நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 27 செப்டம்பர், 2008

தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்,கலை அறிவியல் கல்லூரியில் ஆய்வரங்கம்...


தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்,கலை அறிவியல் கல்லூரி

மயிலம் என்னும் ஊர் முருகப்பெருமான் வீற்றிருக்கும் ஊராக விளங்கும் பெருமையுடையது. இவ்வூர் இறைவன்மேல் சண்முகன் வண்ணப்பாட்டு, சுப்பிரமணியர் துதியமுது பாடி இவ்வூரைத் தமிழ் இலக்கிய உலகில் என்றும் நினைவுகூரும்படி செய்தவர் பாவேந்தர் பாரதிதாசனார் ஆவார்.இவ்வூரில் புகழ்பெற்று விளங்கும் கல்லூரி தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை அறிவியல் கல்லூரி.

தமிழ் இலக்கியப்பணியாற்றவும், தமிழ்ப்புலவர் பெருமக்களை உருவாக்கவும் தொடங்கப் பெற்ற இக்கல்லூரி இன்று கலை அறிவியல் கல்லூரியாக விளங்குவதுடன் தமிழ் இலக்கியம் பட்ட வகுப்பு, முதுகலை வகுப்பு, இளம் முனைவர், முனைவர் உள்ளிட்ட ஆய்வு வகுப்புகளையும் கொண்டு விளங்குகிறது.

இக்கல்லூரியில் ஒவ்வொரு மாதமும் ஆய்வரங்கம் நடைபெறுகிறது. துறைசார் அறிஞர் பெருமக்களை அழைத்து மாணவர்கள் பயன்பெற சிறப்புரையரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இத் திங்களுக்கான நிகழ்ச்சிக்குப் புதுவை மொழியியல், பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனப் பேராசிரியர் முனைவர் பக்தவத்சல பாரதி அவர்களும் யானும் அழைக்கப் பெற்றிருந்தோம்.

'இலக்கிய ஆய்வில் மானுடவியல் அணுகுமுறைகள்' என்னும் பொருளில் பக்தவத்சலபாரதி அவர்கள் உரையாற்றினார். மாணவர்கள் ஆர்வமுடன் அவர் பேச்சைக் கேட்டதுடன் வினா விடையிலும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

நான் தமிழக நாட்டுப்புறப் பாடல்களை அறிமுகம் செய்து உரையாற்ற அழைக்கப் பெற்றிருந்தேன். என் பேச்சுக்கு முன்பாகப் பேசிய கல்லூரி முதல்வர் முனைவர் சு.திருநாவுக்கரசு அவர்கள் யான் தமிழ் இணையத்துறையில் வளர்ந்துவரும் ஆர்வலன் எனவும் தமிழ் இணையம் பற்றி அறிமுகம் செய்யும்படியும் வேண்டினார்கள்.

அதன்படி தமிழ் இணையத்துறையில் என் முயற்சியை அறிமுகம் செய்து தமிழ்மாணவர்கள் அனைவரும் கணிப்பொறி, இணையம் பற்றி அறிய வேண்டும் என உரையாற்றினேன். (மாணவர்கள் பயன்பெறும் வண்ணம் ஒருநாள் தமிழ் இணையப் பயிலரங்கிற்கு நிருவாகத்தினர் ஏற்பாடு செய்து வருவது கூடுதல் செய்தி).

பின்னர்த் தமிழக நாட்டுப்புறப்பாடல்கள் என்ற தலைப்புக்குப் பேச வந்தேன். நாட்டுப்புறவியல் சொல்விளக்கம், பின்லாந்து மக்களின் ஆர்வம் தமிழகத்தில் நாட்டுப்புறப் பாடல்கள் தொகுப்பு முயற்சி,ஆங்கிலேயரின் பங்களிப்பு, பேராசிரியர் வானமாமலையின் பங்களிப்பு பற்றி பேசினேன்.

தொல்காப்பியம். சங்கஇலக்கியம், சிலப்பதிகாரம், பக்திப்பனுவல்கள், சிற்றிலக்கியங்கள், பாரதி பாடல்கள், திரைப்படப்பாடல்கள் இவற்றில் நாட்டுப்புறப் பாடல்களின் தாக்கம் இடம் பெற்றுள்ளதைச் சான்றுகளுடன் பாடிக்காட்டினேன். மேலும் மலையாள நாட்டுப்புறப் பாடல்கள், இலங்கையில் வழங்கும் நாட்டுப்புறப்பாடல்கள், தமிழகத்தில் வழங்கும் ஒப்பாரி, கும்மி, நடவு, காதல் பாடல்கள், விளையாட்டுப் பாடல், உலக்கை இடிக்கும் பாடல்கள் உள்ளிட்டவற்றைப் பாடி விளக்கினேன். அனைவரும் கேட்டு இன்புற்றனர்.

கல்லூரிச் செயலாளர் சிவத்திரு குமாரசிவ. இராசேந்திரன் அவர்கள் வந்திருந்து வாழ்த்துரை நல்கினார். பேராசிரியர் இரா.இலட்சாராமன் அவர்கள் நன்றியுரை நவின்றார்.

பேராசிரியர் எழில் வசந்தன் அவர்கள் தொடக்கத்தில் வரவேற்புரை நல்கினார்.

அடிகளாசிரியர், சிவலிங்கனார் உள்ளிட்ட மிகச்சிறந்த தமிழ்ப்பேராசிரியர்கள் பணிபுரிந்த, பல அறிஞர்கள் தமிழ் பயின்ற மயிலம் தமிழ் மண்ணை வணங்கியபடி விடைபெற்று வந்தேன்.

ஆய்வரங்கக் காட்சிகள்


மு.இ, பக்தவத்சலபாரதி, குமாரசிவ. இராசேந்திரன்


முனைவர் இலட்சாராமன், மு.இ,சு.திருநாவுக்கரசு, எழில்வசந்தன்


பங்கேற்ற மாணவியர்களின் ஒரு பகுதியினர்


மு.இளங்கோவன் உரை

கருத்துகள் இல்லை: