நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 20 செப்டம்பர், 2008

படைப்புவேந்தர் தகடூரான் அவர்களின் வாழ்க்கைக்குறிப்பு


படைப்புவேந்தர் தகடூரான் அவர்கள்

தருமபுரி பண்டைக்காலத்தில் தகடூர் என அழைக்கப்பெற்றது.அதியமான் ஒளவையார் வழியாகத் தமிழக வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும் ஊராக இவ்வூர் விளங்குகிறது.இத்தகடூர் பெயரை நினைவூட்டும் முகமாகத் தகடூரான் என்னும் புனைபெயரில் பல நூல்களை எழுதியவர் அறிஞர் கிருட்டிணன் அவர்கள் ஆவார்.இவர் தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் பொம்மிடியை அடுத்த புது ஒட்டுப்பட்டியில் பிறந்தவர்(09.05.1932).பெற்றோர் சின்னசாமிக் கவுண்டர். முனியம்மாள்.மூன்று மாதக் குழந்தையாக இருந்தபொழுதே தருமபுரி காமாட்சி யம்மன் தெருவிலுள்ள தாத்தா லிங்காக்கவுண்டர் இல்லத்தில் வளர்ந்தார்.

இளம் அகவையில் கல்வியில் நாட்டத்துடன் விளங்கியதுடன் பிற நூல்களை யும் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தவர்.பாவேந்தர் பாடல்கள்,திராவிட இயக்க ஏடுகளைப் படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது.மேட்டூர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியர் பயிற்சி பெற்று ஆசிரியராக விளங்கினார்.

கிருட்டிணன் அவர்களின் துணைவியார் பெயர் சரசுவதி ஆகும்.சீர்திருத்தத் திருமணம் செய்துகொண்டவர்.இவர்களுக்கு மூன்று ஆண்மக்களும் ஒரு பெண்மகளும் உள்ளனர்.

தகடூரான் அவர்கள் பென்னாகரத்துக்கு அண்மையில் உள்ள கூத்தப்பாடி என்னும் ஊரில் ஆசிரியராகப் பணியில் இணைந்தார்.பணியிலிருந்தபடியே இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்று உயர்நிலைப்பள்ளி ஆசிரியரானார்.பள்ளிகளில் பணிபுரிந்தபொழுது பல நாடங்கங்களை இயற்றிப் படைப்பாளியாக மிளிர்ந்தார்.

தருமபுரியில் தங்கியிருந்தபொழுது படிக்கும் மாணவர்கள் கல்வியறிவுபெற படிப்பகம்,நாடக மன்றம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தினார்.தருமபுரியில் தமிழ்ச்சங்கம் ஒன்றை ஏற்படுத்தி 1977 இல் அதனைப் பதிவு செய்தார்.பதினேழு ஆண்டுகள் அதன் செயலாளராகப் பணிசெய்தார்.பல்வேறு தமிழ் நூல்களைத் தந்து, தமிழ்ச்சங்கம் கண்ட அறிஞர் தகடூரன் அவர்கள் குருதி அழுத்த நோய் காரணமாக 20.10.2002 இல் இயற்கை எய்தானார்.

தகடூரான் அவர்களின் தமிழ்க்கொடை

01.கம்பன் ஓர் ஒப்பீடு
02.கம்பன் உத்திகள்
03.பாவேந்தர் அமைதி
04.இருண்டவீடு ஓர் ஆய்வு
05.சமயம் கடந்த நெறி
06.மும்மதங்கள்
07.இந்துமதம்
08.வாழ்வின் திறவுகோல்
09.வெற்றி தொட்டுவிடும் தூரம்தான்
10.திருமணப் பரிசு
11.நம்பிக்கைப் பயணம்
12.பெரியார் பேசுகிறார்.
13.விடியல்
14.அந்த மனம் வருமா?
15.காட்டு வெளிதனிலே
16.பறவைகள் பலவிதம்
17.ஒரு மத்தாப்பு மலராகிறது
18.எரி அம்பு
19.தீப்பொறி
20.சம்பரன் போர்
21.இளையராணி
22.காத்தவராயன்
23.அனுராதபுரத்தழகி
24.ராயரின் காதலி
25.தகடூரான் சிறுகதைகள்
26.தொட்டிலி
27.பாரதம் தரும் பாடம்
28.இலக்கியம் படைக்க எளிய வழிகள்
29.மேடைப்பேச்சு
30.யானைத்தீவு
31.ஜப்பான் கதைகள்
32.விந்தை உலகம்
33.இந்தோனேசிய பர்மியக் கதைகள்
34.தகடூரான் பாலர் பாடல்கள்
35.தாகம் தீர்க்காத் தண்ணீர்
36.கவிதை மலர்கள்

4 கருத்துகள்:

தகடூர் கோபி(Gopi) சொன்னது…

முனைவர் மு.இ,

எங்கள் ஊர் தமிழறிஞரின் வாழ்க்கைக் குறிப்பை பதிவு செய்தமைக்கு நன்றி.

இந்து மதம், சமயம் கடந்த நெறி, பெரியார் பேசுகிறார் இப்படி எதிரெதிர் கருத்துக்களைக் கொண்ட தலைப்புகளில் நூல்களை தகடூரான் அவர்கள் எழுதியுள்ளதை எண்ணிப் பார்க்கையில் அவரது கருத்தாளுமையின் வீச்சு புரிகிறது.

பலருக்கும் தெரியாத சுவையான தகவல்களுடன் தமிழ் அறிஞர்களின் வாழ்க்கையை பதிவு செய்து வரும் தங்கள் பணி போற்றுதற்குரியது.

Unknown சொன்னது…

nantraga...

Unknown சொன்னது…

nantraga... saamikachirayar

Unknown சொன்னது…

nantraga... saamikachirayar