நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 6 ஜனவரி, 2010

சென்னை ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்ற அரங்கில் பேராசிரியர் செல்வா உரை...


இராம.கி,மு.இ,மறைமலை,செல்வா


பேராசிரியர் செல்வா எனப்படும் செ.இரா.செல்வக்குமார் அவர்கள் கனடாவில் மின்னியல்,மின்னணுவியல் துறை,வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிகின்றார்.மின்னஞ்சல் வழியாக நல்ல தொடர்பில் இருப்பவர்.தனித்தமிழில் அறிவியல் கட்டுரைகள் வரைபவர்.விக்கிப்பீடியா பற்றிய பல செய்திகளை இவர் வழியாக அறிந்தேன்.உரிமையுடன் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில் முன்னிற்பவர்.புது தில்லியில் நடைபெறும் ஒரு கருத்தரங்கிற்கு வந்தவர்.தம் வருகையை முன்பே எனக்குத் தெரிவித்து 05.01.2010 இல் தாம் சென்னையில் உரையாற்ற உள்ளதையும் குறிப்பிட்டிருருந்தார்.பேராசிரியர் இ.மறைமலை அவர்களின் ஏற்பாட்டில் இந்தப் பொழிவுக்கு ஏற்பாடாகியிருந்தது.பேராசிரியர் மறைமலை அவர்களும் என்னை அழைத்திருந்தார்.

பார்வையாளனாக ஒய்.எம்.சி.ஏ.அரங்கில் இன்று நுழையும்பொழுது மாலை 6.45 மணி.பேராசிரியர் இ.மறைமலை அவர்கள் நான் செல்வதற்கு முன்பே வரவேற்புரையாற்றியிருந்தார்.தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் திரு.நக்கீரன் ஐயா அவர்கள் தலைமையுரையாற்றினார்.அவர்களைத் தொடர்ந்து பேராசிரியர் செல்வா அவர்கள் தமிழ் வளர்ச்சிக்கு இணையம் வழியாகத் தமிழர்கள் கூட்டுழைப்பில் ஈடுபட்டுப் பணிகளாற்றவேண்டும் என்றார்.

ஆங்கிலமொழி அண்மைக்காலத்தில்தான் மிகுந்த வளர்ச்சி பெற்றது.இன்றும் பிற மொழியின் சிறந்த நூல்கள்,இதழ்கள் மொழிபெயர்க்கப்பட்டுவருகின்றன.அதுபோல் தமிழில் பிறமொழி நூல்கள், இதழ்கள், படைப்புகள் மொழிபெயர்க்கப்பபடவேண்டும் என்றார்.விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு உழைத்தவர்கள் பற்றி எடுத்துரைத்தார்.ஆங்கில மொழி வளர்சிக்குப் பலர் பாடுபட்டுள்ளனர். இலத்தீன் மொழியில் இருந்த பைபிளை ஆங்கிலத்திற்குப் பெயர்த்தவர்கள் பலர் படுகொலைக்கு உள்ளாகியுள்ளனர்.ஆங்கிலமும் தொடக்கத்தில் வளர்ச்சிநிலைகளில் பல இடையூறுகளைச் சந்தித்து வந்துள்ளது என்றார்.இன்று அனைவரின் கூட்டுழைப்பால் ஆங்கிலம் மிகச்சிறந்த வளர்ச்சிநிலை கண்டுள்ளது.எனவே தமிழர்களும் கூட்டுழைப்பால் தமிழுக்குப் பணிசெய்ய முன்வரவேண்டும் என்று உரையாற்றினார்.

தமிழ் இணையப்பல்கலைக்கழகப் பணிகளை ஐயா நக்கீரனார் எடுத்துரைக்கும்பொழுது அதில் தமிழ் எழுத்துச்சீர்திருத்தம் பற்றிய செய்திகள் இடம்பெற்றிருப்பது தவறு என்று இ.திருவள்ளுவனார் குறிப்பிட்டுத் தம் எதிர்ப்பைப் பதிவு செய்தார்.இயக்குநர் அவர்கள் அது ஒரு கருத்து என்ற அடிப்படையில் இடம்பெற்றுள்ளது என்றும் மாற்றுக்கருத்து இருப்பின் மின்னஞ்சலில் தெரிவிக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.நானும் எழுத்துச்சீர்திருத்தம் தேவையற்றது என்று குறிப்பிட்டுத்,தமிழறிஞர்கள் பலரும் எழுத்துச்சீர்திருத்த முயற்சியைக் கண்டித்து வருகையில் கருத்துவேறுபாடுகளுக்கு இடம் அளிக்கும் எழுத்துச்சீர்திருத்தம் பற்றிய செய்திகள் தமிழ் இணையப் பல்கலைக்கழகத் தளத்தில் இடம்பெறுவது தவறு என்றும்,தமிழ் இணையப் பல்கலைக்கழகம் காலம் தாழ்த்தாமல் உடனடியாகச் செய்ய வேண்டியது ஒருங்குகுறிக்குப் பாடங்களைப் - படைப்புகளை மாற்ற வேண்டும் என்றும் இயக்குநரிடம் உரிமையுடன் என் கோரிக்கையை வைத்தேன்.

அவர்கள் 16 பிட் இடம் கிடைத்த பிறகு ஒருங்குகுறியில் ஏறும் என்று குறிப்பிட்டார்கள்.8 பிட் அளவுள்ள இடத்திலேயே மிகச்சிறப்பாக ஒருங்குகுறியைப் பயன்படுத்தி தகவல்களைப் பரிமாறிக்கொண்டிருப்பதால் இனியும் 16 பிட் என்ற காரணம் காட்டி ஒத்திப்போடவேண்டாம் என்று வேண்டிக்கொண்டேன்(2003 இல் தமிழ் ஒருங்குகுறி நடைமுறைக்கு வந்துவிட்டது.உலகம் முழுவதும் ஏழாண்டுகளாகத் தமிழ் ஒருங்குகுறியில் தமிழர்கள் செய்திகளைப் பரிமாறிக் கொண்டிருக்கும்பொழுது, தினமலர்,தினமணி உள்ளிட்ட நாளேடுகள் எல்லாம் ஒருங்குகுறிக்கு வந்துவிட்ட பிறகு ஏன் இணையப் பல்கலைக்கழகம் தமிழ் ஒருங்குகுறிக்கு வர மறுக்கிறது என்பது புதிராக உள்ளது.சில அன்பர்கள் தமிழ் இணையப் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்கள் ஒருங்குகுறிக்கு மாறிவிட்டது என்ற வகையில் எழுதி வருகின்றனர்.அவ்வாறு மாறியதன் பகுதியைத் தொடுப்பாக எனக்கு வழங்கியுதவ வேண்டுகிறேன்).

எப்படியோ பேராசிரியர் செல்வா அவர்களின் பேச்சைக் கேட்கச்சென்ற எனக்கு தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்,ஒருங்குகுறி பற்றிய பதிவை உரியவர் முன்பாகப் பதிவு செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தமைக்கு மகிழ்கிறேன்.

ஐயா இராம.கி.அவர்களும் வந்திருந்தார்கள்.அனைவரிடமும் விடைபெற்றுப் புதுச்சேரி வந்து சேர்ந்தபொழுது நள்ளிரவு இரண்டுமணி என்க.


நக்கீரன்,இராம.கி,மறைமலை உட்பட நண்பர்கள்



நான் பேராசிரியர் செல்வாவுடன்

2 கருத்துகள்:

மறைமலை இலக்குவனார் சொன்னது…

உடனுக்குடன் தமிழ் நிகழ்ச்சிகளை இவ்வாறு வெளியிட்டு உலகுக்கு அறிவிக்கும் உங்கள் பணி ஒப்பற்றது.
இன்றைய இளம்பேராசிரியர்கள் அனைவரும் சுறுசுறுப்பிலும் அக்கப்பணிகளிலும் தங்களைப் பின்பற்றினால் தமிழுக்குப் பொற்காலம்
உறுதி.

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

கருத்தரங்கம்,கருத்தரங்கத்தின் நிகழ்வுகள்,உரைகளின் தொகுப்பு, நூல் வெளியீடு மட்டுமல்ல,நூல்களின் உள்ளடக்கத்தையும் தரும் உங்கள் பதிவுகள் உலகத்தின் மூலை முடுக்களில் வசிக்கும் தமிழர்களுக்கு அகராதி போல் உதவும் ஒரு வழிகாட்டி என்பதில் ஐயமில்லை.
அன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்