நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 29 மார்ச், 2008

என்னை வளர்த்த கண்ணியம் ஆசிரியர் பற்றி...


தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுடன் ஆ.கோ.குலோத்துங்கன்(உள்கோட்டை)

கண்ணியம் இதழின் ஆசிரியர் ஆ.கோ.குலோத்துங்கன் அவர்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்க
கங்கைகொண்ட சோழபுரத்தின் அருகில் உள்ள ஆயுதக்களம் என்னும் ஊரில் பிறந்தவர்.
இவர்தம் தமையனார் ஆ.கோ.இராகவன் அவர்கள் திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவர்.
அறிஞர் அண்ணாவால் போற்றப்பட்டவர்.ஏறத்தாழ முப்பதாண்டுகளாகக் கண்ணியம் என்னும்
திங்களிதழை நடத்திவருபவர்.அரசியல் சமூக இதழாகத் தொடக்கதில் வெளிவந்தது.
இன்று இலக்கியத் திங்களிதழாக வெளிவருகின்றது.

சென்னை சிம்சன் நிறுவனத்தில் பணிபுரிந்த திரு.குலோத்துங்கன் அவர்கள் அதன் தொழிற்சங்கத்தில் பொதுச்செயலாளராகப் பணிபுரிந்தவர்.நிறுவனத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் ஆசைக்கு இணங்காமல் பணிவாய்ப்பை இழந்தவர்.நிறைவில் நீதிமன்றம் சென்று வெற்றிபெற்றவர்.

பல எழுத்தாளர்கள் உருவாகக் காரணமாக அமைந்தவர்.மாணவ நிலையில்
என்னை அடையாளம் கண்டு என் எழுத்துகளை வெளியிட்டு ஊக்கப்படுத்தியவர்.என் நண்பர்கள்
பலரை எழுதச்செய்து வளர்த்தவர்.என் ஒளிப்படத்தைக் கண்ணியம் இதழின் அட்டைப்படமாக
வெளியிட்டு உதவியர். எங்கள் குடும்ப நிகழ்ச்சிகள் அனைத்திலும் தவறாமல் கலந்துகொண்டு வாழ்த்துரைக்கும் தூய நெஞ்சினர்.எங்களுக்குக் குழந்த பிறந்த செய்தி அவராகக் கேள்வியுற்று
வேலூர் கிறித்தவ மருதுவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று வாழ்த்துச் சொல்லிக் குழந்தைக்குப் பெயர் வைத்தவர்.

பல நாள் பழகினும் தலைநாள் பழகியது போன்ற அன்பு நெஞ்சினர்.தந்தையாக இருந்து என்னை வளர்த்த அப்பெருமகனார்க்கு வாழ்நாள் முழுவதும் நன்றியுரைக்கக் கடமைப்பட்டவன்.திரைப்படப் பாடலாசிரியர் பா.விசய் அவர்களுக்கு இளமைக்காலத்தில் எழுத்தாற்றலை வளப்படுத்தியவர் நம் குலோத்துங்கன் அவர்களே ஆவார்.பா.விசய் அவர்கள் எங்கள் ஊர்க்காரர்.அவர் சிற்றப்பா மாசிலாமணி என் பள்ளிக்கூடத்துத்தோழன்.பா.விசய் அவர்கள் மேல்நிலைக்கல்வி பயின்றபொழுது நான் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுசெய்தேன்.அவர் பிஞ்சுவிரலால் அன்று எனக்கு எழுதிய மடலை இன்றும் பாதுகாப்பாக வைத்துள்ளேன்.

எங்களின் வளர்ச்சியில் எங்கள் பகுதியின் வளர்ச்சியில் ஆர்வம்கொண்ட ஐயா ஆ.கோ.குலோத்துங்கனார்க்கு வாழ்த்துகள் சொல்லி மகிழ்கிறேன்.

அவர்களுடன் தொடர்புகொள்ள விரும்புவோர் பின்வரும் முகவரி பயன்படுத்தலாம் :

திரு.ஆ.கோ.குலோத்துங்கன் அவர்கள்,
17/93, மூன்றாவது முதன்மைச் சாலை
இராம் நகர்
சென்னை - 600082
இந்தியா

செல்பேசி : 91 9940078307

கருத்துகள் இல்லை: