நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 17 மே, 2007

சிலப்பதிகார உரைகளும் பஞ்சமரபு வெண்பாக்களும்

தமிழில் தோன்றிய முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரம் தமிழர்களின் கலைக்கருவூலமாக விளங்குகிறது. இந்நூலில் பொதிந்துள்ள இசை, நாடகச் செய்திகளின் நுட்பங்களை அறிய அரும்பதவுரை, அடியார்க்கு நல்லாரின் உரை பெரிதும் துணைசெய்கின்றன. இவ்விரு சான்றோர் பெருமக்களின் உரையின்வழி அக்காலத்தில் வழக்கில் இருந்த பல நூல்களைப் பற்றி அறியமுடிகின்றது. அவர்கள் மேற்கோளாகக் காட்டும் நூல்களுள் பஞ்சமரபு என்பது குறிப்பிடத் தக்கது. பஞ்சமரபு நூலின் வெண்பாக்கள் சிலப்பதிகார நூலின் விளக்கத்திற்குப் பெரிதும் உதவியுள்ளது. அவ்வெண்பாக்கள் விளக்கும் செய்திகளை இங்குத் தொகுத்து நோக்குவோம்.

பஞ்சமரபு அறிமுகம்

பஞ்சமரபு என்னும் நூலை இயற்றியவர் சேறை அறிவனார் என்னும் புலவராவார்.இவர்தம் காலம் பற்றியும், ஊர் பற்றியும் அறிஞர்களிடையே கருத்துவேறுபாடு உண்டு. எனினும் பஞ்சமரபு வெண்பாக்களின் செய்தியும், சிலப்பதிகாரச் செய்தியும் மிகுதியும் ஒத்துள்ளன. பஞ்சமரபு நூல் வெண்பாக்களால் அமைந்த நூல். சேறை அறிவனார் இந்நூலுக்கு இட்டபெயர் ஐந்தொகை என்பதாகும். சேறையறிவனார் செய்தமைத்த ஐந்தொகை எனும் பாயிரவரி இதனை மெய்ப்பிக்கும். இந்நூலின் காலப்பழைமையினால் பல இடைச்செருகல் பாடல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.

பஞ்சமரபு நூல் தமிழகம் முழுவதும் வழக்கில் இருந்துள்ளது. பகுதி, பகுதியாக மக்கள் இதனைப் பயன்படுத்தியுள்ளனர். தெய்வசிகாமணி கவுண்டர் என்பவர் முதன்முதல் பஞ்சமரபு நூலின் ஒரு பகுதியை (1973) வெளியிட்டார். பின்பு குடந்தை ப. சுந்தரேசனாருடன் இணைந்து (1975) உரையுடன் வெளியிட்டார். 1991 இல் இசைமேதை வீ.ப.கா. சுந்தரம் அவர்களின் ஆய்வுரையுடனும், விளக்கத்துடனும் பஞ்சமரபு வெளிவந்தது.

கிடைக்காத நூல்களின் பட்டியலில் இருந்த பஞ்சமரபு, நூலாக்கம் பெற்றதும் சிலப்பதிகார உரைகள் தெளிவு பெற்றன. இசைகுறித்த உண்மைகள் குன்றின் மேலிட்ட விளக்காகத் தெரி ந்தன. சிலப்பதிகார இசையாய்வு புதுப்பாதையைக் கண்டது. சிலப்பதிகாரத்தை வெளியிட்ட உ.வே.சா பஞ்சமரபைப் பெயராளவில் அறிந்திருந்தார். சிலம்பின் ஒன்பதாம் பதிப்பில் பேராசிரியர் மு. அருணாசலம் அவாகள் 24 பஞ்சமரபு வெண்பாக்களைத் தொகுத்துப் பின்னிணைப்பாக வழங்கினார். பேராசிரியர் வீ.ப.கா. சுந்தரம் 30 மேற்பட்ட பஞ்சமரபு வெண்பாக்கள் சிலப்பதிகார உரையில் உள்ளதைக் குறிப்பிடுகிறார். நுட்பமாக ஆராயும் பொழுது இந்த எண்ணிக்கை மிக வாய்ப்புள்ளது.

சிலப்பதிகார உரையாசிரியர் அரும்பதவுரைகாரர் பஞ்சமரபு வெண்பாக்களை முழுமையாகக் கையாளாமல் முதலும், முடிவும் காட்டும் போக்கினராக உள்ளார். அடியார்க்கு நல்லார் முழுமையாகக் காட்டுகிறார். ஆனால் இப்பாடல் எந்தநூல் என்பதை உய்த்துணர்ந்தே அறிஞர்கள் வந்தனர். பஞ்சமரபு நூல் வெளிப்பட்ட பிறகே உண்மை உலகிற்குத் தெரியவந்தது.
சிலப்பதிகாரக் காலத்திற்கும், உரையாசிரியர் அடியார்க்குநல்லார் காலத்திற்கும் இடைவெளி ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளாகும். எனவே அடியார்க்கு நல்லார் சிலம்பின் இசையுண்மைகளை அறியப் பஞ்சமரபே துணை செய்துள்ளது. அடியார்க்குநல்லார் உரை சிலம்பின் சில பகுதிகளுக்குக் கிடைக்காமல் போய்விட்டது. குறிப்பாக இசையுண்மைகள் மண்டிக்கிடக்கும் கானல்வரிக்குக் கிடைக்காமல் போனதால் பஞ்சமரபினை அடியார்க்கு நல்லார் எந்த அளவு பயன்படுத்தியுள்ளார் என்பதைத் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை.

அரங்கேற்று காதை உரையிலும், ஆய்ச்சியர் குரவை உரையிலும் அடியார்க்கு நல்லார் மிகுதியான பஞ்சமரபு வெண்பாக்களைப் பயன்படுத்தியுள்ளார். இவ்வெண்பாக்கள்தான் சிலப்பதிகார இசையுண்மைகளை விளக்கிக் காட்டுகின்றன. புரிந்துகொள்ளத் துணைசெய்கின்றன. இவற்றுள் அரங்கேற்று காதையில் 23 வெண்பாக்களையும், ஆய்ச்சியர் குரவையில் ஏறத்தாழ 11 வெண்பாக்களையும் பயன்கொண்டுள்ளார்.

அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் பஞ்சமரபின் ஒரே வெண்பாவை வேறுவேறு இடங்களிலும் பயன்படுத்துகிறார்.

1. ஓங்கிய மூங்கில் ......(3 :26 ; 17 :20)
2. சொல்லு மதிற்களவு...(3 :26 ; 27 :20)
3. இருவிரல்கள் நீக்கி....(3 :26 ; 17 20)
4. வளைவாயரு...........(3 :26 ; 17 20)

என்னும் வெண்பாக்கள் இதற்குச் சான்றாகும்.

வெண்பாக்கள் உணர்த்தும் செய்திகளின் சுருக்கம்

1. யாழ் நான்கு வகைப்படும்.
(அ) பேரியாழ் (ஆ) மகரயாழ் (இ) சகோடயாழ் (ஈ) செங்கோட்டு யாழ் என்பன.

2. நால்வகை யாழுக்குரிய நரம்புகளின் எண்ணிக்கை
பேரியாழ் 21 நரம்புகள்.
மகரயாழ் 19 நரம்புகள்.
சகோடயாழ் 14 நரம்புகள்.
செங்கோட்டியாழ் 7 நரம்புகள்.

3. வங்கியம் (துணைக்கருவி) செய்வதற்குரிய மரங்கள்
(அ) மூங்கில் (ஆ) சந்தனம்(இ) செங்காலி (ஈ) கருங்காலி (உ) உலோகம் (வெண்கலம்)

4. துளைக்கருவி(புல்லாங்குழல்) செய்யும் மரம் தேர்ந்தெடுத்தல்.

5. துளைக்கருவியின் அளவு (புல்லாங்குழல்).

குழலின் முழுநீளம் 4 5=20 விரலம்.
குழல்வாயின் சுற்றளவு 4 1/2விரலம்
துளைவாயின் துளையளவு-நெல்லரிசியளவு
மூடியதுளையிலிருந்து வாய்த்துளை-2 விரலம் முதலிய செய்திகள் விளக்கப்பட்டுள்ளன.

6. துளைக்கருவியின் பகுப்பு தும்பு முகப்பக்கம், வளைவாய்ப்பகுதியிலிருந்து முறையே 2,2 அங்குலம்
(மொத்தம் 4- அங்குலம்) நீக்கி எஞ்சியுள்ள 16-விரல் நீளத்தில் துளையிடுக. இதில் வாய்த்துளையிலிருந்து ஒரு விரல்நீக்கி, மீதியுள்ள ஒன்பது விரல் நீளத்தில் 8-துளைகள் இடவேண்டும்.(ஒரு விரலம் என்பது 3/4 அங்குலம்)

7. ஏழு துளைகளுக்கு உரிய ஏழு விரல்கள்.
(அ) இடக்கையின் ஆள்காட்டி விரல் (ம1) மெல்லுழைக்கு
(ஆ) இடநடுவிரல் வன்துத்தத்திற்கு(ரி2)
(இ) இட மோதிர விரல் குரலுக்கு (ச)

(அ) வலக்கையின் ஆள்காட்டி விரல் மென்தாரத்திற்கு(நி1)
(ஆ) வலக்கையின் நடுவிரல் வன்விளர¤க்கு (த2)
(இ) வலக்கையின் மோதிரவிரல் இளிக்கு (ப)

8. ஒலியின் தோற்றம் பற்றி வெண்பாவின் செய்தி உள்ளது.

9. இசைக்கு ஐம்பூதங்களின் இன்றியமையாமை.

10. காற்றின் வகைகள்

11. பத்து நாடிகள்

12. பூதங்களின் பரிணாமம்.

13. ஆளத்தி பற்றிய செய்திகள் (ஆலாபணை)

14. பண் என்பதற்கான காரணங்கள¤ன் விளக்கம்

15. வட்டப்பாலைக்கு மண்டிலம் அமைத்தல்

16. பன்னிரு இராசி வீடு பற்றிய செய்திகள் உள்ளன.

17. செம்பாலைக்கு நேர்பாலையான கோடிப்பாலை (கரகரப்பிரியா) பற்றிய செய்திகள் உள்ளன.

18. செம்பாலையின் நரம்புகளுக்கு மாத்திரை கூறல்.

19. தொல்காப்பியர் குறிப்பிடும்நான்கு நிலத்திற்கும் உரிய பெரும்பண்களுக்கு உரிய இன்றைய இராகங்களைக் கூறுகிறது.

20. வலமுறையில் அலகு பிரித்தலைச் சில வெண்பா உணர்த்துகின்றன.

நிறைவாக...

சிலப்பதிகாரத்தை உணர உரையாசிரியர்களின், பங்களிப்பையும், பஞ்சமரபு வெண்பாக்களின் பங்களிப்பையும் மேலே கண்டோம். சிலம்பின் அடிப்படை இசையுண்மைகளைப் பஞ்சமரபு வெண்பாக்கள் தாங்கியுள்ளன. பல செய்திகளை இவ்வெண்பாக்கள் தன்பால் கொண்டுள்ளன.

(19,20-05-2007 காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இ.ப.த.ம. கருத்தரங்கில் படிக்கப்பெற்ற கட்டுரை)

முனைவர் மு. இளங்கோவன்
பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி,
புதுச்சேரி - 605003

புதன், 16 மே, 2007

சங்க கால நவிரமலை

வேலூர் திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்ப் 'பல்குன்றக் கோட்டம்' என்று வழங்கப்பட்டது. பல்குன்றக் கோட்டத்தைச் சிறப்புடன் ஆட்சி செய்தவன் செங்கண் மாத்துவேள் நன்னன் சேய் நன்னன் என்னும் அரசனாவான். இவனுடைய தலைநகரம் 'செங்கண்மா' எனப்பட்டது. இன்றைய 'செங்கம்' என்னும் ஊரே முன்பு 'செங்கண்மா' எனப்பட்டது. செங்கம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஊரில் நன்னனின் கோட்டையும், அரண்மனையும், பல்வேறு படைப்பிரிவுகளும் இருந்தன. நன்னனின் வீரத்தையும், கொடைத்திறனையும் அவனின் நாட்டு வளத்தையும் அறிந்த இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் என்ற புலவர் 'மலைபடுகடாம்' என்ற நூலை இயற்றி நன்னனின் வரலாற்றை நிலைபெறச் செய்தார்.

'மலைபடுகடாம்' எனும் நூலுக்குக் கூத்தராற்றுப் படை என்ற வேறு பெயரும் உண்டு.(கூத்தன் என்னும் சொல் நூலில் எந்த இடத்திலும் இடம் பெறாததை நினைவிற் கொள்க). மிகச் சிறந்த வள்ளலாகிய நன்னனிடம் பரிசு பெற்றுத் திரும்பும் கூத்தன் ஒருவன், வழியில் கண்ட தன்னையொத்த வறுமை நிலையில் இருந்த கூத்தனுக்கு நன்னன் நாட்டு இயல்பையும், மலை வளத்தையும், நன்னனின் கொடை வளத்தையும் சொல்வதாக இந்நூலைப் பெருங்கௌசிகனார் பாடியுள்ளார்.

நீரகம் பனிக்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பேரிசை நவிர மேஎ யுறையும்
காரி உண்டிக் கடவுள தியற்கையும் (மலை.81-84)

எனவும்,

கழைவளர் நவிரத்து மீமிசை ஞெரேரென (மலை,579)

எனவும் நவிரமலை மலைபடுகடாம் நூலில் பாடப்பட்டுள்ளது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புலவரால் நவிர மலை எனக் குறிப்பிடப்பட்ட நன்னனின் மலை இன்று பர்வதமலை, திரிசூலகிரி என்று அழைக்கப்படுகிறது. காரியுண்டிக் கடவுள் என்று இலக்கியங்களில் அழைக்கப்பட்ட அம்மலையில் உள்ள கோயிலின் சிவக் கடவுள் பின்பு, காளகண்டேசுரர் என அழைக்கப்பட்டு இன்று மல்லிகார்ச்சுன ஈசுவரர், பர்வதநாதர் என்று அழைக்கப்படுகின்றார். அம்மையின் பெயர் பிரம்மறாம்பிகை எனவும் அழைக்கப்படுகின்றார். இம் மலைக்கோயிலைத் தென்கயிலாயம் என அழைக்கும் மரபும் உள்ளது.

பர்வத மலையை ஒட்டி நன்னன் நாட்டை வளப்படுத்திய அவனது சேயாறு(செய்யாறு) ஓடுகிறது. இந்த ஆறு இன்று சவ்வாது மலைப் பகுதிகளில் தோற்றம் பெற்று திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களின் வழியாக ஓடுகிறது.

நவிரமலை என்ற பர்வதமலையைப் போளூர் - செங்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) சாலையில் உள்ள தென்மாதிமங்கலம் என்னும் ஊரில் இறங்கி அடையலாம். தென்மாதி மங்கலத்தை அடைய போளூரிலிருந்தும் (18. கி.மீ) செங்கத்திலிருந்தும் (32.கி.மீ) பேருந்துகள் நிறைய உள்ளன. திருவண்ணாமலையிலிருந்து (34 கி.மீ) மேல் சோழங்குப்பம் அல்லது வீரளூர் செல்லும் பேருந்துகளில் ஏறி அடையலாம்.

தென்மாதிமங்கலத்தில் இறங்கி மலைப் பயணத்திற்குத் தேவையான தண்ணீர், உணவு, சிற்றுணவுகளை வாங்கிக் கொண்டு 4 கி.மீ நடந்தால் மலையடிவாரம் வரும். மலையடி வாரத்திலிருந்து மேலே ஆறு கி.மீ நடந்தால் மலையுச்சியை அடையலாம்.

மலையடிவாரத்தை அடைவதற்குள் சிறு தெய்வக் கோயில்கள் சில உள்ளன.  அவற்றுள், பச்சையம்மன்கோயில், வீரபத்திரசுவாமிக்கோயில், வனதுர்க்கையம்மன், இரேணுகாம்பாள் கோயில் குறிப்பிடத்தக்கன. இரேணுகாம்பாள் கோயிலை அடுத்து மலைவழிப் பாதை தொடங்குகிறது.

மலைவழியில் சிறிது தூரம் நடந்தால் அண்ணாமலையார் பாதம் எனும் பகுதி வரும். அதனைத் தொடர்ந்து நடந்து சென்றால் தண்ணீர்ப் பள்ளம் என்ற இடம் வரும். இப்பள்ளத்தின் அருகே தண்ணீர் தேங்கியிருக்கும். இத் தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். மழைக்காலத்தில் இத்தண்ணீர் குடிக்க உதவும். அங்கிருந்து நாம் மேலே நடந்தால் பாதிமண்டபம் வருகிறது. முற்காலத்தில் மலையில் செல்பவர்கள் மழையில் ஒதுங்கி, ஓய்வெடுத்துச் செல்ல இம்மண்டபத்தைக் கட்டி வைத்துள்ளனர். அங்கிருந்து மேலே செல்லும்பொழுது மரங்கள் நமக்கு இருபுறமும் நின்று அழகிய காட்சி தரும். தோரணவாயில் போன்று மரங்கள் நிற்கும் அப்பகுதியில் சில்லென்ற காற்று இதமாக வீசும். மழைக்காலத்தில் மிகுந்த குளிர்ச்சியும், வெயில் காலத்தில் இதமான காற்றையும் அப்பகுதியில் உணரலாம்.

இங்குக் குமரிநெட்டு எனும் செங்குத்தான பகுதி உள்ளது. கரடுமுரடான இப்பகுதியைக் கடக்க வேண்டும்.அங்கிருந்து நாம் பயணத்தைத் தொடர்ந்தால் காண்பவர்களுக்கு மிகுதியான வியப்பினையும், அச்சத்தையும் தரும் கடப்பாறை நெட்டு எனும் பகுதி வரும். இங்குச் செங்குத்தான பாறைகளைக் கடக்க வேண்டும். இதற்கு வசதியாக இரும்புத் தொடரிகள், இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன. மிகக் கவனமாக இதில் ஏறிச் செல்ல வேண்டும். தலைச்சுற்று, மயக்கம் உள்ளவர்கள் இதில் ஏறிச் செல்ல நினைப்பது பெரும் ஆபத்தாக இருக்கும். அதுபோல் உயரே ஏறிச் செல்லும்பொழுது கீழே பார்த்தல் கூடாது (இப்பகுதியைத்தான் மலைபடுகடாம் குறவரும் மருளும் குன்றம் என்றது போலும்). .


ஏணிப்படிகள் போல் அண்மைக் காலத்தில் பதிக்கப்பெற்ற பாதையில் ஏறி மேலே செல்லும்பொழுது தண்டவாளங்கள் பதிக்கப்பட்ட பாதை உள்ளது. இரண்டு பாறைகளுக்கு நடுவே இத்தண்டவாளம் உள்ளது. தண்டவாளத்தின் கீழே மிகப்பெரிய - ஆழமான பள்ளம் உள்ளது. தண்டவாளத்தைக் கடந்து மேலே செல்லும் பொழுது நாம் அங்கு ஒரு மண்டபத்தைக் காணலாம். மலைமீதுள்ள இறைவனை வழிபடவரும் பெண்கள் வீட்டு விலக்கானால் தங்கியிருப்பதற்காக அம்மண்டபம் உள்ளதாகச் செவிவழிச் செய்தி உள்ளது. அங்கே நாம் சிறிது இளைப்பாறிச் செல்லலாம்.

அம்மண்டபம் கடந்து மேலே ஏறிச் சென்றால் பாதாளச்சுனை எனும் பகுதி காணப்படும். அங்கு ஒரு நீர்ச்சுனை உள்ளது. மழைக் காலங்களில் நீர் நிரம்பியிருக்கும். அச் சுனைப்பகுதி செங்கற்களால் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இச் சுனை நீர் மூலிகைத் தன்மை கொண்டதால் மருத்துவக்குணம் உடையதாக விளங்குகிறது. குடிப்பதற்குச் சுவையாக இச் சுனைநீர் இருக்கும். வெயில் காலங்களில் சுனைநீர் இருக்காது. சுனையின் தென்புறம் பாழடைந்த கோட்டையின் சுவர் உள்ளது. அங்கு நன்னனின் கோட்டை இருந்ததாகவும், காவலுக்கு அவனின் வீரர்கள் இருந்தார்கள் எனவும் மலைபடுகடாம் நூலில் குறிப்பு உண்டு. மக்களும் செவிவழியாகச் சொல்கின்றனர். சுனையின் வடபுறம் உள்ள வழியாக மேலே ஏறிச் சென்றால் அங்குத் தென்புறமாக மிகப் பெரிய பள்ளம் இருக்கிறது. அங்கு மிகுந்த எச்சரிக்கையுடன் கடந்து செல்ல வேண்டும். அப்பகுதியை அடுத்துப் பிள்ளையார் நெட்டு எனும் பகுதியும், கணக்கச்சி ஓடை எனும் பகுதியும் இருக்கும். (மலையுச்சியில் நடந்து சென்ற கணக்கர் ஒருவர் தவறி விழுந்து இறக்க, அவரின் மனைவி மலையிலிருந்து பாய்ந்து உயிர்விட்ட இடம் எனவே கணக்கச்சி ஓடை எனப்பட்டது).

இப்பகுதியிலிருந்து வேகமாகக் குரல் எழுப்பி ஓசையிட்டால் மலைகளில் நம்குரல் எதிரொலிக்கக் காணலாம். (இக்குரலொலி அழகில்தான் சங்கப் புலவன் மயங்கியிருக்கக் கூடும்) அப்பகுதியைக் கடந்து சென்றால் சிறுசிறு கற்களால் படிபோன்ற அமைப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர். அருகே காரியுண்டிக் கடவுளின் கோயிலை அடையலாம். இக் கோயிலை அடைய மலையடிவாரத்திலிருந்து ஏறத்தாழ மூன்று மணிநேரம் நடக்க வேண்டியுள்ளது. கடல் மட்டத்திலிருந்து மிக உயர்ந்த இடத்தில் இக்கோயில் உள்ளதால் மழைக்காலங்களில் இடியின் பாதிப்பு இருந்தது. இப்பொழுது இடிதாங்கி அமைப்பும், கோயிலை ஒட்டிச் செயற்கையாக வீடு ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. கரடுமுரடான காடு, மலைகளைக் கடந்து சரளைக் கற்களை எதிர்கொண்டு மலைக்குச் சென்று மலையின் மேலிருந்து சுற்று வட்டாரக் காட்சிகளைக் காணும்பொழுது நாம் அடைந்த உடல் வருத்தம் மறைந்து விடும். சவ்வாது மலையின் கருநீல நிற அழகுக் காட்சிகளும், கிழக்குத் தொடர்ச்சிமலைத் தொடரும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

மலை முகட்டில் சிவன், அம்மை சிலைகளும், போகர் முனிவரின் சிலையும் உள்ளன. கோயிலுக்குக் கதவுகள் இல்லை. ஆண்டு முழுவதும் கோயில் திறந்தே இருக்கும். நாமே வழிபாடு நிகழ்த்தலாம். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும இக்கோயிலுக்கு ஆண்டு முழுவதும் மக்கள் வருகின்றனர். பௌர்ணமி மற்றும் திருவிழாக் காலங்களில் மக்கள் கூட்டம் மிகுதியாக இருக்கும். பகலில் கோயிலுக்குச் சென்று திரும்புபவர்களும் உண்டு.இரவில் கோயிலில் தங்கி வழிபட்டு மறுநாள் காலை திரும்புவதுபோல் பயணத்திட்டத்துடன் செல்பவர்களும் உண்டு.

மலைவழியில் வழிபாட்டுப் பொருள்கள், தேநீர், ரொட்டி, குளுகோஸ் முதலியன விற்கின்றன. அவை விலை அதிகம். மலைவழியில் நச்சு உயிரிகளோ, கொடிய விலங்குகளோ இல்லை. எனினும் குழுவாகவோ, இரண்டு மூன்று பேராகவோ சேர்ந்து செல்வது நன்று.

மலையடிவாரத்தில் இறை வழிபாட்டு நம்பிக்கையுள்ளவர்கள் கொண்டு வந்து தரும் அரிசி முதலியவற்றைக் கொண்டு கஞ்சி செய்து, வரும் மக்களுக்கு இலவசமாக வழங்கும் பணியை வீரபத்திரசாமிக் கோயிலில் செய்கின்றனர். இம்மலையில்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நன்னனின் குடிமக்கள் அச்சமின்றி வாழ்ந்தனர். மலையில் கிடைக்கும் பல்வேறு பொருள்களைக் கொண்டு வளமாக வாழ்க்கை நிகழ்த்தினர். மலைவழியில் செல்லும் விருந்தினர்களுக்குப் பலவாறு விருந்து உபசரித்தனர். வழி தெரியாமல் திகைக்கும்பொழுது முன்பே பழகியவர்களைப் போல் உதவி செய்தனர். பாதைகளுக்கு அடையாளமாகப் புல்முடிச்சுகளை இட்டு வைத்தனர்.

நன்னனின் மலையில் அருவியாடும் பெண்களின் ஓசை, யானை விரட்டும் ஓசை, முள்ளம் பன்றியால் குத்துப்பட்டவர்களின் ஓசை, புலி பாய்ந்து கீறியதால் தம் கணவனைக் காக்கும்படி கொடிச்சியர் பாடிய பாடல் ஓசை, தேனெடுப்போர் எழுப்பும் ஓசை, கானவர்களின் ஓசை, குரவை ஒலி, அருவி ஓசை, யானையைப் பழக்கும் பாகர் ஓசை, கிளி விரட்டும் பெண்ணின் ஓசை, காளைமாடுகளை மோதவிடும் கோவலர் ஓசை, கடாவடிஓசை, கரும்பாலை ஓசை, வள்ளைப்பாட்டு ஓசை, பன்றிப்பறை அடிப்பார் ஓசை இவையெல்லாம் அம்மலையில் எதிரொலித்ததால் மலைபடு கடாஅம் மாதிரத்து இயம்ப என்று புகழப்பட்ட இம்மலை மிகப்பெரிய வரலாற்றுச் சுவட்டைச் சுமந்து கொண்டு நிற்கிறது.


தொடர்புடைய பதிவு

திங்கள், 7 மே, 2007

பூத்துக் குலுங்கும் பாப்பா!

பூத்துக் குலுங்கும் மலர்க்கொத்துப்
பொழிலின் நடுவில் கிடப்பதுபோல்
பார்த்துச் சிரித்துக் கிடக்கின்ற
பவள மல்லி! ஏனழுதாய்?

கோத்த முத்துச் சரம்நழுவிக்
குலைந்து தரையில் உருள்வதுபோல்
தாத்தா தாத்தா என்றழுதே
தாவித் தாவிச் செல்வதெங்கே?

அம்மா என்றே அழைக்கின்றாய்!
அப்பா என்றே விளிக்கின்றாய்!
அத்தை அத்தை எனக்கூட
அழைக்க எங்குக் கற்றாயோ?

எழுதச் சுவடி கொண்டுவந்தே
இருக்கை மிசையில் வைத்திடுவேன்!
அழுத படியே நீஅழைப்பாய்
ஆட்டம் காட்டச் சொல்வாயே!

உண்ணும் பொழுது நகர்ந்தபடி
ஓ..ஆ.. என்று விரைந்தாடி
கண்ணை இமைக்கும் பொழுதினிலே
கவிழ்ப்பாய் குழம்பைச் சோறதனை!

இத்தனை நாளாய் வாழ்க்கையிலே
இப்படி ஒன்றும் கண்டதில்லை!
பத்தரை மாற்றுத் தங்கம்உனைப்
பதுக்கி எங்கே வைப்பதடி?

முனைவர் மு.இளங்கோவன்,புதுச்சேரி

செவ்வாய், 1 மே, 2007

முன்விலைத்திட்டத்தில் அரிய தமிழ் நூல்கள்


1.சங்க இலக்கியக்களஞ்சியம்

தமிழ்மொழியின் வளத்தைக்காட்டும் சான்றாகச் சங்க நூல்கள் விளங்குகின்றன. இவற்றை அறிஞர் பெருமக்கள் தத்தம் வாய்ப்புவசதிகளுக்கு ஏற்பப் பதிப்பித்து வெளியிட்டனர். இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தாமரைச் செல்வர் வ.சுப்பையா பிள்ளை அவர்கள் தம் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வாயிலாகத் தக்க அறிஞர்களைக் கொண்டு உரை வரையச் செய்து அனைவருக்கும் கிடைக்கும் படியாகச் செய்தார். அந்நூல்கள் மறுபதிப்புக் காணாமல் இருந்தன. அவற்றைக் கழகம் மீண்டும் பதிப்பிக்க உள்ள செய்தி தமிழர்களுக்கு இன்பம் தரும்செய்தியாகும்.

எட்டுத்தொகை,பத்துப்பாட்டு,பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என 36 நூல்களையும் ஏறத்தாழ 10,000 பக்கங்களில் 625 படிவங்களில் 21.8 தெம்மி அளவில் வண்ண மேலட்டையுடன் உறுதியான கட்டுமானத்துடன் வெளியிடத்திட்டமிட்டுள்ளனர். உரூபா 5000 விலை உள்ள நூலைமுன் வெளியீட்டுத்திட்டம் வழியாக உரூபா 3000 விலையில் பெறலாம்.

31.08.2007 நாளுக்குள் பணம் அனுப்பிப்பதிவு செய்பவர்களுக்குக் கழகத்தமிழ் அகராதி (விலை 225)அன்பளிப்பாக அளிக்கப்பெறுமாம். ஒரே தவணையில் பணம் கட்ட இயலாதவர்கள் ஆறு தவணையாகவும் கட்டலாம்.

காசோலை / வரைவோலை வழியாகத் தொகையை The S.I.S.S.W.P. SOCIETY .LTD, Chennai என்ற பெயருக்குஅனுப்பலாம்.

முகவரி :

திருநெல்வேலி தென்னிந்தியசைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம்
522,டி.டி.கே.சாலை,ஆழ்வார்பேட்டை, சென்னை -600018

2. சொல்லாய்வறிஞர் ப.அருளி அவர்களின் பத்துத் தொகைநூல்கள் வெளியீடு

தமிழ்மொழியில் ஏறத்தாழ 27 மொழிகளின் சொற்கள் கலந்துகிடக்கின்றன.இச்சொற்களை இனங்கண்டு அவற்றிற்குரிய தூயதமிழ்ச் சொற்களைப் பேராசிரியர் அருளி அவர்கள் இவை தமிழல்ல... எனவும் அயற்சொல் அகராதி எனவும் முன்பே இரு நூல்களாக வெளியிட்டார். அந்நூற் சொற்களும் அவற்றில் இடம்பெறாத பல்லாயிரம் அயற்சொற்களும் அவற்றிற்குரிய தமிழ்ச்சொற்களும் பெரிய அளவில் தொகுக்கப்பெற்று அயற்சொல் அகராதி என்னும் பெயரில் நான்கு தொகுதிகளாக வெளிவர உள்ளன.

அறிஞர் அருளி அவர்கள் பல்வேறு நூல்களுக்கு வரைந்த முன்னுரைகள் இரு தொகுதிகளாக வெளிவரஉள்ளன.

தமிழின் வேர்ச்சொற்கள் உலக மொழிகளில் பரவியுள்ளமையை விளக்கும் வேரும் விரிவும் என்னும்நூலின் இரு தொகுதிகளும் வெளிவர உள்ளன.

மேலும் மரம், செடி, கொடி இவற்றின் இலை, தண்டு, பட்டை, வேர், காய், கனி, மலர் என இவற்றிற்குப் பெயர்சூட்டிய காரணங்களை விளக்கும் மரம்-செடி-கொடி வேர் என்னும் நூலின் இரு தொகுதிகளும்வெளிவர உள்ளன.

மேற்கண்ட பத்துத்தொகை நூல்களும் ஒட்டுமொத்தமாக உரூபா 2000 விலை.
ஆனால் முன்பதிவு செய்வோர் உரூபா 1000 விலைக்குப் பெறலாம்.

நூல் வெளியீட்டுநாள் 23.06.2007 காரி(சனி)

முன்தொகையைப் பணவிடையாகவோ / வரைவோலையாகவோ அனுப்பலாம்.

முகவரி :

வேரியம் பதிப்பகம்
தனித்தமிழ்மனை,6.காளிக்கோயில் தெரு,
திலாசுப்பேட்டை,புதுச்சேரி-605009
பேசி : 0413- 2274212
கைப்பேசி : 99436 46240

முனைவர் மு.இளங்கோவன்
பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி,
புதுச்சேரி-605003