நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 10 பிப்ரவரி, 2010

புதுச்சேரி அகழாய்வில் இரண்டு தாழிகள், ஓர் ஈமப்பேழை


தாழியின் தோற்றம்

புதுச்சேரி அரியங்குப்பம் அடுத்த மணவெளிப் பகுதியில் கடந்த ஞாயிறு(31.01.2010) வீட்டுக்குக் கடைக்கால் தோண்டியபொழுது முதுமக்கள் தாழி கிடைத்தது.இதனால் வீடு கட்டும் பணி நிறுத்தப்பட்டு, தொல்பொருள் ஆய்வுத்துறை அறிஞர்களின் அகழாய்வுப் பணிக்குக் காத்திருந்தனர். தொல்பொருள் ஆய்வுத்துறை சார்ந்த அறிஞர்களும் புதுவைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் மணவெளிப் பகுதியில் கிடைத்துள்ள அகழாய்வுப் பொருள்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டு புதைபொருளாகக் கிடைத்துள்ள தாழிகள் கி.மு.மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டினதாக இருக்கலாம் என்று அறிவித்தனர்.இக்கால கட்டத்தில் அருகில் உள்ள அரிக்கமேடு மிகச்சிறந்த வணிகத் தளமாகவும்,நாகரிக மாந்தர்களின் வசிப்பிடமாகவும் விளங்கியதை முன்பே ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

இப்பொழுது மணவெளி சுடலை வீதியில் கிடைத்துள்ள அகழாய்வுப்பொருள்கள் அரிக்கமேட்டுப் பகுதியில் பரந்துபட்ட மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதற்கும்,புதைக்கும் பழக்கம்,எரிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இவர்கள் இருந்துள்ளனர் என்பதற்கும் இத்தாழிகளும் ஈமப்பேழைகளும் சான்றாக விளங்குகின்றன.

வீட்டுக்குக் கடைக்கால் தோண்டும்பொழுது ஒரு முதுமக்கள் தாழியும் சில சிறிய வடிவக்குவளைகளும், சிறு குடங்களும் கிடைத்தன.முன்பே இவை பற்றிப் படத்துடன் எழுதியுள்ளேன்.அருகில் பெரிய தாழி இருந்ததால் அதனை அப்படியே வைத்துவிட்டனர்.

நேற்று அகழாய்வுக்குத் தொல்பொருள்துறை சார்ந்த ஆய்வாளர்களும் புதுவைப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் வந்து 4 மீட்டர் X 4 மீட்டர் அகழாய்வுக்குழி தோண்டிப் பெரிய அளவில் இருந்த தாழியை வெளிப்படுத்தினர்.அந்தத் தாழி அருகில் ஈமப் பேழை ஒன்றும் இருந்து கண்டெடுத்துள்ளனர்.இந்த ஈமப்பேழையின் அடிப்பகுதியில் எட்டுக்கால்கள் உள்ளன.இந்தக் கால்கல்தான் பேழையைத் தாங்கிக்கொண்டு இருந்தன.இப்பேழையின் உள்ளே சிதைந்த எலும்புத் துண்டுகள் இருந்துள்ளன.இந்தப் பகுதியில் உள்ள மண் மணலாக இருந்ததால் எந்த நாளும் ஈரப்பதமாக இருந்து எலும்புகளும் மற்ற பொருள்களும் சிதைந்துவிட்டன.

பெரிய தாழியின் உள்ளே இரண்டு சிறிய மண்குடம்,ஒரு குவளை(டம்பளர் போன்றது)இருந்தன. ஈமப்பேழையின் அருகில் கருப்பும் சிவப்பும் கலந்த நிறத்தில் ஒரு குடம் இருந்தது.எலும்புத்துண்டுகள் பெரிய தாழியிலும் சிறிய அளவில் இருந்தன.

இறந்தவர்களுக்கு நடத்தப்பட்ட சடங்குகளை நினைவூட்டும் வண்ணம் இத்தாழிகளும்,ஈமப்பேழைகளும், குடங்களும்,குவளைகளும் உள்ளன.புதுச்சேரியின் அருகில் உள்ள அரிக்கமேடு பழங்காலத்தில் பரந்துபட்ட நகரகாக இருந்துள்ளது.அதன் ஒரு பகுதியாக இந்த இடுகாட்டுப் பகுதிகள் இருந்திருக்கலாம். பேராசிரியர் இராசன் அவர்களிடம் பேசியபொழுது புதுச்சேரியின் பழைமையை மெய்ப்பிக்க இது அரிய சான்றாகும் என்றார்.

தொல்பொருள் ஆய்வுத்துறை சார்ந்த துணைக்கண்காணிப்பாளர் மோகன்தாசுஅவர்களும், பிரசன்னா, இரமேசு,பெருமாள் உள்ளிட்ட ஆய்வாளர்களும் இந்த அகழாய்வுப்பணியில் ஈடுப்பட்டனர்.ஆய்வு மாணவர் பெருமாள் அவர்கள் பொருள்களின் இருப்பிடம் குறித்து வரைந்து வைத்திருந்த சிறு குறிப்பையும் அவர் இசைவுடனும் நன்றியுடனும் இங்கு அனைவருக்கும் பயன்படட்டும் என்ற நோக்கில் பதிகிறேன்.

அகழாய்வுப் பொருட்கள் புதுச்சேரி காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

நானும் புலவர் விசயரங்கன் திருவேங்கடம் அவர்களும் சென்று அகழாய்வுக்குழிகளைப் பார்வையிட்டுச், செய்திகளைத் திரட்டிப்,படம்பிடித்து வந்தோம்.


பெரிய தாழியும்,ஈமப்பேழையும் கிடைத்த பகுதி


தாழியின் மற்றொரு தோற்றம்


ஈமப்பேழையின் ஒடிந்த கால் பகுதிகள்


கூம்பு வடிவமாக ஈமப்பேழையின் கால்


ஈமப்பேழையின் சிதைவு


ஆய்வாளர் பெருமாள் அவர்களின் குறிப்பு


சிதைந்த நிலையில் அகழாய்வுப்பொருட்கள்


தாழியின் தோற்றம்


உடைந்த நிலையில் ஒரு குடம்

1 கருத்து:

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

பயனுள்ள அழகான ப்திவு.
நன்றி