நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 5 ஜனவரி, 2009

காஞ்சிபுரத்தில் கர்நாடக இசைக்கும் நாட்டுப்புற இசைக்கும் உள்ள வரலாற்றுத் தொடர்பு ஆய்வரங்கம்...


அரங்கப் பலகை

04.01.2009 ஞாயிறு பிற்பகல் மூன்று மணிக்குக் காஞ்சிபுரத்தில் ஆசியப் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் ஏற்பாட்டில் இசைமேதை காஞ்சிபுரம் நயினாப்பிள்ளை நினைவுச் சொற்பொழி வாக நடைபெற்ற கர்நாடக இசைக்கும் நாட்டுப்புற இசைக்கும் உள்ள வரலாற்றுத் தொடர்பு குறித்த ஆய்வரங்கில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.காஞ்சிபுரம் சார்ந்த தெருக்கூத்துக் கலைஞர்கள்,நாட்டுப்புறப் பாடல்கள் பாடும் கலைஞர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

காலை ஒன்பது மணிக்குப் புதுச்சேரியில் புறப்பட்டு, பகல் பன்னிரண்டரை மணிக்குக் காஞ்சி புரம் சென்று சேர்ந்தேன்.எனக்காக என் மாணவர் மோகனவேல் அவர்களும் கூழமந்தல் (சோழமண்டலம் எனபதன் ஆங்கிலத் திரிபு இந்த ஊர்)திரு. உதயகுமார் அவர்களும் எனக்காகக் காத்திருந்தனர்.பகலுணவுக்குப் பிறகு காஞ்சிபுரம் மகாலட்சுமி திருமண மண்டபம் சென்று சேர்ந்தோம்.

தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் இளைஞர்கள், ஆய்வு மாணவர்கள் பலர் வந்திருந்தனர். தனிப்பட்ட முறையில் ஒருவரை ஒருவர் அறிமுகமாகி உரையாடினோம். கவிஞர்கள், கலைஞர்கள் எனப் பல திறத்தினர் இருந்தனர்.மூத்தவர்களும் பலர் வந்திருந்தனர்.ஆழ்வார் பாடல்களில் வல்ல கலைமாமணி கரந்தைத் தாமோதரன் உள்ளிட்டவர்கள் வந்திருந்தனர். அவர் ஆழ்வார் பாசுரங்களைப் பொருள் உணர்ந்து பாடுவதில் வல்லவர்.கொரியா கண்ணன்
ஐயாவுக்கு நன்கு பயன்படக்கூடியவர். அவர் பாடிய சில குறுவட்டுகளை எனக்கு அன்பளிப்பாக வழங்கினார்.இவர் போல் பாட வல்லவர்கள் இருப்பின் தமிழ்ப்பாசுரங்கள் மக்களிடம் நன்கு பரவும்.

பேராசிரியர் ப.அண்ணாதுரை அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கான காரணத்தைக் குறிப்பிட்டு உரையாற்றினார்.அவரை அடுத்துத் தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி முதல்வர் முனைவர் பக்கிரிசாமி பாரதி அவர்கள் கர்நாடக இசை பற்றியும் நாட்டுப்புறப் பாடல்கள் பற்றியும் நன்கு அறிமுகம் செய்தார்.

அவரையடுத்து நான் தமிழ் இலக்கணம்,இலக்கியங்களில் உள்ள நாட்டுப்புறப் பாடல்களின் செல்வாக்கு பற்றியும் தமிழர்களின் இசையறிவு பற்றியும் இளங்கோவடிகளின் இசைப்புலமை பற்றியும் தெய்வசிகாமணிக் கவுண்டர் பதிப்பித்த பஞ்சமரபு பற்றியும் எடுத்துரைத்து என் பேராசிரியர் வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் பற்றியும் எடுத்துரைத்தேன்.

தமிழ் இலக்கியங்களில் நாட்டுப்புறப் பாடல்களின் இசையமைப்பு உள்ளதைப் பாடிக்காட்டி விளக்கினேன்.புட்பவனம் குப்புசாமி,கரிசல் கிருட்டிணசாமி உள்ளிட்டவர்களின் பாடல்களையும் பிற மக்கள் வழக்கில் உள்ள நாட்டுப்புறப் பாடல்களையும் பாடிக்காட்டினேன். தமிழகத்திலும், கேரளாவிலும்,இலங்கையிலும்,மலேசியாவிலும் பாடப்படும் நாட்டுப்புறப் பாடல்களையும் பாடிக்காட்டி விளக்கினேன்.

ஒரு மணிநேரம் நீண்ட என் உரையில் நாட்டுப்புறப் பாடல்களின் செழுமையான வடிவம்தான் தமிழிசையாக இருந்தது எனவும் வேற்றுமொழிக்காரர்களின் வருகையால் கர்நாடக இசை என்னும் பெயரில் தெலுங்குமொழிப் பாடல்கள் வந்தன எனவும் குறிப்பிட்டு, ஊடகங்களும் அரசும் நாட்டுப்புறக் கலைகளுக்கு,கலைஞர்களுக்கு முதன்மையளிப்பதில்லை என்று குறிப்பிட்டுப் பின்லாந்து நாட்டில் நாட்டுப்புறக் கலைகளுக்கு உரிய முதன்மை தருவதை நினைவுகூர்ந்தேன்.அனைவரின் உள்ளம் மகிழும்படியாக என் உரையிருந்தது.

என் பேச்சுக்குப் பிறகு தமிழ்நாட்டு அரசு கலை பண்பாட்டுத்துறையின் துணை இயக்குநர் திரு.வ.செயபால் உரையாற்றினார்.அவர் உரையில் நாட்டுப்புறப்பாடல்களின் சிறப்பை அழகாகத் தொகுத்து வழங்கினார்.எங்கள் உரைகளுக்குப் பிறகு பாரதக் கதையிலிருந்து திரௌபதைத் துகிலுரிதல் பற்றிய தெருக்கூத்து நிகழ்ந்தது.மிகச் சிறப்பாக இருந்தது.

கலைநிகழ்வையும் பல கலைஞர்களையும் கண்ட மன நிறைவில் வெளியே புறப்பட்டபொழுது எங்கள் பகுதியான அணைக்கரையை அடுத்த முள்ளங்குடி மதகுச்சாலை சார்ந்த ஆசிரியர் மு.இராசகோபாலன் அவர்கள் அறிமுகம் ஆனார்.பணியின் நிமித்தம் காஞ்சிபுரத்தில் தங்கியுள்ளார்.அவரைக் கண்டு உரையாடியாது மறக்க இயலாத மகிழ்ச்சியான நிகழ்வாகும். நான் புதுவை வருவதற்குள் என் இணையத்தளம் பார்வையிட்டு என் பணிகளை ஊக்கப்படுத்தியவர்.தமிழ் இணையத்தள வளர்ச்சிக்குக் காஞ்சியில் ஒரு நம்பிக்கை முனை தென்பட்டதே மகிழ்ச்சிக்குக் காரணம்.


பேராசிரியர் ப.அண்ணாதுரை வரவேற்பு


முனைவர் பக்கிரிசாமி பாரதி


துரியோதனன்


துச்சாதனன்...


திரௌபதை...


கிருட்டிணன் வேடத்தில்...


கரந்தைத் தாமோதரன்

கருத்துகள் இல்லை: