நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 29 மே, 2010

செம்மொழித்தொண்டர் சீனி நைனா முகம்மது


செ.சீனி நைனா முகம்மது

  20.05.2010 இரவு பதினொன்று முப்பது மணியளவில் எங்கள் மகிழ்வுந்து பினாங்கு நகரின் ஒளிவெள்ளத்தில் நீந்தியபடி சென்று சைனா சித்திரீட்டு பகுதியில் உள்ள 'உங்கள் குரல்' இதழ் அலுவலகத்தில் நின்றது.எங்கள் வருகைக்குக் காத்திருந்தவராக ஐயா சீனி நைனா முகம்மது அவர்கள் எங்களை அன்பொழுக வரவேற்றார். முதல்மாடியில் இருந்த இதழ்க் குவியல்களுக்கு இடையே சீனி ஐயாவின் அலுவலகம் இருந்தது.அவரே தட்டச்சு முதல் இதழ் வடிவமைப்பு வரை அனைத்து வேலைகளையும் பார்ப்பதாகச் சொன்னார்கள்.


உங்கள் குரல் இதழ் முகப்பு

 மலேசியாவில் வெளிவரும் தூய தமிழ் இதழ்களில் உங்கள் குரல் குறிப்பிடத்தக்கது. சீனி நைனா முகம்மது அவர்கள் ஆசிரியர். குறைந்த படிகள் அச்சானாலும் மலேசியாவில் மொழி வளர்ச்சிக்குப் பாடுபடும் இதழாக உங்கள் குரல் உள்ளது.தமிழ் ஆர்வம் கொண்ட அன்பர்கள் ஐயாவுக்கு உதவியாக இருந்து இதழ் வளர்ச்சிக்குத் துணைநிற்கின்றார்கள். ஐயா அவர்களின் இளமைப்பருவம் அறிந்து வியப்புற்றேன்.பள்ளிப்படிப்பை மட்டும் பெற்ற ஐயா அவர்கள் தமிழின் மேல் இருந்த ஈடுபாட்டால் தாமே தொல்காப்பியத்தைப் பயின்று இன்று மலேசியாவில் தொல்காப்பியத் தொடர்ப்பொழிவுகள் செய்கின்றார்கள். உரைகள், பொழிவுகள் வழியாக மலேசியாவில் தொல்காப்பியத்தை நிலைபெறச்செய்துள்ளார்.

 என் முயற்சிகளை நண்பர்கள் சுப.நற்குணன்,மதிவரன்,தமிழ்ச்செல்வம் ஆகியோர் எடுத்துரைக்க என்மேல் ஐயாவுக்கு அன்பு மேலிட்டது. இருவரும் தொல்காப்பிய ஆய்வில் புகுந்தோம். தொல்காப்பியத்தில் இடம்பெறும் பெயரியல் வினையியல் பகுதிகளை விளக்கப் புகுந்த ஐயா அந்தப் பொருளில் இன்னும் செய்ய வேண்டிய ஆய்வுகளை எனக்கு எடுத்துரைத்தார்கள். மாணவனாக அமர்ந்து தொல்காப்பியம் குறித்து பல உண்மைகளை அறிந்தேன்.


நானும் சீனி ஐயாவும்

  அந்த நேரத்தில் மலேசியாவில் இருக்கும் அன்பர்களின் மொழி குறித்த எண்ணம் பற்றி நண்பர் சுப.நற்குணன் அவர்கள் எடுத்துரைக்க ஐயா நக்கீரனார் போலும் கனன்று தமிழ் உணர்வு மீதூரப்பெற்று மிகச்சிறந்த மொழியியல் விளக்கங்களை எடுத்துரைத்தார்.பன்மொழியறிவு பெற்ற நம் சீனி ஐயா அவர்கள் தமிழ், ஆங்கிலம், மலாய், உருது மொழிகளிலிருந்து மேற்கோள் காட்டித் தமிழ் மேன்மையை எடுத்துரைத்தார்கள். எனக்கு வாய்த்த இசுலாமிய சமய ஈடுபாடு கொண்ட அன்பர்களுள் சீனி அவர்கள் மொழிப்பற்றில் முதலில் தெரிந்தார். அவர்களைப் போலவே புதுக்கோட்டை கிரவுன் இனிப்புச்சாலை உரிமையாளரும் திருக்குறள், திருக்குரான் ஈடுபாடு உடையவர்கள். சென்னை மருத்துவர் உசேன் ஐயா அவர்கள் இராமலிங்க அடிகளார்பால் பேரன்பு உடையவர்கள். இத்தகு நல்லுள்ளங்களால்தான் தமிழ் சமயங்கடந்தும் போற்றப்படுகின்றது.

 சீனி ஐயா அவர்களின் தமிழ்ப்பணிகளைக் கேட்ட வண்ணம் எங்கள் உரையாடல் முன்னேறியது. அந்த நேரத்தில் பேராசிரியர் மறைமலை ஐயாவிடமிருந்து மின்னஞ்சல் ஒன்று வந்ததை நம் சீனி ஐயா குறிப்பிட்டார்கள். என் வருகை பற்றி கூறியிருந்ததாகவும், எழுத்துத் திருத்தம் பற்றித் தமிழக அரசுக்கு எந்த உடன்பாடும் இல்லை என்று பேராசிரியர் மறைமலை கூறியதாகவும், அதுபற்றி தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் அறிக்கை இன்று வெளியானதாகவும், எழுத்துத் திருத்த எதிர்ப்பில் தொடக்கம் முதல் எதிர்க்குரல் கொடுத்து வந்த எனக்கு இச்செய்தி உடன் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் ஐயாவிடம் மறைமலை அவர்கள் உரையாடியதாக அறிந்தேன். பேராசிரியர் மறைமலை அவர்களை அங்கிருந்தபடியே நன்றியுடன் போற்றினேன். இது நிற்க.

  சீனி ஐயாவின் பாப்புனையும் ஆற்றல் எனக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. நினைத்தவுடன் பாடல்புனையும் பேராற்றல் ஐயாவுக்கு உண்டு என்பது அறிந்து உள்ளம் பூரித்தேன். அவர்களின் தமிழ்த்தொண்டைப் போற்றியது என் உள்ளம். ஐயாவின் உங்கள் குரல் ஏடுகளும் தமிழ்ச்செம்மொழிச் சிறப்பு மலரும் ஐயா அவர்கள் வழங்கி மகிழ்ந்தார்கள்.

  செம்மொழிச் சிறப்பு மலர் தரமான கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்துள்ளது. 39 கட்டுரைகளைத் தாங்கி மலர் வந்துள்ளது. செம்மொழி: பொது விளக்கம்; செம்மொழி நேற்று-இன்று-நாளை; செம்மொழி: சிறப்பியல்புகள்; செம்மொழி அக்கரை நாடுகளில்; தமிழ்க்கல்வி,கலை நிறுவனங்கள் என்ற தலைப்புகளிலும் தமிழ்ச்செம்மொழிப் போராட்ட வரலாற்றுக் குறிப்புகள்,அரசு ஆணைகள் என்று பின்னிணைப்பாகச் செய்திகள் உள்ளன.


உங்கள் குரல் இதழின் தமிழ்ச் செம்மொழிச் சிறப்பு மலர்

  சென்னையில் வாழும் உழைப்புச்செம்மல் ஐயா இரா.மதிவாணன் அவர்களை இணைப் பதிப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்த மலர் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய கருத்துப் புதையல்கள் கொண்டதாகும்.

  சீனி ஐயா அவர்களைப் பிரிய மனம் இன்றி விடைபெற நினைத்தோம். எங்கள் மணிப்பொறி நள்ளிரவு 1.00மணி காட்டியது. அந்த நேரத்தில் எங்களை விடாப்பிடியாக அழைத்துச் சென்று தேநீர் பருக வைத்தது அந்தத் தமிழுள்ளம். ஐயாவிடம் விடைபெற்றபொழுது நடு இரவு 1.30 மணி இருக்கும். கடல் நடுவே கட்டப்பட்ட 13 கி.மீ.நெடும்பாலத்தின் அழகைப் பருகியபடியே எங்கள் மகிழ்வுந்து போரிட்பந்தர் என்ற நகர் நோக்கி விரைந்தது...

செ.சீனி நைனா முகம்மது அவர்களின் முகவரி:
உங்கள் குரல் எண்டர்பிரைசு,
UNGALKURAL ENTERPRISE,
Room 2,I Floor,22 China Street,
10200 Pulau Pinang,Malaysia.
Tel/ Fax 04 - 2615290

வெள்ளி, 28 மே, 2010

மலையகச் செலவு...

புண்ணியவான் தலைமையில் நான் உரையாற்றுதல் 

     சிங்கப்பூரில் 18.05.2010 யாமப்பொழுதில் எங்கள் பேருந்து புறப்பட்டுச் சிங்கப்பூர் எல்லையை ஒரு மணி நேரத்துக்குள் அடைந்தது. நாங்கள் குடியேற்றத் துறையில் எங்கள் வெளியேற்றத்தைப் பதிந்து மலேசிய எல்லையை நோக்கி மீண்டும் பேருந்து வழியாகச் செலவு மேற்கொண்டோம். சிறிது நேரத்தில் எங்கள் உடைமைகளைப் பேருந்திலிருந்து அவரவர் இறக்கினோம். மலேசியாவின் குடியேற்றத்துறையில் பதிந்துகொண்டு எங்களுக்காக மலேசியா எல்லையில் காத்திருந்த வேறு பேருந்துகளில் நாங்கள் ஏறி அமர்ந்துகொண்டோம். சிங்கப்பூர் பேருந்து ஓட்டுநர் எங்களிடம் விடைபெற்றுக்கொண்டு அவர் நாடு நோக்கிச் சென்றார். 

 நாங்கள் சென்ற மூன்று பேருந்துகளும் காற்று வளிப்பாட்டு ஏந்து கொண்டவை. எனவே எங்கள் செலவு மகிழ்ச்சியாக இருந்தது. சீரான சாலைகளும், இரு மருங்கும் அடர்ந்த காடுகளும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை உயர்ந்து நிற்கும் மலைகளும் செம்பனை மரங்களும் இரவு வேளையிலும் மின்விளக்குகளால் எங்கள் கண்ணுக்கு வைகறை விருந்து வழங்கின. விடியல்பொழுதில் சாலையோரத் தங்குமிடத்தில் நாங்கள் காலைக்கடன்களை முடித்துத் தேநீர் அருந்தினோம். சிறிது ஓய்வெடுப்புக்குப் பிறகு எங்கள் செலவு தொடர்ந்தது. 

    சாலையோர ஓய்வெடுப்பு நிலையைக் கண்டு எனக்கு மிகு மகிழ்ச்சி. நம் நாட்டில் நிலை வேறு.ஓட்டுநர்கள் உணவுக்கூடங்களைப் பார்த்தால் நிறுத்திவிட்டு உணவுக்கு ஓடிவிடுவார்கள். அவ்வாறு அவர்கள் செல்லும் உணவுக்கூடங்கள் ஈ மொய்த்தும், தூய்மையற்றும், மிகு விலையில் பொருட்கள் கொண்டும் இருக்கும். தரம் தாழ்ந்த உணவு வகைகள் மக்களுக்கு நோயுண்டாக்கும் தன்மையில் காணப்படும். ஆனால் மலேசியாவில் உள்ள எல்லாக்கடைகளும் தூய்மையும், தரமும் கொண்டு பேணப்படுகின்றன. 

     வரும்வழியில் காலைக்கடன்கள் முடித்ததால் நாங்கள் பிரிக்பீல்ட்சு நகரில் உள்ள துன் சம்பந்தன் சாலையில் அமைந்துள்ள 'செம்('Gems') உணவகத்தில் காலையுணவுக்காகப் பேருந்தை நிறுத்தினோம். மிகச்சிறந்த உணவகம். தமிழர்கள் மிகுதியாகப் பணிபுரிகின்றனர். உணவு முடித்து அவரவர் தேவைக்கு ஏற்பத் தொலைபேசி அட்டைக்கு(சிம்) முயன்று பார்த்தோம். ஆனால் கிடைக்கவில்லை.சிறிது நேரம் கழித்துக் கிடைக்கும் என்றார்கள். நாங்கள் அதனைப் பொருட்படுத்தாது கோலாலம்பூர் நகர்வலத்துக்குப் புறப்பட்டோம். 

    இரட்டைக் கோபுரம், மலேசிய மன்னர் அரண்மனை, போர் நினைவுச்சின்னம் உள்ளிட்ட இடங்களைப் பார்வையிட்டோம். பேருந்து நின்ற இடங்களில் எங்கள் கூட்டத்தினர் நெல்லிக்காயை மூட்டையிலிருந்து கொட்டியதுபோல் அங்கும் இங்கும் சிதறினர். அவர்களை ஒன்று திரட்டி மீண்டும் பேருந்தை எடுப்பதற்குள் ஓட்டுநரும் வழிகாட்டியும் பெரும் அல்லலுற்றனர். ஒருவழியாக எங்களுக்குப் பகலுணவுக்குப் பிறகு விடுதியில் இடம் கிடைத்தது. DYNASTY என்ற விடுதி வானுயர் அடுக்குமாடி விடுதியாகும். 788 அறைகள் கொண்ட விடுதி. அவரவர் அறையைத் தேடிக்கண்டு பிடிப்பதே எங்களுக்குப் பெரும்பாடாக இருந்தது. அந்த விடுதி ஓர் ஊர் அளவு மக்கள் வாழும்படியாக இருந்தது. இங்கும் தங்குமிடச் சிக்கல் தற்காலிகமாக எனக்கு ஏற்பட்டது. ஒருவழியாகச் சரிசெய்து தங்கினேன். 

     மாலையில் குளித்து ஓய்வெடுத்துக் கீழ்த்தளத்திற்குச் சென்றேன். கடும் மழை. அனைவரும் வரவேற்பறையில் காத்திருந்தோம். சிலர் மகிழ்வுந்து பிடித்துக் கடைகளில் பொருள் கொள்முதலுக்குச் சென்றனர். என் நண்பர்களுக்கு என் வருகையைத் தெரிவிப்பதற்கு எனக்கு உடனடியாகத் தொலைபேசி அட்டை தேவைப்பட்டது. மழையில் நனைந்தபடி ஒரு கடைக்குச் சென்று தொலைபேசி அட்டை 12 வெள்ளிக்கு வாங்கினேன். அதுகொண்டு நண்பர்கள் திருவாளர்கள் முனியாண்டி, சுப.நற்குணன், பாலாபிள்ளை, மாரியப்பனார், புண்ணியவான், மதிவரன், முரசு, மன்னர்மன்னன் உள்ளிட்டவர்களுக்கு என் வருகை, தங்குமிடம் பற்றிய விவரம் சொன்னேன். நாளை முழுவதும் குழுவுடன் இருப்பதாகவும், நாளை நடு இரவில் குழுவிலிருந்து பிரிந்துவர வாய்ப்பு உள்ளது என்றும் அனைவருக்கும் செய்தி சொன்னேன். இரவு உணவுக்குப் பிறகு விடுதிக்கு வந்து ஓய்வெடுத்தோம். 

     19.05.2010 காலையுணவுக்குப் பிறகு அனைவரும் பத்துமலை முருகன் கோயிலுக்குப் புறப்பட்டோம். தமிழர்கள் எங்குச் சென்றாலும் சமய நம்பிக்கை குறையாதவர்களாக இருப்பதைப் பத்துமலை கோயில் காட்டியது. தம்புசாமிப் பிள்ளை என்பவர் இக் கோயில் உருப்பெறக் காரணமாக இருந்ததை அறிந்தோம். நினைவுக்குச் சில படங்களை எடுத்துக் கொண்டேன். 

2001 இல் ஒருமுறை முரசு.நெடுமாறன் அவர்களுடன் இந்த இடத்துக்கு நான் வந்துள்ளேன். அந்த ஊரில் பேசியுள்ளேன். திரு. திருமாவளவன் என்ற தோழர் தமிழ்நெறிக் கழகத்தின் தேசியத்தலைவராக இருந்து தமிழ்ப்பணி புரிகின்றார். அவர் ஏற்பாட்டில் முன்பு பேசியுள்ளேன். பத்துமலை முருகன் கோயிலைப் பார்வையிட்ட பிறகு அனைவரும் கெந்திங் ஐலேண்டு (GENTING HIGHLANDS) சென்றோம். நம் ஊர் வி.சி.பி.தங்கக் கடற்கரை போன்று பொழுதுபோக்கு இடம் ஆகும். சீனநாட்டு முதலாளி ஒருவன் இந்தத் தீவை விலைக்கு வாங்கி அழகிய நகர் உருவாக்கியுள்ளான். பெரும் முயற்சி. மாந்தனால் எதுவும் சாதிக்க முடியும் என்பதற்கு இது ஒரு சான்றாகும். 

     இந்த நகரத்தை 3.4 கி.மீ தூரம் கம்பிவடத்தின் வழியாக அடைய வேண்டும். பல மலைகளைக் கடந்து இந்தத் தூரத்தை அடைய வேண்டும். வானில் செலவு செய்யும் வியப்புக்காட்சி இதுவாகும். பல அடி உயரத்தில் மலைக்கு மேல் கம்பிவடம் நகர்கிறது.156 கம்பிவட வண்டிகள் (ரோப் கார்) செல்கின்றன. Asian Cultural Village First World Plaza என்ற குறிப்பு இந்தப் பகுதியின் சிறப்பு உணர்த்தும். நம்மூர் பழனிமலையில் கம்பிவட முயற்சி அறுந்து தோல்வியுற்றது நினைத்துப் பார்க்கவும். எங்கள் வழிகாட்டி எங்களுக்குக் கம்பி வடத்தில் ஏறிச்செல்வதற்கு உரிய வழிகளை முன்பே சொல்லி நெறிப்படுத்தினார். வானுயர் மலையில் கம்பி வடத்தில் ஊர்ந்து சென்றமை அச்சத்தையும் மகிழ்ச்சியையும் ஒருசேரத் தந்தன. 

    என் புகைப்படக்கருவி மின்கலம் தீர்ந்ததால் சரியாகப் படம் பிடிக்கமுடியவில்லை. நண்பர் புகழேந்தியும் பேராசிரியர் தனராசு (இராச மன்னார்குடி) அவர்களும் பல படங்கள் நினைவுக்கு எடுத்தனர். தீவின் அழகிய பொழுதுபோக்கு இடங்களை அனைவரும் சுற்றிப்பார்த்து நகர்ந்தனர். நானும் நண்பர் ஒருவரும் சில இடங்களைப் பார்த்துவிட்டு ஒன்றுகூடும் இடத்திற்கு அரை மணி நேரத்திற்குள் திரும்பிவிட்டோம். போவோர் வருவோரைப் பார்த்தபடி மலேசிய நாட்டின் சிறப்புகளை நண்பர் வழியாக அறிந்து மகிழ்ந்தோம். அங்குச் சூதாட்டம் புகழ்பெற்றது என்று குறிப்பிட்டனர். நம் நண்பர்கள் சிலர் அந்த இடத்துக்குச் சென்று பொருளிழந்து வந்ததாகவும் அறிந்தேன். ஒருவழியாகத் தீவுப்பயணம் முடித்து இரவு உணவுக்கு மலையடிவாரத்திலுள்ள பகுதிகளைக் கடந்து உணவுக்கூடம் வந்தோம். எனக்காக நண்பர் முனியாண்டி விடுதியில் காத்திருந்தார். உண்டு மகிழ்ந்தோம். 

    பின்னர் முனியாண்டியின் வண்டியில் நான் ஏறி அமர்ந்து விடுதிக்கு வந்தோம். இந்த இடத்தில் எனக்கு இருந்த ஒரு பதற்றத்தைப் பதிதல் நன்று. நான் குழுவுடன் 20.05.2010 காலை ஏர் இந்தியா வானூர்தியில் திரும்புவதாகச் செலவுச்சீட்டு எடுக்கப்பெற்றிருந்து. ஆனால் நான் தமிழகத்திலயே 25.05.2010 இல் திரும்புவதுபோல்(காலம் நீட்டித்து) சீட்டை மாற்றி வழங்க வேண்டியிருந்தேன். அது மிக எளிது என்றாலும் கடைசிவரை எனக்குச் சீட்டு மாற்றிக் கையில் வழங்காமல் இருந்தனர். கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருப்பினும் வெளிநாட்டில் இருந்தபடி சீட்டு இல்லாமல் இருப்பது ஒருவகை பதற்றத்தைத் தந்தது. எனவே செலவு ஏற்பாட்டாளரை நெருக்கிப் பிடித்துச் சீட்டை வாங்க வேண்டிய நெருக்கடி எனக்கு இருந்தது. ஏனெனில் பொருள்கள் வாங்குவது, ஊர் திரும்புவது என்று அனைவரின் கவனமும் இருக்க நான் மட்டும் சீட்டு மாற்ற வேண்டிய நிலையில் இருந்தேன். 19.05.2010 இரவு 10.30 மணிக்கு என் கையினுக்குச் சீட்டு வந்தது. அப்பாடா! என்று அவர்களிடம் இருந்து விடைபெற்றேன். 

    அதற்குள் கணிப்பொறி அறிஞர் பாலாபிள்ளை அவர்களும் முனியாண்டியுடன் வந்து இணைந்துகொண்டார். மூவரும் அறைக்குச் சென்று பேசியபடி இருந்தோம். அறையில் என்னுடன் தங்கியிருந்த திருவாளர் கோவிந்தராசு ஐயாவும் வந்து சேர்ந்தார். என் உடைமகளை எடுத்துகொண்டு மூவரும் கீழ்த்தளத்துக்கு வந்தோம். பாலாபிள்ளை அவர்களைக் கண்டு உரையாடியமை வாழ்வில் நினைக்கத்தகுந்த நிகழ்வாகும். பாலா உலக அளவில் கணிப்பொறித்துறை முன்னேற்றம் பற்றி சிந்திப்பவர். அவரின் வாழ்க்கை வரலாறு அறிந்தேன். மீண்டும் சந்திப்போம் என்ற உறுதியுடன் அவருக்கு விடைகொடுத்தோம். 

    நானும் திரு.முனியாண்டி அவர்களும் முன்பே திட்டமிட்டபடி சுங்கைப்ப்பட்டாணி செல்ல உரிய பேருந்து நிறுத்தம் அடைந்தோம். சுங்கைப் பட்டாணிக்கு இரவு 11.45 மணிக்குப் பேருந்தேற்றி என்னை விட்டார். சுங்கைப் பட்டாணியில் எழுத்தாளர் புண்ணியவான் அவர்கள் உள்ளார்கள். அவர் மகனுக்கு ஒருகிழமையில் திருமணம் நடக்க உள்ளது. அந்த வேலைகளுக்கு இடையிலும் என்னை விருந்தினனாக ஏற்க முன்வந்தார். அவரிடம் நான் பேருந்தேறிய விவரம் சொல்லி காலை 5 மணியளவில் சுங்கைப்பட்டாணி வருவேன் என்று முனியாண்டி தெரிவித்தார். அந்த நேரத்தில் என்னை அழைத்துக்கொள்ள வேண்டும் என்பது எங்கள் வேண்டுகை. 

    நண்பர் முனியாண்டி என்னைப் பேருந்தேற்றிவிட்டு விடைபெற்றார். உரிய இடத்தில் இறங்க வேண்டுமே என்ற தவிப்பு எனக்கு இருந்தது. ஓட்டுநர் மலாய்க்காரர். 3.30 மணிக்கு விழித்துக்கொண்டேன். சுங்கைப்பட்டாணியை 4.30 மணிக்கு எங்கள் பேருந்து அடைந்தது. பொறுப்பாக என்னை இறக்கிவிட்டனர். நான் இறங்கியதும் தொலைபேசியில் புண்ணியவான் அவர்களுக்குப் பேசினேன். 10 மணித்துளியில் என்னை வந்து அழைத்துச்சென்றார். 

    புண்ணியவான் வீடு மிகச்சிறப்பாக இருந்தது. எனக்குஓர் அறை தந்து ஓய்வெடுக்க வைத்தார். 2 மணி நேரம் ஓய்வெடுத்தேன். 9 மணியளவில் புறப்பட்டு இருவரும் கெடா மாநிலத்தில் உள்ள பூசாங்கு பள்ளத்தாக்கு சென்றோம் (Lembah Bujang's-1800 Years old heritage& civilazation). எங்கள பகுதியான கடாரங்கொண்டானுடன் தொடர்புடைய ஊர் (இது பற்றி முன்பே பதிந்துள்ளேன்). சுற்றிப் பார்த்துச் சுங்கைப்பட்டாணி மீண்டோம். 

மாலையில் 5.30 மணிக்கு மாலை நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்குப் புறப்பட்டோம். ஒரு நூல் அங்காடி அரங்கில் என் உரைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். கல்லூரி மாணவர்கள், தமிழார்வலர்கள், பதிவர்கள், தமிழ்நெறிக்கழகத் தோழர்கள் என 100 பேருக்கு மேல் இருந்தனர். பலதரப்பட்டவர்கள் கலந்துகொண்டனர். போரிட்பந்தர் என்ற ஊரிலிருந்து நண்பர்கள் சுப.நற்குணன், மதிவரன், தமிழ்ச்செல்வன் மூவரும் மகிழ்வுந்தில் வந்திருந்தனர். இரண்டரை மணி நேரம் தமிழக நாட்டுப்புறப்பாடல்கள் பற்றி உரையாற்றினேன். அனைவரும் மகிழ்ந்து கேட்டனர். அனைவரிடமும் விடைபெற்று இரவு உண்டு, பினாங்கு நோக்கிப் புறப்பட்டோம். 

     அப்பொழுது மணி 10.00 மணி இருக்கும். பினாங்கு நம் பகுதி மக்களுக்கு உயர்வான ஊராகும். பெயரளவில் அறிந்த ஊருக்கு இப்பொழுது செல்கின்றோமே என உள்ளுக்குள் எனக்கு மகிழ்ச்சி. தரையில் மகிழ்வுந்தில் சென்று - பிறகு நாங்கள் சென்ற மகிழ்வுந்து கப்பலில் சென்று அதன்பிறகு தரையில் செல்லும் வியப்பான செலவுப் பட்டறிவு. பாலத்தில் செல்ல வேண்டும் என்றால் கடலில் 13 கி.மீ. செலவு செல்ல வேண்டும். டத்தோ சாமிவேலு அவர்களின் காலத்தில் இப்பாலம் கட்டப்பட்டிருக்கவேண்டும். அவர்தான் மலேசியாவில் சாலை வசதிகளுக்கு முதன்மையளித்தவர். அப்படியே கப்பலில் இருந்தபடி பினாங்கின் ஒளிவெள்ளத்தினைக் கண்டபடி எங்கள் மகிழ்ச்சிச் செலவு இருந்தது. 

     இரவு 11.30 மணியளவில் எங்கள் வருகைக்காக 'உங்கள் குரல்' ஆசிரியரும், மலேசியாவில் தொல்காப்பியத்தைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டவரும் தனித்தமிழ் அன்பருமான செ.சீனி நைனா முகம்மது ஐயா அவர்கள் காத்திருந்தார்.

பார்வையாளர்கள்

ஆர்வமுடன் அமைந்த என் உரை

பார்வையாளர்கள்


பார்வையாளர்கள்

நான் உரையாற்றும் காட்சி

பார்வையாளர்கள்

 
சுப.நற்குணன், மு.இ, தமிழ்ச்செல்வன்

மதிவரன், மு.இ, சுப.நற்குணன்

 
கல்லூரி மாணவர்களுடன்

வியாழன், 27 மே, 2010

என் சிங்கைச் செலவு

திரு.கோவலங்கண்ணன், பேரா.சுப.திண்ணப்பன், நான் 

     அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துத் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் அரங்க.பாரி அவர்கள் சிங்கப்பூரில் கலைஞன் பதிப்பகம் சார்பில் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெறுகிறது என்றும் அதில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் ஓர் அன்பு வேண்டுகோள் வைத்தார். நானும் வழக்குச் சொல்லகராதி-அறிமுகம் என்ற தலைப்பில் புலவர் தமிழகன் அவர்களின் அரிய நூலொன்றைக் குறித்து ஒரு கட்டுரை வரைந்து அனுப்பினேன். என்னுடன் புதுவைப் புலவர் வி.திருவேங்கடம் அவர்களும் வருவதாக இருந்தது. அவர் கட்டளைக் கலித்துறைக்கு இலக்கணம் என்ற பொருளில் ஒரு கட்டுரை வரைந்து விடுத்தார். எங்கள் கடவுச்சீட்டுகள், செலவுத்தொகை, கட்டுரை யாவும் கலைஞன் பதிப்பக முகவரிக்குச் சென்றன. 

    புலவர் வி.திருவேங்கடம் அவர்களின் கடவுச்சீட்டு இன்னும் 4 திங்களில் புதுப்பிக்க வேண்டியிருந்ததால் புதிய கடவுச்சீட்டு பெற்று அதன் பிறகே செல்ல முடியும் என்று அவரின் பழைய கடவுச்சீட்டைச் செலவு ஏற்பாட்டாளர்கள் திருப்பினர். புலவர் அவர்கள் புதுவை முகவர்களிடம் கலந்தாய்வு செய்து கடவுச்சீட்டைப் புதுப்பிக்க சில ஆயிரம் செலவு செய்து ஏமாற்றம் கண்டார். நானும் அவருக்கு உதவமுடியாதபடி என் நிலைமை அமைந்துவிட்டது. நான் ஒரு பல்கலைக்கழகத்துக்குப் பாடம் எழுதி வழங்கவேண்டிய கடப்பாட்டில் இருந்தேன். அந்தப் பல்கலைக்கழகத்திலிருந்து காலையிலும் மாலையிலும் தொடர்புகொண்டு பாடம் உடனடியாக வேண்டும், மாணவர்களுக்கு மிக விரைந்து தேர்வு நடக்க உள்ளது என்று என்னை அழுத்தம்கொடுத்து வலியுறுத்தினர். நானும் ஒரு கிழமை கடுமையாக உழைத்துப் பாடப் பகுதிகளை உருவாக்கி அனுப்பிவைத்தேன். இதனிடையே யான் அரசு ஊழியன் என்பதால் அரசிடமிருந்து முறையான இசைவு பெற்று வெளிநாடு செல்ல வேண்டும் என்பதால் அதற்குரிய முயற்சிகளிலும் ஈடுபட்டேன். வெளிநாடு செல்வதற்கு முதல்நாள்தான் அரசின் இசைவைப் பெற முடிந்தது. பல நண்பர்கள் இதற்கு உதவினர். \

    என் செலவுக்குரிய பொருட்களை எடுத்துக்கொண்டு 14.05.2010 காலை 7.மணிக்குப் புறப்பட ஆயத்தமானேன். புலவர் திருவேங்கடம் ஐயா அவர்கள் என் இல்லம் வந்து வாழ்த்துரைத்துப் பேருந்து நிலை வரை வந்து, பேருந்தில் ஏற்றிவிட்டுத் திரும்பினார்.புதுவையில் எனக்கு வாய்த்து உற்ற தோழர்களுள் புலவர் அவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். நம் மழலைச் செலவங்கள் மீது அளவற்ற அன்புடையவர்கள். தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பின்னர் பல்வேறு தமிழ்ப்பணிகளுக்கு முன்னின்று உதவுபவர். எனக்கு வாய்த்த அவரின் நட்பு பெரியாரைத் துணைக்கோடல் என்ற வள்ளுவ வாக்கிற்குப் பொருத்தமானதாகும். அவர்களை அடுத்தமுறை செல்லும்பொழுது அழைத்துப் போகவேண்டும் என்ற மன உறுதியுடன் சென்னை நோக்கி விரைந்தேன். 

     ஆயிடை எங்கள் அன்னையார் முனைவர் தாயம்மாள் அறவாணன் அவர்கள் செல்பேசியில் அழைத்து, இன்றைய புதிய தலைமுறையில் என்னைப் பற்றிய நேர்காணல் வந்துள்ளதாகவும் ஐயா உடனடியாக வாழ்த்துரைக்கச் சொன்னதாகவும் குறிப்பிட்டார்கள். மிக மகிழ்ச்சியுற்றேன். அதனிடையே வேலூர் வழக்கறிஞர் தெ.சமரசம் ஐயா அவர்கள் அவர்களின் துணைவியார் மருத்துவர் பத்மா சமரசம் அவர்களின் அறிவுறுத்தலின்படி புதியதலைமுறை கண்டு வாழ்த்துரைத்தார். என் வெளிநாட்டுச்செலவு பற்றி சொன்னவுடன் மகிழ்ந்து அவர்களின் உறவினர் மலேசியாவில் பினாங்கில் இருப்பதாகவும் கண்டு பேசும்படியும் அன்புவேண்டுகோள் வைத்தார். உரிய தொலைபேசி எண்ணைக் குறுஞ்செய்தியாக அனுப்பினார். பேருந்து இரைச்சலில் சரியாகப் பேசமுடியவில்லை. சென்னை சென்று பேசுவதாக ஐயாவிடம் விடைபெற்றேன். அதனிடையே புதிய தலைமுறை நேர்காணல் பற்றித் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் நம் அன்பர்கள் உசாவியும் வாழ்த்துரைத்தும் மகிழ்ந்தார்கள். அதில் கோபிச்செட்டிப்பாளையத்தில் தாய்த்தமிழ்ப்பள்ளி நிறுவிய திரு.தமிழரசு அவர்கள் தாம் புதுவை வந்து என்னைப் பார்க்க விரும்புவதாகவும் எனக்கு உரியவர்கள் வழியாகத் தெரிவித்தார்கள். 

    இதனிடையை என் கையில் இருந்த மூன்று பைகளுடன் சென்னைத் திருவான்மியூரில் இறங்கினேன். உடன் வந்த ஒருவரின் உதவியுடன் வேறு பேருந்துக்கு மாறினேன். சைதாப்பேட்டையில் உள்ள திரு.இசாக்(தமிழலை ஊடக உலகம்) அவர்களின் இல்லத்தில் என் உடைமைகளை வைத்துவிட்டுக் கலைஞன் பதிப்பகத்தார் குறிப்பிட்ட ஆந்திர சபாவில் என் கடவுச்சீட்டு, நுழைவுச்சீட்டு, கருத்தரங்க ஆய்வுக்கோவைகளைப் பெற்றுக்கொண்டு செலவு விவரங்களை அறிந்தேன். இரவு 9 மணிக்கு மீனம்பாக்கம் வானூர்தி நிலையத்தில் ஒன்றுகூட வேண்டும் எனவும் இரவு 12.45 மணிக்கு வானூர்தி எனவும் குறிப்பிட்டனர். இதனிடையே தமிழன்பர் திரு. உதயகுமார் அவர்கள் என்னைக் காண ஆந்திரசபா வந்திருந்தார். நண்பர் திருமுதுகுன்றம் புகழேந்தி, உதயகுமார், நான் மூவரும் பகலுணவு உண்டோம். 

    புகழ் முன்கூட்டியே இலங்கை வானூர்தியில் புறப்பட வேண்டும் என்பதால் எங்களிடம் விடைபெற்றுத் திரும்பினார். நானும் திரு.உதயகுமார் அவர்களும் புதிய தலைமுறை அலுவலகம் சென்று ஆசிரியர் திரு.மாலன் அவர்களுக்கு நேர்காணல் வெளியிட்டமைக்கு நன்றி தெரிவித்தோம். வெளிநாட்டுச் செலவு குறித்துக் குறிப்பிட்டு ஒரு வாழ்த்தும் பெற்றோம். அங்குள்ள சில எழுத்துலக நண்பர்களிடம் உரையாடி மகிழ்ந்தோம். உதயகுமார் அவர்கள் இடையில் விடைபெற்று அவர் அலுவலகம் சென்றார். திரு.இசாக் அவர்களின் அறைக்கு நான் வரும்பொழுது மாலை மணி ஆறு இருக்கும். அங்குச் சிறிது உரையாடி, சில சிறு பணிகள் முடித்ததும் இசாக் அவர்கள் வழக்கம்போல் உணவு முடித்துச் செல்ல வேண்டினார். உணவு உண்டு தானி பிடித்து மீனம்பாக்கம் வானூர்தி நிலையம் அடைந்தேன். அங்குப் புதுப்பிக்கும் பணிகள் நடப்பதால் இடிப்பதும் கட்டுவதுமான பணிகள் நடக்கின்றன. எந்தப் பக்கம் செல்வது என்று தெரியாதபடி கூட்டம் திரண்டிருந்தது. ஒரு வழியாக நுழைவு வாயிலை அடைந்தேன். 

     அங்குப் பேராசிரியர் அரங்க.பாரி தலைமையில் பேராசிரியர்கள் கூட்டமாகத் திரண்டிருந்தனர். அவர்களுடன் இணைந்து எங்கள் உடைமகளை ஆய்வுக்கு உட்படுத்தினோம்.என்னிடம் நூல்கள் சில இருந்தன.கூடுதல் சுமை என்றால் தொகை கட்ட வேண்டியிருக்குமே என அஞ்சினேன். எடை குறைவாக இருந்ததால் எந்த இடர்ப்பாடும் இல்லாமல் சென்றேன். 12 மணிக்கு உள்ளே காத்திருந்தோம். 12.40 மணிக்கு வானூர்தியில் ஏறி அமர்ந்தோம். 12.45 மணிக்கு ஏர் இந்தியா வானூர்தி எங்களைச் சுமந்தபடி சென்றது. பலருக்கு இது முதல் செலவு என்பதால் அச்சத்துடன் மருண்டபடி அமர்ந்திருந்தனர். நான் முன்னமே வானூர்தியில் பலமுறை சென்றுள்ளதால் எனக்கு எவ்வகையான அச்சமும் இல்லை. நம் ஊர் நேரப்படி விடியற்காலை 4.30 மணியளவில் வானூர்தி தரையிறங்கியது. 

    சிங்கப்பூர் வானூர்தி நிலையம் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். உலகின் பல பகுதிகளிலிருந்தும் வானூர்திகள் வருவதும் போவதுமாக இருக்கும்.நான் சிங்கப்பூர் வருவது முன்பே மின்னஞ்சல் வழியாக என் பதிவுலக நண்பர்களுக்குத் தெரியும் என்பதால் திரு.குழலி, திரு.கோவி கண்ணன் ஆகிய தோழர்கள் வானூர்தி நிலையத்தில் என்னை வரவேற்கக் காத்திருந்தனர்.அவர்களை இதற்குமுன் பார்க்கவில்லை. ஆனால் முன்பின் கண்டு பழகியவர்கள் போல் உரிமையுடன் பழகினோம். காரணம் இவர்கள் பதிவுகள் வழியாக நன்கு அறிமுகமானவர்களேயாகும். இவர்களுடன் படம் எடுத்துகொண்டேன். எங்கள் குழுவினரிடம் என்னைச் செல்லும் படியாக இவர்கள் விடைகொடுத்து மீண்டும் சந்திப்பதாகச் சொல்லிச் சென்றனர். எங்கள் குழு நேரே தங்குமிடம் செல்லும் என்று நினைத்தோம். ஆனால் செலவு ஏற்பாட்டாளர்கள் ஒரு விடுதியில் குளிக்க, பல்துலக்க மட்டுமாக இசைவுபெற்று எங்களை அப்பணிகளை முடித்துக்கொண்டு உடன் வருமாறு தெரிவித்தனர். அதன்படி அனைவரும் உடனடி புறப்பாட்டுக்கு ஆயத்தம் ஆனோம். அனைவரும் பல்துலக்கிக் காலை உணவு உண்டோம். பின்னர் அரங்கம் அடைந்தோம். கருத்தரங்கத் தொடக்க விழா நடந்தது. 

     தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். சிங்கப்பூர் பேராசிரியர் வேல்முருகன் அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழிநடத்தினார். முனைவர் சிவகுமாரன், முனைவர் தியாகராசன்,அரங்க.பாரி, முனைவர் இராசா ஆகியோர் உரையாற்றினர். முனைவர் அபிதா சபாபதி அவர்களுக்கு இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்த்தில் பெரும் பங்குண்டு. அவர்களே அனைவருக்குமான செலவு ஏற்பாடு உள்ளிட்ட அனைத்தையும் கவனித்தார். கலைஞன் பதிப்பக உரிமையாளர் திரு.மா.நந்தன் அவர்கள் எளிமையாக அனைவரிடமும் பழகி அனைவரின் மதிப்பையும் பெற்றார். 

     பிற்பகலில் கருத்தரங்கம் தொடங்கியது.என்னைக் காணவும் என் கட்டுரை கேட்கவும் திரு. கோவலங்கண்ணனார் வந்திருந்தார். கட்டுரை படித்தபிறகு இருவரும் ஓர் உந்து வண்டியில் அவர் அலுவலகம் சென்றோம். திரு.கோவலங்கண்ணனார் அவர்கள் ஒரு கணக்காளர். ஆனால் அவர் அலுவலகத்தில் மிகுதியாகத் தமிழ்நூல்கள் நூலகம்போல் காட்சி தரும் வனப்பைக் கண்டு மகிழ்ந்தேன். பாவாணர் கொள்கைகளில் ஐயாவுக்கு மிகுதியான ஈடுபாடு உண்டு.அதனால் பாவாணர் அன்பர்கள்பால் அவருக்குத் தனி அன்பு உண்டு.நான் இரண்டு நூல்களைத் திரு. கோவலங்கண்ணனார் அவர்களுக்குப் படையலிட்டவன்.நூல்படையலிடுவதற்கு முன்பு அவரை நான் பார்த்தறியேன். அவர் பணி மட்டும் அறிவேன்.பாவாணருக்கு அவர் உதவி செய்ததால் அவர்மேல் எனக்குத் தனி மதிப்பு ஏற்பட்டது.அவ்வகையில் தொடர்ந்து நட்பு மடல்கள் வழியாக மலர்ந்தது. பின்னர் என் இசைப்பேராசிரியர் வீ.ப.கா.சுந்தரம் அவர்களுக்கு ஓர் அறக்கட்டளை ஐயா நிறுவியதால் மதிப்பு மேலும் உயர்ந்தது. கோவலங்கண்ணனார் தமிழகம் வந்தால் ஒரிரு மணித்துளிகள் சந்திப்பு இருக்கும். இந்தமுறை சிங்கப்பூரில் ஐயாவுடன் பல மணிநேரம் ஒன்றாகத் தங்கி உரையாடும் பேறுபெற்றேன். இருவரும் கடைக்குச் சென்று சில பொருட்களை வாங்கிக்கொண்டு ஐயாவிடம் விடைபெற்று அறைக்குத் திரும்பினேன். இரவு 10 மணியளவில் விடுதிக்கு வந்தேன். முதலில் உணவு.அதன்பிறகு உரிய அறைக்குச் சென்றேன். 

    என் அறையில் வேறொரு அன்பர் தங்கியிருந்தார். அவரை வெளியேற்றினால்தான் நான் தங்கமுடியும். என்னறையில் இருவர் தங்கும்படி சொன்னார்கள். அதன் அடிப்படையில் என்னுடன் தங்குபவரிடம் நான் கடைத்தெரு சென்று சிறிது காலத்தாழ்ச்சியாக வருவேன் என்று கூறிச் சென்றேன். காலம் தாழ்ந்ததும் வேறொரு விடுதியில் இருந்த அன்பரை என் அறைத்தோழர் அழைத்துத் தங்க வைத்துவிட்டார். என் நிலை மிக இரங்கத்தக்கதாக இருந்தது. தங்கியிருப்பவரை வெளியேறும்படி சொல்ல நான் தயங்கினேன். அதே நேரம் நான் எங்குத் தங்குவது? நிகழ்ச்சி ஏற்பாட்டாளரின் தொடர்பு எண் விடுதியிலும் இல்லை. என்னிடமும் இல்லை. வேறு யாரிடமும் இல்லை. விடுதியில் உணவு பரிமாறும் தஞ்சாவூர் அன்பரை வினவி, என் நிலையை எடுத்துரைத்தேன். அவர் முயற்சியால் அறையில், புறம்பாகத் தங்கியிருந்த அன்பர் அவருக்கு உரிய அறைக்கு அனுப்பப்பட்டார். அப்படா! பெருமூச்சு விட்டபடி அறை கிடைத்த மகிழ்ச்சியில் என் பையை எடுக்க வரவேற்பறைக்குச் சென்றேன். 

    இரண்டு பைகளில் ஒரு பை மட்டும் இருந்தது. இன்னொரு பையைக் காணவில்லை. எங்குத் தேடியும் கிடைக்கவில்லை. காணாமல்போன பையில்தான் என் உடுப்புகள் இருந்தன. விடுதிக் காவலரிடம் என் பை காணவில்லை என்று கூறி, என் அறை எண், முகவரி, தொலைபேசி எண் வழங்கி ஒரு பையுடன்மட்டும் அறைக்கு வந்து உடுத்திய உடையுடன் களைத்துப் படுத்தேன். சிறிது நேரத்தில் விடுதிக்காவலர் தொலைபேசியில் அழைத்தார்.என் பை கிடைத்து விட்டதாகவும் எங்கள் குழுவில் வந்த ஒருவர் அவரின் கறுப்புவண்ணப் பையை வைத்துவிட்டுத் தவறுதலாக என் கருநீல நிறப் பையை எடுத்துச்சென்றதாகத் தெரிவித்தார். ஒருவழியாக என் சிங்கப்பூரின் முதல்நாள் தங்கல் இன்னலுக்கு இடையே கழிந்தது. 

     மறுநாள் 16.05.2010 காலையில் குளித்துமுடித்து, உண்டு, கருத்தரங்கம் நடக்கும் இடத்திற்குச் சென்றேன். பகலுணவு வரை கருத்தரங்கில் கலந்துகொண்டு கட்டுரையாளர்களின் உரை கேட்டு மகிழ்ந்தேன். திரு.கோவலங்கண்ணன் அவர்கள் என்னைக் காணத் தம் உந்து வண்டியில் வந்தார். இருவரும் சிங்கப்பூர்ப் பேராசிரியர் திண்ணப்பன் அவர்களின் இல்லம் சென்றோம். அண்மையில்தான் பேராசிரியருக்குப் பவளவிழா சிங்கப்பூர் அதிபர் தலைமையில் நடைபெற்றிருந்தது. அதற்கு வாழ்த்துரைக்கவும் பேராசிரியரிடம் வாழ்த்துப் பெறவுமாக நாங்கள் சென்றோம். பேராசிரியர் அவர்களை இதற்கு முன் பல கருத்தரங்குகளில் கண்டு உரையாடியுள்ளேன். என் நாட்டுப்புற இசையில் பேராசிரியருக்குத் தனி ஈடுபாடு உண்டு. அயலகத் தமிழறிஞர்கள் என்ற என் நூலில் பேராசிரியர் பற்றி மிகச்சிறப்பாக எழுதியிருந்தேன். சில நூற்படிகளை அவர்கள் கேட்டிருந்தார்கள். வழங்கினேன். ஆச்சி அவர்களும் அவர்களின் மகனும் எங்களுடன் அன்புடன் உரையாடினார்கள். பேராசிரியர் அவர்களிடம் தமிழிலக்கியப் போக்கு, எழுத்துச்சீர்திருத்தம் பற்றி உரையாடினோம். அவர்களின் பவள விழா மலர் பெற்றுக்கொண்டு நானும் கோவலங்கண்ணன் அவர்களும் அவர்களின் மருதப்பர் உணவகம் வந்தோம். உணவு முடித்து அவர்களின் அலுவலகம் சென்றோம். 

     அலுவலகத்திற்குக் குழலி உள்ளிட்ட அன்பர்கள் வந்து சேர்ந்தனர். மாலையில் அவர்களின் மருதப்பர் உணவகத்தின் மேல் தளத்தில் உள்ள பாவாணர் அரங்கில் வலைப்பதிவர் சந்திப்புக்கும், இலக்கியக் கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாவாணர் படைப்புகள் இணையத்திற்கு வர ஒரு வலைப்பூ உருவாக்கினேன். முன்பே இருந்த கட்டுரைகளை ஒருங்கு குறிக்கு மாற்றிப் பதிவாக வெளியிட திரு. கவின் அவர்களுக்குப் பயிற்சி வழங்கினேன். 5.30 மணிக்குப் புறப்பட்டுப் பாவாணர் அரங்கம் வந்தோம். ஓரிரு அன்பர்கள் வந்து காத்திருந்தனர். பின்னர் படிப்படியே பலர் வந்து இணைந்துகொண்டனர். பதிவர் சந்திப்பு தொடங்கியது. குழலி வரவேற்றார். கோவி.கண்ணன் உள்ளிட்ட பல புகழ்பெற்ற பதிவர்கள் வந்தனர். என் பதிவு பட்டறிவுகளைக் கேட்டனர். ஒருமணி நேரம் அனைவரும் உரையாடினோம். இலக்கியக் கலந்துரையாடலுக்கு வந்த அன்பர்களும் பதிவுலகப் பட்டறிவுகளில் கலந்துகொண்டனர்.


வரவேற்கும் கோவலங்கண்ணன் 

 6.30 மணிக்கு இலக்கியக் கலந்துரையாடல் தொடங்கியது. திரு. கோவலங்கண்ணன் அன்பர்களுக்கு என்னை அறிமுகம் செய்துவைத்தார். திரு.பழனியப்பன் (சிங்கப்பூர் பாராளுமன்றத்தின் உடனடி மொழிபெயர்ப்பாளர்) வந்திருந்தார். அன்புடன் உரையாடினோம். பேராசிரியர்கள் இரத்தின. வேங்கடேசன்.ஆ.இரா.சிவகுமாரன் உள்ளிட்ட அறிஞர்களும், புகழ்பெற்ற பதிவர்களும், எங்கள் ஊரை அடுத்த கண்டியங்கொல்லை திரு.சிவக்குமார் உள்ளிட்ட அன்பர்களும் வந்து கேட்டனர். நான் தமிழ் இலக்கியம், நாட்டுப்புறப்பாடல்கள்,இணைய வளர்ச்சி பற்றி கலப்பாக என் உரையை அமைத்துக்கொண்டேன். ஒரு மணி நேரத்திற்கு மேல் என் உரை நீண்டது. அதனை அடுத்து கலந்துரையாடல் என்ற அமைப்பில் ஒன்றரை மணி நேரம் அனைவரும் உரையாடினோம்.

     எழுத்துச்சீர்திருத்தம்,தமிழ் இலக்கணம் பற்றியெல்லாம் எங்கள் பேச்சு நீண்டது. அனைவரிடமும் விடைபெற்று அறைக்குத் திரும்பியபொழுது இரவு 10.30 மணியிருக்கும். என் அறைக்குச் சென்று என்னிடம் இருந்த திறவியை உள்ளிட்டுத் திறந்தேன். திறக்கவில்லை. பிறகு மணியை அழுத்திப் பார்த்தேன். திறக்கவில்லை.பிறகு மெதுவாக அஞ்சியபடி ஒரு குரல் யார்? என்றது. நேற்றுத் தங்கியிருந்த அன்பரின் குரலாக அது இல்லை.புதிய குரல்.இன்றும் தங்குவதில் ஏதோ சிக்கல் உள்ளது என்று நினைத்தேன். கருத்த, பருத்த ஓர் உருவம் கதவைத் திறந்ததும் நான் அஞ்சியபடியே புதியதாக ஆள் தெரிகின்றாரே என்று பார்த்தேன்.அதுபோல் அவரும் அஞ்சிபடியே திறந்தார். தன் பெயர் இசக்கியப்பன் எனவும், திருநெல்வேலி ஊரினர் எனவும் இந்த அறையில் தங்கியிருந்தவர் வேறு விடுதிக்குச் சென்றதால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தம்மை இங்குத் தங்கும்படி கூறியதாகவும் சொன்னார். நல்ல மாந்தர். இசக்கியப்பன் அவர்களுடன் உரையாடியபடி இரவு 12 மணியளவில் கண்ணயர்ந்தேன். 

     17.05.2010 காலையில் அனைவரும் உணவு முடித்துச் சிங்கப்பூர் நகர்வலத்துக்குப் புறப்பட்டோம். பல இடங்களைச் சுற்றிக்காட்டினர். செந்தோசா என்ற கடலடிப் பகுதி அனைவரும் பார்க்க வேண்டிய பகுதி. சிங்கப்பூர் மிகச்சிறந்த வளர்ச்சி பெற்றிருந்தாலும் கடந்த காலத்தில் காடாகவும், மேடாகவும் கிடந்த பகுதிதான் இந்த அளவு மாற்றம் பெற்றிருக்கிறது என்பதை மகிச்சிறப்பாகக் காட்சியகமாக வைத்துள்ளார்கள். உலக அளவில் புகழ்பெற்ற இந்த இடங்களை அனைவரும் பார்க்க வேண்டும்.தமிழர்,சீனர்,மலாய்க்காரர்களின் கூட்டு உழைப்பால் இந்த நாடு கண்ட முன்னேற்றத்தை நாம் அங்குக் காணமுடிகிறது.பகலுணவு முடித்து அங்கும் இங்குமாகக் காட்சிகளைப் பார்த்தோம். நண்பர் இரத்தின.புகழேந்தி என்னுடன் இணைந்துகொண்டு பல படங்களை எடுத்து உதவினார்.  டால்பின் மீன் விளையாட்டும் மிகச்சிறப்பாக இருந்தது. 

     இரவு கடலில் ஒலி-ஒளிக்காட்சிகள் கண்டு மகிழ்ந்தோம்.அனைவரும் இரவு 9.45 மணிக்குப் பொருள்கள் வாங்க முசுதபா கடைக்கு வந்தோம்.மீண்டும் 11.45 மணிக்கு ஒன்று கூட வேண்டும் என்ற குறிப்பைப் பெற்றுகொண்டு அங்குமிங்குமாக எங்கள் குழுவினர் பிரிந்து பொருள்கள் வாங்கச்சென்றனர். நானும் என் பங்குக்குச் சில எழுபொருட்கள், இனிப்புகள் வாங்கினேன். இரவு 11.40 மணிக்கு ஐயா கோவலங்கண்ணன் அவர்கள் வந்து சேர்ந்தார்கள். அவர்களுடன் எங்கள் குழுவினர் இருந்த இடத்தை அடைந்தேன். ஐயாவின் தமிழன்பில் மூன்று நாளாகத் திளைத்தமை என் வாழ்வில் மறக்க இயலாத வாழ்நாளாகும். ஐயாவிடம் விடைபெற்றுக்கொண்டேன். பின்னர் விடுதிக்கு வந்து எங்கள் உடைமைகளை எடுத்துகொண்டு மலேசியாவுக்கு எங்கள் குழு அடங்கிய பேருந்து புறப்பட்டது. அமைதியும், ஒழுங்கும், சட்டத்தை மதிக்கும் மக்களுமாக நிறைந்த சிங்கப்பூர் நகரம் எங்கள் செலவைக் கவனித்துக்கொண்டு அமைதியாகத் துயில்கொண்டிருந்தது...


குழலி,பேரா.சிவகுமாரன்,பேரா.வெங்கடேசன்

நானும் கோவலங்கண்ணன் அவர்களும்

திரு.பழனியப்பன் அவர்களுடன் நான்
இலக்கியக் கலந்துரையாடல் - பார்வையாளர்கள்

திரு.ம.சிவக்குமார் உள்ளிட்ட தமிழார்வலர்கள்
என் உரையை உற்று நோக்கும் பார்வையாளர்கள்

குழலி உள்ளிட்ட பதிவர்கள்
என் உரை கேட்கும் அறிஞர்கள்
கோவி.கண்ணன் உள்ளிட்ட பதிவர்கள்
நான் உரையாற்றும் காட்சி
டால்பின் விளையாட்டு
செந்தோசா கடலடிக் காட்சியகத்தில் நான்
நண்பர் புகழேந்தியுடன்
சிங்கப்பூர் நினைவுச்சின்னம் அருகில்

புதன், 26 மே, 2010

புதிய தலைமுறைக்கு நன்றி...

தமிழகத்திலும் பிற பகுதிகளிலும் மாணவர்கள்,ஆசிரியர்கள்,கல்வியாளர்கள் விரும்பிப்படிக்கும் இதழாக வெளிவரும் புதியதலைமுறை தமிழ் இதழியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இதழாகும். உருவமும், உள்ளடக்கமும்,காலத்தில் வெளிவரும் சிறப்பும்,எல்லா இடங்களிலும் கிடைக்கும் வளமும் கொண்டு வரும் இந்த இதழில் எண்ணற்ற சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறு பதிவாகியுள்ளது.

இவ்வகையில் என் கல்வியார்வம் பற்றியும்,தமிழ் இணைய வேட்கை பற்றியும் மிகச்சிறந்த நேர்காணலை ஆசிரியர் திரு.மாலன் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். நேர்காணல் செய்து திரு.யுவகிருட்டினா உயிரோட்டமான நடையில் வழங்கியுள்ளார்.இவர்களுக்கு யான் என்றும் நன்றியுடையேன்.

நேர்காணலைப் பார்த்துத் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் செல்பேசி,மின்னஞ்சலில் பலர் வாழ்த்துரைத்தனர்.நான் 14.05.2010 முதல் 25.05.2010 வரை அயல்நாட்டில் இருந்ததால் பலர் அழைத்துப் பேச முயன்றுள்ளனர்.அவர்களுடன் உரையாட இயலாமல் போனமைக்கு வருந்துகின்றேன். 20.05.2010 நாளிட்ட இதழில் வெளிவந்துள்ள அந்த நேர்காணலை இங்குச் சொடுக்கிப் படிக்கலாம்.என் அயல்நாட்டுப் பயணத்தால் உடன் என் பதிவில் எழுத இயலாமல் போனது.பொறுத்தாற்றுங்கள்.

திங்கள், 24 மே, 2010

ஈழத்து அறிஞர்கள் அ.பொ.செல்லையா-யோகரத்தினம் அம்மையார் அவர்களின் திருக்குறள்பணிகள்


அ.பொ.செல்லையா


செ.யோகரத்தினம் அம்மா

 ஈழத்து அறிஞர்கள் பலரும் பல வகையில் தமிழ்ப்பணிகளாற்றியுள்ளனர். அயல்நாட்டுக் கல்வியாலும் ஆழமான புலமையாலும் ஈழத்து அறிஞர்களின் வழியாகத் தமிழ் நூல்கள் மேல்நாட்டுக்கு அறிமுகம் ஆயின என்று குறிப்பிடுவது மிகையன்று. அதுபோல் ஈழத்துப் போரின் காரணமாக ஈழத் தமிழர்கள் உலகின் பல பகுதிகளுக்குச் சென்று வாழும் சூழல் ஏற்பட்டது. அந்த அந்தப் பகுதிகளில் வளமான வாழ்க்கை நிகழ்த்தினாலும் தங்களின் இலக்கியப் பங்களிப்பை மறவாமல் ஆற்றி வருகின்றனர். அவர்களுள் ஈழத்து அறிஞர் அ.பொ.செல்லையா அவர்களும் அவர்களின் துணைவியார் யோகரத்தினம் அம்மையார் அவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் தமிழ் வாழ்க்கையைத் திருக்குறள் பணிகளை இக்கட்டுரை அறிமுகம் செய்கின்றது.

அ.பொ.செல்லையா அவர்களின் வாழ்க்கைக்குறிப்பு:

 அ.பொ.செல்லையா அவர்கள் 19.01.1937 இல் தென்மராச்சியை அடுத்த மீசாலை என்னும் ஊரில் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை மீசாலை விக்கினேசுவர மகாவித்தியாலத்திலும், உயர்கல்வியைச் சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும், கல்லூரிக் கல்வியைச் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பயின்றவர். உயர்கல்வியைச் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் பயின்ற வேளையில் தமது பேச்சு எழுத்து வன்மையையும் நடிப்பு ஆற்றலையும் ஆசிரியர்கள் வித்துவான் மு சபாரத்தினம் & கனகரத்தினம் அவர்களிடம் வளர்த்துக் கொண்டார். பேச்சுப் போட்டியில் அகில இலங்கை அளவில் தங்கப் பதக்கம் பெற்றவர்.

  கல்லூரிக் கல்வியின் பொருட்டுத் தமிழகம் வந்துபொழுது தந்தைபெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, பேரறிஞர் அண்ணாவின் பாசறையில் வளர்ந்தார். பேராசிரியர் அன்பழகனை ஆசிரியராகப் பெற்றவர். கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் ஈரத்தமிழில் உணர்வுபெற்றவர். விலங்கியல் பட்டம் பெற்ற பொழுதும் முத்தமிழ் வித்தகர் என்று போற்றப்படும் அளவிற்குத் தனது ஆற்றலை வளர்த்துக்கொண்டார். ஆசிரியராகத் தமது பணியைக் கொழும்பு தேசுரன் கல்லூரியில் ஆரம்பித்து, இசுப்பத்தான கிறீன்லனட் கல்லூரி சகீராக் கல்லூரி ஆகியவற்றில் கொழும்பு மாநகரில் பணியாற்றினார். பின்னர் பிறந்த மண்ணில் பணியாற்றும் முகமாக மட்டுவில் மகாவித்தியாலயத்திலும் டிறிபேக் கல்லூரியிலும், சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் பணியாற்றிப் பணி பெற்று பின்பு பளைமத்திய கல்லூரி (முன்பு பளை மகா வித்தியாலயத்தில்) முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். முத்தமிழ் மக்கள் கலைக்கழகம் நிறுவிக் கலைப்பணிபுரிந்தவர்.

  ஆசிரியராகவும் முதல்வராகவும் பணியாற்றும் வேளையில் தம்மிடமுள்ள ஆற்றலை மாணவர்களிடையே திறம்பட ஊட்டினார். நாடகம், பேச்சு, எழுத்து ஆற்றலையும் ஊட்டினார். இவற்றினூடே பகுத்தறிவுக் கொள்கையையும் நற்பண்புகளையும் மாணவர்களிடையே வளர்த்தார். பின்பு கொத்தணி அதிபராகவும் விளங்கினார். கிளிநொச்சி மாவட்டத்தில் முதன் முறையாகப் பல்கலைக்கழகத்திற்கு கலை, அறிவியல், கணக்கியல், மருத்துவம், பொறியியல் ஆகிய அனைத்துத் துறைகளுக்கும் மாணவர்களை அனுப்பிய பெருமை இவருக்கு உண்டு. அப்போதைய பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திரு ஆனந்தசங்கரியின் பாராட்டையும் பெற்று, சிறந்த முதல்வர் என அரசாங்கத்தால் பாராட்டப்பட்டார். முதல்வராக இருக்கும் பொழுது சாரணியத்திலும் சிறந்து, மாவட்ட ஆணையராகவும் இருந்தார். திருவள்ளுவருக்குச் சிலை எடுத்த பெருமையும் இவருக்கு உண்டு.

  பெற்றோர்,உற்றோர், உறவினர் புலால் உண்பவராக இருந்தும், ஆசிரியரின் கொல்லாமை அறத்தை ஏற்றுத் தமது இறுதி மூச்சு வரை புலால் உண்ணாமையைக் கடைப்பிடித்தார்.

 தமது ஓய்வுக் காலத்திலும் மக்களுக்குச் சேவை செய்யும் நோக்குடன் அரிமாக் கழகத்துடனும் செஞ்சிலுவைச் சங்கத்துடனும் சேர்ந்து தொண்டாற்றினார். அரிமாக் கழகத்தின் செயலாளராக இருந்து 1998ல் இலங்கையிலேயே இரண்டாவது சிறந்த செயலாளர் என்று பாராட்டையும் கேடயத்தையும் பெற்றவர். தமிழரசுக் கட்சியின் குரலாக விளங்கியதுடன், 1989ல் சாவகச் சேரித் தொகுதியில் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுப் பாராளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். (ஆனால் நாட்டுச்சூழலால் தம் கடமையாற்ற முடியவில்லை).

  இவர் ஒரு சிறந்த பேச்சாளராக இருந்ததுடன் மேடை நாடகங்கள், பேச்சுப் போட்டிகள், வானொலி நாடகங்கள், நெடுங்கதை, சிறுகதை, நாடக எழுத்தாளனாக, நடிகனாக, இயக்குனராக, தயாரிப்பாளராக, திறனாய்வாளராகவும் சிறந்து விளங்கினார். தமிழகத்தில் பற்றிப் பரவிய திராவிட இயக்க உணர்வு இவர் வழியாக இலங்கையில் பரவியது எனில் மிகையன்று. தமிழகத்தில் திராவிட இயக்கத்தலைவர்கள் நாடகம் மேடைப்பேச்சு வழியே உணர்வூட்டியது போல இவர் இலங்கையில் தம் பணியினைச் செய்துள்ளார். புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்த காலத்திலும் கனடிய மண்ணிலும் தனது தடத்தைப் பதிக்கத் தவறவில்லை. Canadian Charter of rights and freedoms என்பதைத் தமிழில் மொழி பெயர்த்துக் கனடிய அரசின் பாராட்டைப் பெற்றவர். உதயன், சுதந்திரன், தங்கத்தீபம், பறை ஆகிய இதழ்களில் தொடர் கட்டுரை, கதைகள் இவருடைய இறுதிக் காலம் வரை வெளிவந்து கொண்டிருந்தன.

  வள்ளுவம் மூலம் வையகம் சிறக்கவேண்டும் என்ற பேரவலால் "கேட்கட்டும் குறளின் குரல்" எனும் நூலை யாத்துத் தந்தவர் (இது கனடாவின் தமிழ் வானொலியில் ஒலிபரப்பான உரைகளின் மூன்று தொகுப்பாகும் 2004-05 இல் வெளிவந்தவை). தாய் மண்ணிலே எயிட்சின் கொடுங் கரங்கள் தழுவுவதைப் பொறுக்க மாட்டாது 'எயிட்சிலிருந்து பாதுகாப்பது எப்படி?' என்னும் நூலை எழுதி அச்சிட்டுத் தமிழ் மக்களிடையே அரிமாக் கழகத்தினூடாகப் பரவச்செய்தவர். இவர்தம் இறுதி நாட்களில் திருக்குறள் எளிமை உரையை யாழ்ப்பாணத் தமிழில் வெளியிட்டுள்ளார்.

திருக்குறள் எளிமை உரை அறிமுகம்

 திருக்குறளுக்குப் பல உரைநூல்கள் வெளிவந்துள்ளன. திருக்குறளின் மூலத்துக்கு இயைந்தும் மாறுபட்டும் அவரவர் கொள்கைகளுக்கு ஏற்ப உரை வரைந்துள்ளனர். திருக்குறள் எளிமை உரை தெளிந்த நீரோட்டமாக உரையைக் கொண்டுள்ளது. ஆசிரியர் பகுத்தறிவுக்கொள்கை உடையவர் என்றாலும் திருக்குறள் வழி நின்றே பல இடங்களில் உரைகண்டுள்ளார். இவர்தம் சொற்செறிவும், உரைகூறும் திட்பமும் சில இடங்களில் வியப்பைத் தருகின்றன.

  குறளின் உட்பொருளை நன்கு உள்வாங்கிக்கொண்டு உரைவரைந்துள்ளதால் தேவையான இடங்களில் கதைபோல நமக்கு உரை வழங்குகிறார். "மனைத்தக்க மாண்புடையள்"(51) என்ற குறளுக்கு "மனைக்குத் தகுந்தாற்போல நற்பண்புடையவளாகத் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க செலவு செய்பவளே நல்ல துணைவியாவாள்" என்று உரைக்கும் பொழுது நம் வாழ்வியல் துணைகொண்டு உரைவரையும் போக்கினை உணர முடிகிறது.

 "குறிப்பின் குறிப்பு உணர்வாரை"(703) என்னும் குறளுக்குப் "பிறரின் புறக்குறிப்புக்களால் அவரவர் அகக் குறிப்புக்களை அறிய வல்லவரை உடைமைகளுள் எதைக் கொடுத்தாயினும் துணையாகக் கொள்ளவேண்டும்" என்று மிகத்தெளிவாக உரை கண்டுள்ளமை போற்றத்தக்கது. குறள், உரை, திருவள்ளுவர் படங்கள், மொழிபெயர்ப்பு குறித்த சில விவரங்கள் நூலாசிரியரின் பிற நூல்கள் குறித்த விவரங்களைக் கொண்டுள்ள இந்நூல் தனித்து ஆராயத்தக்கது.

  "கேட்கட்டும் குறளின் குரல்" என்ற தலைப்பில் அ.பொ.செல்லையா அவர்கள் கனடிய வானொலியில் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டு மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளன. திருக்குறளை இன்றைய அரசியல், நாட்டு, நடப்புகளுடன் பொருத்தி ஒவ்வொரு அதிகாரத்தையும் விளக்கும் வகையில் 133 கட்டுரைகளாக இந்த நூல்கள் இயன்றுள்ளன. திருக்குறளை எளிமைப்படுத்தும் முயற்சியில் ஆசிரியர் வெற்றிபெற்றுள்ளார் என்று கூறலாம். அ.பொ.செல்லையாவின் பன்னூல் அறிவும் வாழ்க்கைத் தெளிவும், அரசியல் புலமையும் இந்த நூலின் வழி அறியமுடிகின்றது.

 செல்லையா யோகரத்தினம் அவர்களின் திருக்குறள் மொழிபெயர்ப்புப்பணி திருக்குறளை முதன்முதல் இலத்தீன்மொழியில் வீரமாமுனிவர் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார் என்று அறியமுடிகின்றது. அவரைத் தொடர்ந்து உலகின் பல மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அ.பொ.செல்லையா அவர்களின் துணைவியார் யோகரத்தினம் அம்மையார் அவர்கள் புதிய முறையில் திருக்குறளை யாவரும் அறிந்து கொள்ளவும், புரிந்துகொள்ளவும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

  கனடா போன்ற பிறமொழிச்சூழலில் வாழும் சிறியவர்களும் பெரியவர்களும் திருக்குறளைக் கற்க வேண்டும்> அதன்வழி நிற்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் இவ்வுரை விளக்கப்பணி அமைந்துள்ளது. எனவே இந்த நூலின் பெயர் "ஆங்கிலத்தில் திருக்குறள்" என்று அமைந்துள்ளது. "21 அம் நூற்றாண்டிற்கு ஏற்ப செப்பமான சிந்தனையுடன் நாடு, இன, மத, மொழி, வகுப்பு, குழு, இயக்க வேறுபாடின்றி தொகுக்கப்பட்டு, இளைஞர்களும் பாமர மக்களும் யாருடைய உதவியின்றிப் புரியக்கூடிய விரும்பிப் படிக்ககூடிய சிறந்த ஒரு உரையே எமக்குத் தற்பொழுது தேவை. வெறும் கல்விமான்கள் மாத்திரம் ஆய்வுசெய்வதற்கு அல்ல திருக்குறள். "என்ற தம் மொழிபெயர்ப்பு நோக்கினை மொழிபெயர்ப்பாளர் பதிவு செய்துள்ளார் (பக்கம்19).

மொழிபெயர்ப்பு அமைப்பு

 திருக்குறளின் மூலம் தொடக்கத்திலும், அதனை அடுத்து ஆங்கில எழுத்துப்பெயர்ப்பிலும், அதனை அடுத்துமொழிபெயர்ப்பும், அதனை அடுத்துத் தமிழ் உரையும் உள்ளன. திருக்குறளின் மூலத்துக்கு மாறுபட்டும் யோகத்தினம் அம்மையாரின் மொழிபெயர்ப்பு அமைந்துள்ளது. முதற்குறளில் ஆதி பகவன் என்பதைச் சூரியனாகக் குறிப்பிடுகிறார். பிற உரையாசிரியர்கள் யாவரும் தெய்வமாகக் குறிப்பிடுகின்றமை இங்கு எண்ணிப்பார்க்கத்தக்கது.A is for all letters of languages the first letter;likewise sun is for all lives என்று வரைந்துள்ளார்.

 ஒவ்வொரு அதிகாரத்தின் இறுதியிலும் அடிக்குறிப்பாக அதிகாரத்தில் கற்பதற்கு இலகுவான குறள், நடுத்தரமான குறள், கடினமானவை என்று வகுத்துக்காட்டிக் கற்பவருக்குக் குறட்பாவை எளிமையிலிருந்து வலிமைக்குப் படிக்கச் செல்லத் தூண்டுகின்றார். மொழிபெயர்ப்பு நூலின் இறுதியில் மொழிபெயர்ப்பாளரின் வேறு துறைசார்ந்த கட்டுரைகளும் தமிழில் இணைக்கப்பட்டுள்ளன.

 அ.பொ.செல்லையா அவர்களும், யோகரத்தினம் அம்மையார் அவர்களும் ஈழத்தில் பிறந்து கனடிய நாட்டில் குடியேறினாலும் அங்கும் தமிழ்ப்பணியைத் திருக்குறள் பணியைத் தொய்வின்றிச் செய்துள்ளனர். இவர்களின் பன்னூல் வெளியீடுகளும் குறிப்பாகத் திருக்குறள் சார்ந்த வெளியீடுகள் தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகம் செய்யப்பட வேண்டும்; ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும்.

 (இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கிற்காக உருவாக்கப்பெற்று ஆய்வுக்கோவையில் 15,16.05.2010 ஆம் நாள் வெளியிடப்பெற்றுள்ளது. கருத்தரங்க இடம்: நாகர்கோயில். ஒருங்கிணைப்பு: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்)

ஞாயிறு, 23 மே, 2010

ஐம்பெருங்காப்பிய மாநாடு-மலேசியா


மலேசிய நடுவண் அமைச்சர் டத்தோ சரவணன் அவர்களுடன் நான்

மலேசியாவின் ஈப்போ நகரில் 21-05-2010 முதல் 23-05-2010 வரை மலேசியத் தமிழர் பேரவை ஆதரவில் ஐம்பெருங்காப்பிய மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக் கருப்பொருள் "இன்றைய மானுட மேன்மைக்கு ஐம்பெருங்காப்பியத்தின் பங்கு" என்பதாகும். நிறைவுநாளான இன்று
(23.05.2010) நான் கலந்துகொண்டு சிலப்பதிகார இசைப்பகுதிகள்,நாட்டுப்புற இசைப்பகுதிகளை விளக்கினேன்.

காலை 8.30 மணிக்கு ஈப்போவில் உள்ள திரு.சிவநேசன் என்னும் நண்பர் இல்லத்திலிருந்து புறப்பட்டு,இடையில் உணவு முடித்துக்கொண்டு மாநாட்டு அரங்கினை 9.30 மணிக்கு அடைந்தோம்.மாநாடு மிகச்சிறப்பாகத் திட்டமிடப்பட்டுப் பேராக் மாநில முதல்வர் அலுவலகத்தில் அரசு வளாக விருந்து மண்டபத்தில் அழகிய அரங்கில் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

மாநாட்டில் தமிழகப் பேராளர்களும்,மலேசியப் பேராளர்களும் அரங்கில் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.இரண்டு நாளாகக் கருத்தரங்கம் சிறப்பாக நடந்தது. இன்று காலையிலும் கருத்தரங்கம் நடைபெற்றது.தமிழகம்,மலேசியா சார்ந்த பலர் ஆய்வுக்கட்டுரை வழங்கினர்.அதன் பின்னர் முனைவர் உலகநாயகி பழனி தலைமையில் மகளிர் அரங்கம் நடைபெற்றது.ஆர்வமுடன் மாநாட்டு நிகழ்வுகளைக் கவனித்தேன்.

இதன் இடையே ஈப்போ நகரின் புகழ்பெற்ற தனித்தமிழ் அறிஞர் குறிஞ்சிக்குமரனார் அவர்களின் மகன் திருவாளர் தமிழ்ச்சாத்தன் அவர்கள் தம் துணைவியாருடன் என்னைக் காண வந்திருந்தார். அவர்களின் அன்பான அழைப்பை ஏற்று,குறிஞ்சிக்குமரனாரின் இல்லம் சென்றேன். 1992-93 அளவில் குறிஞ்சிக்குமரனார் எனக்கு மடல் வழியாகத் தொடர்பில் இருந்தார்.பின்னர் அவர்கள் மறைவுற்றதை அவர் மாணவர் திரு.கருப்பையா அவர்கள் வழியாக அறிந்தேன்.

2001 இல் நான் மலேசியா சென்றபொழுது குறிஞ்சிக்குமரனாரின் இல்லம் செல்ல நினைத்தும் வாய்ப்பு அமையவில்லை.இந்த முறை குறிஞ்சிக்குமரனார் இல்லம் சென்று அவர்களின் துணைவியாரையும்,அவர்களின் குடும்பத்தாரையும் கண்டு அளவளாவினேன். அனைவருக்கும் தனித்தமிழ்ப் பெயர்கள் இடப்பெற்றிருந்தது அறிந்து மிக மகிழ்ச்சியுற்றேன்.1960 அளவில் மலேசியாவில் பாவாணர் புகழ்பரப்பிட பாவாணர் தமிழ்மன்றம் கண்டவர் நம் குறிஞ்சிக்குமரனார் அவர்கள்.அவர்கள் குடும்பத்தாரிடம் விடைபெற்று 1.30 மணிக்கு அரங்கை மீண்டும் அடைந்தேன். உணவு இடைவேளைக்கு அனைவரும் பிரிந்திருந்தனர்.

பகல் 2.30 மணிக்குப் பொது அரங்கு நடைபெற்றது.மருத்துவர் உசேன் தலைமையில் அறிஞர்கள் எண்மர் ஐம்பெருங்காப்பிய மாண்பினை நிலைநிறுத்தனர்.நான் சிலப்பதிகாரத்தின் இசைப் பகுதிகளை விளக்கி,நாட்டுப்புற இசையை அடிகளார் பயன்படுத்திய இடங்களைப் பாடிக்காட்டி விளக்கினேன்.அரங்கில் இருந்த அனைவரும் மகிழ்ந்தனர்.

நான் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துரைக்க உழைப்புச்செம்மல் இரா.மதிவாணன் அவர்கள், மருத்துவர் உசேன் அவர்கள்,மலேசியாவைச் சார்ந்த ஆசிரியர் திரு.இரா.மாணிக்கம் அவர்கள்,முனைவர் வா.மு.சே.ஆண்டவர் அவர்கள் உதவினர்.மாலையில் மலேசியாவின் நடுவண் அரசு கூட்டரசு பிரதேசம்,புறநாகர் நல்வழ்வுத்துறை துணை அமைச்சர் மாண்புமிகு டத்தோ எம்.சரவணன் அவர்கள் முன்னதாக அரங்கிற்கு வந்து அனைவருக்கும் வாழ்த்துரைத்துக் கலந்துரையாடினார். மாலையில் நிறைவு விழா மிகச்சிறப்பாக நடந்தது.

நான் ஈப்போவில் 5.30 மணிக்குப் பேருந்தேறி 7.30 மணிக்குத் தலைநகர் கோலாலம்பூர்(202 கி.மீ) வந்தடைந்தேன்.கணிப்பொறி வல்லுநர் திரு.பாலாப்பிள்ளை அவர்கள் கோலாலம்பூர் நடுவண் தொடர்வண்டி நிலையம் அருகில் வந்து என்னை மகிழ்வுந்தில் ஏற்றிக்கொண்டு, பெட்டாலிங் செயா என்ற ஊருக்குக் கொண்டு வந்தார்.அங்கு பேராசிரியர் மன்னர் மன்னன் அவர்களும் அவர்களின் தம்பிமார்கள் திரு.இளந்தமிழ், திரு.திரவியம், திரு.நெடுஞ்செழியன் உள்ளிட்டவர்கள் காத்திருந்தனர்.அனைவரும் கலந்துரையாடினோம்.விரிவான என் மலையகப் பயணத்தைத் தமிழகம் சென்றதும் விரித்து எழுதுவேன்.பல படங்கள் நினைவுக்காக எடுத்துள்ளேன்.அனைத்தையும் பதிவில் இணைப்பேன்.


எனக்கு நினைவுப் பரிசில் வழங்குகின்றனர்.அருகில் பேரா.வளன் அரசு


மாநாட்டு அரங்கில் அறிஞர்களுடன் நான்


மரு.உசேன்,மரு.பாலா,முனைவர் பா.வளன்அரசு,மு.இ




நான்,மருத்துவர் உசேன்,திரு.இரா.மதிவாணன்

தொடர்புடைய பதிவு: திருத்தமிழ்
கே.பாலமுருகன்

சனி, 22 மே, 2010

தமிழ் இணையப் பயிலரங்கம் உணவு இடைவேளைக்குப் பிறகு தொடர்கிறது....

மலேசியா நாட்டில் செலாங்கூர் மாநிலத்தில் உள்ள கோலாலங்காட் மாவட்டத்தில்,பந்திங் நகரில் கோலாலங்காட் சமூக கல்லூரியில் 22.05.2010 காலை தொடங்கியத் தமிழ் இணையப்பயிலரங்கம் உணவு இடைவேளைக்குப் பிறகு பகல் 1.30 மணிக்கு மீண்டும் தொடங்கியது.வலைப்பதிவு உருவாக்கம் குறித்த நேரடிப் பயிற்சி இப்பொழுது நடைபெற்று வருகிறது...

மலேசியா,பந்திங்,தமிழ் இணையப் பயிலரங்கம் தொடங்கியது...

மலேசியா,பந்திங்,கோலலங்காட் தமிழ்ப்பள்ளி -தலைமையாசிரியர் மன்றம் சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் இன்று 23.05.2010 காலை 9.30 மணிக்குத் தொடங்கியது. திரு.முனியாண்டி அவர்கள் பயிலரங்க நோக்கத்தினை எடுத்துரைத்தார்.மலேசியா பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு.மன்னர்மன்னன் அவர்கள் கருத்தரங்கைத் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.நான் பயிலரங்கில் கலந்துகொண்டு பயிற்சி வழங்குகிறேன்.

மலேசியாவின் பல பகுதிகளிலிருந்தும் தமிழாசிரியர்கள் ஐம்பது பேர் அளவில் கலந்துகொண்டுள்ளனர்.ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.தமிழ் இணைய அறிமுகம் ஒன்றரை மணி நேரம் நடந்தது.தேநீர் இடைவேளைக்குப் பிறகு பயிலரங்கம் மீண்டும் தொடர்கின்றது.

வியாழன், 20 மே, 2010

மலேசியாவில் உள்ள கடாரம்(கெடா) தொல்பொருள் ஆய்வகத்தைக் கண்டேன்...


மலேசியாவில் கடாரம்(கெடா) என்ற பகுதியில் நான்


மலேசியாவில் உள்ள "கெடா"(கடாரம்) மாநிலத்தில் உள்ள பூசாங் பள்ளத்தாக்கு பகுதிக்கு இன்று சென்றிருந்தேன்.காலை 10.30 மணியளவில் சுங்கைப் பட்டாணி என்ற இடத்திலிருந்து புறப்பட்டு ஐயா புண்ணியவான் அவர்களின் மகிழ்வுந்தில் பூசாங் பள்ளத்தாக்குப் பகுதிக்குச் சென்றேன்.அரை மணி நேர ஓட்டத்தில் பூசாங் பள்ளத்தாக்குப் பகுதியை அடைந்தோம்.

சுங்கைப் பட்டாணியிலிருந்து பூசாங் பள்ளத்தாக்கு 20 கல் தொலைவில் இருந்தது.அழகிய சாலைகளும், மலைச்சரிவுகளும் கொண்ட இயற்கை எழில்கொஞ்சும் பகுதி இது.அருவிகள் வழியும் இந்தப் பகுதி கெடா மாநிலத்தில் உள்ளது.இங்குள்ள தொல்பொருள் ஆய்வகத்தை முதற்கண் பார்வையிட்டோம்.

கோயில்கள்,சிலைகள் இருந்ததற்கான பல சான்றுகளை அகழாய்வுத்துறையினர் திரட்டி வைத்துள்ளனர்.கல்லால் அமைந்த நீர்த்தொட்டிகள்,தூண்கள்,செம்பறாங்கல்லால் அமைந்த கோயில் அமைப்புகள்,செங்கல் அமைப்புகளில் கோயில்கள் இருந்துள்ளன.இராசேந்திரசோழன் பற்றிய குறிப்புகள் பறவைப் பார்வையில் பார்த்த எனக்குக் கிடைக்கவில்லை.இந்த இடம்,அமைப்பு,வரலாறு பற்றி தமிழகம் திரும்பியதும் விரிவாக எழுதுவேன்.

அழகிய இயற்கை சூழ்ந்த இந்த ஊருக்குப் போக வேண்டும் என்ற என் நீண்ட நாள் ஆசை இன்று நிறைவேறியது.என் பிறந்த ஊரான இடைக்கட்டிலிருந்து(கங்கைகொண்ட சோழபுரம் அருகில்) கடாரங்கொண்டான் என்ற ஊர் ஒரு கல் தொலைவில் உள்ளது.இராசேந்திரசோழனின் கடாரப் படையெடுப்பு பத்தாம் நாற்றாண்டில் நிகழந்திருப்பினும் இதுவரை நம் பகுதி சார்ந்தவர்கள் வந்து இந்த இடத்தைப் பார்த்திர்க்க வாய்ப்பில்லை.அப்படி பார்த்திருந்தாலும் இணையத்தில் உலகத்தமிழர்களுக்கு அறிவித்திருக்க வாய்ப்பில்லை.எனவே நினைவுக்குச் சில படங்கள் இணைக்கின்றேன்.

அழைத்துச் சென்று வரலாறு உணர்த்திய எழுத்தாளர் புண்ணியவான் அவர்களுக்கு நன்றி.

(குறிப்பு: தங்கும் இடம் ,சுங்கைப்பட்டாணி,மலேசியா,20.05.2010)


மலேசிய எழுத்தாளர் புண்ணியவான்



கோயில் கருவறை



கோயில் கருவறை



ஆய்வுகளுக்கு வழிவகுக்கும் பெயர்ப்பலகை



கடாரம் பெயர்ப்பலகை



காட்சியகத்தில் உள்ள பொருட்கள்


கல் கருவறை அமைப்பு


கல்லால் அமைந்த தொட்டி

மலேசியா,சுங்கைப்பட்டாணியில் என் உரை

மலேசியாவின் புகழ்பெற்ற நகரான சுங்கைப்பட்டாணியில் இன்று 20.05.2010 மாலை 5.30 மணிக்குத் "தமிழக நாட்டுப்புறப்பாடல்கள்" என்ற தலைப்பில் உரையாற்றுகின்றேன்.எழுத்தாளர் புண்ணியவான் அவர்கள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.

இடம்: M.G.G.K மண்டபம்(ஜெயா புத்தக நிலையம்)
காந்தி மண்டப முன்புறக்கடை வரிசையில் மேல்மாடி,
சாலான் செகெராட்,சுங்கைப்பட்டாணி.

நேரம்: மாலை 5-30. மணி

ஏற்பாடு: நவீன இலக்கியச் சிந்தனைக்களம்

தொடர்புக்கு : புண்ணியவான் 019 5584905
தமிழ்மாறன் 019 5700751
பாலமுருகன் 016 4806241

சிங்கை மலையகச் செலவு

 சிங்கை மலையகத் தமிழ் அன்பர்களின் அழைப்பை ஏற்று 18-05.2010 முதல் 25.05.2010 வரை பல இடங்களில் உரையாற்றவும், கருத்தரங்குகளில் கலந்துகொள்ளவும் சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு வந்துள்ளேன்.

 சிங்கப்பூரில் திரு.கோவலங்கண்ணன், திரு.குழலி ஆகியோரின் ஏற்பாட்டில் இலக்கியக் கலந்துரையாடல், வலைப்பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டேன். கருத்தரங்கிலும் கட்டுரை படித்தேன்.

 நேற்று மலேசிய நண்பர்கள் திரு.முனியாண்டி, திரு.பாலா பிள்ளை ஆகியோர் நான் தங்கியிருந்த அறைக்கு வந்து உரையாடினர்.

 கோலாலம்பூரில் நடு இரவு பேருந்தில் புறப்பட்டு, இன்று 20.05.2010  வைகறை 4.30 மணிக்குச் சுங்கைப்பட்டாணி என்னும் ஊருக்கு வந்தேன். எழுத்தாளர் புண்ணியவான் அவர்களின் இலத்தில் தங்கியுள்ளேன்.

 இருவரும் புகழ் பெற்ற "கெடா"(கடாரம்)என்ற ஊருக்குச் செல்ல உள்ளோம்.

மலேசியாவில் பேராசிரியர் மன்னர்மன்னன், முனியாண்டி, புண்ணியவான், மாரியப்பன் ஆறுமுகனார், சுப.நற்குணனார், மதிவரன் உள்ளிட்ட அன்பர்கள் என் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்துவருகின்றனர்.

ஞாயிறு, 16 மே, 2010

சிங்கப்பூரில் தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு

சிங்கப்பூருக்கு 15.05.2010 காலை 7.40 மணியளவில் ஏர் இந்தியா வானூர்தியில் வந்து சேர்ந்தேன்.நண்பர் குழலி, கோவி.கண்ணன் ஆகியோர் வானூர்தி நிலையம் வந்து வரவேற்றனர்.இதற்கு முன் இணையம் வழியாகவே அறிந்திருந்தோம்.நேரில் பார்த்து மகிழ்ந்தோம்.உடனடியாக நாளை வலைப்பதிவர்கள் சந்திப்பு ஒன்று நிகழ்த்த ஏற்பாடு செய்வதாக முடிவு செய்தோம்.வானூர்தி நிலையத்திலிருந்து அவர்கள் விடைபெற்றனர்.

நான் வேறொரு கருத்தரங்கில் ஆய்வுக்கட்டுரை படைப்பதால் இன்று 16.05.2010ஞாயிற்றுக்கிழமை மாலை5.00 மணியளவில் தமிழ் வலைப்பதிவர்கள் சந்திக்க உள்ளோம்.நண்பர் இரத்தின. புகழேந்தியும் பதிவர் சந்திப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கிறேன்.அதன் பிறகு இலக்கியக் கலந்துரையடல் ஒன்று தமிழ் அன்பரும் பாவாணர் அறக்கட்டளையின் நிறுவனருமான ஐயா கோவலங்கண்ணன் அவர்களின் ஏற்பாட்டில் நடக்க உள்ளது.

இடம்:பாவாணர் அரங்கம்,மருதப்பர் உணவகம்,42,கேம்பல் லேன்,சிங்கப்பூர்
நாள்:16.05.2010
நேரம்;மாலை 5.00 மணி
தொடர்புக்கு; 90405974 திரு.கோவலங்கண்ணன்(சிங்கப்பூர்)

திங்கள், 10 மே, 2010

இராசேந்திர சோழனின் கடார(மலேசியா)ப் படையெடுப்பைப் பற்றிய கல்வெட்டு

இராசேந்திர சோழனின் அயல்நாட்டுப் படையெடுப்பு பற்றிய அரிய செய்திகளைத் தாங்கியுள்ள கல்வெட்டு அவனின் 19 ஆம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டு,தஞ்சாவூர் இராசகோபுரத்துக் கர்ப்பகிருகத்தில் தென்புறத்திலுள்ள முதற்படை,இரண்டாம் படைகளில் உள்ளது. தமிழும், கிரந்தமும் கலந்து அமைந்த கல்வெட்டாக இது உள்ளது.

கல்வெட்டால் அறியப்படும் போர்ச்செயல்கள்

கடாரத்தரசனாகிய சங்கிராம விசயோத்துங்கனைத் தோற்கடித்தான்; அவனுடைய செல்வத்தையும் அவன் தலைநகரின் வாசலில் கட்டியிருந்த விச்சாதிரத் தோரணத்தையும், மணிகள் பதிப்பிக்கப்பட்ட இரட்டைக் கதவுகளையும் தன் வசமாக்கிக்கொண்டான்; சுமித்ராத் தீவிலுள்ள விசயம்,பண்ணை,மலையூர் என்னும் ஊர்களை வென்றான். பின் மலேயாத் தீபகற்பத்திலுள்ள மாயிருடிங்கம்,இலங்கா சோகம்,மாபப்பாளம், இலிம்பிங்கம், வளைப்பந்தூறு, தக்கோலம்,மதமாலிங்கம் என்னும் ஊர்களை வென்றான்.பிறகும் சுமித்ராவிலுள்ள இலாமுரிதேசத்தைக் கைக்கொண்டான்; நக்கவாரத் தீவுகளை வென்றான்.மலேயாத் தீபகற்பத்தின் மேலைக் கரையிலுள்ள கடாரத்தை வென்றான்.

உரைநடைப்பகுதியால் அறியப்படும் செய்திகள்

இராசேந்திர சோழன் தஞ்சை இராச ராசேச்சரத்தில் இருந்த தன் குருவாகிய சர்வசிவ பண்டிதர்க்கும்,அவரது சிஷ்யர்களாய் ஆர்யதேசம்,மத்யதேசம், கௌடதேசம் ஆகிய இவ்விடங்களில் இருந்தவர்களுக்கும் சந்திர சூரியர் உள்ளவரை ஆண்டுதோறும் நிறைந்த அளவாக ஆடவல்லான் என்னும் மரக்காலால் இரண்டாயிரம் கல நெல்லை ஆசாரிய போகமாகக் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தான்.

கல்வெட்டு மூலம்

1.ஸ்வஸ்திஸ்ரீ திருமன்னி வளர இரு நில மடந்தை(யு)ம் பொற்சயப் பாவையும் சிர்த்தநி (ச் செ)சல்வியும் (த)ன் பெருந்தெவியராகி இன்புற நெடுதியல் ஊழியுள் இடைதுறை நாடும் துடர்வன வெலிப்படர்வன வாசியும் கள்ளி சூழ் மதிள்-

2.கொள்ளிப் பாக்கையும் நண்ணற்கரு (மு)ரண் மண்ணைக் கடக்கமும் பொருகடலீழத் தரைசர்த முடியும் ஆ(ங்)கவர் தெவியர் ஓங்கெழில் முடியும் முன்னவர் பக்கல் தென்னவர் வைத்த சுந்தரமுடியும் இந்திர(னா)ரமும் தெண்டிரை ஈழமண்ட-

3.லமுழுவதும் எறிபடைக் கொளன் முறை¬(ம) யிற் சூடுங்குலதனமாகிய பலர் புகழ் முடியும்(ª)சங்கதிர் மாலையும் சங்கதிர் வெலைத்தொல் பெருங்காவற் பல பழந்திவும் செருவிற்சினவி இருபத்தொரு காலரசு களைகட்ட பரசுராமன் -

4.மெவருஞ் சாந்திமத் தீவர(ண்) கருதி இருத்(தியசெ)ம் பொற்றிருத்தகு முடியும் ப(ய)ங்கொடு பழி மிக மு(யங்கி)யில் முதுகிட்டொளித்த சயசிங்கன் அளப்பரும் புகழொடும் பி(டி)யல் இரட்டபாடி எழரை இலக்கமும் நவநெதிக்குலப் பெருமலைக -

5.ளும் விக்கிரம வீரர் சக்கரக்கொட்டமும் முதிர்பட வல்லை மதுர மண்டலமும் காமிடை வளநாம்மணை(க்)கொணையும் வெஞ்சின வீரர் பஞ்சப் பள்ளியும் பாசடைப் பழ(ன) மாசுணி தேசமும் அயர்வில் வண்கீர்த்தி ஆதிநகரவையில்

6.சந்திரன் றொல்குலத் திந்திரதனை விளை அமர்களத்துக் கிளையடும் பிடித்துப் பல(தன)த்தொடு நிறைகு(ல) தனக் குவையும் கிட்டருஞ் செறிமி(ளை) ஒட்ட விஷையமும் பூசுரர் செர்நற் கோசலை நாடும் தந்மபால (னை) வெம்மு(னை) யழித்து வண்டுறை சொலைத்த(ண்)ட -

7.புத்தியும் இரணசூரனை முரணுகத் தாக்கி(த்) திக்கணை கீர்த்தி தக்கண(லாடமும் கோவிந்த சத்தன் மாவிழிந் தொட(த்) தங்காத சாரல் வங்காளத் தேசமும் தொடு கழற் சங்கு வொட்ட(ல்) மயிபாலனை வெஞ்சமர் விளாகத் தஞ்சுவித்தரு(ளி) யண்டிறல் யானையும் ª(ப)ண்டி

இரண்டாம் அடுக்கு

8.ர் பண்டாரமும் (நித்தில நெடுங்கடலுடுத்திர)லாடமும் வெறிமலர்த்(தீ)ர்த்தத்தெ (றிபு)னல் கங்கையும் அலைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்திச் சங்கிராம விசை யத்துங்க வந்மனாகிய கடாரத்தரசனை வாகயம் பொரு

9.கடல் கும்பக் கரியடு மகப்படுத் துரிமையில் பிறக்கிய பெருனெதிப் பெருக்கமும் ஆர்த்தவனகனகர் (ª)பார்த்தொழில் வாசலில் விச்சாதித் தொரணமும் மொய்த்தொளிர் புனைமணிப்புதவமும் கனமணிக் கதவமும் நிறைசீர் விசையமும துறை -

10.நிர்ப் பண்ணையும் வன்மலையூரெயிற் றொன் மலையூரும் ஆழ்கடலகழ்சூழ் மாயிருடிங்கமும் கலங்காவல் (வி)னை இலங்கா சொகமும் காப்புறு நிறைபுனல் மாப்பப் பாளமும் காவலம் புரிசை மெவிலிம் பங்கமும் விளைப் பந்தூ றுடை வளைப்ப -

11.ந்நூ(று)ம் கலைத்தக் கொர்புகழ் தலைத்தக் கொலமும் திதாமால்வினை மதமாலிங்கமும் கலாமுதிர்க் கடுந்திறல் இலாமுரி தேசமும் தெனக்க வார்பொழில் மானக்கவாரமும் தொடுகடல் காவல் கடுமுரட் கடாரமும்(ம)£-

12.(ப்பொ)ரு தண்டாற்கொண்ட கொப்பாகெஸரி வந்மரான உடையார் ஸ்ரீ ராஜேந்திர சொழதெவர்க்கு யாண்டு யக(19) ஆவது நாள் இருநூற்று நாற்பத்திரண்டினால் உடையார் ஸ்ரீ ராஜேந்திரசொழ தேவர் கங்கைகொண்ட சோழபுர-

13.(த்துக்) கோயிலினுள்ளால் முடிகொண்ட சோழன் திருமாளிகையில் வடபக்கத்து தேவாரத்துச் சுற்றுக் கல்லூரியில் தாநஞ்செய் தருள இருந்து உடையார் ஸ்ரீராஜ ராஜ ஈஸ்வரமுடையார் கோயிலில் ஆசர்ய போகம் நம் உடையார்

14.சர்வ சிவபண்டித (சைய்)வ்வாசார்யாருக்கும் இவ்வுடையார் சிஷ்யரும் பிற சிஷ்யரும் ஆய் ஆர்யதேசத்தும் மத்ய தேசத்துத்தான் ஹெளட தேசத்துத்தான் உள்ளாராய் யோக்யராயிருப்பார்க்கெ ஆட்டாண்டு தொறும் இத்தேவர் கோயிலில் ஆடவல்லா(னெ)-

15.(ன்னு)ம் மரக்காலால் உள்ளூர்ப் பண்டாரத்தே நிறைச் சளவாக இரண்டாயிரக் கலநெல்லு ஆட்டாண்டுதொறும் சந்திராத்தித்தவல் பெறத் திருவாய் மொழிந்தருளத் திருமந்திர ஓலை செம்பியன் விழுப்பரையன் எழுத்தினா-

16.(ல்) த் திருவாய் கேழ்விப்படி கல்லில் வெட்டித்து.இது இவ்வம்சத்துள்ள சைய்வ்வ ஆசாரியர்களே இத்தன்மம் (ர)க்ஷிக்க.

கல்வெட்டின் அரிய சொற்களுக்கு விளக்கம்

அலைகடல் நடுவுள் பல கலஞ்செலுத்தி- சோழர்கள் கப்பல் படைகளை வைத்திருந்தனர் என்பதை உறுதிப்படுத்தும் தொடர்.

சங்கிராமம்-போர்

விசயோத்துங்கன்-(விசய+ உத்துங்கன்) வெற்றியில் மிக மேம்பபட்டவன்

கடாரம்- இது மலேசியாத் தீபகற்பத்திலுள்ள மேல் கரையில் உள்ள ஊர்.இதுபொழுது "கெடா" என வழங்கப்படுகின்றது.பட்டினப்பாலையில் "காழகத்து ஆக்கம்" காழகம் எனப்படுகின்றது. பெரிய லெய்டன் செப்பேட்டில் கடாகம் எனப்படுகின்றது.

புதவமும் கதவமும்- இரட்டைக் கதவுகளையும்(புதவக் கதவம் புடைத்தனன் ஓருநாள் என்பது சிலப்பதிகாரம்)

விசையம்-சுமத்திராத் தீவிலுள்ள பாலம்பாங் என்று வழங்கப்பெறும் தேயம்

பண்ணை- சுமத்திராத் தீவில் கீழ்க்கரையில் உள்ள ஊர்

மாயிருடிங்கம்-மலேயாவில் நடுப்பகுதியில் உள்ளது.சீனதேசத்து நூல்களில் இது ஜிலோடிங் எனப்படுகின்றது.

இலங்காசோகம்-மலேசியாத் தீபகற்பத்திலுள்ள கெடாவிற்குத் தெற்கில் உள்ள ஊர்.

பப்பாளம்- இது கிரா பூசந்திக்குத் தெற்கே மலேசியாவின் மேற்குப்புறத்தே உள்ளது.

தக்கோலம்-இது கிரா பூசந்திக்குத் தெற்கே மலேசியாத் தீபாகற்பத்திற்கு மேற்கே உள்ளது.கிரேக்க ஆசிரியர் தாலமி இதனைத் தகோலா என்று குறிப்பிடுவார்.

மதமாலிங்கம்- மலேசியாத் தீபகற்பத்தின் கீழ்க்கரையில் குவாண்டன் நதியின் முகத்துவாரத்தில் உள்ள தெமிலிங் என்னும் இடமாகும்.சீன நூல்களில் இது தன்மாலிங் எனப்படுகின்றது.

இலமுரிதேசம்-சுமத்திரா தீவில் வடபகுதியில் உள்ளது.மார்க்கபோலா இதை லன்பரி என்பர் சீனர்கள் லான்வூலி என்பர்

நக்கவாரம்-நிக்கோபார்த் தீவுகள்.மணிமேகலை குறிப்பிடும் நாகநாடு இதுவாகும்.

நன்றி
நூல்: முப்பது கல்வெட்டுகள்
நூலாசிரியர்: வித்துவான் வை.சுந்தரேச வாண்டையார்.
வெளியீடு: பழனியப்பா பிரதர்சு,சென்னை

ஞாயிறு, 9 மே, 2010

இராசராசன் தஞ்சைக்கோயில் கல்வெட்டு


தஞ்சைப் பெரியகோயில்

தஞ்சாவூர் பெரியகோயிலில் வடபுறச்சுவரில் இராசராசனின் இருபத்தொன்பதாம் ஆட்சியாண்டு கல்வெட்டில் திருப்பதியம் விண்ணப்பம் செய்வோர்க்கு ஏற்படுத்தப்பட்ட நிவந்தங்களைப் பற்றிய குறிப்புகளைத் தரும் கல்வெட்டு உள்ளது.இதன் காலம் கி.பி.1014 ஆகும்.

கல்வெட்டால் அறியப்படும் செய்திகள்

முதலாம் இராசராச சோழன் தஞ்சை இராசராசேச்சரமுடையார்க்குத் திருப்பதியம் விண்ணப்பம் செயவதற்குப் பிடாரர்கள் நாற்பத்தெண்மரகொட்டிமத்தளம் வாசிபார் ஒருவர்,உடுக்கை வாசிப்பார் ஒருவர் ஆக ஐம்பதின்மரை நியமித்து அவர்களுக்கு நாள்தோறும் ஆள் ஒன்றுக்கு இராசகேசரியோடொக்கும் ஆடவல்லான் என்னும் மரக்காலால் முக்குறுணி நெல் உள்ளூர்ப் பண்டாரத்தில் கொடுக்குமாறு ஏற்பாடு செய்திருந்தான்.

திருப்பதியம் விண்ணப்பம் செய்வார்க்கு ஏற்படுத்தப்பட்ட விதிகள்

திருப்பதியம் விண்ணப்பம் செய்தவர்களில் இறந்தவருக்கும்,வேற்றுத் தேசங்களுக்குப் போனவர்க்கும் பதிலாக,அவ்வவர்க்கு நெருங்கிய உறவினராய் இருப்பார் அந்நெல்லு பெற்றுத் திருப்பதியம் விண்ணப்பம் செய்வதென்றும்,அவ்வாறு நெருங்கிய உறவினர் திருப்பதிகம் விண்ணப்பம் செய்யத்தகுதியுடையாராய் இல்லாவிடில்,அவர்களே யோக்கியராய் இருப்பாரை அமர்த்தி,திருப்பதியம் விண்ணப்பம் செய்வித்து அந்நெல்லைப் பெறுவதென்றும்,அவ்வவர்க்கு நெருங்கிய உறவினர் இல்லையானால்,அந்தத் தொழில் செய்பவர்களே தகுதியுடையராய் இருப்போரைத் திருப்பதியம் விண்ணப்பம் செய்யத் தேர்ந்தெடுப்பதோடு, அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவரே நெல்லு பெறுவதென்றும் விதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

திருப்பதியம் என்பதில் பதியம் என்பது பத்துப்பாடல்களைக் குறிக்கும்.பதிகம் என்பது இலக்கண வழக்கில் ஆளப்படுவது. தேவராப்பாடல்களை இங்குப் பதிகம் என்னும் சொல் குறிக்கிறது.

திருப்பதியம் விண்ணப்பம் செய்வதற்கு நியமிக்கப்பட்டிருந்த நாற்பத்தெண்மர்களின் பெயர்கள் விவரம்:


1.பாலன் திருவாஞ்சியத்தடிகளான ராஜராஜப் பிச்சனான சதாசிவன்
2.திருவெண்ணாவல் செம்பொற் சோதியான தக்ஷிணமேரு விடங்கப் பிச்சனான ஞானசிவன்
3.பட்டாலகன் அம்பலத்தாடியான மனோத்தம சிவன்
4.பட்டாலகன் சீருடைக் கழலனான் பூர்வசிவன்
5.பொற்சுவரன் திருநாவுக்கரையனான பூர்வ சிவன்
6.மாதேவன் திருஞான சம்பந்தனான ஞானசிவன்
7.கயிலாயன் ஆரூரான தர்மசிவன்
8.செட்டி எடுத்த பாதமான கவச சிவன்
9.இராமன் சம்பந்தனான சத்திய சிவன்
10.அம்பலவன் பக்தர்கள் -- -- வாம சிவன்
11.கம்பன் திருநாவுக்கரையனான சதாசிவன்
12.நக்கன் சீராளனான வாம சிவன்
13.அப்பி திருநாவுக்கரையான நேத்திர சிவன்
14.சிவக்கொழுந்து சீராளனான தர்ம சிவன்
15.ஐந்நூற்றுவன் வெண்காடனான சதாசிவன்
16.அரையன் அணுக்கனான திருமறைக் காடனான தர்மசிவன்
17.அரையன் அம்பலக் கூத்தனான ஓங்கார சிவன்
18.ஆரூரன் திருநாவுக்கரையனான ஞானசிவன்
19.கூத்தன் மழலைச் சிலம்பனான பூர்வ சிவன்
20.ஐந்நூற்றுவன் சீ ஆரூரனான தத்புருஷ சிவன்
21.சம்பந்தன் ஆரூரனான வாமசிவன்
22.அரையன் பிச்சனான தர்ம சிவன்
23.காஸ்யபன் எடுத்த பாதப் பிச்சனான உருத்திரசிவன்
24.சுப்பிரமணிய ஆச்சனான தர்ம சிவன்
25.கூத்தன் அமர புஜங்கனான சதாசிவன்
26.வெண்காடனான அகோர சிவன்
27.மாதேவன் திருநாவுக்கரையான விஞ்ஞான சிவன்
28.கூத்தன் வெண்காடனான உருத்திரசிவன்
29.ஐந்நூற்றுவன் திருவாய்மூரனான அகோரசிவன்
30.திருமலைக் கூத்தனான வாம சிவன்
31.ஐந்நூற்றுவன் எடுத்த பாதமான தர்ம சிவன்
32.அரையன் தில்லைக் கரசான பூர்வ சிவன்
33.காளி சம்பந்தனான தர்ம சிவன்
34.காபாலிக வாலியான ஞான சிவன்
35.வெண்காடன் நமசிவாயமான உருத்திர சிவன்
36.சிவன் அனந்தனான யோக சிவன்
37.சிவக்கொழுந்து சம்பந்தனான அகோர சிவன்
38.இராமன் கணவதியான ஞான சிவன்
39.பிச்சன் வெண்காடனான அகோர சிவன்
40.மறைக்காடன் நம்பி ஆருரனான ஞான சிவன்
41.சோமன் சம்பந்தனான ஞான சிவன்
42.சத்தி திருநாவுக்கரையனான ஈசான சிவன்
43.பொற்சுவரன் நம்பி ஆரூரனான தர்ம சிவன்
44.ஆச்சன் திருநாவுக்கரையனான நேத்திர சிவன்
45.ஐயாறன் பெண் ஓர் பாகனான ஹிருதய சிவன்
46.ராஜாதித்தன் அம்பலத்தாடியான சிகா சிவன்
47.செல்வன் கணபதி தெம்பனான தர்ம சிவன்
48.கூத்தன் தில்லைக் கூத்தனான ஞான சிவன்




உடுக்கை வாசித்தவனின் பெயர்
துவைத கோம புரத்து தத்ய கிரமவித்தன் மகன் சூரிய தேவக கிரமவித்தன் ஆன ஆலாலவிடங்க உடுக்கை விஜ்ஜாத்திரனான சோமசிவன்


கொட்டி மத்தளம் வாசித்தவனின் பெயர்.
குணப்புகழ் மருதனான சிகா சிவன்

இக்கல்வெட்டில் இருக்கும் பெயர்களுள் முதலில் இருப்பன இயற்பெயர்களாகும்.பின் சிலருக்கு இருப்பன பட்டப்பெயர்கள்.இறுதியில் இருப்பன சிவ தீட்சை பெற்ற பெயர்கள்(தீட்சா நாமம்)