நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 26 பிப்ரவரி, 2009

மயிலாடுதுறையில் கோபாலகிருட்டின பாரதியாருக்குப் படத்திறப்பு (27.02.2009 )

தமிழிசைக்குத் தொண்டு செய்தவர்களுள் கோபாலகிருட்டினபாரதியார் குறிப்பிடத்தக்கவர். நந்தனார் சரித்திரக்கீர்த்தனைகள் பாடியதன் வழியாக அனைவரலும் அறியப்பட்டவர். உ.வே.சாமிநாத ஐயர் இவர் பற்றி தம் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார்.இவர் பாடல்கள் அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கின.இவர்தம் வாழ்க்கை முழுமையாகப் பதிவாகாமலும்,இவர் படம் கிடைக்காமலும் உள்ளன.இவரின் படத்தை உ.வே.சாவின் குறிப்புகளைக்கொண்டு புதுச்சேரி ஓவியர் இராசராசன் அவர்கள் வரைந்துள்ளார்.அப்படத்திறப்பு நிகழ்ச்சி இன்று(27.02.2009)மயிலாடுதுறையில் நடக்கிறது.ஓவியரையும் பாராட்ட உள்ளனர்.

புதுச்சேரிக் கடைத்தெருவில் நான் வந்துகொண்டிருந்தபொழுது ஓவியர் இராசராசன் அவர்களைக் கண்டேன்.இந்த விவரத்தைப் பகிர்ந்துகொண்டார்கள்.கோபாலகிருட்டின பாரதியார் படத்தை மிகச்சிறப்பாக கற்பனையில் வரைந்துள்ளார்.உண்மைப்படம் எங்கேனும் கிடைத்தால் மேலும் சிறப்பாக வரையமுடியும்.பிரஞ்சுக்காரர் ஒருவர் காரைக்காலில் கோபாலகிருட்டின பாரதியாரைக் கண்டு அவர் பாடல்களை மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் கேட்டுச் சுவைத்ததாக ஒரு செய்தி கிடைத்தது.அவர் முயன்று படம் எடுத்திருந்தால் அல்லது வரையச் செய்திருந்தால் உண்மைமுகம் தெரிய வாய்ப்பு உண்டு.இல்லையேல் நம் ஓவியர் அவர்கள் வரைந்த முகத்தைதான் நாம் அவர் உருவமாகக் கருதவேண்டும்.

நடராசப் பெருமான் நாட்டியம் ஆடும் பின்புலத்தில் நீர் வண்ணத்தில் வரையப்பட்டுள்ள இந்தப் படத்தைக் கண்ணாடியிடும் கடையில் கண்டேன்.ஓரிரு நாளில் அந்தப்படமும், கோபால கிருட்டின பாரதியார் வாழ்க்கைக்குறிப்பும்,ஓவியர் இராசராசன் அவர்களைப் பற்றியும் எழுதுவேன்.

வரலாற்றில் குறிப்பிடத்தக்க அறிஞரை ஓவியத்தில் நிலை நிறுத்திய ஓவியர் இராசராசன் அவர்களுக்கு நம் பாராட்டுகள்.மயிலாடுதுறையில் விழா எடுக்கும் ஆர்வலர்களுக்கு நம் வாழ்த்துகள்.

கோபாலகிருட்டின பாரதியார் பாடல்கள் பற்றி அறிய கீழுள்ள முகவரிக்குச் செல்க
http://www.shaivam.org/siddhanta/sta.htm

கருத்துகள் இல்லை: