நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

புதுச்சேரியில் முதுமக்கள் தாழி...


நிலத்தில் வெளிப்பட்டு நிற்கும் முதுமக்கள் தாழி




பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள அகழாய்வுப் பொருட்கள்

  புதுச்சேரியின் அரிக்கமேடு என்னும் பகுதி வரலாற்று முதன்மை வாய்ந்த பகுதியாகும். புதுவையின் எழிலார்ந்த கடற்கரை ஒட்டி அமைந்துள்ள அரிக்கமேடு பற்றி முன்பே எழுதியுள்ளேன். என் பிறந்த ஊருக்குப் போகும்பொழுதெல்லாம் - அரியாங்குப்பம் ஆற்றைக் கடக்கும் பொழுதெல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னோக்கிப் பார்ப்பது என் வழக்கம்.

 நேற்று (31.01.2010) என் பிறந்த ஊர் சென்று பேருந்தில் திரும்பிக்கொண்டிருந்தேன். அப்பொழுது இரவு 9மணியளவில் அரியாங்குப்பம் பகுதியில் கடையில் தொங்கிய ஒரு செய்தித்தாளில் அரியாங்குப்பத்தில் தங்கப் புதையலா? என்று ஒரு செய்தி கண்டு மகிழ்ச்சியடைந்தேன். புதுவை வீடு திரும்பியதும் உடனடியாகச் செய்தியை இணையத்தின் வழியாக உறுதிப்படுத்திக்கொண்டேன்.

 பழைய வரலாற்றுச் செய்திகளை அறிவதில் ஆர்வம்கொண்ட நான் அகழாய்வில் கிடைக்கப்பெற்ற பொருள்களையும் இடத்தையும் பார்வையிட நினைத்தேன். பேராசிரியர் நண்பர் ஒருவருடன் புதைபொருள் அகழ்ந்த இடத்தைப் பார்வையிடச் சென்றேன் (01.02.2010). புதுச்சேரியின் தென்பகுதியில் உள்ள அரியாங்குப்பத்திலிருந்து இரண்டு கல் தொலைவு அடுத்து மணவெளி ஊர். அங்குச் சுடுகாட்டு வீதியில் ஐந்தாம் குறுக்குப் பகுதியில் திரு.சீனிவாசன் என்பவரின் வீட்டுமனை உள்ளது.

  வீடு கட்டுவதற்காகக் கடைக்கால் இடுவதற்குக் குழிதோண்டியுள்ளனர். ஆறு பணியாளர்கள் பணிபுரிந்துள்ளனர். பத்துக்கும் மேற்பட்ட குழிகள் தோண்டுவதற்கு அடையளம் செய்தனர். அதில் ஒரு குழியை அகழும்பொழுது பானை ஒன்று கிடைத்துள்ளது. சாதாரண ஓடு என நினைத்தவர்களுக்குப் பானையின் முழுவடிவம் கண்டு வியப்பு மேலிட்டது. அந்தப் பானையின் உள்ளே சில எலும்புத் துண்டுகளும் இருந்துள்ளன. இரண்டு சிறு டம்பளர் வடிவில் மண்ணால் வனையப்பட்ட பொருளும், இரண்டு சிறு குடங்களும், சட்டியும் வேறு சிறு பொருள்களும் கிடைத்துள்ளன. உடனே அரசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த இடம் பாதுகாப்புக்கு உள்ளாகியுள்ளது.

  முதுமக்கள் தாழி ஒன்று பெரிய அளவில் வெளியே எடுக்கப்படாமல் நிலத்தில் புதைந்த நிலையில் உள்ளது.எஞ்சிய பகுதிகளையும் முழுமையான அகழாய்வுக்கு உட்படுத்தினால் அரிக்கமேட்டின் ஆய்வில் புதிய ஒளி பிறக்கலாம். இன்று சுடுகாட்டுக்குச் செல்லும் பாதை பண்டைக் காலத்திலும் சுடுகாடாக விளங்கியிருக்குமோ என்ற ஐயத்தை எழுப்புகிறது. முன்பு இந்தப் பகுதிகள் மரங்கள் அடர்ந்த காடுகளாக இருந்துள்ளது என்று மக்கள் சொல்கின்றனர்.

 எழுத்துக்குறியீடுகள் ஏதேனும் இருக்குமோ என்று பார்த்தேன்.ஒன்றும் தென்படவில்லை. அழகிய வேலைப்பாடுகளுடன் பாண்டங்கள் உள்ளன. மீண்டும் இது பற்றி எழுதுவேன்...

(ஆய்வாளர்களுக்குப் பயன்படும் எனக் கூடுதல் படங்கள் இணைத்துள்ளேன்.உரியவர்கள் தக்கபடி பயன்படுத்திக்கொள்ளலாம்)


அகழாய்வுக்குழிகள் வேறொரு தோற்றம்


அகழாய்வுப்பொருட்கள்


அகழாய்வுக்குழிகள் அருகில் பொருட்கள்


அகழாய்வுக்குழிகளடங்கிய பகுதி


வீடு கட்ட அடிமனை பறிக்க குழிதோண்டிய பகுதிகள்


தாழியின் இன்னொரு தோற்றம்


பிறந்த குழந்தைபோல் தூய்முயுறாமல் இருக்கும் தாழி


புதைபொருள்கள் எடுக்கப்பெற்ற குழி


காவல்துறையினரின் பாதுகாப்பில் அகழாய்வுக்குழிகள்


எலும்புத்துண்டுகள் அடங்கிய பானை

2 கருத்துகள்:

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

முனைவர் ஐயா,

பழங்காலத்தில் புதையுண்ட தாழிகள் வெளிவந்தாலும்... பழந்தமிழர் பற்றிய உண்மைகளை அதிகாரக் கூட்டம் மீண்டும் புதைத்துவிடுவார்கள். இதுதான் எல்லாருக்கும் தெரியுமே!

தமிழ்நாடா தமிழனைப் பற்றி அகழ்வாராய்ச்சி செய்யப் போகிறது?

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

பயனுள்ள இடுகை.பரவசமாக இருக்கிறது
நமது முன்னோர்களின் பழக்க,வழக்கங்களை அறியும் போது.