நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

தமிழ்க்குடும்பத்தின் நற்சான்று

அறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் தமிழ் எழுத்துகளில் யான் மயங்கிக் கிடந்தவன்.கிடப்பவன். அவர் முகம் அறியேன்.அகம் அறிவேன்.மாணிக்கத் தமிழ் பருகிய என் கல்லூரிக் காலங்கள் தேனினும் இனியனவாகும்.பதிப்புச்செம்மல் ச.மெய்யப்பனார்தான் எனக்கு மூதறிஞரின் நூல்களை வழங்கிப் படிக்க ஊக்கப்படுத்தியவர்.மெய்யப்பர் போலும் குருபக்தி உடையவரை யான் காண்கிலேன்.மெய்யப்பர் பற்றி அறிஞர் வ.சுப.மா.தந்த சான்று படித்து உள்ளுக்குள் நகுவன்.செம்மல் மெய்யப்பரின் செயல்பாடுகளை நறுக்குத் தெரித்தாற்போல் எழுதியிருந்தார்.

"வரியிளஞ் செங்காற் குழவி"என்பது மாணிக்கத்தமிழின் வேறொரு இடம்.

"போராட்டம் இன்றிப் பொருவில் தமிழுக்குத்
தேரோட்டம் இல்லை தெளி" என்று எழுதியவர்.அவரின் கொடை விளக்கு பற்றி மூன்று மணிநேரம் பேசமுடியும்.அவர் வெண்பாக்களில் நான் புகழேந்திப்புலவனைப் பார்ப்பேன்.
செம்மலின் தம்பி சொக்கலிங்கனார் அவர்கள் என் கைபற்றிப் பாராட்டுவார்.
அண்ணாச்சி இருந்திருந்தால் உங்களைத் தலையில் வைத்துப்போற்றுவார் என்று.ஓராண்டுக்கு முன் மேலைச்சிவபுரி சென்றபொழுது செம்மலின் இல்லம் நோக்கி அகவணக்கம் செலுத்தி மீண்டேன்.ஒரு நாள் அந்த இல்லம் சென்று தங்கிவர உள்ளேன்.நமக்கு அதுதான் திருப்பதி.

மாணிக்கனாரின் எழுத்துகளை உவப்போடு படித்து உணர்வுபெற்ற யான் இயன்ற வகையில் தமிழுக்கு ஆக்கமான பணிகளைச் செய்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். இவ்வழியில் மாறேன்.இதனைப் போற்றுவார் போற்றலாம்.தூற்றுவார் தூற்றலாம்.அவரவர் உள்ளம் சார்ந்து இந்த மதிப்பீடு இருக்கும்.நிற்க.

என் இணையத்தமிழ் முயற்சியை ஊக்கி அறிஞர் வ.சுப.மாணிக்கனார்,தமிழண்ணல் குடும்பம் சார்ந்த ஐயா ந.அழகப்பனார் அவர்கள் அமெரிக்காவிலிருந்து எனக்கு எழுதி விடுத்த மின்னஞ்சல் மடல் காயம்பட்டுக்கிடந்த என் உள்ளத்துக்கு ஒத்தடமாக இருந்தது.அந்த மடல் பகுதி கீழே வழங்குகிறேன்.கற்று மகிழலாம்.


அன்புத் தோழர்.முனைவர் இளங்கோவன் அவர்கட்கு,
அழகப்பன் எழுதுவன.நலம்.நலமறிய அவா.
தங்களது வலைப்பூக்கள் மிகுந்த வனப்பும் ,வாசமும் கொண்டு வருவோரை ஈர்க்கும் சக்தி கொண்ட்து.
தமிழ்ப்பற்று,தமிழார்வம்,மூதறிஞர்களின் வாழ்க்கைச் சித்திரங்களையெல்லாம் தேடிஎடுத்து படைப்பது ,போலிகளைச் சாடுவது,தமிழ் மொழிப் பாதுகாப்பு,வளர்ச்சி தங்கள் வாழ்நாள் குறிக்கோள்களாகக் செயல் படுவது இவையெல்லாம் தாங்கள் பின்பற்றுவதாகக் கூறியுள்ள சான்றோர்களின் வாழ்க்கை முறைதான்.
அலுவலகப்பணி போக தங்களுக்கு எவ்வாறு இவையெல்லாம் செய்ய முடிகிறது என்று பார்த்தால்,உங்களது இடைவிடாத உழைப்பு என் கண்களுக்குத்தெரிகிறது.


என்னைப் பற்றி:
வ.சுப.மா.வின் மூத்த மாப்பிள்ளை .முனைவர்.தமிழண்ணல் அவர்களுக்கு ,நான் மாமா மகன்.
ஊர்:மேலைசிவபுரி
சென்னை,யூகோவங்கியில் பணி ஓய்வு.தொழிற்சங்கத் தலைவர்
முனைவர்.குருமூர்த்தி (பாண்டி) எனக்கு அறிமுகமானவர்.
முனைவர்.இரா.சாரங்கபாணியாருக்கு, நன்கு அறிமுகமானவன்.
தற்சமயம் இருப்பது அமெரிக்காவில்Philadelhia நகரில் , மகள் வீட்டில்.


வ.சுப.மா.அவர்கள் எப்பொழுதும்" எனக்கு என் இயக்கத்திற்கு அதிகம்பேர் தேவையில்லை.நூறு பேர் இருந்தால் போதும்.நூறு மறவர்கள் இருந்தால் போதும்.நான் வெற்றி இலக்கை அடைந்து விடுவேன்".
என்று சொல்வார்.
அவர் சொன்ன அந்த நூறு பேர்களில் ஒருவர்தான் நீங்கள்.வ.சுப.மா.வின் குருகுலச் சீடர்களில் ஒருவர்தான் நீங்கள்.
உங்கள் தமிழ்ப்பணி தொடர்ந்து சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்.
அன்பன்,
ந.அழகப்பன்.

திருவாளர் ந.அழகப்பனாருக்கு என் பணிந்த வணக்கமும் தண்ணிய நன்றியும் உரித்தாகுக.

கருத்துகள் இல்லை: