நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 31 டிசம்பர், 2009

மூத்த தமிழறிஞர் தி.சா.கங்காதரன் இயற்கை எய்தினார்!


அறிஞர் தி.சா.கங்காதரன் அவர்கள்(வலப்புறம்)

புதுச்சேரி பிரஞ்சு நிறுவனத்தில் தமிழ் ஆய்வாளராகப் பணிபுரிந்த அறிஞர் தி.சா.கங்காதரன் அவர்கள் உடல் நலமின்றிச் சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பயனளிக்காமல் நேற்று 30.12.2009 இரவு 9.30 மணிக்கு இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் (இச்செய்தியை எனக்குத் தெரிவித்த பேராசிரியர் செவியா, பிரான்சு, பேராசிரியர் விசய வேணுகோபால் ஆகியோருக்கு நன்றி).

திரு.தி.சா.கங்காதரன் அவர்கள் அறிஞர் தி.வே.கோபாலையர் அவர்களின் உடன் பிறவாத தம்பி ஆவார்.இரண்டு பெரும் பேராசிரியர்களும் இணைந்து பல தமிழ்ப்பணிகளைச் செய்துள்ளனர். தி.வே.கோபாலையரின் தமிழ் இலக்கணப் பேரகராதியை (17 தொகுதிகள்) ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணியில் இருந்தவர். பதினொன்றாம் திருமுறையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடும் பணியிலும் இருந்தவர். அயல்நாட்டு மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் அளவிற்குப் பன்மொழி அறிவு பெற்றவர்.

நான் பலவாண்டுகளாக கங்காதரனார் அவர்களை அறிவேன்.அவரிடம் இறையனார் அகப்பொருள் உள்ளிட்ட சில நூல்களைப் பாடம் கேட்க விழைந்திருந்தேன். என் போகூழை என்னென்பது?

தம் எண்பத்தொன்றாம் அகவையில் ஐயா அவர்கள் மறைந்தது மிகுந்த வருத்தம் தருகிறது.

புதுச்சேரியில் இன்று (31.12.2009) புலவர் பெருமானின் நல்லுடல் எரியூட்டப்பெற்றது.

அவர் பற்றி பின்னர் விரித்து எழுதுவேன்.


அறிஞர் கங்காதரனார் சிறப்பிக்கப்படும் ஒரு காட்சி


பயிலரங்கு ஒன்றில் மாணவர்கள் புடைசூழ கங்காதரனார்

அன்னாரின் மறைவால் துயருற்றுக் கலங்கும் அவரின் பன்னாட்டு மாணவர்கள், உடன் பணியாற்றும் தோழர்கள், தமிழாய்வுலகத்தினர் அவர்தம் குடும்பத்தினர் என அனைவருக்கும் என் ஆழ்ந்த வருத்தங்கள்!

உள்கோட்டையில் ஐம்பெரும் விழா


தந்தை பெரியாருக்குச் சிலை எடுப்பித்த செம்மல்கள் 
திரு.சி.கலியபெருமாள், திரு.சி.மாணிக்கம்

எங்களின் பிறந்த ஊரான உள்கோட்டையில் ஐம்பெரும் விழா என்ற பெயரில் நேற்று (30.12.2009) மிகச்சிறந்த விழா ஒன்று நடைபெற்றது. தந்தை பெரியார் பிறந்தநாள் விழா, செம்மொழி விருது பெற்றவர்களுக்குப் பாராட்டு விழா, முனைவர் பட்டம் பெற்றவர்களுக்குப் பாராட்டு விழா, முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்குப் பாராட்டு விழா, கொள்கைவழித் திருமணம் செய்துகொண்டவர்களுக்குப் பாராட்டு எனும் ஐந்து நிகழ்வுகளை உள்ளடக்கியதாக இந்த விழா அமைந்தது.

சனதா பல்பொருள் அங்காடியின் உரிமையாளரும், தந்தை பெரியாருக்கு உள்கோட்டையில் சிலை எடுத்தவரும், மிகச்சிறந்த குமூகத் தொண்டாற்றுபவருமான "சனதா" சி.மாணிக்கம் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவுக்குப் பெரியார் பெருந்தொண்டர் திரு. பரமசிவம் அவர்கள் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை திரு.காமராசு அவர்கள் வரவேற்றார்.

அண்மையில் செம்மொழி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பேராசிரியர் அடிகளாசிரியர், முனைவர் அரங்க.பாரி, முனைவர் மு.இளங்கோவன் ஆகியோரை முறையே தொளார் ஐயா, பேராசிரியர் உ.பிரபாகரன் (தமிழ்ப் பல்கலைக்கழகம்) அ.சிவபெருமான் (அண்ணாமலைப் பல்கலைக்கழம்) ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

இந்தப் பகுதியில் முனைவர் பட்டம் பெற்றுக் கல்வித்துறையில் சிறந்து விளங்குபவர்கள் என்ற வகையில் பேராசிரியர் கு.அரசேந்திரன் உள்ளிட்ட கல்வியாளர்கள் பாராட்டப் பெற்றனர்.

கண்ணியம் இதழின் ஆசிரியர் ஆ.கோ. குலோத்துங்கன் அவர்களும் சிறப்பிக்கப்பட்டனர்.

உள்கோட்டைப் பகுதியில் பிறந்த கல்வித்துறைகளில் புகழ்பெற்று விளங்கும் இந்த அறிஞர் பெருமக்களைப் பொதுவுடைமை இயக்கத்தச் சேர்ந்த தோழர் முருகேசன், திரு.பன்னீர்ச் செல்வம், புலவர் செல்வராசனார், கு. கணேசமூர்த்தி ஐயா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

திராவிடர் கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

ஏற்புரையாளர்கள் சார்பில் பேராசிரியர் கு.அரசேந்திரன், முனைவர் ஆ.கோ.குலோத்துங்கன் ஆகியோர் உரையாற்றினர்.

மணக்கொடை வாங்காமல் மாலைநேரத்தில் சீர்திருத்த திருமணம் செய்துகொண்ட திரு அம்பாள் ஆறுமுகம், திரு.சேகர், புலவர் திரு.தங்கராசு உள்ளிட்டவர்கள் சிறப்பிக்கப்பட்டனர்.

தந்தை பெரியாரின் கொள்கைகளை எடுத்துரைத்தும், பிறந்த ஊருக்குப் பெருமை சேர்த்தவர்களை அழைத்து ஊக்கப்படுத்தியும், குமூக அக்கறையுடன் பாடுபடுபவர்களுக்கு ஊக்கம் அளித்தும் இந்த விழா நடந்தது. முதல் மதிப்பெண் பெற்ற மாணவ்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பத்மபிரியா என்ற ஐந்தாம் வகுப்பு பயிலும் சிறுமி திருக்குறளின் அனைத்துக் குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் ஆற்றலை அரங்கத்தினர் அறிந்து மகிழ்ந்தனர். நான் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தும் பேற்றினைப் பெற்றேன்.


பேராசிரியர் கு.அரசேந்திரன்


பேராசிரியர் உ.பிரபாகரன்

வெள்ளி, 25 டிசம்பர், 2009

இன்றைய வாழ்க்கையில் இலக்கியம் – பன்னாட்டுக் கருத்தரங்கம்,சிங்கப்பூர்



சிங்கப்பூர் டிண்டேல் கல்லூரியும் சென்னைக் கலைஞன் பதிப்பகமும் இணைந்து "இன்றைய வாழ்க்கையில் இலக்கியம்" என்ற தலைப்பில் ஏழாம் பன்னாட்டுக் கருத்தரங்கத்தினைச் சிங்கப்பூரில் நடத்த உள்ளன.

கருத்தரங்கம் நடைபெறும் நாள்: 15,16 மே 2010

இடம்:டின்டேல் கல்லூரி-சிங்கப்பூர்


பேராளர் தகுதி: பல்கலைக்கலைக்கழக,கல்லூரி-நிறுவன-பள்ளி ஆசிரியர்கள்,முனைவர் பட்ட ஆய்வாளர்கள் மற்றும் துறை வல்லுநர்கள் பங்கேற்கலாம்.

கட்டுரை: தமிழிலோ,ஆங்கிலத்திலோ அமையலாம்.

கட்டணம்: கட்டுரை மட்டும் அளிப்பவர்கள் உருவா 700-00

கருத்தரங்கில் பங்கேற்கும் பேராளர்கள்(தமிழகத்திலிருந்து)உருவா 38700-00
(வானூர்திக் கட்டணம்,உணவு,தங்குமிடம்,சிங்கப்பூர்,மலேசியா சுற்றுலா சென்றுவர)

கட்டணத்தை வரைவோலையாகக் கலைஞன் பதிப்பகம்(KALAIGNAAN PATHIPAGAM) என்னும் பெயரில் சென்னையில் மாற்றிக்கொள்ளும் வகையில் அனுப்பலாம்.

பேராளராகப் பங்கேற்க முன் கட்டணம் உருவா 3000-00 அனுப்ப நிறைவுநாள் 31-01-2010.

கட்டுரை,கட்டணம் இரண்டையும் அனுப்ப நிறைவுநாள் 15.03.2010.

பிற விவரங்களுக்கு: முனைவர் அரங்க.பாரி(அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)
செல்பேசி: 98422 81957

பயண விவரங்களுக்கு: பேராசிரியர் அபிதா சபாபதி : 96770 37474

கட்டுரை,வரைவோலை அனுப்ப வேண்டிய முகவரி:

கலைஞன் பதிப்பகம்,19,கண்ணதாசன் சாலை,
தியாகராயர் நகர்,சென்னை-600017
பேசி: 044-24313221 044- 24345641

புதன், 23 டிசம்பர், 2009

சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரித் தமிழ் இணையப்பயிலரங்கம்-நிகழ்வும்,படங்களும்


சக்தி மாரியம்மன் பொறியியல்கல்லூரி முகப்பு

சென்னை, தண்டலம், நாராயணசாமி நகரில் அமைந்துள்ள சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் இன்று காலை 10.00 மணிக்குத் தொடங்கியது. முதற்கண் கல்லூரியில் இந்திய கணிப்பொறிச் சங்கம் தொடங்கப்பட்டது. திரு.முருகேசன் அவர்கள் சிறப்புரையாற்றினார். கல்லூரி நிருவுநர் திரு.கே.என். இராமச்சந்திரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

தமிழனின் உள்ளங்கையில் உலகம் என்ற பொருளில் தமிழ் இணையப் பயிலரங்கத்தில் மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க நான் அழைக்கப்பட்டேன். பகல் 12 மணிக்குத் தொடங்கிய என் உரை 1.30 மணி வரையும் உணவு இடைவேளைக்குப் பிறகு 2 மணிக்குத் தொடங்கிப் பிற்பகல் 3.30 மணி வரையும் அமைந்தது.

என் வருகையறிந்த கல்லூரி நிறுவுநர் அவர்கள் மிகச்சிறந்த ஊக்கவுரைகளைத் தந்து, தம் தமிழ்ப் பற்றை உறுதி செய்தார்கள். கல்லூரி முதல்வர், கணிப்பொறித்துறை, பிற துறை சார்ந்த பேராசிரியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மருத்துவர் தாரா நடராசன் அவர்கள் தம் கணிப்பொறி, இணைய ஆர்வத்தால் பயிற்சிக்கு வந்ததுடன் மாணவர்களுக்குத் தம் வாழ்த்தினையும் தெரிவித்தார். மாணவர்கள், பேராசிரியர்கள் அவர் வருகையால் மகிழ்ந்தனர்.

என் பேச்சில் கணிப்பொறியில் தமிழ் நுழைந்த வரலாறு, தமிழுக்கு உழைத்த கணிப்பொறி வல்லுநர்கள், சிறந்த தமிழ்த்தளங்கள்,தமிழ் விக்கிபீடியா, தமிழ்த்தட்டச்சு, தமிழில் மின்னஞ்சல் அனுப்பல், உரையாடல், எ.கலப்பை, என்.எச்.எம். எழுதி பற்றி எடுத்துரைத்தேன். தமிழில் தட்டச்சிட்டால் சொற்களை ஒலித்துக்காட்டும் பெங்களூர் அறிவியல் கழகத்துப் பேராசிரியரின் மென்பொருளை அறிமுகம் செய்தேன். அனைவரும் வியந்தனர்.

தமிழ்க் கணிப்பொறி சார்ந்த அமைப்புகளுள் உத்தமம், கணித் தமிழ்ச் சங்கம், கணியத்தமிழ் நிறுவன மென்பொருள்களை அறிமுகம் செய்தேன்.

தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பணிகளையும் எடுத்துரைத்தேன். தமிழில் தேடுபொறி உருவாக்கவும், புதுப்புது மென்பொருள்கள் கண்டுபிடித்து வழங்கவும் மாணவர்களை வேண்டினேன்.

தமிழ்க்கணிப்பொறித்துறைக்கு உழைத்தவர்களுள் முத்து நெடுமாறன், கோவிந்தசாமி, சுஜாதா, காசி, முகுந்து, கோபி, உள்ளிட்ட பலரின் பணிகளை எடுத்துரைத்து விளக்கினேன். கல்யாணசுந்தரம், கொரியா கண்ணன் உள்ளிட்டவர்களின் தளங்களையும் எடுத்துரைத்தேன்.

நான் வீடு வந்து சேர்வதற்குள் பல மாணவர்கள் எனக்கு மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் தொடர்புகொண்டு பல ஐயங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றனர். தொடர்ந்து இவர்கள் தமிழுக்கு உழைக்க வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களுக்குத் தமிழ் இணையத்தைக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டியது நம் கடமையாகத் தெரிகிறது.

பல பேராசிரியர்கள்,மாணவர்கள் எனக்கு நண்பரானார்கள். தொடர்ந்து தமிழ் இணைய வளர்ச்சிக்கு அனைவரும் உழைப்போம்.


கல்லூரி நிறுவுநர் திரு.கே.என்.இராமச்சந்திரன் அவர்கள் சிறப்புச்செய்தல்


கல்லூரி நிறுவுநர் திரு.கே.என்.இராமச்சந்திரன் அவர்களுடன் நான்


பயிற்சிபெற்ற மாணவியர்


பயிற்சி பெறும் மாணவர்கள்


தமிழ் இணையம் - பயிற்சி பெற்ற பொறியியல் கல்லூரி மாணவர்கள்


பயிற்சியளிக்கும் நான்


மருத்துவர் தாரா நடராசன் அவர்களுக்குச் சிறப்பு செய்யப்படுதல்


கணிப்பொறிப் பயன்பாட்டியல் துறைத்தலைவர்


கணிப்பொறித்துறைத் தலைவர் இளங்கோவன் அவர்கள்


சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வரவேற்புப் பதாகை

செவ்வாய், 22 டிசம்பர், 2009

"தமிழனின் உள்ளங்கையில் உலகம்" - தமிழ் இணையப் பயிலரங்கம்

இடம்:
சக்தி மாரியம்மன் பொறியியல்கல்லூரி,நாராயணசாமி நகர்,தண்டலம்,சென்னை
நாள்: 23.12.2009,புதன் கிழமை,நேரம் காலை 10 மணி

தலைமை:
திரு.கே.என்.இராமச்சந்திரன்(நிறுவுநர்,சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரி)

குற்று விளக்கேற்றல்: சீர்மிகு திலகவதி இராமச்சந்திரன்(அறங்காவலர்)

வரவேற்புரை: பேராசிரியர் இளங்கோவன்(கணிப்பொறித்துறைத் தலைவர்)

வாழ்த்துரை: முனைவர் ப.விசய பாசுகர ராசு(முதல்வர்)

சிறப்பு விருந்தினர் திரு.முருகேசன்(இயக்குநர்,சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரி)

விருந்தினர் அறிமுகம் பேராசிரியர் விசயகுமார்

"தமிழனின் உள்ளங்கையில் உலகம்" உரையும்,பயிற்சியும்:
முனைவர் மு.இளங்கோவன்

நன்றியுரை: பேராசிரியர் இராமகிருட்டினன்


அழைப்பிதழ்(முன்பக்கம்)


அழைப்பிதழ்(பின்பக்கம்)

ஞாயிறு, 20 டிசம்பர், 2009

மூக்கால்,நாக்கால் மவுத்ஆர்கன் இசைக்கும் கலைமாமணி இரா.இராசாராமன்


இசைக்கலைஞர் இரா.இராசாராமன்

மவுத் ஆர்கன் என்ற இசைக்கருவியை வாயால் இசைத்தால் பெருமைப்பட ஒன்றுமில்லை.
புதுச்சேரியில் ஒரு முதியவர் மவுத் ஆர்கனை மிகவும் நயமாக மூக்காலும் நாக்காலும் இசைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறார்.

“திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்”என்று இவர் மவுத் ஆர்கன் துணையால் மூக்கால் இசைக்கும் பொழுது யாரும் சிறிதுநேரம் நின்று கேட்காமல் போகமாட்டார்கள்.மூக்கால் வாசிக்கும்பொழுது நாக்கால் வாசிக்கவும் என்று சொன்னால் நாக்கை மடக்கிக் காற்றை வெளிவிட்டு மவுத் ஆர்கனைத் தன் ஏவலுக்குக் கட்டுப்படச் செய்கிறார்.

இளையராசா,இரகுமான்,புட்பவனம் குப்புசாமி பாடல்கள், இந்தி,மலையாள மொழிப்பாடல்கள் என எதனையும் தன் மூக்கு முனையிலும் நாக்குமுனையிலும் வைத்திருக்கும் இவர் புதுச்சேரியில் பல பள்ளிகளில் பாடி மாணவர்கள் திரட்டித்தரும் காசு கொண்டு வாழ்ந்து வருகிறார்.

கல்கத்தா முதலான பிற மாநிலங்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கும் பறந்துவிடுவார். பல இடங்களிலும் பாடினாலும் இன்னும் எளிய நிலையில் வாடகை வீட்டில்தான் வாழ்க்கை நடத்துகிறார்.இவரின் திறமை அறிந்த புதுவை அரசு இவருக்குக் கலைமாமணி விருது அளித்துப் பாராட்டியுள்ளது.

இவர் வாழ்க்கை பற்றிய பின்னோட்டம்.

தரங்கம்பாடியை அடுத்த மாணிக்கப்பங்கு என்ற ஊரில் 13.07.1949 இல் பிறந்தவர் இரா.இராசாராம்.பெற்றோர் இராசு,வைரக்கண்ணு அம்மாள்.பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றவர் .அதன்பின்பு தொழில்நுட்பக் கல்வி பயின்றவர்.தொழில்நுட்பத்தில் பொருத்துநராகக் கல்வி கற்றுப் புதுவைச் சுதேசி மில்லில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.நாற்பதாண்டுகளாக மவுத் ஆர்கன் வாசிக்கும் இவர் எந்தப் பாடலையும் ஒருமுறை கேட்டால் மறுமுறை அதனை மவுத் ஆர்கனில் வாசிக்கும் நினைவு ஆற்றல் பெற்றவர்.

மலையாளத் திரைப்படமான செம்மீனில் இடம்பெறும் பாடல்களை உயிர் உருக மூக்காலும், நாக்காலும் வாயாலும் மவுத் ஆர்களை இயக்கிப் பாடும்பொழுது மொழி மறந்து சுவைக்க வேண்டியுள்ளது.அதுபோல் “மேரே தேக்கா கோயி கானாசனம்” என்று இந்திப் பாடலைப் பாடும்பொழுது மெய்ம்மறந்து கேட்கலாம்.

ஆண்டு,மாதம்,நாள் சொன்ன்னால் அடுத்த நொடியே நாம் பிறந்த கிழமையைச் சொல்லிவிடுவார்.அந்த அளவு நினைவாற்றல்.

“என் ஜோடி மஞ்சக்குருவி” பாடலை இவர் மவுத் ஆர்கன் மன்னிக்கவும் மூக்கு ஆர்கனில் வாசித்தால் இளையராசாவே உள்ளம் குளிர்ந்து பாராட்டுவார்.” கவிதை அரங்கேறும் நேரம் ,மலர்க் கணைகள் பரிமாறும் நேரம்” பாடச்சொன்னேன்.மூக்காலும் நாக்காலும் வாயாலும் ஒரேநேரத்தில் மாறி மாறி இசைத்து எங்களை அசத்திவிட்டார்.

இசையார்வம்கொண்டவர்கள் இவரின் மூக்கிசையை,நாக்கிசையைப் பதிவு செய்து பாதுகாக்கலாம். எந்த ஊருக்கு அழைத்தாலும் உடன் புறப்பட்டுச் சென்றுவிடுகிறார் இந்த மூத்த இசைக்கலைஞர்.மிதிவண்டியில் புதுவையை வலம் வரும் இந்த இசைப்புயலைக் கலை ஆர்வம் உடையவர்கள் ஊக்கப்படுத்தலாம்.


நாக்கால் மவுத் ஆர்கன் இசைக்கும் கலைமாமணி இராசாராமன்


மூக்கால் மவுத் ஆர்கன் இசைக்கும் இராசாராமன்


உங்களுக்கு அவர் பாடல் கேட்க விருப்பமா?

+91 9894575252 என்ற அவர் செல்பேசிக்கு அழையுங்கள்.

எங்கள் குழந்தைகளுக்குக் “கொக்கு பற பற”,”வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்” என்று செல்பேசி வழியில் மூக்கு ஆர்க்கனால் மன்னிக்கவும் மவுத் ஆர்கனால் பாடி மயங்க வைத்துவிட்டார்.

வாழ்க கலைமாமணி இராசாராம்!

புரட்சிப்பாவலர் தேவிதாசன் அறக்கட்டளைச் சொற்பொழிவு,தேவிதாசனார் படைப்பிலக்கிய ஆய்வரங்கம்

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் புரட்சிப்பாவலர் தேவிதாசன் அறக்கட்டளை ஐந்தாம் சொற்பொழிவு,தேவிதாசன்ர் படைப்பிலக்கிய ஆய்வரங்கம் இன்று 20.12.2009 நடைபெறுகிறது.

புதுச்சேரி,இலாசுப்பேட்டை பிப்மேட் வளாகத்தில் அமைந்துள்ள நிறுவனத்தின் கருத்தரங்க அறையில் காலை 10 மணிக்கு நிகழ்ச்சி தொடங்க உள்ளது.

மொழியியல் நிறுவன இயக்குநர் முனைவர் மு.சுதர்சன் அவர்கள் அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்த உள்ளார்.

தேவி.திருவளவன் அவர்களின் அறிமுக உரையுடன் தொடங்கும் விழாவில் வழக்கறிஞர் தி.கோவிந்தராசு அவர்கள் படைப்புலகில் தேவிதாசனாரின் பதிவுகள் என்னும் பொருளில் உரையாற்றுகிறார்.ஆய்வாளர்கள் பலர் கட்டுரை வழங்குகின்றனர்.

சனி, 19 டிசம்பர், 2009

ஆர் அனைத்திந்திய ஆராய்ச்சிக்கழகத்தின் ஐந்தாம் பன்னாட்டுக் கருத்தரங்கம் தொடக்க விழா

ஆர் அனைத்திந்திய ஆராய்ச்சிக்கழகத்தின் பன்னாட்டுக்கருத்தரங்கம் கிருட்டினகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள வித்தியாமந்திர் கலை அறிவியல் கல்லூரியில் திசம்பர் 19,20 ஆகிய நாள்களில் நடைபெறுகிறது.

இதன் தொடக்க விழா இன்று வித்தியாமந்திர் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குச் சிங்கப்பூர், மலேசியா நாட்டுப்பேராளர்கள் வந்திருந்தனர்.

தொடக்க விழாவில் கலந்துகொண்டவர்களைக் கல்லூரி முதல்வர் முனைவர் க.அருள் வரவேற்றார்.

முனைவர் சிலம்பு நா.செல்வராசு கருத்தரங்க அறிமுகவுரையாற்றினார்.ஆர் அமைப்பின் ஓராண்டு செயல்பாட்டில் பல இழப்புகளும் ஆக்கங்களும் கிடைத்துள்ளன.தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெறுவது தமிழாக்கமாக அமைகிறது.வ.ஐ.சுப்பிரமணியன்,கமில் சுவலபில் ஆகியோர் இயற்கை எய்தியமை தமிழுக்கு மிகப்பெரிய இழப்பாகும்.166 பேராளர்கள் கட்டுரை வழங்கியுள்ளனர்.துளிர்,இதழ்,மலர் என்னும் மூன்று கருத்தரங்க ஆய்வுக்கோவைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன.

கல்லூரிச் செயலாளர் கே. செல்வராசு,கு.செங்கோடன் வாழ்த்துரை வழங்கினார்.

பெரியார் பல்கலைக்கழகப் பேராசிரியர் தி.பெரியசாமி அவர்கள் வாழ்த்துரையாற்றியதுடன் கருத்தரங்க ஆய்வுக்கோவைகள் சிறப்பை எடுத்துரைத்தார்.உதகமண்டலம் அரசு கல்லூரிப் பேராசிரியர் முனைவர் க.பாசுகரன் அவர்கள் இன்றைய ஆய்வுப்போக்குகளை எடுத்துரைத்தார்.

இந்திய அரசின் செம்மொழி நிறுவனத்தின் செம்மொழி இளம் அறிஞர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முனைவர் இரா.அறவேந்தன், முனைவர் கேசவ.பழனிவேல், முனைவர் இரா.கலைவாணி,முனைவர் மு,இளங்கோவன், முனைவர் அ.செல்வராசு ஆகியோருக்குப் பாராட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

செம்மொழி இளம் அறிஞர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களைச் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் சு.பழனியாண்டி அவர்கள் அறிமுகம் செய்து நினைவுப்பரிசு வழங்கிப் பாராட்டிப் பேசினார்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவப்பல்கலைக்கழகப் பேராசிரியர் மருத்துவர் பெரு.மதியழகன் அவர்கள் ஆய்வுக்கோவைகளைப் பற்றிய மதிப்பீட்டு உரை வழங்கினார்.

ஆய்வுக்கோவைகளை வெளியிட்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் க.ப.அறவாணன் அவர்கள் வெளியிட்டு உரை நிகழ்ந்நினார்.

சிங்கப்பூர் பேராசிரியர் முனைவர் இரத்தின.வேங்கடேசன்,கவிஞர் இறை.மதியழகன்,கவிஞர் வேள்.பாரி ஆகியோர் முதற்படிகளைப் பெற்றுக்கொண்டு வாழ்த்திப் பேசினார்.

வெள்ளி, 18 டிசம்பர், 2009

ஊத்தங்கரை அரசு மேல்நிலைப்பள்ளி இணையப்பயிற்சி வகுப்பு நிறைவு...

இன்று(18.12.2009 ஊத்தங்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் இணையப்பயிலரங்கம் பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கியது.பள்ளித்தலைமையாசிரியர் திரு பி.பொன்னுசாமி அவர்கள் தலைமையில் நடந்தது.திரு.செங்குட்டுவன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
உதவித்தலைமையாசிரியர்கள் திருவாளர்கள் எம்.சி.செயபால்,ஆர்.தருமலிங்கம்,கே.வேலுசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கணிப்பொறித்துறை சார்ந்த தமிழ் மாணவர்கள் 100 பேர் தமிழ் இணைய அறிமுகம் பெற்றனர்.தமிழ்த்தட்டச்சு,கூகுள் நிறுவனப்பயன்பாடு,மதுரைத்திட்டம்,தமிழ் மரபு அறக்கட்டளை பற்றி அறிமுகம் பெற்றனர்.மின்னிதழ்கள் உள்ளிட்ட பல செய்திகள் அறிமுகம் செய்யப்பட்டன.

கணிப்பொறி ஆசிரியர் கே.பி.உமாமகேசுவரி அவர்கள் நன்றியுரையாற்றினார்.

நிகழ்ச்சியில் நான் காட்சி விளக்கத்துடன் உரையாறினேன்.

ஊத்தங்கரை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்குத் தமிழ் இணையம் அறிமுகப்பயிற்சி...

கிருட்டினகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இன்று(18.12.2009)பிற்பகல் இரண்டு மணிமுதல் நான்கு மணிவரை தமிழ் இணையம் அறிமுகமும் இணையப் பயிற்சியும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அருகில் உள்ள பதிவர்கள்,தமிழ் இணைய ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.அண்மையில் தமிழ்நாட்டு அரசு இந்தப் பள்ளியில் கணிப்பொறித் துறைக்கான மிகச்சிறந்த ஆய்வுக்கூட வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளது.இந்த நிகழ்வு அதில் நடைபெறும் முதல் நிகழ்வாகும்.புதுச்சேரியிலிருந்து நான் கலந்துகொள்கிறேன். மாணவர்களுக்குப் பயிற்சி வழங்குகிறேன்.அரங்கிலிருந்து சந்திப்போம்.

சனி, 12 டிசம்பர், 2009

ஆர் அனைத்திந்திய ஆராய்ச்சிக்கழகத்தின் ஐந்தாவது பன்னாட்டுக் கருத்தரங்கம்

ஆர் அனைத்திந்திய ஆராய்ச்சிக்கழகத்தின் ஐந்தாவது பன்னாட்டுக் கருத்தரங்கம் ஊத்தங்கரை வித்தியாமந்திர் கலை மற்றும் அறிவியல்கல்லூரியில் 2009, திசம்பர் 19,20 நாள்களில் நடைபெற உள்ளது.

19.12.2009 முற்பகல் 10 மணிக்குத் தொடக்க விழா நடைபெறுகிறது.வித்தியா மந்திர் கல்லூரியின் நிறுவுநர் வே.சந்திரசேகரன்,பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் பெ.தங்கராசு,சுப்பிரமணியம் கலை,அறிவியல் கல்லூரியின் தாளாளர் திரு.சு.பழனியாண்டி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் க.ப.அறவாணன்,பேராசிரியர் மா.பா.குருசாமி, சிங்கப்பூரைச் சேர்ந்த முனைவர் இரத்தின. வேங்கடேசன், கவிஞர் இறை.மதியழகன்,முனைவர் தியாகராசன்,தமிழாசிரியர் உஷா, பெரியார் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் பெ.மாதையன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.

துளிர்,மலர்,இதழ் என்னும்ஆய்வரங்கக் கோவைகள் வெளியிடப்பெற உள்ளன.

அழைப்பிதழ்



தமிழறிஞர் புலவர் கி.த.பச்சையப்பன் அவர்களின் பவழ விழா

மூத்த தமிழறிஞரும்,தமிழ் ஓசை நாளிதழின் மொழிநடை ஆசிரியருமான புலவர் கி.த.பச்சையப்பன் அவர்களின் பவழ விழா 12.12.2009 காரிக்கிழமை மாலை 3 மணிக்குச் சென்னைத் தேவநாயப்பாவாணர் நூலக அரங்கில் பேராசிரியர் ம,இலெ.தங்கப்பா அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது.

பாவலர் தமிழேந்தி அவர்கள் வரவேற்புரையாற்ற மாவீரன் பழ.நெடுமாறன் அவர்கள் பவழ விழா மலரினை வெளியிடுகிறார்.

சிந்தனையாளன் ஆசிரியர் வே.ஆனைமுத்து,முனைவர் பொற்கோ,முனைவர் க.இராமசாமி, பேராசிரியர் பி.விருத்தாசலனார்,தோழர் சி.மகேந்திரன்,தோழர் பெ.மணியரசன்,வழக்குரைஞர் ச.செந்தில்நாதன்,இயக்குநர் தங்கர்பச்சான்,இயக்குநர் சீமான்,இயக்குநர் வ.கௌதமன்,தோழர் வீர.சந்தனம்,கண்ணியம் இதழாசிரியர் ஆ.கோ.குலோத்துங்கன் புலவர். சீனு.இராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் உரையாற்றுகின்றனர்.

முனைவர் ந.அரணமுறுவல் அவர்கள் நன்றியுரையாற்ற உள்ளார்.

வியாழன், 10 டிசம்பர், 2009

புதுச்சேரியில் 13 ஆம் தேசியப் புத்தகக் கண்காட்சி

புதுச்சேரியில் 13 ஆம் தேசியப் புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது.

இடம்: வேல்.சொக்கநாதன் திருமண மண்டபம்,புதுச்சேரி
நாள்: திசம்பர் 18-27

கண்காட்சியில் 94 முன்னணிப் பதிப்பாளர்களின் அரங்குகள் இடம்பெற உள்ளன.
ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் தமிழ்,ஆங்கிலம்,இந்தி,பிரஞ்சு மொழி நூல்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.

உருவா 200-00 மேல் நூல் வாங்குபவர்களுக்குப் பரிசு அட்டை வழங்கப்படும்.
கல்வி நிறுவனங்களுக்கு உரிய கழிவு வழங்கப்படும்.
ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

18.12.2009 மாலை ஐந்து மணிக்கு நடைபெறும் தொடக்கவிழா புதுச்சேரி அரசின் கூட்டுறவுத்துறையின் அமைச்சர் மாண்புமிகு மு.கந்தசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும். இவ் விழாவில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் மாண்புமிகு வெ.வைத்தியலிங்கம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.மேனாள் கல்வியமைச்சர் திரு க.இலட்சுமிநாராயணன் அவர்கள் முன்னிலையுரையாற்றுகிறார்.தோழர் இரா.விசுவநாதன் அவர்கள் வாழ்த்துரையும் திருவாட்டி பி.தமிழரசி அவர்கள் பாராட்டுரை வழங்கவும் உள்ளனர்.

25.12.2009 இல் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் புதுச்சேரி சட்டப்பேரவைத்தலைவர் மாண்புமிகு இரா.இராதாகிருட்டினன் அவர்கள் சிறப்புரையாற்றவும் மேனாள் கல்வியமைச்சர் திரு.க.இலட்சுமி நாராயணன் அவர்கள் தலைமை தாங்கவும் உள்ளனர்.

27.12.2009 இல் புத்தகக் கண்காட்சியின் நிறைவு விழா சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆர்.கே.ஆர்.அனந்தராமன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

அனைவரும் கலந்துகொண்டு கண்காட்சியில் தேவையான நூல்களை வாங்கலாம்.


ஏற்பாடு
புதுச்சேரி கூட்டுறவுப் புத்தகச் சங்கம்,புதுச்சேரி-8
தொடர்புக்கு 98423 30358,94447 76733

கண்காட்சி நேரம்
அலுவலக நாளில் பிற்பகல் 2.00-முதல் இரவு 9.00 மணி வரை
விடுமுறை நாளில் முற்பகல் 11.00-முதல் இரவு 9.00 மணிவரை

புதன், 9 டிசம்பர், 2009

கோவை உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டு இணையத்தளம் தொடக்கம்...

கோவையில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 சூன் 23-27 இல் நடைபெற உள்ளது.இம்மாநாட்டு விவரங்களை அறியவும்,பேராளர்கள் ஆய்வுக்கட்டுரை வழங்கவும் உதவும் வகையில் உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டுக்குப் புதிய இணையத்தளம் இன்று தமிழ்நாட்டு முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
கண்டு மகிழ இங்கே அழுத்துக.

வெள்ளி, 4 டிசம்பர், 2009

சிங்கப்பூர்த் தமிழாசிரியர்களுடன் சந்திப்பு…

திரு.சாமிக்கண்ணு,முனைவர் திருமாவளவன்,மு.இ
  உரை கேட்கும் ஆசிரியப்பெருமக்கள் 
அரங்கில் சிங்கப்பூர்த் தமிழாசிரியர்கள் 
சிங்கப்பூர்த் தமிழாசிரியர்கள் 
 
 
 புதுவைத் தமிழாசிரியர்கள் சிங்கப்பூர்த் தமிழாசிரியர்கள் புதுச்சேரியில் உள்ள பள்ளிகளைப் பார்வையிடவும்,இங்குள்ள கல்வி முறைகளை அறியவும் திரு.சாமிக்கண்ணு அவர்களின் தலைமையில் 19 பேர் கொண்ட குழுவினராக வந்துள்ளனர். 
 
 புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு வெ,வைத்தியலிங்கம் அவர்களின் தலைமையில் சிங்கப்பூர்த் தமிழாசிரியர்களுக்குச் சிறப்பான வரவேற்பு தொடக்க விழாவில் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர்த் தமிழாசிரியர்கள் புதுவையின் புகழ் பெற்ற பள்ளிகளுக்குச் சென்று அங்கு நடைபெறும் வகுப்புகளைக் கண்டு மகிழ்ந்தனர். ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் பழகி அவர்களுக்குப் பாடம் நடத்தினர். பல நூலகங்களுக்குச் சென்று நூல்களைப் பார்வையிட்டனர். முனைவர் இராச.திருமாவளவன் அவர்கள் தகவல் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, தமிழ் பயிற்றுவிக்கும் வகையில் உரையாற்ற என்னை அழைத்திருந்தார். 
 
 2001 இல் நான் சிங்கப்பூர் சென்றிருந்தபொழுது அப்பொழுது நடைபெற்ற கருத்தரங்கில் பழையன புகுதலும் என்ற தலைப்பில் கட்டுரை வழங்கி அனைவரின் பாராட்டையும் பெற்றேன். அவ்வுரை கேட்ட பேராசிரியர் மன்னர்மன்னன் அவர்கள் மலேசியா அழைத்துச் சென்று பல கல்லூரிகளில் உரையாற்ற வாய்ப்பு அமைத்தார்கள். அந்த அடிப்படையில் சிங்கப்பூர் நாட்டின் மேலும் அங்குள்ள தமிழர்கள் மீதும் எனக்கு அன்பும் மதிப்பும் உண்டு. அவ்வகையில் தெரிந்தவர்களைக் கண்டு மகிழலாம் என்று நினைத்து நானும் உரையாற்ற இசைந்தேன். 
 
 திரு.சாமிக்கண்ணு அவர்களை முன்பே பல கருத்தரங்குகளில் கண்டு பழகியுள்ளேன். அவர்கள் தலைமையில் வந்துள்ளவர்களை வரவேற்கும் முகமாகவேனும் நாம் செல்ல வேண்டும் என்ற உறுதியில் பிற பணிகளை ஒதுக்கிவைத்துவிட்டுச் சென்றேன். என் சிங்கப்பூர் பயண அனுபவங்களை நினைவு கூர்ந்து முன்பு பழைமை பற்றி பேசியதை நினைவுப்படுத்தி இன்று வளர்ந்து நிற்கும் தொழில் நுட்பம் பயன்படுத்தித் தமிழ் வளர்த்தல், தமிழ் பயிற்றுவித்தல் என்ற பொருளில் சற்றொப்ப 45 மணித்துளிகள் உரை வழங்கினேன். 15 மணித்துளிகள் கலந்துரையாடலும் இருந்தது. தமிழ் இணையத்துக்குப் பங்களிக்க அனைவரும் முன்வர வேண்டும் எனவும் வலைப்பூ உள்ளிட்டவற்றை உருவாக்கி படைப்புகளை வழங்க வேண்டும் என்றும் தமிழ் விக்கிப் பீடியாவின் பயன், பங்களிப்பு பற்றியும் என் உரை இருந்தது. 
 
சிங்கப்பூர் தேசிய நூலகம், புதுவை பிரஞ்சு நிறுவன நூலகம் இணையம் வழி பார்வையிட முடியும் என்று இவற்றின் சிறப்புகளை எடுத்துரைத்தேன். மதுரைத்திட்டம், தமிழ் இணையப் பல்கலைக்கழகப் பணிகள், தமிழ் மரபு அறக்கட்டளை, பொள்ளாச்சி நசன் அவர்களின் கல்வித்துறைப்பணிகள்,நூல் பாதுகாப்பு பற்றி காட்சிவழி விளக்க முயன்றேன்.
 
 திரு.சிவகுருநாதப் பிள்ளை அவர்கள் கல்வி தொடர்பாக எனக்கு அனுப்பியிருந்த சிறு காட்சிவிளக்கத்தையும் காட்டிப் பிறமொழிச்சூழலில் தமிழ் பயிற்றுவிக்க பல உத்திகளைப் பயன்படுத்த வேண்டும் என்றுரைத்தேன். திரைப்படம் மற்றும் நாட்டுப்புறப்பாடல்கள் பிற நாடுகளில் தமிழ் பயிற்றுவிக்கப் பெரிதும் உதவும் என்றேன். அனைவரும், உரைக்குப் பிறகு சிறிது உரையாடி மகிழ்ந்தோம். திரு.சாமிக்கண்ணு அவர்கள் 2011 இல் மீண்டும் சிங்கப்பூரில் உலகத் தமிழாசிரியர் மாநாடு நடைபெற உள்ளதை நினைவூட்டி முன்கூட்டியே ஓர் அழைப்பு விடுத்தார். சிங்கப்பூர்த் தமிழாசிரியர்களுடன் புதுவைத் தமிழாசிரியர்கள் பலரும் கலந்துகொண்டனர். அனைவரும் மின்னஞ்சல் வழியாகச் சந்திக்கலாம் என்று மகிழ்ச்சியுடன் விடைபெற்றோம்.

சனி, 28 நவம்பர், 2009

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் நாற்பத்தொன்றாம் கருத்தரங்கம்,திருநெல்வேலி

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் நாற்பத்தொன்றாம் கருத்தரங்கம் 2010, மேத் திங்கள் 15,16(காரி, ஞாயிறு) கிழமைகளில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரானர் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. பேராசிரியர் சபாபதி மோகன் அவர்கள் (துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்) புரவலராக இருந்து இந்தக் கருத்தரங்கை நடத்த உள்ளார்.

பல்கலைக்கழகம், கல்லூரிகள், நிறுவனங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள் மட்டும் பேராளர்களாகக் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை படிக்கலாம்.

பதிவுக்கட்டணம்

பேராளர் பதிவுக்கட்டணம் உருவா 500-00
உடன் வரும் விருந்தினர் கட்டணம் உருவா 150-00

கட்டணங்களை ALL INDIA UNIVERSITY TAMIL TEACHERS ASSOCIATION,MADURAI-625 020என்னும் முகவரியில் மாற்றத்தக்க வகையில் வரைவோலையாக அனுப்ப வேண்டும்.

கட்டுரை 5 பக்க அளவில் இருத்தல் வேண்டும்.

இலக்கியவியல், இலக்கணவியல், சமயவியல், பண்பாட்டியல் / வரலாற்றியல் இக்கால இலக்கியம், பல்துறை இயல் என்ற பிரிவுகளில் அமைத்தல் நலம்.

கட்டுரை,கட்டணம் இரண்டையும் சேர்த்து விடுத்து வைக்க நிறைவுநாள் 31.12.2009

பேராளர்களுள் நூலாசிரியர்கள் இருப்பின் அவர்கள் 2009 சனவரி-திசம்பர் காலத்தில் நூல் எழுதியிருப்பின் நூலாசிரியர் வாழ்க்கைக்குறிப்பு, நூற்படி 2,பதிவுக்கட்டணம் 25 ஆகியவற்றைச் செயலர் முகவரிக்கு 31.01.2010 நாளுக்குள் அனுப்பவேண்டும். நூலாசிரியர்கள் விழா அரங்கில் சிறப்புச் செய்யப்பெறுவர்.

தொடர்பு முகவரி:
முனைவர் மு.மணிவேல்
செயலர்,இ.ப.த.மன்றம்,தமிழியற்புலம்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
மதுரை-625 020
செல்பேசி: 98655 34622

வெள்ளி, 27 நவம்பர், 2009

பாவலர் மாநி(மார்கிரேட் நிக்கோலசு)


பாவலர் மாநி

புதுவையில் வாழும் பாவலர்களுள் பாவலர் மாநி அவர்கள் குறிப்பிடத்தகுந்தவர்.மரபுப்பாடல் எழுதும் பெண்பாவலர்களுள் குறிப்பிடத்தக்கவர்.முனைவர் இரா.திருமுருகன்,பாட்டறிஞர் புலவர் இலக்கியன்,புலவர் நாகி உள்ளிட்டவர்களின் நெறிப்படுத்தலில் மிகச்சிறப்பாக எழுதி வருபவர். இதுவரை துளியாய், தூறலாய்,புயலாய்,பூவாய்,பூங்காற்றாய்,புனலாய்,சுருக்குப்பை(துளிப்பா),பாவம் அவள்(சிறுகதை)உதிரிப்பூக்கள்(சிறுகதை),மரபுச்சாரல்,மழைச்சாரல் உள்ளிட்ட நூல்களை வழங்கியுள்ளார்.குறளாயிரம்,வண்ணத்துப்பூச்சிகள்(சிறுவர் பாடல்கள்) விரைவில் வெளிவர உள்ளன.

பாவலர் மாநி அவர்கள் சேலத்தில் 26.12.1948 இல் பிறந்தவர்.இளம் அறிவியல் படிப்பைக் கோவை நிர்மலா கல்லூரியில் படித்தவர்.கல்வியியல் படிப்பை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நிறைவு செய்தவர்.கிறித்தவப் பெண்கள் அமைப்புகளில் பலநிலைகளில் பணிபுரிந்தவர்.திராவிட இயக்கக்கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.இவர் கணவர் திரு.நிக்கோலசு அவர்கள் புதுச்சேரியில் சிறைத்துறை அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.மரபுப்பாடல் எழுதுபவர்கள் குறைந்து வரும் இந்த வேளையில் அம்மா மாநி அவர்களின் பாட்டுப்பயணம் தொடர வாழ்த்துவோம்.

பாவலர் மாநி அவர்களின் முகவரி:
பாவலர் மாநி
141,இலப்போர்த் தெரு,
புதுச்சேரி- 605 001
செல்பேசி: 9787095578

புதன், 25 நவம்பர், 2009

உலகக் கணினித்தமிழ்க் கருத்தரங்கம்,தமிழ்மொழித்துறை,சென்னைப் பல்கலைக்கழகம்

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறை வருகிற 2010 பிப்ரவரி 24 முதல் 26 வரை மூன்று நாட்கள் கணினித்தமிழ் பற்றிய ஒரு ஆய்வுக் கருத்தரங்கை (International Semionar on Tamil Computing) நடத்தவுள்ளது.

தமிழ்மொழித்துறை கடந்த 10 ஆண்டுகளாகக் கணினித் தமிழில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறது. துறையில் மொழியியல் ஆய்வுப் பிரிவு(Linguistic Studies Unit) ஒன்று நிறுவப்பட்டுள்ளது. செயற்பாட்டு மொழியியல் ( Applied Linguistics) மற்றும் கணினிமொழியியலில் ( Computational Linguistics) முதுகலைப் பட்டம், ஆய்வியல் நிறைஞர் பட்டம் ஆகியவற்றிற்கான படிப்பை நடத்திவருகிறது. 15 -க்கும் மேற்பட்ட கணினி மொழியியல் துறையில் பட்டம் பெற்ற மாணவர்கள் முனைவர் பட்டத்திற்கான ஆய்வை மேற்கொண்டுவருகிறார்கள். தமிழ் முதுகலைப் பட்ட மாணவர்களுக்கும் கணினித் தமிழ்ப் பாடத்தை நடத்திவருகிறது.

ஒரு சிறந்த கணினிமொழியியல் ஆய்வுக்கூடம் ( Computer Assisted Language Technology Lab) அமைக்கப்பட்டுள்ளது. கணினிமொழியியல் மற்றும் மொழித்தொழில்நுட்பம் சம்பந்தமாக ஏராளமான நூல்களைக்கொண்ட ஒரு நூலகம் உள்ளது. மின்னகராதி ( E-Dictionary) , உருபன் பகுப்பி ( Morphological Parser), தொடர் பகுப்பி ( Syntactic Parser) , கணினிவழித் தமிழ் பயிற்றல் போன்ற பல கணினித் தமிழ் மென்பொருள்களை உருவாக்கியுள்ளது.

இதுவரை மூன்று தேசிய அளவிலான கணினித்தமிழ்க் கருத்தரங்குகள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது நடைபெற இருப்பது நான்காவது கருத்தரங்கு ஆகும். 2010 சூன் இறுதியில் தமிழக அரசின் துணையுடன் உத்தமம் நடத்த உள்ள உலகத் தமிழ் இணைய மாநாட்டிற்குச் சிறப்புசேர்க்கும் வகையில் இக்கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

கணினித் தமிழ் ஆய்வில் மட்டுமல்லாமல், கணினிமொழியியல் மற்றும் மொழித்தொழில் நுட்பத் துறையில் ஈடுபட்டுவரும் ஆய்வாளர்களும் கட்டுரை அனுப்பலாம். பதிவுக்கட்டணம் கிடையாது. இந்தியப் பல்கலைக்கழகங்கள் , கல்லூரிகள், பிற நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் ஆய்வாளர்களுக்குச் சென்னைப் பல்கலைக்கழக விதிப்படி பயணப்படி, நாட்படி வழங்கப்படும். பிற ஆய்வாளர்களுக்கும் நிதிவசதிக்கேற்ப பயணப்படி வழங்கப்படலாம். வெளிநாடுகளில் இருந்து பங்கேற்க வரும் ஆய்வாளர்களுக்கு விடுதி, உணவு போன்ற உள்ளூர் தங்கும் வசதிகள் செய்து தரப்படும்.

பங்கேற்க விரும்பும் அயல்நாட்டு அன்பர்கள் டிசம்பர் 5 ஆம் தேதிக்குள் தங்கள் பங்கேற்பு பற்றி விவரம் அளித்தால், பிற ஏற்பாடுகளுக்கு உதவியாக அமையும். ஆய்வுக்கட்டுரை சுருக்கம் அளிக்க கடைசி நாள் 2009, திசம்பர் 15. முழுக்கட்டுரையையும் அனுப்ப இறுதி நாள் சனவரி 15.

தொடர்புக்கு:
முனைவர் ந. தெய்வ சுந்தரம்
பேராசிரியர் & தலைவர், தமிழ்மொழித்துறை
இயக்குநர், மொழியியல் ஆய்வுப்பிரிவு
சென்னைப் பல்கலைக்கழகம்
மெரினா வளாகம்
சென்னை 600 005
tamilcomput.seminar2010@gmail.com
ndsundaram@hotmail.com

நன்றி: பேராசிரியரின் மின்மடல்

வெள்ளி, 20 நவம்பர், 2009

பேராசிரியர் ம.இலெ.தங்கப்பாவின் சோளக்கொல்லைப் பொம்மை நூல் வெளியீடு

பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா எழுதிய சோளக்கொல்லைப் பொம்மை என்ற குழந்தைகளுக்கான பாடல் நூலின் வெளியீட்டு விழா புதுவையில் நடைபெற உள்ளது.

நாள்: 22.11.2009 ஞாயிறு
நேரம்: காலை 9 மணியளவில்
இடம்: புதுவைத் தமிழ்ச்சங்கக் கட்டடம்

நூல் வெளியீடு எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள்

நிகழ்ச்சியில் உருவா 100 விலை கொண்ட நூல் உருவா 80 விலைக்குக் கிடைக்கும்.

தொடர்புக்கு:
வானகப் பதிப்பகம்
7,11 ஆம் குறுக்கு,அவ்வை நகர்,
புதுச்சேரி-605 008
பேசி: +91 413 2252843

புதன், 18 நவம்பர், 2009

நினைவில்லம் திறப்பு சில படங்கள்...

 என் தந்தையார் கோ.சி.முருகேசன் அவர்களின் பெயரில் நினைவில்லம் திறக்கும் எண்ணம் பல மாதங்களுக்கு முன்பாகத் தோன்றி இன்று முழுமைபெற்றது.

 ஆம். எங்களின் முன்னோர்களால் சற்றொப்ப எண்பதாண்டுகளுக்கு முன்பு கங்கைகொண்ட சோழபுரம் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊரின் தென்மேற்கில் இரண்டு கல் தொலைவில், இடைக்கட்டு என்ற ஊரில் மிகப்பெரிய வீடு ஒன்று கட்டப்பட்டது.அதற்கு முன்பு இடைக்கட்டு என்ற எங்கள் ஊரில் காளியம்மன்கோயில் அருகில் ஒரு பழைய வீடு இருந்தது.எம் முன்னோர்களுக்கு நில புலங்கள் மிகுதி. பொன்னேரி என்று இன்று அழைக்கப்படும் சோழகங்கம் முன்பு காடாக இருந்து, திருத்தப்பட்டு,நிலமாக இருந்தது. அதனை நிலமாகத் திருத்திப் பலவாண்டுகளாக எம் முன்னோர் பயன்படுத்தி வந்தனர்.

 இந்தியத் தன்னுரிமைக் காலத்தில் ஆங்கிலேயர்கள் நிலத்தை ஏரியாக்கும் பொழுது பல நூறு ஏக்கர் இருந்த எங்கள் நிலம் அரசுக்குக் குறைந்த விலைக்கு வழங்கப்பட்டது. எம் முன்னோர்கள் ஆங்கிலேய அதிகாரிகளிடம் நேர் நின்று பேசும் ஆற்றல் இல்லாதவர்களாக இருந்தனர். அவர்களின் துரைத்தனத்துக்கு முன்பாக உழவுத்தொழில் மேற்கொண்ட இவர்களால் வாதிட்டு நிலங்களைத் தங்களுக்கு உரிமையானதாக ஆக்க முடியவில்லை.மிகவும் குறைந்த விலைக்கு நிலத்தை விற்றனர்.அவ்வாறு விற்ற தொகையும் சிலருக்குப் பாகம் பிரிக்காததால் ஆங்கிலேய அதிகாரிகள் வங்கியில் அப்பணத்தை முதலீடு செய்தனர். பங்கு பிரிந்த பிறகு பணத்தை எடுத்துக்கொள்ள வசதி செய்து தந்திருந்தனர். ஆனால் கடைசி வரை பாகம் பிரியாமல் இருந்தது. அந்தப் பணம் என்ன ஆனது? எந்த வங்கியில் முதலீடு செய்யப்பட்டது என்ற விவரம் யாவும் தெரியவில்லை.

 கோட்டை கட்டி நெல் குவித்த எம் முன்னோர்கள் வாழ்ந்த வீடு "கோட்டையான் வீடு" என்று இன்றும் அழைக்கப்படுகிறது. இந்த வீடு கட்டுவதற்குப் பல ஊர்களிலிருந்து மரம் வந்துள்ளது. 64 உத்திரம் அமைந்த வீடு. தேக்கு மரத்தால் அமைந்த சரங்கள் உள்ளன. ஓடு கவிழ்க்கும் சட்டம் தேக்குமரத்தில் இழைக்கப்படிருக்கும். பாலை மரத்தால் அமைந்த ஒத்த அளவுள்ள தூண்கள் எம் வீட்டில் இன்றும் காணப்படும். இந்த மரங்கள் 5 கல் அருகில் உள்ள பெரியவளையம் என்ற ஊரிலிருந்து வந்துள்ளன. அந்த மரம் இருந்த கொல்லைகள் இன்றும் பாலைமரத்துக் கொல்லை எனப்படுகிறது.

  மரம் விற்ற அந்த நில உரிமையாளரை அவர் வழி வந்தவர்கள் இன்றும் ஏசித் தீர்ப்பது உண்டு. "கோட்டையான் வீட்டுக்கு மரத்தை வெட்டி வித்துப்புட்டு எங்களுக்கு ஒரு வீடு கட்டவில்லையே" என்று ஏசுவார்களாம்.

 பாலை மரத்தில் சிறு கைத்தடிகள் செய்து வைத்திருந்தனராம். அந்தக் கைத்தடிகள் இன்றும் இருப்பில் இருப்பதாக அறிந்தேன். சில கைத்தடிகளைக் காவலர்கள் தங்கள் பாதுகாப்புக்கு எடுத்துச்சென்றதாகவும் அறிந்தேன். அந்த மரம் விளைந்த இடங்களை அடையளம் காட்டும் ஆட்கள் உண்டு என்று அறிந்தேன். அந்த அளவு அந்த வீடு கட்டப்பட்ட பல ஆவணங்களையும் தொகுக்கும் முயற்சியில் இருந்த நான் பலருக்கும் பங்குடைய அந்த வீட்டை விலைக்கு வாங்கிப் புதுப்பித்துப் பழைமை மாறாமல் காக்கும் பிடிவாதத்துடன் செயல்பட்டேன்.

 ஓராண்டாகத் தீவிரம் கொண்ட என் முயற்சி நிறைவுபெற்றது. ஆம். அந்த வீட்டைப் புதுப்பித்து இன்று என் தந்தையாரின் நினைவு நாளில் நினைவில்லமாகத் திறந்தோம். இந்த நிகழ்ச்சிக்கு முனைவர் பொற்கோ ஐயா அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.ஆனால் தவிர்க்க இயலாத காரணத்தால் ஐயாவால் இன்று வரமுடியா நிலை சொல்லிப் பின்னொரு நாள் வந்து அந்த இல்லில் ஒருநாள் தங்கி வருவதாக உறுதியுரைத்தார்கள். அந்த வீட்டின் மேல் துணைவேந்தர் பொற்கோ ஐயா அவர்களுக்கு ஒரு பெரிய ஈடுபாடு உண்டு.என் விருப்பம் அறிந்து என் முயற்சியை ஐயா அவர்கள் ஊக்கப்படுத்திய வண்ணம் இருந்தார்கள். அவர்களுக்கு நன்றியுடையேன்.

 மிகப்பெரிய இடிபாடுகளுக்கு இடையில் இருந்த வீட்டைப் புதுப்பித்து மீட்டுள்ளோம்.இனியும் அழகுப்படுத்தும் சில பணிகள் உள்ளன.வண்ணம் பூசவேண்டும். சில கூரை அமைப்புகள் அமைக்க வேண்டும்.யாவும் முடிந்த பிறகு எம் ஊரில் நடைபெறும் நல்ல நிகழ்வுகள், இலக்கியச் சந்திப்புகள், அயல்நாட்டிலிருந்து கங்கைகொண்ட சோழபுரம் சுற்றுலா வரும் அன்பர்கள் தங்கிச்செல்லும் வகையில் இதனை இன்னும் சில மாதங்களில் பல ஏந்துகளுடன் வடிவமைப்போம்.

இது நிற்க.

 இன்று(18.11.2009) காலை 10.30 மணியளவில் நினைவில்லம் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. உறவினர்கள் ஊர்ப்பெரியவர்கள், நண்பர்கள் என நூற்றைம்பதுபேர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு என் சிறிய தந்தையாரும் முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவருமான திரு.காசி.அன்பழகன் அவர்கள் தலைமை தாங்கினார்கள். என் தமிழாசிரியர் திரு.கணேசமூர்த்தி ஐயா அவர்கள் தொடக்கவுரை நிகழ்த்தினார்கள். சனதா பல்பொருள் அங்காடி உரிமையாளர் திரு.மாணிக்கம் அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள். குருவாலப்பர் கோயில் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.கி. முல்லைநாதன் அவர்கள் முன்னிலையுரையாற்றினார்கள்.

 என் பாட்டனார் திரு.காசிநாதன் அவர்களும் (அகவை 90) என் பெரிய தந்தையார் திரு.சி.சாமிதுரை (அகவை 89) அவர்களும் நினைவில்லக் கல்வெட்டைத் திறந்துவைத்தனர். திரு.சோ.குலோத்துங்கன் (வாழ்நாள் காப்பீட்டு அதிகாரி), திரு.சிறீகாந்து (தமிழாசிரியர்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கட்டடப்பணியில் ஈடுப்பட்டிருந்த தொழிலாளர்களுக்கு ஆடைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. வந்திருந்த அனைவருக்கும் இன்னடிசில் வழங்கப்பட்டது. தந்தையாரின் நினைவுகளை ஏந்தியபடி புதுச்சேரி வந்துசேர்ந்தேன்.


புதுப்பிக்கப்பட்ட இல்ல முகப்பு


திரு.காசிநாதன் அவர்கள் கல்வெட்டு திறத்தல்


கல்வெட்டு திறக்கும் உறவினர்கள்


நினைவில்லத் திறப்புக்கு வந்திருந்த உறவினர்கள்,நண்பர்கள்


செயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவரும் என் சிறிய தந்தையருமான திரு.காசி.அன்பழகன் அவர்கள் தலைமையுரையாற்றுதல்


ஊ.ம.தலைவர் திரு.முல்லைநாதன் அவர்களுக்குச் சிறப்பு செய்தல்


அழகுபடுத்தும் கைகளுக்குக் காத்திருக்கும் கலைநயம்மிக்க சுவர்


எங்களின் வீடு (பழைய படம்)

திங்கள், 16 நவம்பர், 2009

எங்கள் வீடு எழுந்து நின்றது!



எண்பது ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் வீடு கட்டப்பட்டது.என் தந்தையாரின் பாட்டனார் திரு.கோவிந்தனார் அவர்களின் முயற்சியால் கட்டப்பட்ட வீடு. என் தந்தையார் காலம் வரை சிறப்பாக இருந்தது.மிகப்பெரிய மக்கள் கூட்டம் வாழ்ந்த அந்த வீடு எனக்கு நினைவு தெரிந்த நாளில் இடியத் தொடங்கியது.கோவிந்தனார் அவர்களுக்கு இரு மனைவியர்.முதல் தாரத்துப் பிள்ளைகள் என் பாட்டனார் திரு.சிங்காரவேல் அவர்களும் திரு,பூராசாமி அவர்களும் ஆவர்.இரண்டாம் தாரத்தில் தோன்றியவர்கள் திரு.கந்தசாமி திரு.தருமலிங்கம் அவர்களும் ஆவர்.ஒவ்வொருவருக்கும் இரண்டு தாரங்கள் என்று பின்னாளிலும் மனைவிமார்கள் மிகுதி.எனவே மக்கட் செல்வத்திற்குக் குறைவில்லை.எங்கள் பாட்டி ஒருவர் பன்னிரண்டு பிள்ளைகள் பெற்றுள்ளார்.இப்படி மிகப்பெரிய குடும்பம் பின்னாளில் அனைத்து நிலைகளிலும் நலிந்தது.

எங்கள் வீடு இடிந்து விழுந்தது.பங்கு பிரியாமல் இருந்ததால் யாராலும் அதனைப் புதுப்பிக்க முடியாமல் போனது.என் தந்தையார் இறந்த சூழலில் ஊரில் உறவினர்கள் அனைவரும் ஒன்றுகூடும் சூழல் அமைந்தது.அப்பொழுது வீடு புதுப்பித்தல் தொடர்பாகப் பேச்சு எழுந்தது. ஏறத்தாழ 35 ஆண்டுகளாக இந்தப் பேச்சு அலை அடிக்கடி எழும்பி இல்லாமல் போகும்.அப்படியே அந்தச் சுற்றுப் பேச்சும் நல்ல முடிவு எட்டாமல் முறிந்தது.

மீண்டும் ஒரு சூழலில் பேசி முடிப்பது என முடிவு செய்து ஒன்று கூடினோம்.ஆசாரியார் ஒருவர் வந்து விலை மதிப்பீடு செய்தார்.நியாயமான விலையாக அது இருந்தது.என்றாலும் அனைவரும் விலையை உயர்த்தியே பேசினோம்.எங்களுக்குள் ஒரு முடிவு செய்ய ஊர்ப்பெரியோர்கள் நினைத்தனர்.அதாவது இந்த வீடு பல பாகங்களாக இருப்பதால் யாராலும் சீர் செய்யமுடியவில்லை.எனவே பொதுவாக விலை பேசி ஒருவர் மட்டும் வைத்துக்கொள்வது என்று முடிவெடுத்தனர்.அதாவது ஒருவரிடம் வீடு,மனையைக் கொடுத்துப்பணம் பெற்றுகொண்டு அனைவரும் மகிழ்ச்சியுடன் வெளியேறி வேறு வீடுகள் கட்டிக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி என்னை இந்த வீட்டை வாங்கிக்கொள்ள ஊரினர் வேண்டினர்.நானும் இசைந்தேன்.இங்குதான் கவனிக்க வேண்டும்.நான் பணியில் இருப்பதால் உறவினர் அனைவரும் கூடுதல் விலைக்கு என்னிடம் விற்க முனைந்தனர்.ஒரு வழியாக விலை பேசி என் பெயருக்கு வீடு,மனை யாவும் பதிவு செய்யப்பெற்றது.

வீடு வாங்கிய உடன் வீட்டைப் புதுப்பிக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருந்தது.அதன்படி பொறியாளர் நண்பர்கள் சிலரை அழைத்துச் சென்று காட்டினேன்.யாரும் அதனைப் புதுப்பிக்க ஒப்பவில்லை.இடித்துத்தள்ளிவிட்டு புதிய வீடு கட்டுவதற்கு அறிவுரை கூறினர்.அந்த அளவு பழையவீடு. சுவர் இடிந்து பாம்புகள்,பிற நச்சுயிரிகளின் கூடாரமாக இருந்தது.முதலில் இடிந்த பகுதிகளை 23.07.2009 முதல் இடித்து வெளியேற்றினோம்.

தருமபுரி பொறியாளர் நண்பர் திரு.நரசிம்மன் ஒருமுறை வந்து பார்த்து சில அறிவுரைகளை வழங்கினார்.உள்ளூர் நண்பர்களின் அறிவுரைப்படி 27.07.2009 இல் கால்கோள் நடந்தது.16.08.2009 முதல் கம்பி வேலை நடந்தது.இடிப்பதும் கட்டுவதும் எனப் பணி விரைவாக இருந்தாலும் மிகப்பெரிய வீட்டை இடித்து பழைமை மாறாமல் மீண்டும் கட்டுவது என்பது மிகப்பெரிய வேலையாகிவிட்டது.இதில் பலநாள் கட்டடம் கட்டும் கொத்தனார்,ஆசாரியார்,ஓடு மாத்துபவர்களின் ஒத்துழைப்பின்மை,மழை,என் பணிச்சூழல் எனக் காலம் நீண்டு ஒரளவு நிறைவு பெற்ற பொழுது என் தந்தையார் அவர்களின் நினைவு நாள் நெருங்கியது நினைவுக்கு வந்தது.

எனவே என் தந்தையாரின் நினைவு நாளில் அவரின் காலத்தில் கட்டி முடிக்கப்பெறாத வீட்டை எங்கள் உறவினர்கள்,நண்பர்களின் உதவியால் மீண்டும் நிலை நிறுத்தும் முயற்சிக்கு வெற்றி கிடைக்க உள்ளது.ஆம்.நாளை மறுநாள் 18.11.2009 எங்கள் இல்லம் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வர உள்ளது.முனைவர் பொற்கோ அவர்களின் திருக்கையால் திறக்கப்பட உள்ள எங்கள் இல்லத் திறப்பு நிகழ்ச்சியை இருந்த இடத்திலிருந்து வாழ்த்துங்கள்.இது பற்றி முன்பும் எழுதினேன். விரிவாகப் பின்பும் எழுதுவேன்.


இடிபாடுகளில் எங்கள் வீடு


பேணுதலின்றி ஆடுகள் அடைந்துகிடக்கும் திண்ணை


இடித்துக்கிடக்கும் காட்சி


புதிய சுவர்கள் உயர்தல்


புதிய பொலிவுக்கு முந்திய காட்சி

சனி, 14 நவம்பர், 2009

பண்பறிந்து ஆற்றுக...

திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல்.அதன் குறட்பாக்கள் ஒவ்வொன்றும் வாழ்வில் பின்பற்றத்தக்கன.திருக்குறள் மேலோட்டமாக நோக்கும்பொழுது ஒரு பொருளைத் தெற்றென வெளிப்படுத்துவது போலவே ஆழ்ந்து நோக்கும்பொழுது ஆழ்ந்தபொருள் தரும் சிறப்பிற்கு உரியது.நான் வாழ்வில் மிகுதியாக எண்ணி எண்ணி வியந்த குறட்பா இதுவாகத்தான் இருக்கும்.அது இது:

நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை(469)

திருவள்ளுவர் இக்குறளை யாது காரணமாக இயற்றியிருப்பினும் உரையாசிரியர் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் பொருளதிகாரப் பகுப்பில் அரசியல் என்னும் இயல் வகைக்குள் அடக்கி உரை வரைந்துள்ளனர்.அரசனுக்கு அறிவுரை கூறும் முகமாக அமையும் அரசியல் பகுதியில் இக்குறள் இருந்து, அரசனுக்கு உரியதாகக் காட்டப்பட்டாலும் உலகியல் மாந்தர் அனைவருக்கும் பொதுப்படையாக இந்தக் குறட்பா பொருந்துவதாக உள்ளது.இந்தக் குறட்பா வழியாகத் திருவள்ளுவ ஆசான் மாந்தர்களுடன் இணைந்து வாழும் பொழுது கவனமாக இருக்க வேண்டும், உறவு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.எவ்வளவு எச்சரிக்கையாக நாம் இருந்தாலும் நமக்குப் பகை,தொல்லை,உறவு அறுதல் ஏற்படுவது மற்றவர்களிடம் நடந்துகொள்ளும் முறை தெரியாததால்தான் ஆகும்.எனவே வாழ்க்கையில் ஒவ்வொருவரும் இந்தக் குறட்பா கருத்தை வாழ்வில் ஒருமுறையாவது எதிர்கொண்டிருப்பர்.

வாழ்க்கையில் அதிர்ச்சியையும், மன உலைச்சலையும் ஏற்படுத்தும் பல்வேறு சூழல்களில் ஒவ்வொருவருக்கும் நினைவுக்கு வரும் குறட்பாவாக இது இருக்கின்றது.இந்தக் குறட்பாவுக்கு உரையாசிரியர்களும் தமிழறிஞர்களும் பல்வேறு விளக்கங்களை வரைந்துள்ளனர். தேவைப்படுவோர் அந்த அந்த உரையாசிரியர்கள் வரைந்த உரைப் பகுதிகளைக் கற்றுச் சுவைக்கலாம்.

பரிமேலழகர் தம் உரையில் " வேற்று வேந்தர் மாட்டு நன்றான வுபாயஞ் செய்தற்கண்ணுங் குற்றமுண்டாம்.அவரவர் குணங்களையாராய்ந்து அவற்றிற்கியையச் செய்யாவிடின்" என்பார்.

நான்றான வுபாயமாவது-கொடுத்தலும் இன்சொற் சொல்லுதலுமாம்.அவை யாவர் கண்ணும் இனியாவதற் சிறப்புடைமையின்,உம்மை சிறப்பும்மை. அவற்றை அவரவர் பண்பறிந்தாற் றாமையாவது: அவற்றிற்கு உரியரல்லாதார்கண்ணே செய்தல்.தவறு-அவ்வினை முடியாமை.

நல்ல செயல்களைச் செய்தாலும்(கொடுத்தல்,இன்சொல் சொல்லல்) அவற்றை அவரவர் பண்பு அறிந்து செய்ய வேண்டும்.அவ்வாறு பண்பறியாமல் செய்தால் அச்செயல் நன்மைக்குப் பதிலாகத் தீமையை தந்துவிடும் என்கிறார் திருவள்ளுவர்.பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல் எனவும்,'பண்பெனப்படுவது தன் கிளை அறிந்து ஒழுகல்'(கலி.133) எனவும் பிற நூலார் குறிப்பர்.

உலக வாழ்வில் பன்முகத்தன்மை கொண்ட மாந்தர்களை நாம் காண்கின்றோம்.பிறர் வளர்ச்சிக்கு உதவுவதைத் தம் வாழ்நாளாகக் கொண்ட உயர் மாந்தர்,வாய்ப்புக்கு ஏற்ப உதவுவோர்,கால,இட நெருக்கடியால் உதவுவோர்,இன்சொல் கூறுவோர்.கடுஞ்சொல் கூறுவோர், அளவே பேசுவோர்,பேச மறுப்போர்,பயனில உதிர்க்கும் பண்பினர், காலந்தாழ்த்திச் செய்வோர், காலத்தே செய்வோர்,காலம் கடந்தும் செய்யாது இருப்போர்,காலம் கடந்தும் செயலால் வாழ்வோர் எனப் பன்முகச் செயல்மாந்தர்களை நாம் காண்கின்றோம்.இவர்களின் இயல்பறிந்து பழகும்பொழுதே அவர்களுக்கும் நமக்குமான உறவு வளர்பிறையாகும் அல்லது தேயும்.இத்தகு பன்முக வாழ்வியல் மாந்தர்களிடம் நாம் பழகும் சூழல் இயந்திரமயமான உலகில் அன்றாடம் இருந்துகொண்டுதான் உள்ளது.வேக உலகைப் புறுக்கணித்து நாம் தனித்து வாழ்ந்துவிட முடியாது.

நம் இயல்புக்கும் தகுதிக்கும் பொருத்தமான சில வினைகளை ஆற்றும்பொழுது மாந்தர்களின் உளக்குறிப்பு,மனநிலை,விருப்பு,வெறுப்புகள்,கொள்கைகள்,உற்றார் உறவினர் அறிந்து ஆற்ற வேண்டியுள்ளது.அவ்வாறு பன்முகத் தன்மைகளையும் ஆராய்ந்து ஒருவினையை ஆற்றினால்தான் நாம் மேற்கொண்ட செயல் நிறைவேறும்.இல்லையேல் செயல் பாழ்படும். எதிர்ப்பு மேலோங்கும்.வளர்ச்சி வீணாகும்.பகை உணர்வு தோன்றும்.உட்பகை வளரும்.எனவே வினையாற்றுவோர் யாராக இருப்பினும் நல்ல செயல்களில் நாம் ஈடுபட்டாலும் பயனாளியின் இயல்பும்,பண்பும் அறிந்தும் ஒரு செயலைச் செய்ய வேண்டும்.

'நன்றாற் றலுள்ளும்' என்றதால் நன்மையே செய்வதாக இருந்தாலும்,நல்லதையே செய்வதாக இருந்தாலும் என்று பொருள்கொள்ள வேண்டும்.'தவறுண்டு' என்றமையால் தவறாக அது போய் முடியும் என்க.'அவரவர் பண்பு' என்றமையால் ஒவ்வொருவருக்கும் பண்பு வேறுபடும் என்று நுட்பமாகப் பதிவு செய்கிறார்.'வினைவகையால் வேறுபடும் மாந்தர் பலர்' என்றும், 'குலத்தின்கண் ஐயப்படும்' என்றும் வேறு இடங்களில் குறளாசான் குறிப்பிடுகின்றமையும் ஈண்டு கவனத்தில் கொள்ளத்தக்கன.

தவத்துறையில் இருக்கும் ஒரு முனிவரைக் காண நேர்ந்தால் வீழ்ந்து வணங்குவதையும், வாய்பொத்தி நிற்பதையும்,முன்னோக்கி நின்று உரையாடிய பின், பின்னோக்கி வருவதையும் விரும்புவர்.அவர் கூறும் அனைத்துக்கும் உடன்பாட்டில் விடை சொல்வதையே விரும்புவர்.ஆம்,அப்படியே ஆகட்டும் என்று உரைப்பதையே விரும்புவர்.

அரசியல் தலைவர்கள் தம் தொண்டர்கள் தம் கட்டுப்பாட்டில் இருப்பதையே விரும்புவர்.வினா எழுப்புவதை எந்த நாளும் விரும்பமாட்டார்கள்.இதனால் பல கட்சிகள் உடைந்த கதையுண்டு. ஆசிரியர்கள் தங்களிடம் பயில்வோர் சித்திரப்பாவையாக இருப்பதை விரும்புவர்.கணவன் மனைவி தம் சொல்லுக்குக் கீழ்ப்படிவதை விரும்புகிறான்.மனைவி தாம் விரும்பும் வண்ணம் கணவன் நடந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறாள்.அதிகாரிகள் தங்களுக்குக் கீழே பணிபுரிபவர்கள் எதிர்த்துப் பேசாதவர்களாகவும் சொல்வதைச் செய்து முடிக்க வேண்டும் என்று விரும்புபவர்களாகவும் உள்ளனர்.இவை விரும்பும் குணங்கள் என்பதிலும் மரபுகளாக இருக்கின்றன.இந்த மரபுகளை மீறும்பொழுதே உறவில் விரிவு ஏற்படுகின்றன.எனவே சமூகத்தில் காலங்காலமாக இருக்கும் மரபுகளை மீறாமல் இருக்கும் பொழுது சிக்கல்கள் தோன்றாமல் இருப்பதால் மரபுகளை அறிவது தேவையாக உள்ளது.எனவே வினாயாற்றும் பொழுது மரபறிதலும் பண்பறிதலும் தேவையாக உள்ளது.பண்பு, மரபு அறியாமல் செய்யும் எந்த வினையும் முற்றுப்பெறுவதில்லை.எனவேதான் ஆளுமை வளர்ச்சியில்,முன்னேற நினைக்கும் மாந்தர்களுக்கு அறிவுரை கூறும்பொழுது பன்முகப் பண்புகளை ஏற்றிக் கூறுவர். அக்கூறுகள் முழுமை பெற்றால்தான் வெற்றி ஈட்டும் மாந்தனாக மலரமுடியும்.


ஆளுமை வளர்ச்சியில் பன்முகக்கூறுகள் உண்டென அத்துறை வல்லுநர்கள் குறிப்பிடுவது உண்டு.அவையாவன: தோற்றப்பொலிவு,கால மேலாண்மை,இட மேலாண்மை,இன்சொல் கூறல்,உடன்பட்டு மொழிதல், சிறப்பினைப் பேசல்,குறைகளைச் சுட்டாமை,மரபறிதல் என்பன அக்கூறுகளுள் சிலவாம்."பிறர் பிறர் சீரெல்லாம் தூற்றிச் சிறுமை புறங்காத்து" என்பார் குமரகுருபரர்.

இன்றைய ஆளுமை வளர்ச்சித்துறைக்கு உகந்தனவான 'அவரவர் பண்பறியும்' குணத்தைப் பற்றி ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் பதிவு செய்துள்ளமை வியப்பளிக்கின்றது. உலகியல் மாந்தர்களுடன் பல நாளும் பழகிய பின்னரே இது போன்ற பட்டறிவுகள் வள்ளுவருக்குத் தோன்றியிருக்கக்கூடும்.எனவே பிறரின் பண்பறிந்து பழகிய திருவள்ளுவர் வழியில் நாமும் பழகி உலகியல் சிக்கலில் சிக்காமல் இருப்போம்.வாழ்வை வளமாக்ககிக் கொள்வோம்.உள்ளத்தில் அமைதி நிலவ இந்தக் குறட்பா உதவும் என்றும் பண்பால் வேறுபட்ட மக்களே உலகில் மிகுதி என்றும் முடிவுக்கு வருவோம்.

அந்தமான் திருக்குறள் கருத்தரங்க மலரில் இடம்பெற்றுள்ள கட்டுரை(நவம்பர் 2009)

வியாழன், 12 நவம்பர், 2009

தோட்டக்கலை அறிஞர் ச.சம்பந்தமூர்த்தி அவர்கள்


முனைவர் ச.சம்பந்தமூர்த்தி

தோட்டக்கலை அறிஞர் ச.சம்பந்தமூர்த்தி அவர்கள் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் 1936 அக்டோபர் 11 இல் பிறந்தவர். பெற்றோர் ந.சதாசிவம், சானகி அம்மாள். தொடக்கக் கல்வியைப் பொன்பரப்பியில் முடித்த இவர் பெண்ணாடத்தில் உயர்நிலைக்கல்வி பயின்றவர். திருச்சிராப்பள்ளி சமால் முகமது கல்லூரியில் இடைநிலை வகுப்பு(இண்டர்மீடியட்) முடித்தவர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலையில் முதுநிலை வரை பயின்றவர். தம் பணிக்காலத்தில் முனைவர் பட்ட ஆய்வைக் கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செய்தவர். ”நில சம்பங்கியில் சடுதி மாற்றம்” என்பது இவர்தம் ஆய்வுத்தலைப்பாகும். 38 ஆண்டுகள் தோட்டக்கலைத்துறையில் பணிபுரிந்த பட்டறிவு உடையவர். தோட்டக்கலைக் கல்லூரியின் முதல்வராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

பல முறை வெளிநாடுகளுக்கு ஆய்வின் பொருட்டு சென்று வந்த பட்டறிவு உடையவர். அவ்வகையில் செர்மனி, இங்கிலாந்து, ஆத்திரேலியா, இசுரேல், இத்தாலி, ஆலந்து உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று வந்தவர்.

இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் வரைந்தவர். வீட்டினுள் தோட்டம், உடல் நலம் உங்கள் கையில் என்ற தலைப்பில் இரு நூல்கள் வெளிவந்துள்ளன.

உடல் நலம் உங்கள் கையில் நூல் முகப்பு

இந்தியாவின் மிகப்பெரிய உரோசாத் தோட்டமான உதகை உரோசாத் தோட்டத்தை உருவாக்கியவர்.

ஆறு மாதத்தில் காய்க்கக்கூடிய செடிமுருங்கை (பெரியகுளம்1) என்ற இரகத்தை உருவாக்கியவர். இதன் மூலம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், ஒரிசா உள்ளிட்ட மாநில உழவர்கள் இந்த இரகத்தைப் பயன்படுத்திப் பயன்பெற்றுள்ளனர்.

ஒட்டுப்புளி (பெரியகுளம் 1) என்னும் புளி இரகத்தை உருவாக்கியவர். இது நான்காண்டுகளுக்குள் காய்ப்புக்கு வந்துவிடும்.


மலரியல் துறை, மூலிகைப் பயிர்த் துறையில் நல்ல ஈடுபாடு உடையவர்.
மலர்களிலிருந்து வாசனைப் பொருள் தயாரிக்கும் தொழில் பெருகுவதற்குப் பெரிதும் உதவி செய்தவர்.

பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரியின் உருவாக்கத்திற்கு இவரின் பங்களிப்பு மிகுதி. மக்கள் தொலைக்காட்சியில் வேளாண் நிகழ்ச்சிகளை இரண்டாண்டுகளுக்கும் மேலாகப் பொறுப்பாளராக இருந்து நடத்தியவர்.

விவசாய முன்னேற்றத்திற்காக அமைக்கப்பெற்ற அரசின் பல்வேறு மேல்நிலைக் குழுக்களில் இடம்பெற்று ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கியவர்.

பயிற்றுவித்தலிலும் ஆய்விலும் பணிக்காலத்தில் சிறப்புற்று விளங்கிய ச.சம்பந்தமூர்த்தி அவர்கள் தற்பொழுது புதுச்சேரியில் வாழ்ந்து வருகிறார்.

முனைவர் ச.சம்பந்தமூர்த்தி
40,நான்காவது குறுக்குச்சாலை,
இரண்டாம் முதன்மைத்தெரு,
மூகாம்பிகை நகர்,
புதுச்சேரி-605 004
செல்பேசி: 9443254543

சனி, 7 நவம்பர், 2009

அந்தமான் திருவள்ளுவர் சிலை திறப்பு,திருக்குறள் கருத்தரங்கம் சில படங்கள்


அந்தமானில் திருவள்ளுவர் சிலையைத் திறந்த அமைச்சர் நெப்போலியன் உள்ளிட்ட தமிழன்பர்கள்



மாண்புமிகு நடுவண் இணையமைச்சர் நெப்போலியன் அவர்கள் எனக்குப் பாராட்டிச் சான்று வழங்கும் காட்சி."இவன் இணையத்தமிழறிஞன்" என்று அமைச்சருக்கு என்னை அறிமுகம் செய்யும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் ஔவை. நடராசன், மற்றும் அண்ணாச்சி வி.சி.பி.சந்தோசம் அவர்கள்



அந்தமான் திருக்குறள் விழாவில் இலக்கியச்செல்வர் குமரி அனந்தன்,அண்ணாச்சி வி.சி.பி.சந்தோசம் அவர்களுக்கு நடுவில் மு.இளங்கோவன்



அந்தமான் திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த நடுவண் இணைஅமைச்சர்
மாண்புமிகு நெப்போலியன் அவர்களிடம் தம் நூல்களை வழங்கி மகிழும் மு.இளங்கோவன்


அந்தமான் தமிழர் சங்கக் கட்டடம் அடிக்கல்


அந்தமான் தமிழர் சங்கக்கட்டடம்


செல்லுலர் சிறைச்சாலையின் ஒரு பகுதி


ஔவையார் அவர்கள் ரோசுத்தோட்டத்தில்(அந்தமான்)தமிழ், 
தமிழர் பற்றி எனக்கு வகுப்பெடுத்தல்



குமரி அனந்தன் அவர்களுடன் செல்லுலார் சிறைச்சாலையின் வளாகத்தில் நான்



செல்லுலார் சிறைச்சாலையில் குமரிஅனந்தன், ஔவை நடராசன் ஆகியோருடன் மு.இ.


ஆற்றல் மாந்தர் அந்தோணிமுத்து,ஔவை,அம்மாவுடன் நான்


அந்தமான் தீவு ஒன்றில் மு.இ.