காலமாக நன்கு அறிமுகமான பெயர்தான்.தன்னுரிமை பெற்று மணிவிழா கொண்டாடிய பிறகும் செயங்கொண்டத்தில் அரசு கல்லூரியோ,பல்தொழில்நுட்பக் கல்லூரியோ, தொழில்நுட்பக் கல்லூரியோ,வேறு தொழிற்சாலைகளோ கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லாமல் போனது.மாந்த வளம் வீணாகிப் போவதை யாரும் உணரவில்லை.இக்குறையைப் போக்க இப்பொழுது சில தனியார் கல்லூரிகள் முளைத்துள்ளன.

மிக மிகப் பின்தங்கிய மக்கள் வாழும் பகுதியில் அரசு நிறுவனங்கள் என்றால் குறைந்த செலவில் மாணவர்கள் உயர்கல்வி படிக்கலாம்.தனியார் கல்லூரியில் படிப்பது மாணவர்களுக்கு மிகப்பெரிய சுமையாகவே இருக்கும்.

செயங்கொண்டம் பேருந்து நிலையம் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு என் பதிவில் எழுதியிருந்தேன்.இப்பொழுது சிறு முன்னேற்றம் கண்டேன்.மக்கள் ஓய்வெடுக்க கட்டடப் பகுதிகள்,கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.நம் மனக்குறை இந்தப் பகுதியில் அரசு கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், வேளாண்மைக் கல்லூரிகள்,சமுதாயக் கல்லூரிகள் உருவாக்கப்பட வேண்டும்.கும்பகோணம் அரியலூர் சென்று படிக்கும் மாணவர்கள் செயங்கொண்டம், ஆண்டிமடத்தில், மீன்சுருட்டியில், கங்கைகொண்ட சோழபுரத்தில் கல்லூரிப்படிப்பை நிறைவுசெய்யும் வகையில் புதிய கல்லூரிகள் உருவாக்கப்பட வேண்டும்.இதனால் பல குடும்பங்கள் கல்விக்கண் பெறும். "கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்காக் கசடர்க்குத் தூக்கு மரம் அங்கே உண்டாம்" என்று பாடினார் பாவேந்தர் பாரதிதாசன். இத்தகு ஏக்கப்பெருமூச்சுடன் ஊருக்குச் செல்லும்பொழுதெல்லாம் இந்த நினைவுடன் ஊரை வலம் வருவேன்.

நேற்று(31.05.2010) என் பிறந்த ஊருக்கு வீட்டுப்பணியின் பொருட்டுச் சென்றிருந்தேன்.
தச்சர் சில மரப்பலகைகள் தேவை என்று ஒரு பட்டியல் கொடுத்தார்.மரம் வாங்குவதில் பட்டறிவு எனக்கு இல்லை.இருப்பினும் செயகொண்டத்தை அடுத்த மருதூர் என்ற ஊரில் என் பல்கலைக்கழகப் படிப்பின் ஒரு காலப் படிப்பினராகிய திரு.செ.ஆனந்தக்குமார் அவர்களின் நினைவு எனக்கு வந்தது. அவருக்குத் தொலைபேசியில் என் திட்டம் பற்றி சொன்னேன். அவரும் என்னை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்க ஆர்வமுடன் இருப்பதை உரையால் உறுதிப்படுத்தினார்.

எங்கள் வீட்டருகே 10.50 மணிக்குச் சிற்றுந்து ஏறி-செயங்கொண்டம் சென்றேன்.அங்கிருந்து ஒரு நகரப் பேருந்து பிடித்து மருதூர் தெற்குப்பட்டியில் இறங்கும் பொழுது 12.45 மணி இருக்கும்.(சற்றொப்ப 20 கல் தொலைவை அடைய இரண்டு மணி நேரம் பிடித்தது. அண்மையில் மலேசியாவில் ஈப்போ- நகரிலிருந்து கோலாலம்பூர் வர 202 கி.மீட்டர் இரண்டு மணி நேரத்தில் வந்தேன்).

மருதூர் பற்றி முன்பே அறிவேன்.என் பேராசிரியர்கள் மருதூர் இளங்கண்ணன்(எழிற்பாண்டியம் நூலாசிரியர்),மருதூர் வேலாயுதம் போன்றோர் பிறந்த ஊர் இதுவாகும்.இத்தூய மண்ணில் இன்று கால் பதித்தோமே என்ற பெருமிதம் எனக்கு உண்டானது.நண்பர் ஆனந்தக்குமார் எனக்காகக் காத்திருந்தார்.அவர் என்னை எதிர்கொண்டு அழைக்க ஓர் உந்துவண்டி இரவல் பெற்று வைத்திருந்தார். இந்த வண்டியில் ஏறி அமர்ந்து பட்டை வெயிலில் அலைந்து மரவாடியில் மரம் பார்த்தோம்.

இரண்டு சோடி மாம்பலகை வாங்கினோம்.அதன் பிறகு பூவரசம் பலகை,சட்டம் வாங்க பொன்பரப்பி மரவாடிக்குச் சென்றோம்.பொன்பரப்பி தமிழ் உணர்வாளர்க்கு நன்கு நினைவுக்கு வரும் ஊர்தான்.இந்த ஊரில் பிறந்த திரு.வ.செல்வகணேசன் என்ற நண்பர் ஒருவர் என்னுடன் பனசைக்கல்லூரியில் (1987-90) படித்த்துள்ளார்.அவர் இப்பொழுது ஆசிரியர் பணி கிடைத்து வெளியூரில் இருப்பதாக அறிந்தேன்.

அதனிடையே நண்பர் ஆனந்தக்குமார் இல்லத்தில் பகலுணவு. வீட்டுப்பொருள்கள் கொண்டு அமைந்த உணவு.அன்புடன் விருந்தோம்பல்.என் புகைப்படக்கருவியை ஊரிலேயே வைத்துவிட்டுச் சென்றமை ஒரு பெருங்குறையாகும்.

இயக்குநர் பாரதிராசா அவர்களின் புகைப்படக்கருவிக்குக் கிடைக்காத அரிய சிற்றூர் வாழ்க்கை.ஆனந்தக்குமார் வீடு அத்தகு படத்தில் இடம்பெற வேண்டிய வீடு.செயற்கை இல்லாத வீடு.வீட்டுத்திண்ணையில் ஈன்று அணிமைத்தான ஒரு கன்று கழிந்தபடி படுத்திருந்தது.அருகில் கடலைக்கொடி திண்ணையில் அடுக்கி வைத்திருந்தார்கள்.மூட்டை முடிச்சுகள்;தொம்பை; குதிர்;பத்தாயம்,முந்திரிக்கொட்டை காய்ந்தது.வரகு வைக்கோல்; சோளத்தட்டை;கத்தரி வத்தல்;காய்ந்த முந்திரிப்பழம்;வீடு முழுக்க குழந்தைகள்.எனக்கு நீண்ட நாளுக்குப் பிறகு இந்தக் காட்சியைப் பார்த்தோமே என்ற வியப்பு.

மருதூர் மிகப்பெரிய ஊராகும்.ஆனால் இப்பொழுதுதான் மாடிவீடுகள் கட்டப்படுகின்றன. பெரும்பாலான வீடுகள் கூரை.இயக்குநர் பாரதிராசா படத்தில் வரும் கூரைவீடுகளிலிருந்து வேறுபட்டவை.வீட்டுக்கு வீடு கட்டில்;வைக்கோல் போர்;ஆடு மாடுகள்;மூன்றுமணி நேரத்திற்கு மேல் ஒரு படம் பார்த்த நிறைவு எனக்கு;சந்துபொந்துகளில் நுழைந்து வந்தோம்.இத்தனை நூற்றாண்டான பிறகும் இந்த ஊரின் பழைமையை யாராலும் சிதைக்கமுடியவில்லையே என்ற பெருமகிழ்ச்சியில் ஊரைச்சுற்றிப் பார்த்தோம்.

ஒரு பலாப்பழத்தை உறவினர் வீட்டுத் தோட்டத்திலிருந்து ஆனந்தக்குமார் எனக்கு வாங்கிவந்தார்.நானும் தோட்டத்துக்குப் போனேன்.பலா மரத்தில் பழங்கள் அடுக்கடுக்காக காய்த்துத் தொங்கின."சிறு கோட்டுப் பெரும் பழம்"குறுந்தொகை வரிக்குரிய பொருளை எண்ணி எண்ணி வியந்தேன்.அருகில் இருந்த முந்திரியில் பச்சைக்கொட்டை இருந்தன.பல ஆண்டுகளுக்குப் பின்னோக்கிப் போனேன்.என் சிறிய தந்தையார் குளத்தூர் என்ற அவர் ஊருக்கு எங்களைக் கோடைவிடுமுறைக்கு அழைத்துச்சென்று முந்திரிக்காட்டில் ஒரு மாதம் வாழ வாழி செய்வார்.என்னே மகிழ்ச்சி! காய்ந்த முந்திரிக்கொட்டையைச் சுட்டும்,பச்சை முந்திரிக்கொட்டையை வகுந்தும் எங்களுக்கு வாரி வழங்கிய அவர் உருவம் நினைவில் மட்டும் காணமுடிந்தது(இது முப்பதாண்டுகளுக்கு முன் நடந்தவை).

பொன்பரப்பியில் சில மரச்சட்டங்களையும் பலகைகளையும் விலைக்குப் பேசினோம். நாளைதான் அறுத்துத் தரமுடியும் என்றார் மர வணிகர்.முன்தொகை கொடுத்து நண்பர் ஆனந்தக்குமார் இருக்கும் துணிவில் வாங்கி அனுப்பும்படி சொன்னேன்.நான்கு மணிக்கு மரப்பலகையுடன் திரும்பலாம் என்று நினைத்த எனக்கு ஆறுமணி வரை மரம் இருப்பதே தெரியாத நிலை.நான் என் பிறந்த ஊர் சென்று அங்கிருந்து புதுச்சேரிக்கு இரவே திரும்பும் திட்டம்.எனவே ஆனந்தக்குமார் வழங்கிய ஒரு பலாப்பழத்துடன் என் பிறந்த ஊர் சென்று,ஐந்து நிமையம் தங்கிப், புதுச்சேரிக்கு இரவு பதினொரு மணிக்கு வந்து சேர்ந்தேன்.பலாப்பழம் போன்றவர் ஆனந்தக்குமார்.

1 கருத்து:

சோழன் சொன்னது…

//உடையார்பாளையம் வேலாயுதம்//
வாழ்த்துக்கள் ஐயா
வேலாயுதம் அவர்கள், ஜெயங்கொண்டத்தை அடுத்த கரடிகுளத்தை சேர்ந்தவர் .
அவர் வாழ்க்கை வரலாறு
நூலாக வந்து விட்டது .
நம் ஊரைப்பற்றி விரிவாக எழுதியமைக்கு
நன்றி
சோழன்
வாரிலியங்காவல்