banner

நிகழ்வுகள்

// பொதிகைத் தொலைக்காட்சியில் தமிழக நடவுப்பாடல்கள் குறித்த மு.இளங்கோவனின் உரையிடையிட்ட பாட்டு 25.05.2013 சனிக்கிழமை, பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது…//உலகத் தமிழாசிரியர் மாநாடு, கோலாலம்பூர், மலேசியா, நாள் 2013,சூன் 3-5 //

புதன், 22 மே, 2013

மலேசியாவில் ஜூன் முதல்வாரத்தில் உலகத் தமிழாசிரியர் மாநாடு




மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் பத்தாவது உலகத் தமிழாசிரியர் மாநாடு வரும் ஜூன் மாதம் 3, 4, 5 ஆகிய மூன்றுநாள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீசியசு, தென்னாப்பிரிக்கா, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பேராளர்கள் கலந்துகொண்டு தமிழ்க்கல்வி குறித்த ஆய்வுக்கட்டுரைகளை வழங்க உள்ளனர்.

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் - ஜாலான் கிள்ளான் லாமாவில்  அமைந்துள்ள  பேர்ல் இண்டர்நேசனல் விடுதியில் மாநாடு மூன்றுநாளும் நடைபெறுகின்றது.

ஜூன் மாதம் மூன்றாம் நாள் (திங்கள் கிழமை) பிற்பகல் மூன்றுமணி முதல் பேராளர்களின் பதிவு நடைபெறும். பேராளர்களுக்கு உரிய விளக்கம், கட்டுரையாளர்களுக்கான குறிப்புகளும் வழங்கப்படும். மாலை 4.30 மணி முதல் பொது அரங்கில் அறிஞர்களின் உரை அமையும். அதன் பிறகு இணை அமர்வுகளில் கட்டுரைகள் படைக்கப்பெறும். இரவு 7.30 மணிக்கு மேல் இரவு விருந்தும் கலைநிகழ்ச்சியும் நடைபெறும். இதில் கூட்டுப்பேச்சு, முரசோவியம், நாட்டுப்புற இசை, தமிழிசை, நூல்வெளியீடு அமையும்.

இரண்டாம் நாள்(ஜூன் 4) மாநாட்டின் தொடக்க விழாவில் மாநாட்டுத் தலைவர் உரை, தொடக்க உரை அமையும். முற்பகல் 11 மணி முதல் பொது அமர்வு, இணை அமர்வுகள் தொடர்ந்து நடைபெறும்.

மூன்றாம் நாள் காலை அமர்வில் பொது அரங்கில் பன்னாட்டு நிகராளிகளின் நாட்டுப்படைப்பு வழங்கப்பெறும். அதன் பிறகு மாநாட்டின் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். முற்பகல் நடைபெறும் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினரின் நிறைவுரை இடம்பெறும். மாநாட்டில் கலந்துகொண்ட பேராளர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பெறும்.

பத்தாம் உலகத் தமிழாசிரியர் மாநாட்டின் தலைவராக ம.மன்னர்மன்னன் (மொழித்துறை, மலேயா பல்கலைக்கழகம்) அவர்களும், செயலாளராக எஸ். சுவீடன் அவர்களும் இருந்து மாநாட்டுப் பணிகளைக் கவனித்துவருகின்றனர். உலகத் தமிழாசிரியர் மாநாட்டுக் குழுவினர் மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்துவருகின்றனர்.

மாநாடு நடைபெறும் இடம்:

PEARL INTERNATIONAL HOTEL, KUALA LUMPUR
Batu 5, Jalan Klang Lama,
58000 Kuala Lumpur
General Line:   603-7983111
Fax:   603-79832211
E-mail:   pih@pearl.com.my

திங்கள், 20 மே, 2013

தனித்தமிழ் அறிஞர் பறம்பை அறிவன் மறைவு



பறம்பை அறிவன்
மொழிஞாயிறு பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரானர் கொள்கைகளில் ஆழ்ந்த பற்றுடையவரும் பாவாணரின் உலகத் தமிழ்க்கழக மாநாட்டைப் பரமக்குடியில் நடத்துவதற்கு முனைவர் மு. தமிழ்க்குடிமகன் அவர்களுக்குப் பெருந்துணைபுரிந்தவருமான தனித்தமிழ் அறிஞர் பறம்பை அறிவன் அவர்கள் 19.05.2013 மாலை 5.30 மணிக்கு உடல்நலக்குறைவு காரணமாகத் தம் எழுபத்தேழாம் அகவையில் மதுரையில் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.

பறம்பை அறிவன் அவர்களின் இயற்பெயர் மு.பெ.நளபதி. பெற்றோர் பெரியசாமி, கருப்பாயி ஆகியோர் ஆவர். இவர் பரமக்குடியை அடுத்த எமனேசுவரத்தில் பிறந்தவர். ஆசிரியர் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தமிழியம் என்ற இதழை நடத்தி வந்தவர். இப்பெருமகனார் இரா.லீலாவதி என்னும் அம்மையாரை மணந்து, மூன்று ஆண்மக்களையும், மூன்று பெண்மக்களையும் ஈன்றெடுத்த பெருமைக்குரியவர். தமிழிய வரலாற்றுப் பேரவை என்னும் அமைப்பை நிறுவித் தமிழ்த்தொண்டாற்றிவந்தார். தனித்தமிழ் இயக்கத்திற்கு அன்னாரின் மறைவு பேரிழப்பாகும்.