நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 12 அக்டோபர், 2008

நாளை(13.10.2008) மோகனூர் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் பயன்பெறும் பொருட்டுத் தமிழ் இணையப் பயிலரங்கம் நாளை 13.10.2008 திங்கள் கிழமை காலை பத்துமணி முதல் மாலை நான்குமணி வரை நடைபெற உள்ளது. கல்லூரி முதல்வர் முனைவர் கி.வெள்ளியங்கிரி அவர்கள் வரவேற்புரையாற்றுகிறார். கல்லூரித் தாளாளர் சு.பழனியாண்டி அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குகிறார். வேலூர் அரிமா சங்கத்தின் பட்டயத் தலைவர் வழக்கறிஞர் ஏ.பி.காமராசன் அவர்கள் தொடக்கவுரையாற்றுகிறார்.

புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் பயிலரங்கின் முதல் அமர்வில் மாணவர்களுக்குப் பயிற்சியளிக் கிறார். கணிப்பொறியைப் பயன்படுத்தித் தமிழில் தட்டச்சுச் செய்தல், தட்டச்சுப் பலகை வகைகள், மின்னஞ்சல், உரையாடல் ,இணைய இதழ்கள், இணையத்தில் உள்ள நூலக வசதி, கலைக்களஞ்சியம், தமிழ் இணையப் பல்கலைக்கழகம்,தமிழ் மரபு அறக்கட் டளை,மதரைத் திட்டம்,தமிழ்மணம் திரட்டி,வேலை வாய்ப்புகள் பற்றி மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறார்.

பெங்களூரில் உள்ள தமிழா.காம் நிறுவனத்தின் உரிமையாளர் சேந்தமங்கலம் சு.முகுந்தராசு அவர்கள் வலைப்பூ உருவாக்கம்,வலைப்பூவில் படைப்புகளை உள்ளிடுதல்,பின்னூட்ட வசதி,படம் இணைத்தல் பற்றி விளக்குகிறார். புதுச்சேரிப் பொறியாளர் வே.முருகையன் அவர்கள் இணையத்தள வடிவமைப்பு பற்றி மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க உள்ளார்.சென்னைக் கணியத்தமிழ் நிறுவனத்தைச் சேர்ந்த வெ.யுவராசன் அவர்கள் வலைப்பூவில் ஒலி,ஓளிக்காட்சிகளை இணைப்பது பற்றி விளக்க உள்ளார்.

தருமபுரி செல்வ முரளி அவர்கள் தமிழில் உள்ள தேடுபொறி பற்றியும் இணையத்தின் பன்முகப்பயன் பற்றியும் விளக்குவார். .நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இப்பயிலரங்கால் மிகுந்த பயனடைய உள்ளனர். கணிப்பொறி, இணையம் (இண்டர்நெட்) பயன்படுத்த ஆங்கிலம் தேவையிலை. தமிழ் மட்டும் தெரிந்தவர்களும் இவற்றைப் பயன்படுத்தலாம் என்ற தன்னம்பிக்கையை ஊட்ட,விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த இப்பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயிலரங்கில் கலந்துகொண்டு பயிற்சிபெற விரும்புபவர்கள்
+ 93629 61815 என்ற செல்பேசி எண்ணில் பதிவு செய்துகொள்ளலாம்.

கருத்துகள் இல்லை: